<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - யுத்த காண்டம்-1

** கம்பராமாயணம்
**யுத்த காண்டம்-1
&61 யுத்த காண்டம்-1

@0 கடவுள் வாழ்த்து

#1
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா

@1 கடல் காண் படலம்

#1
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்

#2
பொங்கிப் பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்

#3
சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால்
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல்
தூய மலர் போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்திப் புடை சுருட்டிப்
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா

#4
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஊதுலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய்த் தென்றல் தூற்றும் குறும் திவலை

#5
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிதாய் நிலை தளர்வான்
தன்னைக் கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய்
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல் கள் உயிர்க்கும்
புன்னைக் குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே

#6
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன் முன் படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் என்னத் தனித் தோன்றிக்
கொலை மேற்கொண்டு ஆருயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடிப் பவளம்

#7
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ

#8
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து
சிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே

#9
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆகப் பனிக் கற்றைத்
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர்க் குழவி முறை சுழற்றி
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்ப திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி

#10
கொங்கைக் குயிலைத் துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற
வெம் கைச் சிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி

#11
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்

@2 இராவணன் மந்திரப் படலம்

#1
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர்
மூ வகை உலகினும் அழகு முற்றுற
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொள தெய்வத் தச்சனே

#2
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான்
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல்
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான்

#3
முழுப் பெரும் தனி முதல் உலகின் முந்தையோன்
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன்
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை
அழித்துஅழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ

#4
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய
பொரு கழல் இராவணன் அயற்குப் பூசனை
வரன்முறை இயற்றி நீ வழிக் கொள்வாய் என்றான்
அரியன தச்சற்கும் உதவி ஆணையால்

#5
அவ்வழி ஆயிரமாயிரம் நிரை
செவ் வழிச் செம் மணித் தூணம் சேர்த்திய
அவ் எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான்

#6
வரம்பு_அறு சுற்றமும் மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்
தரம் பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்

#7
முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர்
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான்
புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்

#8
பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்
தண்டல்_இல் மந்திரத் தலைவர் சார்க எனக்
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான்

#9
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும்
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்

#10
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ
விசையுறு பறவையும் விலங்கும் வேற்றவும்
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே

#11
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மா நகர்
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்

#12
சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
இட்ட இவ் அரியணை இருந்தது என் உடல்

#13
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர்
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும்
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு
நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம்

#14
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம்
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால்
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம்

#15
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான்
கன்றிய கரும் கழல் சேனை காவலன்
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான்

#16
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்
பஞ்சு அன மெல் அடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய்

#17
கரன் முதல் வீரரைக் கொன்ற கள்வரை
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை
பரிபவம் செய்ஞ்ஞரை படுக்கலாத நீ
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால்

#18
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர்
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான்

#19
செற்றவர் எதிர் எழும் தேவர் தானவர்
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால்

#20
விலங்கினர் உயிர் கெட விலக்கி மீள்கலாது
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல்
குலம் கெழு காவல குரங்கின் தங்குமோ
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கற்பாலதோ

#21
போயின குரங்கினைத் தொடர்ந்து போய் இவண்
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம்
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணரக் கூறினான்

#22
மற்று அவன் பின்னுற மகோதரப் பெயர்க்
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள் என இனைய கூறினான்

#23
தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர்
தா வரும் தானவர் தருக்கு தாழ்ந்தனர்
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய்

#24
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று எனத்
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால்

#25
வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும்

#26
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர்
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ

#27
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின் குரங்கை வேரறுத்து
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை
முடிக்குவென் யான் என முடியக் கூறினான்

#28
இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின்
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான்
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன்
பச்சிரத்தம் பொழி பருதி கண்ணினான்

#29
போய் இனி மனிதரைக் குரங்கைப் பூமியில்
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி என் இனி
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ

#30
எவ் உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமைசெய்த யான்
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இவ் வினை என்-வயின் ஈகலாது என்றான்

#31
நில்நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான்

#32
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர்
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது
மக்களும் குரங்குமே வலியராம் எனின்
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே

#33
பொலிவது பொதுவுற எண்ணும் புன் தொழில்
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர்
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால்

#34
கண்ணிய மந்திரக் கருமம் காவல
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே

#35
எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்

#36
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும்
வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும்
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்
உய்ந்து தம் உயிர்கொடு இவ் உலகத்துள் உளார்

#37
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும்
வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும்
செல்வது ஆங்கு அவருழைச் சென்று தீர்ந்து அறக்
கொல்வது கருமம் என்று உணரக் கூறினான்

#38
காவலன் கண் எதிர் அவனைக் கை கவித்து
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான்
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான்

#39
முந்தினர் முரண் இலர் சிலவர் மொய் அமர்
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்
வெந்ததோ இலங்கையோடு அரக்கர் வெம்மையும்

#40
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர்
தான் எரி மடுப்பது நிருதர் தானையே
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ

#41
நின்றுநின்று இவை சில விளம்ப நேர்கிலென்
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்
கொன்று தின்று அல்லது ஓர் எண்ணம் கூடுமோ
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான்

#42
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான்
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல்
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான்

#43
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான்

#44
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ் வினை இதனின் மேல் பகரத்தக்கதோ
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான்

#45
தொகை நிலைக் குரங்கு உடை மனிதர்ச் சொல்லி என்
சிகை நிறச் சூலி-தன் திறத்தின் செல்லினும்
நகை உடைத்தாம் அமர்செய்தல் நன்று எனா
புகை நிறக் கண்ணனும் புகன்று பொங்கினான்

#46
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும்
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று
உற்றன உற்றன உரைப்பது ஆயினார்
புற்று உறை அரவு எனப் புழுங்கு நெஞ்சினார்

#47
வெம்பு இகல் அரக்கரை விலக்கி வினை தேரா
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா
எம்பி எனகிற்கில் உரைசெய்வல் இதம் என்னா
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்

#48
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்
ஏயின உறத்தகைய இத்துணையவேயோ

#49
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ

#50
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல்
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்

#51
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்
வன் தொழிலினாய் மறை துறந்து சிறைவைத்தாய்
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா
புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ

#52
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

#53
சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல
பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழி அன்றால்

#54
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்
கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான்
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால்
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ

#55
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம் மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம்

#56
ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராத வகை வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான்

#57
நன்று உரைசெய்தாய் குமர நான் இது நினைந்தேன்
ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம் நமர் கொடிப் படையை எல்லாம்
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான்

#58
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே
சென்று படையோடு சிறு மானுடர் சினப் போர்
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம்
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான்

#59
ஈசன் அருள்செய்தனவும் ஏடு அவிழ் மலர்ப் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய
பாசம் முதல் வெம் படை சுமந்து பலர் நின்றார்
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ

#60
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும்
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னைப்
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான்

#61
குரங்கு பட மேதினி குறைத்தலை நடப் போர்
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார்
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்

#62
சொல்லிடை கிழிக்கில சுருங்கிய குரங்கு என்
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவித் தம்
பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய்

#63
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ

#64
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம்
வேரும் ஒழியாத வகை வென்று அலது மீளேன்

#65
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்

#66
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய்
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலாப்
பால நீ இனையன பகரற்பாலையோ

#67
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்தர் மேதகையவர் வினைஞர் மந்திரத்து
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய்

#68
தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர்
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம்
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ

#69
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில்
திறம் தெரிந்திடின் அதுதானும் செய் தவம்
நிறம் திறம்பா வகை இயற்றும் நீதியால்
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால்

#70
மூவரை வென்று மூன்று உலகும் முற்றுறக்
காவலில் நின்று தம் களிப்புக் கைம்மிக
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர் தீமையோர்

#71
வினைகளை வென்று மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான்
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும்
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார்

#72
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென்
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான்

#73
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திரப் பெரும் பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்

#74
கற்றுறு மாட்சி என் கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய்

#75
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின்-தம் அனை
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ

#76
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால்
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும்
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ

#77
மீன் உடை நெடும் கடல் இலங்கை_வேந்து என்பான்
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர்
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ

#78
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ

#79
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ

#80
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள்
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய்

#81
தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்

#82
சம்பரப் பெயர் உடைத் தானவர்க்கு இறைவனை தனு வலத்தால்
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடைத் தலை துமித்து அமரர் உய்ய
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி
இம்பரில் பணி செய தசரதப் பெயரினான் இசை வளர்த்தான்

#83
மிடல் படைத்து ஒருவனாய் அமரர்_கோன் விடையதா வெரிநின் மேலாய்
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியைப் பெரு வளம் தருக என்று அருளினானும்
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன்

#84
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அறப் பொருது தன் வேல்
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான்
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான்

#85
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்
முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும்
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதராய் எளிது நின்றார்

#86
கோசிகப் பெயர் உடைக் குல முனித் தலைவன் அக் குளிர் மலர்ப் பேர்
ஆசனத்தவனொடு எவ் உலகமும் தருவென் என்று அமையலுற்றான்
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பளவில் எவ் உலகில் யாவும்
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப

#87
எறுழ் வலிப் பொரு_இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து
உறு திறல் கலுழன் மேல் ஒருவன் நின்று அமர்செய்தானுடைய வில்லும்
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும்
குறுமுனிப் பெயரினான் நிறை தவர்க்கு இறை தரக் கொண்டு நின்றார்

#88
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும்
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அவ் வீரர்
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும்
பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது இரை பெறா பகழி நாகம்

#89
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இப் பெரியவேனும்
நாரும் மூரியும் அறா நம்முடைச் சிலைகள் போல் நலிவ ஆமோ
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும்
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும்-மன்னோ

#90
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும்
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கிய இனிச் செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார்
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ

#91
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார்
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும்
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீயக்
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார்

#92
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன் பகலும் நின் சொல்ல ஒல்கி
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா

#93
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர
நகல் மதிக்கில மறுப் பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா

#94
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார்
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும்
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார்
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ

#95
சொலத்தகாத் துன்னிமித்தங்கள் எங்கணும் வரத் தொடர்வ தொல் நாள்
வெலத்தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று
வலத்த கால் முந்துறத் தந்து நம் மனையிடைப் புகுவ-மன்னோ

#96
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும்
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின்
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும்
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ

#97
சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன்
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால்
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே

#98
இன்னம் ஒன்று உரைசெய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய
அன்னவர்-தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார்
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால்

#99
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது
அசைவு_இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி அதன் மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்

#100
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்பப்
பூட்டி வாய்-தொறும் பிறைக் குலம் வெண் நிலாப் பொழிய
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவையிவை சொன்னான்

#101
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலைக்
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை குறித்தது
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா

#102
ஈங்கு மானுடப் புழுக்களுக்கு இலை வரம் என்றாய்
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால்
தாங்கும் யானையைத் தள்ளி அத் தழல் நிறத்தவனை
ஓங்கல் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ

#103
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர்
சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ

#104
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பன் முறை தோற்று
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணைக்
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில்
கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கொண்டாய்

#105
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல்
மூவரில் பெற்றம் உடையவன்-தன்னையும் முழுதும்
காவலின் பெற்ற திகிரியான்-தன்னொடும் கடந்தது
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய்

#106
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால்
வந்த சாபங்கள் எனைப் பல அவை செய்த வலி என்
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த

#107
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன்
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி

#108
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும்
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும்
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான்

#109
ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார்

#110
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான்
துன்று தாரவன் பின்னரும் இனையன சொன்னான்

#111
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் தலைவன்
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான்
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால்
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான்

#112
அச் சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின்
கொச்சைத் துன்மதி எத்தனை போரிடைக் குறைந்தான்
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம்
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான்

#113
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர்
தந்தி கோடு இறத் தகர்த்த நாள் தன்னை யான் முன்னம்
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகைச்
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன்

#114
சிவனும் நான்முகத்தொருவனும் திரு நெடு மாலாம்
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அப் பொரு_இல்
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய்

#115
ஆயிரம் பெரும் தோள்களும் அத்துணைத் தலையும்
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும்
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன்

#116
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்
கைந்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின்

#117
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன் கையெறிந்து உரும் என நக்கான்

#118
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலாப் பெரியோர்
முன்னை நாள் இவன் முனிந்திடக் கிளையொடும் முடிந்தார்
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான்
தன்னை உள்ளவா கேட்டி என்று உரைசெயச் சமைந்தான்

@3 இரணியன் வதைப் படலம்

#1
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்
போதம் கண்ணிய வரம் எலாம் தரக் கொண்டு போந்தான்
காதும் கண்_நுதல் மலர் அயன் கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான்

#2
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்
கற்றை அம் சடைக் கடவுளும் காத்து அளித்து அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்

#3
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக் கைப்
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும்
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்

#4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான்
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்
பண்டைத் தெண் திரைப் பரவை நீர் உவர் என்று படியான்
அண்டத்தைப் பொதுத்து அப்புறத்து அப்பினால் ஆடும்

#5
மரபின் மா பெரும் புறக் கடல் மஞ்சனம் மருவி
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி
பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது ஆற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்

#6
சாரும் மானத்தில் சந்திரன் தனிப் பதம் சரிக்கும்
தேரின் மேலின் நின்று இரவி-தன் பெரும் பதம் செலுத்தும்
பேர்வு_இல் எண் திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும்

#7
நிலனும் நீரும் வெம் கனலொடு காலுமாய் நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி
உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய் உலகின்
வலியும் செய்கையும் வருணன்-தன் கருமமும் மாற்றும்

#8
தாமரைத் தடம் கண்ணினான் பேர் அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில
தூம வெம் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும்

#9
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இத் தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார்
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனைசெய்யார்

#10
மருக் கொள் தாமரை நான்முகன் ஐம்முகன் முதலோர்
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம்
சுருக்கு_இல் நான்மறை தொன்றுதொட்டு உயிர்-தொறும் தோன்றாது
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும்

#11
பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி
தெண் திரைக் கடல் கடைதர வலியது தேடிக்
கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத் தோட்கு அமைந்த
தண்டு எனக் கொளலுற்று அது நொய்து எனத் தவிர்ந்தான்

#12
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும்
கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில்
குண்டலங்கள் மற்று என் இனிப் பெரு விறல் கூறல்

#13
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின்
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன்
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும்
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்

#14
பெண்ணில் பேரெழில் ஆணினில் அலியினில் பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான்
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால்

#15
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும்
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற
கோவை மால் அயன் மான்_இடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான்

#16
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான்
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும் அன்னவன்-தனைச் சென்று சாரா

#17
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவாக்
கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா
நள்ளின் சாகிலன் பகலிடைச் சாகிலன் நமனார்
கொள்ளச் சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார்

#18
பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான்
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்
தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும் சாகான்
ஈது அவன் நிலை எவ் உலகங்கட்கும் இறைவன்

#19
ஆயவன்-தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன்
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன்
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன்

#20
வாழியான் அவன்-தனைக் கண்டு மனம் மகிழ்ந்து உருகி
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான்
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம்
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான்

#21
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான்
சென்று மற்று அவன்-தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான்

#22
ஓதப் புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும்
போதத் தன் செவித் தொளை இரு கைகளால் பொத்தி
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் பெயரினை விரித்தான்

#23
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி
தான் அமைந்து இரு தடக் கையும் தலை மிசைத் தாங்கி
பூ நிறக் கண்கள் புனல் உக மயிர்ப் புறம் பொடிப்ப
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி

#24
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை பாவி எத் தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில்
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான்

#25
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய
உன்னை உய்வித்து இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான்

#26
முந்தை வானவர் யாவர்க்கும் முதல்வர்க்கும் முதல்வன்
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரைசெயற்கு உரிய
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய
எந்தை இப் பெயர் உரைத்து எனைக் கெடுத்திடல் என்றான்

#27
வேதபாரகன் அவ் உரை விளம்பலும் விமலன்
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன்
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும்
போதியாததும் இல்லை என்று இவையிவை புகன்றான்

#28
தொல்லை நான்மறை வரன்முறைத் துணி பொருட்கு எல்லாம்
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள்
இல்லை வேறு இனிப் பெரும் பதம் யான் அறியாத
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத

#29
ஆரைச் சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர்
ஓரச் சொல்லுவது எப் பொருள் உபநிடதங்கள்
தீரச் சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ

#30
வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த
போதத்தானும் அப்புறத்துள எப் பொருளானும்
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ

#31
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலைத் தோல்
மூடி முற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும்
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி

#32
செவிகளால் பல கேட்டிலராயினும் தேவர்க்கு
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால்
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்

#33
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய்
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான்

#34
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான்
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் எனச் சொன்னான்

#35
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன்
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி

#36
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான்

#37
அரசன் அன்னவை உரைசெய்ய அந்தணன் அஞ்சி
சிரதலம் கரம் சேர்ந்திடா செவித் தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின் உரவோய்
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான்

#38
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன்
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி
கணனின் எய்தினர் பணி எனத் தாதையைக் கண்டான்
துணையிலான்-தனைத் துணை என உடையவன் தொழுதான்

#39
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடைச் சுண்ணம்
எழுத அன்பினின் இறுகுறத் தழுவி மாடு இருத்தி
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய
பழுது சொல்லியது என் அது பகருதி என்றான்

#40
சுருதி யாவையும் தொடங்குறும் எல்லையில் சொல்லும்
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திருப்பெயர் உணர
கருதக் கேட்டிடக் கட்டுரைத்து இடர்க் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான்

#41
தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய தீயோன்
தா_இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே
யாவது அவ் உரை இயம்புதி இயம்புதி என்றான்

#42
காமம் யாவையும் தருவதும் அப் பதம் கடந்தால்
சேம வீடு உறச் செய்வதும் செம் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய

#43
மண்ணின்-நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே பிறிது இல்லை

#44
முக்கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார்
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுறக் கண்டார்
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார்

#45
தோற்றம் என்னும் அத் தொல் வினைத் தொடு கடல் சுழி நின்று
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த

#46
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இவ் உலகத்தில் உள்ள
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து
சொன்னது இப் பெயர் என்றனன் அறிஞரின் தூயோன்
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்

#47
இற்றை_நாள் வரை யான் உள நாள் முதல் இப் பேர்
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என்
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இப் பெயர் உரைத்தார்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து எனக் கனன்றான்

#48
முனைவர் வானவர் முதலினர் மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய்

#49
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான்
கறங்கு வெம் சிறைக் கலுழன்-தன் கடுமையின் கரந்தான்
பிறங்கு தெண் திரைப் பெரும் கடல் புக்கு இனம் பெயராது
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார்

#50
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின்
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொலக் குறைந்தார்
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு
விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்

#51
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ நினைப் பயந்தது நான் எனப் பகர்ந்தான்

#52
ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன்
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செயத் தக்கோன்
கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி
திருவிலீ மற்று இது எம் மறைப் பொருள் எனத் தெரிந்தாய்

#53
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின்
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால்
கோது_இல் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின்

#54
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றிப்
பொய்_இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல்
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார்

#55
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி
கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையைத்
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர்-தம்பால்
வாழ்வு யாது அயல் எவ் வழிப் புறங்கொண்டு வாழ்வார்

#56
பேதைப் பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும்
ஏது_இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன்
யாது சொல்லினன் அவைஅவை இதம் என எண்ணி
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன்

#57
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல்
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின்
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான்

#58
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின்
பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவென்
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று எனா
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால்

#59
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை-தன்னுள்ளே
நின்று தான் அவற்றுள் தங்குவான்
பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன்
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ

#60
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன்
ஓங்கிய மேல் நிலை உணரற்பாலதோ

#61
சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன் அது தம்மைத்தாம் உணர்
வித்தகர் அறிகுவர் வேறுவேறு உணர்
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார்

#62
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அப்புறத்து
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ
கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார்

#63
மூ வகை உலகுமாய் குணங்கள் மூன்றுமாய்
யாவையும் எவருமாய் எண்_இல் வேறுபட்டு
ஓவல்_இல் ஒரு நிலை ஒருவன் செய் வினை
தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ

#64
கருமமும் கருமத்தின் பயனும் கண்ணிய
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்
அருமையும் பெருமையும் அறிய வல்லவர்
இருமை என்று உரைசெயும் கடல்-நின்று ஏறுவார்

#65
மந்திரம் மா தவம் என்னும் மாலைய
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய
நந்தல்_இல் தெய்வமாய் நல்கும் நான்மறை
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன்

#66
முற்படப் பயன்தரும் முன்னில் நின்றவர்
பிற்பயப் பயன்தரும் பின்பு போல் அவன்
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பலர்

#67
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ
இருவினை என்பவை இயற்றி இட்டவை
கருதின கருதின காட்டுகின்றது
தரு பரன் அருள் இனிச் சான்று வேண்டுமோ

#68
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார்
அரா_அணை அமலனுக்கு அளிப்பரேல் அது
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது
பராவ_அரு மறைப் பொருள் பயனும் அன்னதால்

#69
பகுதியின் உள் பயன் பயந்தது அன்னதின்
விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர்
வகுதியின் வயத்தன வரவு போக்கது
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ

#70
எழுத்து இயல் நாளத்தின் எண்ணிலா வகை
முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர்
வழுத்த_அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்
விழுத் தனிப் பல் இதழ் விரை இலா முகிழ்

#71
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார்
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால்
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண்ணிலான்

#72
சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால்
முந்தை ஓர் எழுத்து என வந்து மும்முறைச்
சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான்

#73
காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான்
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும்
சேமமும் பிறர்களால் செப்பற்பாலவோ

#74
காலமும் கருவியும் இடனுமாய் கடைப்
பால் அமை பயனுமாய் பயன் துய்ப்பானுமாய்
சீலமும் அவை தரும் திருவுமாய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்

#75
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர்
தெள் விளி யாழிடைத் தெரியும் செய்கையின்
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான்
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான்

#76
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூ_உலகமும் தழுவிச் சார்தலால்
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்

#77
காலையின் நறு மலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர் புரை சமயவாதியர்
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும் போல் வேறுபாடிலான்

#78
இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற
மன் உயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம் என்று உணரச் சொல்லினான்

#79
எதிரில் நின்று இவையிவை உரைத்திடுதலும் எவ் உலகமும் அஞ்ச
முதிரும் வெம் கத மொழி கொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண்
உதிரம் கான்றன தோன்றின புகைக் கொடி உமிழ்ந்தது கொடும் தீயே

#80
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால்
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான்
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார்

#81
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழுக் கூர் வாள்
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும்
தின்று தீர்குதும் என்குநர் உரும் எனத் தெழிக்குநர் சின வேழக்
கன்று புல்லிய கோளரிக் குழு எனக் கனல்கின்ற தறுகண்ணார்

#82
தாயின் மன் உயிர்க்கு அன்பினன்-தன்னை அத் தவம் எனும் தகவு இல்லோர்
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும்
தூயவன்-தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும்

#83
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும்
முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன முனிவு இலான் முழு மேனி
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம்

#84
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனிச் செயல் என்-கொல் பிறிது என்ன
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தித்
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அத் தொழில் தலைநின்றார்

#85
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட
அழுது நின்றவர் அயர்வுற ஐயனைப் பெய்தனர் அரி என்று
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே

#86
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்புடையவள் சொற்ற
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன்
கூலம் ஆம் என என்புறக் குளிர்ந்தது அக் குரு மணித் திரு மேனி

#87
சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர்க் கனல் சுழி படர் அழுவத்துள்
இட்ட போதிலும் என் இனி செயத்தக்கது என்றனர் இகல் வெய்யோர்
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அக் கள்வனைக் கவர்ந்து உண்ண
எட்டுப் பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான்

#88
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால்
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி
சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான்

#89
பக்கம் நின்றவை பயத்தினின் புயல் கறைப் பசும் புனல் பரு வாயின்
கக்க வெம் சிறைக் கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள்
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி

#90
சூழப் பற்றின சுற்றும் எயிற்றின்
போழக் கிற்றில என்று புகன்றார்
வாழித் திக்கின் மயக்கின் மதம் தாழ்
வேழத்துக்கு இடு-மின் என விட்டான்

#91
பசையில் தங்கல்_இல் சிந்தையர் பல்லோர்
திசையில் சென்றனர் செப்பினன் என்னும்
இசையில் தந்தனர் இந்திரன் என்பான்
விசையின் திண் பணை வெம் சின வேழம்

#92
கையில் கால்களில் மார்பு கழுத்தில்
தெய்வப் பாசம் உறப் பிணி செய்தார்
மையல் காய் கரி முன் உற வைத்தார்
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்

#93
எந்தாய் பண்டு ஓர் இடங்கர் விழுங்க
முந்தாய் நின்ற முதல் பொருளே என்று
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத
வந்தான் என்றன் மனத்தினன் என்றான்

#94
என்னா முன்னம் இரும் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின்
அன்னானைத் தொழுது அஞ்சி அகன்றது
ஒன்னார் அத் திறம் எய்தி உரைத்தார்

#95
வல் வீரைத் துயில்வானை மதித்து என்
நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று
ஒல்வீர் ஒற்றை உரக் கரி-தன்னைக்
கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான்

#96
தன்னைக் கொல்லுநர் சாருதலோடும்
பொன்னைக் கொல்லும் ஒளி புகழ் பொய்யா
மன்னைக் கொல்லிய வந்தது வாரா
மின்னைக் கொல்லும் வெயில் தின் எயிற்றால்

#97
வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு
ஆரக் குத்தி அழுத்திய நாகம்
வாரத் தண் குலை வாழை மடல் சூழ்
ஈரத் தண்டு என இற்றன எல்லாம்

#98
வெண் கோடு இற்றன மேவலர் செய்யும்
கண் கோடல் பொறியின் கடிது ஏகி
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான்
திண் கோடைக் கதிரின் தெறு கண்ணான்

#99
தள்ளத்தக்கு_இல் பெரும் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான்

#100
ஒட்டிக் கொல்ல உணர்ந்து வெகுண்டான்
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார்
கட்டிக் கல்லொடு கால் விசையின் போய்
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய்

#101
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்

#102
தலையில் கொண்ட தடக் கையினான் தன்
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான்
சிலையில் திண் புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்

#103
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான்
மீதுற்ற ஆர் சிலை மீது கிடந்தான்
ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான்

#104
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய்
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ

#105
கள்ளம் திரிவாரவர் கைதவம் நீ
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான்
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ

#106
வரு நான்முகனே முதல் வானவர்தாம்
திரு நான்மறையின் நெறியே திரிவார்
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன்
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ

#107
செய்யாதனவோ இலை தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ

#108
ஆயப்பெறும் நல் நெறி தம் அறிவு என்று
ஏயப்பெறும் ஈசர்கள் எண்ணிலரால்
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின்
மாயப் பொறி புக்கு மயங்குவரால்

#109
தாமே தனி நாயகராய் எவையும்
போமே பொருள் என்ற புராதனர் தாம்
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே

#110
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம்
ஓது அப் பெரு நூல்கள் உலப்பிலவால்
பேதிப்பன நீ அவை பேர்கிலையால்
வேதப் பொருளே விளையாடுதியோ

#111
அம்போருகனும் அரனும் அறியார்
எம்போலியர் எண்ணிடின் என் பலவா
கொம்போடு அடை பூ கனி காய் எனினும்
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே

#112
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்
பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே

#113
தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான்
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா
வாய் தந்தன சொல்லி வணங்கினனால்

#114
அத் தன்மை அறிந்த அரும் திறலோன்
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால்
பித்துண்டது பேர்வுறுமா பெறுதும்
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான்

#115
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான்
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால்
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன்
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால்

#116
வெய்யார் முடிவு இல்லவர் வீசிய போது
உய்யான் எனும் வேலையினுள் உறைவோன்
கை ஆயிரம் அல்ல கணக்கில என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால்

#117
ஊனோடு உயிர் வேறு படா உபயம்
தானே உடையன் தனி மாயையினால்
யானே உயிர் உண்பல் எனக் கனலா
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால்

#118
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான்
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான்
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான் எனலும்

#119
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான்
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான்

#120
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும்
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா

#121
என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்
நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ நினக்குப் பின்னோன்
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்

#122
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான்

#123
என்றலும் அவுணர்_வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்
ஒன்றல்_இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய்
நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில்
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான்

#124
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத் தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் நக்கான்

#125
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ் உலகு எங்கும் பரந்துளானைக்
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல்
கும்பத் திண் கரியைக் கோள்மாக் கொன்று என நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான்

#126
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன்
சொன்னவன் தொட்டதொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்

#127
நசை திறந்து இலங்கப் பொங்கி நன்றுநன்று என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செம் கண் சீயம்

#128
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும்
தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும்
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை
சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி

#129
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சிப் புக்க
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ
போர் அடா பொருதியாயின் புறப்படு புறப்படு என்றான்
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் போவான்

#130
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்

#131
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினானால்

#132
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற
வித்தகர் உளரே அந்தத் தானவர் விரிந்த சேனை
பத்து_நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளிக் கொண்ட

#133
ஆயிரம் கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு
ஏயின ஒருவர்க்கு ஓரோர் திருமுகம் இரட்டிப் பொன் தோள்
தீ எனக் கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும்

#134
முடங்கு வால் உளை அவ் அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெம் காலச் செம் தீ அதனை வந்து அவிக்கும் கால
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அக் காற்றினை மாற்றும் ஆனால்
அடங்கலும் பகு வாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா

#135
குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும்
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ

#136
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள்
தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது அச் சீயம் தாயின்

#137
பேர் உடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும் பேரா
பாரிடைத் தேய்க்கும் மீளப் பகிரண்டத்து அடிக்கும் பற்றி
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும் நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்

#138
வகிர்ப் படுத்து உரக்கும் பற்றி வாய்களைப் பிளக்கும் வன் தோல்
துகில் படுத்து உரிக்கும் செம் தீக் கண்களைச் சூலும் சுற்றிப்
பகிர் படக் குடரைக் கொய்யும் பகை அறப் பிசையும் பல் கால்
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி

#139
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரைப் பரவை ஏழும்
மீனொடும் குடிக்கும் மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில்
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா

#140
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோளச்
சூழ் இரும் சுவரில் தேய்க்கும் சிலவரை துளக்கு_இல் குன்றம்
ஏழினோடு எற்றிக் கொல்லும் சிலவரை எட்டுத் திக்கும்
தாழ் இருள் பிழம்பின் தேய்க்கும் சிலவரை தடக் கை தாக்கி

#141
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கித்
தலைகளைக் கிள்ளும் அள்ளித் தழல் எழப் பிசையும் தக்க
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களைக் குடிக்கும் வான
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்பத் தூர்க்கும்

#142
முப் புறத்து உலகத்துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி
தப்புதல் இன்றிக் கொன்று தையலார் கருவும் தள்ளி
இப்புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி
அப்புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா

#143
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம்
நினைவதன் முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம்
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி

#144
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான்

#145
நின்றவன்-தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும்
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன்
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான்

#146
கேள் இது நீயும் காணக் கிளர்ந்த கோளரியின் கேழ்_இல்
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்துப் பின் என்
வாளினைத் தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்

#147
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்

#148
இருவரும் பொருந்தப் பற்றி எவ் உலகுக்கும் மேலாய்
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான்

#149
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர்ப் பாரம் ஆன்ற
ஏற்று_அரும் கரங்கள் பல் வேறு எறி திரைப் பரப்பின் தோன்ற
பாற்கடல் பரந்து பொங்கிப் பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான்

#150
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி
கோளொடும் திரிவது என்னக் குல மணிக் கொடும் பூண் மின்ன
தாள் இணை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக் கை ஒன்றால்

#151
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்தன இன்றும்
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன
நிழல் தரும் காலை மாலை நெடு மணிச் சுடரின் நீத்தம்

#152
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று
தான் தனி ஒருவன் தன்னை உரைசெயும் தரத்தினானோ
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும்

#153
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில்
வாயிலில் மணிக் கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின்
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கித் தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான்

#154
முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம்_கணானும்
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடிப்
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார்
எக் கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார்

#155
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம்-தன்னைக் கண்டனர் வெருவுகின்றார்

#156
பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கித் தோன்ற
எல்லை_இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான்

#157
தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மை
பின்னைப் படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை
உன்னைப் படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான்
என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ

#158
பல்லாயிர கோடி அண்டம் பனிக் கடலுள்
நில்லாத மொக்குள் எனத் தோன்றுமால் நின்னுழையே
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இவ் உருவம்
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ

#159
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை தமியை பிறர் இல்லை
யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால்

#160
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால்
என்னுளே எப்பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன்

#161
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும்
வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய்
நின்றார் இரு மருங்கும் நேமிப் பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்

#162
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்றுஎன்று
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால்
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான்

#163
பூவில் திருவை அழகின் புனை கலத்தை
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை
ஆவித் துணையை அமுதின் பிறந்தாளைத்
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல

#164
செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தாவிளக்கை நறும் தார் இளம் கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான்

#165
தீது_இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தைக்
காதலால் நோக்கினான் கண்ட முனிக் கணங்கள்
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும்
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்

#166
உந்தையை உன் முன் கொன்று உடலைப் பிளந்து அளைய
சிந்தை தளராது அறம் பிழையாச் செய்கையாய்
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய்
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான்

#167
அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம்

#168
கொல்லேம் இனி உன் குலத்தோரை குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான்

#169
முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்

#170
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினனாய்
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன்
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான்

#171
மின்னைத் தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய்
முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும்
என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி
உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம்

#172
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர்
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய்

#173
நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும்
எல்லை_இலா ஞானமும் ஈறு_இலா எப்பொருளும்
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ

#174
என்று வரம் அருளி எவ் உலகும் கைகூப்ப
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான்

#175
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன்
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான்
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான்

#176
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல்
தீதாய் விளைதல் நனி திண்ணம் எனச் செப்பினான்
மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்

@4 வீடணன் அடைக்கலப் படலம்

#1
கேட்டனன் இருந்தும் அக் கேள்வி தேர்கலாக்
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன்
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான்
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண்_கணான்

#2
இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான்
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்

#3
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ

#4
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என
சூழ்வினை முற்றி யான் அவர்க்குத் தோற்ற பின்
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின்
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ

#5
முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை
வன் பகை மனிதரின் வைத்த அன்பினை
என்புற உருகுதி அழுதி ஏத்துதி
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ

#6
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு
உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ

#7
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள்_அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ

#8
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி
விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்

#9
என்றலும் இளவலும் எழுந்து வானிடைச்
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா
நின்றனன் பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான்

#10
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்
கீழ்மையோர் சொல் கொடு கெடுதல் நேர்தியோ
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ

#11
புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர்
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர்
இத்தனை பேரையும் இராமன் வெம் சரம்
சித்திரவதை செயக் கண்டு தீர்தியோ

#12
எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என
உத்தமன் அ நகர் ஒழியப் போயினான்

#13
அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனை கழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடணனோடும் ஏயினார்

#14
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர்க்
கரைக்-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில்
பொருக்கென எழுதும் என்று எண்ணிப் போயினார்

#15
அளக்கரைக் கடந்து மேல் அறிந்து நம்பியும்
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல்
வளத் தடம் தாமரை மலர்ந்ததாம் எனக்
களப் பெரும் தானையைக் கண்ணின் நோக்கினான்

#16
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்
வானரம் பெரிது என மறு_இல் சிந்தையான்
தூ நிறச் சுடு படை துணைவர்ச் சொல்லினான்

#17
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனாத்
துறந்தனென் இனிச் செயல் சொல்லுவீர் என்றான்

#18
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை
தாழ்ச்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன் என்று கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்

#19
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும் புல்லி இப் பிறவி போக்குதும்

#20
முன்புறக் கண்டிலென் கேள்வி முன்பு இலென்
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்
என்பு உறக் குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்

#21
ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம்
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பிப் பெற்றனென்
போது உறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்

#22
ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது
தூயது நினைந்தது தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க் கழல் நணுகி நம் மனத்து
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான்

#23
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் எனப்
பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் கேள்வியார்
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்
உருளுறு தேரவன் உதயம் எய்தினார்

#24
அப்புறத்து இராமன் அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான் குவளை நோக்கி-தன்
துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான்
இப் புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான்

#25
கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும்
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர்
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான்

#26
தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும் கனக தீரமும்
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும்
புரள் நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான்

#27
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர்
துன்ன_அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான்

#28
கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால்
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல்
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான்

#29
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெரும் தடம் கொம்பிடைப் பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான்

#30
ஒரு தனிப் பேடை மேல் உள்ளம் ஓடலால்
பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உகப்
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்

#31
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்
தண் நிறப் பவள வாய் இதழைத் தன் பொதி
வெண் நிற முத்தினால் அதுக்கி விம்மினான்

#32
இத்திறம் நிகழ்வுறு காலை எய்திய
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான்

#33
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்
முறை படு தானையின் மருங்கு முற்றினான்
அறை கழல் வீடணன் அயிர்ப்பு_இல் சிந்தையான்

#34
முற்றிய குரிசிலை முழங்கு தானையின்
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார்
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை
சுற்றினர் உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்

#35
தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன்
வெம் தொழில் தீவினை பயந்த மேன்மையான்
வந்தனன் இலங்கையர்_மன்னன் ஆகும் நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார்

#36
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அத்
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார்
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர் என்பார்
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார்

#37
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார்
எற்றுவது அன்றியே இவனைக் கண்டு இறை
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார்

#38
இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போய பின்
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ
குமைப்பது நலன் என முடுகிக் கூறினார்

#39
இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்

#40
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல்
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார்
சலக் குறி இலர் என அருகு சார்ந்தனர்
புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார்

#41
யார் இவண் எய்திய கருமம் யாவது
போர் அது புரிதிரோ புறத்து ஒர் எண்ணமோ
சார்வுற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்
சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான்

#42
பகலவன் வழி முதல் பாரின் நாயகன்
புகல் அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன்
தகவுறு சிந்தையன் தரும நீதியன்
மகன்மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான்

#43
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால்
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும்
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர்
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான்

#44
சுடு தியைத் துகிலிடைப் பொதிந்து துன்மதி
இடுதியே சிறையிடை இறைவன் தேவியை
விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல்
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான்

#45
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான்
பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன்
துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான்

#46
மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும்
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே

#47
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான்

#48
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்
மண்டிலச் சடை முடி துளக்கி வாய்மையாய்
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான்

#49
விளைவினை அறிந்திலம் வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான்

#50
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான்
பல் பெரும் தானை சென்று அடர்க்கப் பார்த்து யான்
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான்

#51
முரண் புகு தீவினை முடித்த முன்னவன்
கரண் புகு சூழலே சூழ காண்பது ஓர்
அரண் பிறிது இல் என அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான்

#52
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால்
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர்
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன்
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான்

#53
கற்பு உடைத் தேவியை விடாது காத்தியேல்
எற்பு உடைக் குன்றம் ஆம் இலங்கை ஏழை நின்
பொற்பு உடை முடித் தலை புரளும் என்று ஒரு
நல் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான்

#54
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல்
ஆம் தினைப் பொழுதினில் அகறியால் எனப்
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான்

#55
அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை
இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்
கைப்புகற்பாலனோ கழியற்பாலனோ
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான்

#56
தட மலர்க் கண்ணனைத் தடக் கை கூப்பி நின்று
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான்
கடன் அறி காவலன் கழறினான் அரோ
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே

#57
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல்
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ
இனையன கேட்கவோ எம்மனோர்களை
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய்

#58
ஆயினும் விளம்புவென் அருளின் ஆழியாய்
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும்
மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய்

#59
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று
தம்முனைத் துறந்தது தரும நீதியோ
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர்

#60
தகை உறு தம்முனை தாயை தந்தையை
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை
பகையுற வருதலும் துறந்த பண்பு இது
நகையுறல் அன்றியும் நயக்கற்பாலதோ

#61
வேண்டுழி இனியன விளம்பி வெம் முனை
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன்
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே

#62
மிகைப் புலம் தருமமே வேட்ட போது அவர்
தொகைக் குலம் துறந்து போய்ச் துறத்தல் இன்றியே
நகைப் புலம் பொதுவுற நடந்து நாயக
பகைப் புலம் சார்தலோ பழியின் நீங்குமோ

#63
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள்
சீர்க்கு உறவாய் இடைச் செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய்

#64
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும்
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ

#65
கூற்றுவன்-தன்னொடு எவ் உலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம்
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண்
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ

#66
அரக்கரை ஆசு_அறக் கொன்று நல் அறம்
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம்
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்

#67
விண்டுழி ஒரு நிலைநிற்பர் மெய் முகம்
கண்டுழி ஒரு நிலைநிற்பர் கைப் பொருள்
கொண்டுழி ஒரு நிலைநிற்பர் கூழுடன்
உண்டுழி ஒரு நிலைநிற்பர் உற்றவர்

#68
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன்
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ
அஞ்சன_வண்ண என்று அறியக் கூறினான்

#69
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின்
தன் நிகர் பிறர் இலாத் தகைய சாம்பனை
என்னை உன் கருத்து என இறை வினாயினான்
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான்

#70
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரைச்
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்
நெறி-தனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர்
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ

#71
வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர்
முற்றுவர் உறு குறை முடிப்பர் முன்பினால்
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ

#72
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின்
தீதிலராய் நமக்கு அன்புசெய்வரோ

#73
கைப் புகுந்து உறு சரண் அருளிக் காத்துமேல்
பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்
மெய்க் கொள விளியினும் விடுதும் என்னினும்
திக்குறும் நெடும் பழி அறமும் சீறுமால்

#74
மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இவ்
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான்

#75
பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன்
நீலனை நின் கருத்து இயம்பு நீ என
மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான்

#76
பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய்
தொகையுறக் கூறுவென் குரங்கின் சொல் என
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால்

#77
தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்
சிங்கல்_இல் பெரும் பொருள் இழந்து சீறினோர்

#78
பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்
போரிடை புறங்கொடுத்து அஞ்சிப் போந்தவர்
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுளோர்

#79
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும்
உடன் கொளத்தகையர் நம்முழை வந்து ஒன்றினால்

#80
தாம் உற எளிவரும் தகைமையார்_அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால்
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம்

#81
காலமே நோக்கினும் கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான்

#82
மற்றுள மந்திரக் கிழவர் வாய்மையால்
குற்றம்_இல் கேள்வியர் அன்பு_கூர்ந்தவர்
பற்றுதல் பழுது என பழுதுறா ஒரு
பெற்றியின் உணர்வினார் முடியப் பேசினார்

#83
உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார்
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான்

#84
இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான்

#85
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர்
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார்
வித்தக இனி சில விளம்ப வேண்டுமோ

#86
தூயவர் துணி திறன் நன்று தூயதே
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய்
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்
மேயின சில பொருள் விளம்பக் கேட்டியால்

#87
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம்
கண்டது ஓர் பொழுதினில் தெரியும் கைதவம்
உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ

#88
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
மெள்ளத் தம் முகங்களே விளம்பும் ஆதலால்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ

#89
வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்

#90
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர்
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும்
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர்
பிறிவு_அரும் கருணையும் மெய்யும் பேணினான்

#91
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல்
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால்
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான்

#92
தீத் தொழில் அரக்கர்-தம் மாயச் செய் வினை
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால்

#93
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம்
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார்
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ

#94
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய
எல்லையில் தூதரை எறிதல் என்பது
புல்லிது பழியொடும் புணரும் போர்த் தொழில்
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான்

#95
மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்

#96
எல்லியில் நான் இவன் இரத மாளிகை
செல்லிய போதினும் திரிந்த போதினும்
நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய்

#97
நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன் தரும தானமும்
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து
அந்தணர் இல் எனப் பொலிந்ததாம் அரோ

#98
அன்னவன் தனி மகள் அலரின் மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னைத் துன்மதி
நல்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்

#99
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை
வில் தொடையின் விடு கணையால் வெந்து ஒழியும் எனக் கருதி விரைவின் வந்தான்
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின்
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார்

#100
தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதேவர்
மூவர்க்கும் முடிப்ப_அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதியாயின்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே

#101
பகைப் புலத்தோர் துணை_அல்லர் என்று இவனைப் பற்றோமேல் அறிஞர் பார்க்கின்
நகைப் புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க
தகைப் புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ
மிகைப் புலத்து விளைகின்றது ஒரு பொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவர்

#102
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன்றன்
வேத நூல் எனத் தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான்
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்யச் செய்தான்

#103
மாருதி அமுத வார்த்தை செவிமடுத்து இனிது மாந்தி
பேரறிவாள நன்றுநன்று எனப் பிறரை நோக்கிச்
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுறத் தேர்-மின் என்னா
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனைக் கேட்டார்

#104
கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பிலன் என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை

#105
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும்
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை

#106
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான்
துன்றி வந்து அன்புசெய்யும் துணைவனும் அவனே பின்னைப்
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ

#107
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ என்னைச் சரண் என வாழ்கின்றானைத்
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான்

#108
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின்
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம்

#109
பேடையைப் பிடித்து தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவிசெய்து விறகிடை வெம் தீ மூட்டி
பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ

#110
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மாப் பொருத போரின்
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள்
வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள் வெளி வந்து எய்தி
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்

#111
மன் உயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே
என்னினும் அடைந்தோர்-தம்மை ஏமுற இனிதின் ஓம்பிப்
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ

#112
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு_வாளன் நாளும்
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல்
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள்
வெம் சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ

#113
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ

#114
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார்

#115
சீதையைக் குறித்ததேயோ தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வேன் என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ

#116
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆருயிர் கொடுத்துக் காத்தார் எண்ணிலா அரசர் அம்மா

#117
ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்-பால் வைத்த
காதலான் இனி வேறு எண்ணக் கடவது என் கதிரோன்_மைந்த
கோதிலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான்

#118
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான்

#119
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல்
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும்
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான்

#120
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவின் தோளார்

#121
தழுவினர் நின்ற காலை தாமரைக்கண்ணன் தங்கள்
முழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம்
தொழுதியால் விரைவின் என்று கதிரவன்_சிறுவன் சொன்னான்

#122
சிங்க_ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா முன்
கங்குலின் நிறத்தினான்-தன் கண் மழை தாரை கான்ற
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அவ் அகத்தை மிக்குப்
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோமப் புள்ளி

#123
பஞ்சு எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள்செய்தானோ
தஞ்சு எனக் கருதினானோ தாழ் சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன்

#124
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும்
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர்

#125
தீர்வு_அரும் இன்னல்-தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப்
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ
கார் வரை நிறுவி தன்னைக் கனல் எழ கலக்கக் கண்டும்
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே

#126
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே
அற வினை இறையும் இல்லா அறிவிலா அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன்

#127
திருத்திய உணர்வு மிக்க செங்கதிர்ச்செல்வன் செம்மல்
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும்
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரைக் காணும்
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான்

#128
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்தச் சென்றார்

#129
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்ற வில் கை வடவரை பாங்கு நிற்ப
கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான்

#130
அள்ளி மீது உலகை வீசும் அரிக் குல சேனை நாப்பண்
தெள்ளு தண் திரையிற்று ஆகிப் பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை

#131
கோணுதற்கு அமைந்த கோலப் புருவம் போல் திரையும் கூட
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில்
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி
வாள்_நுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை

#132
படர் மழை சுமந்த காலைப் பருவ வான் அமரர் கோமான்
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்னக் காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை

#133
கற்றை வெண் நிலவு நீங்கக் கருணையாம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்றாய முழுமதி முகத்தினானைப்
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத் தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை

#134
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்
வார நெஞ்சு உருகிச் செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின்
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன்-கொல்லாம்
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான்

#135
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச்
செம் மணி மகுடம் நீக்கித் திருவடி புனைந்த செல்வன்
தம்முனார் கமலத்து அண்ணல் தாதையார் சரணம் தாழ
எம்முனார் எனக்குச் செய்த உதவி என்று ஏம்பலுற்றான்

#136
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடிக் கணை தொடுத்துக் கொல்வான்
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான்

#137
கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்

#138
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்துக் காட்ட
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்புற வணங்கினானைப்
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்க் கையால் இருக்கை ஈந்தான்

#139
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள்
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்

#140
தீர்த்தன் நல் அருளை நோக்கிச் செய்ததோ சிறப்புப் பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ யாது-கொல்லோ
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனித்தனி வாழ்ந்தேம் என்ன
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா

#141
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ் முறை வணங்கி நின்ற
அஞ்சன_மேனியானை அழகனும் அருளின் நோக்கித்
தஞ்ச நல் துணைவன் ஆன தவறிலாப் புகழான்-தன்னைத்
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான்

#142
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா
அளவு_அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான்

#143
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை

#144
நடு இனிப் பகர்வது என்னே நாயக நாயினேனை
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய்
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான்

#145
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார்
பொரு_அரும் அமரர் வாழ்த்திப் பூ_மழை பொழிவதானார்

#146
ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த
வார்த் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும்
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம்
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனிப் பொம்மல்

#147
மொழிந்த சொல் அமிழ்தம்_அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான்
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமைச் செல்வம்
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே

#148
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை_வேந்தன்
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்பப்
பல் நெடும் தானை சூழப் பகலவன் சேயும் நீயும்
மன் நெடும் குமர பாடிவீட்டினை வலம்செய்க என்றான்

#149
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி வானரத்தலைவர் தாங்க
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி
மந்தரத் தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை

#150
தேடுவார் தேட நின்ற சேவடி தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார்
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர்

#151
இற்றை_நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம்
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார்
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை_வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம்

@5 ஒன்னார் வலி அறி படலம்

#1
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர்
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன்

#2
சந்தி வந்தனைத் தொழில் முடித்து தன்னுடை
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே

#3
மாத் தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள்
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்_மலர்
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே

#4
சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்
மல்லிகைக் கானமும் வானமும் ஒத்ததே

#5
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇத்
தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்
என்றது போல வந்து எழுந்தது இந்துவே

#6
கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்

#7
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்
உடைக் கரும் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால்
கிடைக்க வந்தான் எனக் கிளர்ந்தது ஒத்ததே

#8
மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தால் என அரவத் தொல் கடல்
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால்

#9
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்

#10
கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள்

#11
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால்
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன்
கடலினை நோக்கும் அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால்

#12
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ

#13
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை
மேயவன்-தன்னொடும் எண்ணி மேல் இனி
தூயது நினைக்கிலை என்னச் சொல்லினான்

#14
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான்
செவ் வழி அறிஞனைக் கொணர்-மின் சென்று என
இவ் வழி வருதி என்று இயம்ப எய்தினான்
வெவ் வழி விலங்கி நல் நெறியை மேவினான்

#15
ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்
தார் கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான்

#16
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான்
முழுது உணர் புலவனை முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற
தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்

#17
நிலை உடை வடவரை குலைய நேர்ந்து அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும்முடி வாங்கி ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே

#18
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால்

#19
மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும்
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிடும் என் பல சொல்லி சுற்றிய
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால்

#20
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்
இடையிலர் எண்_இரு கோடி என்பரால்
கடையுக முடிவினில் காலன் என்பது என்
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர்

#21
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல்
கூற்றையும் கண் பொறி குறுகக் காண்பரேல்
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார்

#22
தென்திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண்_இரு கோடி என்பரால்
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார்

#23
கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால்
கோட்டு இரும் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார்

#24
விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால்
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார்

#25
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால்
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால்

#26
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ
மெய்ப் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார்

#27
சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்
அறப் பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர்
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்
இறப்பிலர் எண் இருநூறு கோடியே

#28
விடம் அல விழி எனும் வெகுளிக் கண்ணினர்
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர்
வடவரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால்

#29
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்
குன்றினும் வலியவர் கோடி கோடியால்

#30
தேர் பதினாயிரம் பதுமம் செம் முகக்
கார் வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே

#31
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப் படை
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய்

#32
இலங்கையின் அரண் இது படையின் எண் இது
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல்
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்

#33
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படைத் தொகையான்
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான்

#34
பொருப்பை மீதிடும் புரவியும் பூட்கையும் தேரும்
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான்
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன்

#35
தும்பி ஈட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான்
செம்பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை வைத்தான்
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான்

#36
பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆய தேர்ப் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான்
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன்

#37
குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன்
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால்
தின்றுளான் நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன்

#38
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படைத் தானை
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான்

#39
தேவரும் தக்க முனிவரும் திசைமுகன் முதலா
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான்
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன்
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான்

#40
உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்
நச் சிரப் படை நால்_இரு கோடிக்கு நாதன்
முச் சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன்
வச்சிரத்துஎயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான்

#41
அசஞ்சலப் படை ஐ_இரு கோடியன் அமரின்
வசம் செயாதவன் தான் அன்றிப் பிறர் இலா வலியான்
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள்
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன்

#42
சில்லி மாப் பெரும் தேரொடும் கரி பரி சிறந்த
வில்லின் மாப் படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன்
கல்லி மாப் படி கலக்குவான் கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன்

#43
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன்
வலம்கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்
விலங்குநாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான்

#44
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான்
தாமம் நாட்டிய கொடிப் படை பதுமத்தின் தலைவன்
தூமநாட்டத்தன் என்று உளன் தேவரைத் துரந்தான்

#45
போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார்
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில்
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய்

#46
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன்
அன்னவன் பெரும் துணைவராய் அமர்த் தொழிற்கு அமைந்தார்
சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான்
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன்

#47
சேனை காவலன் இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான்

#48
தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரி கோடு இரு கைகளால் கழற்றி
செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான்
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைந்தான்

#49
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெம் சினத்து இந்திரசித்து என மொழிவான்
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு

#50
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்
அன்னவன்-தனக்கு இளையவன் அப் பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன்

#51
தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும்
மூவராம் தகை முதல்வராம் தலைவரும் முனையின்
போவராம் தகை அழிவராம் எனத் தனிப் பொருவார்
ஆவராம் தகை இராவணற்கு அரும்பெறல் புதல்வர்

#52
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென்
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்குத் தவத்தால்
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான்

#53
எள்_இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க

#54
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அத் தொகுதி
மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர்

#55
குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற அதன் பின்
இலங்கை_வேந்தன் என்று உரைத்தலும் இடியுண்ட அரவின்
கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம்

#56
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் எனப் போனான்
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து

#57
புண்ணும் செய்தது முதுகு எனப் புறங்கொடுத்து ஓடி
உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர் மேல்
நண்ணும் செய்கையது எனக் கொடு நாள்-தொறும் தன் நாள்
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான்

#58
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில்
பருணன்-தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால்
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து

#59
என்று உலப்புறச் சொல்லுகேன் இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு_இலாத் தோளினான் கொற்றம்
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள்
சென்று உலப்பினும் நினக்கு அன்றிப் பிறர்க்கு என்றும் தீரான்

#60
ஈடுபட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால்
பாடுபட்டவர் படு கடல் மணலினும் பலரால்
சூடுபட்டது தொல் நகர் அடு புலி துரந்த
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்

#61
எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர்
கிங்கரப் பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார்
வெம் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்

#62
வெம்பு மாக் கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான்
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு தலைவ

#63
சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்
தானைக் கார்க் கரும் கடலொடும் தமரொடும் தாமும்
யானைக் கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார்

#64
காய்த்த அக் கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறைத் தோல்
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின்
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கித்
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில்

#65
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து
சின்னமானவர் கணக்கிலர் யாவரே ஆதரிப்பார்
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது அக் குருதியால் அன்று

#66
விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும் அச் சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை_வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான்

#67
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான்

#68
காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும் கவியின்
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அவ் இலங்கை
தீந்தவா கண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய்

#69
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கித் தன் தூதனைப் பார்த்து இவை சொன்னான்

#70
கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ
கேட்ட ஆற்றினால் கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது என் வில் தொழில் காட்டவோ வீர

#71
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ
பொன் செய் தோளினாய் போர்ப் பெரும் படையொடும் புக்கோம்
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்

#72
என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை பாக்கியம் உருக்கொண்டது ஒப்பாய்
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய்

#73
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன்
நின்ற வானரத்தலைவரும் அரசும் அ நெடியோன்
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார்

#74
தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால்
கிடக்கும் வண்ண வெம் கடலினைக் கிளர் பெரும் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய்

#75
கரந்து நின்ற நின் தன்மையை அது செலக் கருதும்
பரந்தது உன் திருக் குல முதல் தலைவரால் பரிவாய்
வரம் தரும் இந்த மாக் கடல் படை செல வழி வேறு
இரந்து வேண்டுதி எறி திரைப் பரவையை என்றான்

#76
நன்று இலங்கையர்_நாயகன் மொழி என நயந்தான்
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன்
சென்று வேலையைச் சேர்தலும் விசும்பிடை சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன பகலவன் குதிரை

@6 கடல் சீறிய படலம்

#1
கொழும் கதிர்ப் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை
செழும் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம்

#2
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி

#3
பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும் பொறை தீர்
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான்
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர்
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன்

#4
ஊற்றம் மீக்கொண்ட வேலையான் உண்டு இலை என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால்
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண்

#5
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி-தனை வணங்கி
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் எனக் குனிந்தன கொழும் கடைப் புருவம்

#6
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
இன்று வேண்டியது எறி கடல் நெறி-தனை மறுத்தான்
நன்றுநன்று என நகையொடும் புகை உக நக்கான்

#7
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகைசால்
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான்

#8
புரந்து கோடலும் புகழொடு கோடலும் பொருது
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச
கரந்து கோடலே நன்று இனி நின்றது என் கழறி

#9
கானிடைப் புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த
ஊன் உடைப் பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த
மீன் உடைக் கடல் பெருமையும் வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும் காண்பரால் வானோர்

#10
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர்

#11
மறுமை கண்ட மெய் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார்
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார்
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்

#12
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன் பல் கால்
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பிக்
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான்

#13
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல்
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால்
தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்

#14
மாரியின் பெரும் துளியினும் வரம்பு_இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான்

#15
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெம் சிலை வளர்பிறையாம் என வாங்கித்
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்

#16
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம்

#17
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி
ஏழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி
ஆழி மால் வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த

#18
மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும வானிடைக் கற்பக மரங்களும் தீய
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு
உருமு வீழ்ந்து எனச் சென்றன கடல் துளி உம்பர்

#19
கூடும் வெம் பொறிக் கொடும் கனல் தொடர்ந்து எனக் கொளுந்த
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர்
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர்க்
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீக்கொள்ள

#20
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவத்
துமிந்த துண்டமும் பல படத் துரந்தன தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி

#21
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய
ஆறு கீழ்ப் பட அளறுபட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன்-தன் சிரங்கள்

#22
மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் எனப் பொரு கணை எரிய
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம்

#23
சிந்தி ஓடிய குருதி வெம் கனலொடு செறிய
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர்
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர
வெந்து தீந்தன கரிந்தன பொரிந்தன சில மீன்

#24
வைய_நாயகன் வடிக் கணை குடித்திட வற்றி
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன்

#25
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப
கணிப்ப_அரும் புனல் கடையுறக் குடித்தலின் காந்தும்
மணிப் பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி

#26
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன்
சங்கமும் கறி கிழங்கு என இடையிடை தழுவி
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற

#27
அதிரும் வெம் கணை ஒன்றையொன்று அடர்ந்து எரி உய்ப்ப
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம்
பொதுவின் மன் உயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு பால்

#28
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப்பட நெருப்பொடும் பற்றி
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம் மற்றும்
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரிக் குலம் எல்லாம்

#29
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம் எனப் பிழைப்பு இல மனத்தினும் கடுக
வெய்ய வல் நெருப்பு இடையிடை பொறித்து எழ வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்து எனப் பொலிந்தது புணரி

#30
செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர்

#31
தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும் தானே
வாரி உண்டு அருள்செய்தவற்கு இது ஒரு வலியோ
பாரை உண்பது படர் புனல் அப் பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் நிறுத்தான்

#32
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்
கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார்
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால்
பொங்கு வெம் கனல் எனும் புனலில் போயினார்

#33
தென்திசை குட திசை முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன சென்றில நெறியின் நீங்கின

#34
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் எனச்
செறிந்த தம் பெடைகளைத் தேடி தீக் கொள
மறிந்தன கரிந்தன வானப் புள் எலாம்

#35
கமை அறு கரும் கடல் கனலி கைபரந்து
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ
சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்
இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார்

#36
பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்
தீச் செலா நெறி பிறிது இன்மையால் திசை
மீச்செலா புனலவன் புகழின் வீந்தவால்

#37
பம்புறு நெடும் கடல் பறவை யாவையும்
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன

#38
பட்டன படப்பட படாத புள் குலம்
சுட்டு வந்து எரி குலப் படலம் சுற்றலால்
இட்டுழி அறிகில இரியல்போவன
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம்

#39
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம் எண்ணிலோம் என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன குரங்கின் சூழ்ந்தில

#40
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார்
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார்
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார்
மீன் நெடும் குலம் என மிதந்து வீங்கினார்

#41
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும்பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம்
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே

#42
செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன
உறு சினம் உறப் பல உருவு கொண்டன
குறுமுனி எனக் கடல் குடித்த கூர்ம் கணை

#43
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில்
வேதலும் இலங்கையும் மீளப் போயின
தூதன் வந்தான் எனத் துணுக்கம் கொண்டதால்

#44
அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன
முருக்கு எனச் சிவந்தன முரிய வெந்தன
கரிக் குவை நிகர்த்தன பவளக் காடு எலாம்

#45
பேர் உடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில
நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன

#46
சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு அனல்
பருகிடப் புனல் இல பகழி பாரிடம்
மருள் கொளப் படர்வன நாகர் வைப்பையும்
இருள் கெடச் சென்றன இரவி போல்வன

#47
கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்புறச் செல்வன இழிவ கீழுற
அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம்
பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ

#48
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன
கடல் திறந்து எங்கணும் வற்ற அக் கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த கோள் அரா

#49
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அறப்
பூழையின் பொரு கணை உருவப் புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள் வளை

#50
நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறாயிரம் கோடி ஆயின
சென்று தேய்வுறுவரோ புலவர் சீறினால்
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம்

#51
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன் உயிர்
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம்

#52
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால்
நீல வான் துகிலினை நீக்கி பூ நிறக்
கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள்
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள்

#53
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடலுற்றதால்
மற்றொரு கடல் புக வடவைத்தீ அரோ

#54
வாழியர் உலகினை வளைத்து வான் உறச்
சூழ் இரும் பெரும் சுடர்ப் பிழம்பு தோன்றலால்
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது அவ் ஆழி அன்ன நாள்

#55
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது போய்
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்

#56
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர்
தடுக்க_அரும் வெகுளியான் சதுமுகன் படை
தொடுத்தனன் அமரரும் துணுக்கம் எய்தினார்

#57
மழைக் குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம்
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால்

#58
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னிப்
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே

#59
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும்
வரக் கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார்

#60
உற்று ஒரு தனியே தானே தன்-கணே உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான் நடு இனிப் பிழைப்பது எங்ஙன்
குற்றம் ஒன்று இலாதோர் மேலும் கோள் வரக் குறுகும் என்னா
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ

@7 வருணன் அடைக்கலப் படலம்

#1
எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும்
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான்
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சித்
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான்

#2
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே
தீயிடை நடப்பான் போலச் செறி புனற்கு இறைவன் சென்றான்

#3
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில்
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன்
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழுப் புகைப் படலம் விம்ம
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான்

#4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின்
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான்

#5
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீச்
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி_மூர்த்தி

#6
காட்டுவாய் உலகம் காட்டிக் காத்து அவை கடையில் செம் தீ
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான்

#7
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ளப் பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி

#8
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர
புள்ளின் மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி

#9
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை

#10
பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்

#11
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற
உருப் பெறக் காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன
அருப்பு_அறப் பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான்

#12
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால்
ஈறு_இலா வணக்கம்செய்து யாம் இரந்திட எய்திடாதே
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும்

#13
பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான்
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரைக் கடலில் மீனின்
போர்த் தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்

#14
என்றலும் இரங்கி ஐயன் இத்திறம் நிற்க இந்த
பொன்றல்_இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன
நன்று என வருணன்தானும் உலகத்து நலிவு தீரக்
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும்

#15
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர்
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்
மின் உமிழ் கணையை வெய்யோர் மேல் செல விடுதி என்றான்

#16
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான்
கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும்
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம்
பாடி நூறாக நூறி மீண்டது அப் பகழித் தெய்வம்

#17
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம்
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ
மாய் வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்
தீவினை உடையார்-மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே

#18
பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடித்
தூபமே பெருகும் வண்ணம் எரி எழச் சுட்டது அன்றே
தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா

#19
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன்
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும்
குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து நீங்க
வழியினைத் தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல்

#20
ஆழமும் அகலம்தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம்
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய்

#21
கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா வண்ணம்
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய்
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

#22
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான்

@8 சேது பந்தனப் படலம்

#1
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர்_கோமகற்கு
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான்
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன்

#2
வந்தனன் வானரத் தச்சன் மன்ன நின்
சிந்தனை என் என செறி திரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு என
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன்

#3
காரியம் கடலினை அடைத்துக் கட்டலே
சூரியன் காதல சொல்லி என் பல
மேருவும் அணுவும் ஓர் வேறுறா வகை
சேர்வுற இயற்றுவென் கொணரச் செப்பு என்றான்

#4
இளவலும் இறைவனும் இலங்கை_வேந்தனும்
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் எனத்
தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்

#5
கரு வரை காதங்கள் கணக்கிலாதன
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என வந்த வானரம்

#6
பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத்தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடிப் பாடின

#7
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின்
மேலிடை மலையினை வாங்கி விண் தொடும்
சூல் உடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால்

#8
முடுக்கினன் தருக என மூன்று கோடியர்
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான்

#9
மஞ்சினில் திகழ்தரும் மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்

#10
சயக் கவிப் பெரும் படைத்தலைவர் தாள்களால்
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள்
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின
இயக்கரும் மகளிரும் இரியல்போயினார்

#11
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின
ஓர் இடத்து ஒன்றின் மேல் ஒன்று சென்றுற
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான்

#12
ஆனிறக்_கண்ணன் என்று ஒருவன் அங்கையால்
கான் இற மலை கொணர்ந்து எறிய கார்க் கடல்
தூ நிற முத்து இனம் துவலையோடு போய்
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே

#13
சிந்துரத் தட வரை எறிய சேணிடை
முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால்
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே

#14
வேணுவின் நெடு வரை வீச மீமிசைச்
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில்
பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால்
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார்

#15
தேன் இவர் தட வரை திரைக் கரும் கடல்
தான் நிமிர்தர இடை குவியத் தள்ளும் நீர்
மேல் நிமிர் திவலை மீச்சென்று மீடலால்
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால்

#16
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள்
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை

#17
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும்
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம
தசும்பினில் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்ன
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே

#18
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வப்
பூ முதலாய எல்லாம் மீன் கொளப் பொலிந்த அன்றே
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக் குன்றம்
தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர்

#19
மண்ணுறச் சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலைக் குன்றம்
கள் நிறை பூவும் காயும் கனிகளும் பிறவும் கவ்வா
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல்
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த

#20
கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கையின் வாங்கிப்
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து
உறங்கின கேடுற்றாலும் உணர்வரோ உணர்விலாதார்

#21
இழை எனத் தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த
புழை உடைத் தடக் கை ஒன்றோடொன்று இடை பொருந்தச் சுற்றி
கழை உடைக் குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால
மழை எனப் பொருத வேலை மகரமும் மத்த மாவும்

#22
பொன்றின சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்புக் கோப்ப
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டுச்
சென்று மேல் நிலைபெறாது திரிந்தன சிகரச் சில்லி

#23
கூர் உடை எயிற்றுக் கோள் மாச் சுறவு இனம் எறிந்து கொல்ல
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளிப் போத்தும்
நீரிடைத் தோற்ற அன்றே தம் நிலை நீங்கிச் சென்றால்
ஆரிடைத் தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா

#24
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ
வள்ளியர் ஆயோர் செல்வம் மன் உயிர்க்கு உதவும் அன்றே
துள்ளின குதித்த வானத்து உயர் வரைக் குவட்டில் தூங்கும்
கள்ளினை நிறைய மாந்தி கவி எனக் களித்த மீன்கள்

#25
மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம்-தன்னால்
கோய் சொரி நறவம் என்னத் தண் புனல் உகுக்கும் குன்றின்
வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்துசெய்திருந்த ஈண்ட
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம்

#26
விண்தலம் தொடு மால் வரை வேரொடும்
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால்
திண் தலம் கடல் ஆனது நீர் செல
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே

#27
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும்
மொய் கொள் குன்றின் முதலின மொய்த்தலால்
நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால்

#28
யான் உணாதன இங்கு இவை என்னவே
தீன் உணாதன என் இது செய்யுமே
மான் உணாத திரைக் கடல் வாழ்தரு
மீன் உணாதன இல்லை விலங்கு அரோ

#29
வவ்விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள்
செவ் விலங்கல்_இல் சிந்தையின் தீர்வரோ
இவ் விலங்கல் விடேம் இனி என்ப போல்
எவ்விலங்கும் வந்து எய்தின வேலையே

#30
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும்
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால்
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்

#31
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார்
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார்
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர்
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார்

#32
முழுக்கு நீரில் புகா முழுகிச் செலா
குழுக்களோடு அணை கோளரி யாளிகள்
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும்
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே

#33
பளிக்கு மால் வரை முந்திப் படுத்தன
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்
வெளிக்கு மால் வரை வேண்டும் எனக் கொணர்ந்து
அளிக்கும் வானர வீரர் அநேகரால்

#34
பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட
மூரி வானரம் வாங்கிய மொய் மலை
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை
சோரும் நாகம் நிலன் உறத் தூங்குமால்

#35
அருணச் செம் மணிக் குன்று அயலே சில
இருள் நல் குன்றம் அடுக்கின ஏய்ந்தன
கருணைக் கொண்டல் வறியன் கழுத்து என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே

#36
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம்
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல்
பாய்ந்து பண்டு உறையும் மலைப் பாந்தள்கள்
போந்த மா மலையின் முழை புக்கவே

#37
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால்
மீது விட்டு உலகு உற்றது மீன் குலம்

#38
நீலன் இட்ட நெடு வரை நீள் நில
மூலம் முட்டலின் மொய் புனல் கைம்மிக
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம்

#39
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர்
தியந்தம் முட்ட திசை நிலை யானையும்
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ

#40
இலக்குவன் சரமாயினும் இன்று எதிர்
விலக்கினால் விலங்காத விலங்கலால்
அலக்கண் எய்த அமுது எழ ஆழியைக்
கலக்கினான் மகன் மீளக் கலக்கினான்

#41
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் எனப்
பெருத்த குன்றம் கரடிப் பெரும் படை
விருத்தன் இட்ட விசையினின் வீசிய
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால்

#42
குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதன் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால்

#43
கன சினத்து உருமின் கடும் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன்
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து
அனசனத் தொழில் மேற்கொள்வது ஆயினான்

#44
எண்_இல் எண்கு இனம் இட்ட கிரிக் குலம்
உண்ணஉண்ணச் சென்று ஒன்றினொடு ஒன்று உற
சுண்ண நுண் பொடி ஆகித் தொலைந்தன
புண்ணியம் பொருந்தார்-தம் முயற்சி போல்

#45
ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம்
பார மால் வரை ஏறப் பதைத்து உடல்
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால்

#46
குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான்
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணல் படத்
தலைகள் ஒக்கத் தடவும் தடக் கையால்

#47
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய
குழுவின் வானரர் தந்த கிரிக் குலம்
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்

#48
மலை சுமந்து வருவன வானரம்
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டுத் தம்
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம்

#49
பருத்த மால் வரை ஏந்திய பல் படை
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன்
சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால்

#50
ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன்
மாந்திமாந்தி மறந்து துயின்றவால்

#51
போதல் செய்குநரும் புகுவார்களும்
மாதிரம்-தொறும் வானர வீரர்கள்
சேது எத்துணைச் சென்றது என்பார் சிலர்
பாதி சென்றது எனப் பகர்வார் சிலர்

#52
குறைவு_இல் குங்குமமும் குகைத் தேன்களும்
நிறை மலர்க் குலமும் நிறைந்து எங்கணும்
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால்
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர்

#53
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும்
குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே

#54
கொழுந்து உடைப் பவளக் கொடியின் குலம்
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல்
விழுந்த பல் மணியின் ஒளி மீமிசை
எழுந்த எங்கணும் இந்திரவில்லினே

#55
பழுமரம் பறிக்க பறவைக் குலம்
தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான்
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால்
அழுது அரற்றும் கிளை என ஆனவால்

#56
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம்
கரவிலாளர் விழ களைகண் இலா
இரவலாளரின் எங்கும் இரிந்தவால்

#57
தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்
மிக்கு அடங்கலும் போவன மீன் குலம்
அக் கரும் கடல் தூர அயல் கடல்
புக்கு அடங்கிடப் போவன போன்றவே

#58
மூசு வண்டு இனம் மும்மத யானையின்
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே

#59
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து
அலமரும் துயர் எய்திய ஆயினும்
வல மரங்களை விட்டில மாசிலாக்
குல மடந்தையர் என்ன கொடிகளே

#60
துப்பு உறக் கடல் தூய துவலையால்
அப்புறக் கடலும் சுவை அற்றன
எப்புறத்து உரும்_ஏறும் குளிர்ந்தன
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர்

#61
முதிர் நெடும் கிரி வீழ முழங்கு நீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால்
மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன
கதிரவன் கனல் வெம் கதிர்க் கற்றையே

#62
நன்கு ஒடித்து நறும் கிரி சிந்திய
பொன் கொடி துவலைப் பொதிந்து ஓடுவ
வன் கொடிப் பவளங்கள் வயங்கலால்
மின் பொடித்தது போன்றன விண் எலாம்

#63
ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய்க்
காடும் நாடும் மரங்களும் கற்களும்
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர்
பூடும் ஆடுதல் இலாய இப் பூமியில்

#64
வரைப் பரப்பும் வனப் பரப்பும் உவர்
தரைப் பரப்புவது என்ன தனித்தனி
உரைப் பரப்பும் உறு கிரி ஒண் கவி
கரைப் பரப்பும் கடற்பரப்பு ஆனதால்

#65
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகலிடை முற்றவும்
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ

#66
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே

#67
மெய்யின் ஈட்டத்து இலங்கையாம் மென் மகள்
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்

#68
கான யாறு பரந்த கரும் கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால்
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என
வான யாறு இம்பர் வந்தது மானுமால்

#69
கல் கிடந்து ஒளிர் காசு இனம் காந்தலால்
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை
எல் கடந்த இருளிடை இந்திரவில்
கிடந்தது என்ன விளங்குமால்

#70
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின்
கான வாழ்க்கைக் கவிக் குல நாதனும்
மான வேல் கை இலங்கையர்_மன்னனும்
ஏனையோரும் இராமனை எய்தினார்

#71
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன்
ஐ_இரண்டின் அகலம் அமைந்திட
செய்ததால் அணை என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே

@9 ஒற்றுக் கேள்விப் படலம்

#1
ஆண்தகையும் அன்பினொடு காதலது கூர
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம்
காண்டலதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான்

#2
பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும்
கொண்டல் என வந்து அவ் அணையைக் குறுகி நின்றான்
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி_அனையாளைக்
கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான்

#3
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்பக்
குன்று கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான்

#4
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்
ஆழியினது ஆழம் உரைசெய்யும் அளவே அன்றே
வாழி இவ் இலங்கை நெடு வன் திசையது ஆமேல்
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான்

#5
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல்
கற்று உணரும் மாருதி கடைக் குழை வர தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீரப்
பொன் திரள் புயக் கரு நிறக் களிறு போனான்

#6
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன்
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே
கரும் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப

#7
ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்தப்
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன

#8
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல்
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல்
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ

#9
மெய்யிடை நெருங்க வெளியற்று அயலில் வீழும்
பொய் இடம் இலாத புனலின் புகல் இலாத
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை

#10
இழைத்து அனைய வெம் கதிரின் வெம் சுடர் இராமன்
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த
வழைத் தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர்

#11
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி
சாமரையின் வீசினர் படைத்தலைவர்தாமே

#12
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும்
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன்

#13
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும்
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள_வஞ்சி
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான்

#14
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம்-பால்
வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன
கால் மிசை வணங்கிப் போனான் கல்லினால் கடலைக் கட்டி
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான்

#15
பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின்
நல் நலம் ஆக வாங்கி நால் வகைச் சதுரம் நாட்டி
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம்
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான்

#16
வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால் பொருப்பின் வீங்கும்
கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான் கழைகள் ஆன
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து வாசப் பூவினால் வேய்ந்துவிட்டான்

#17
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன் உயிர்கட்கு எல்லாம்
தாயினும் அன்பினானைத் தாள் உற வணங்கித் தம்தம்
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும்
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான்

#18
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு
உப்பு நீர் அகத்துத் தோய்ந்த ஒளி நிறம் விளங்க அப்பால்
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான்

#19
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும்
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல்
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி
கால் உற வளைத்த காமன் வில் எனக் காட்டிற்று அன்றே

#20
நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகரத் தென்றல் என்னும்
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளிக்
கூற்றினும் வெம்மை காட்டிக் கொதித்தது அக் குளிர் வெண் திங்கள்

#21
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கைத் தீர்ந்து
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம்
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள
உயிர்ப்பு உடை வெள்ளைப் பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற

#22
மன் நெடு நகரம் மாடே வரவர வயிரச் செம் கைப்
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உறப் புழுங்கி நைந்தான்
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவளச் செவ் வாய்
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ

#23
இற்றிது காலம் ஆக இலங்கையர்_வேந்தன் ஏவ
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரைப்
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த
நல் தவப் பயன் தந்து உய்ப்ப முந்துறப் போந்த நம்பி

#24
பேர்வுறு கவியின் சேனைப் பெரும் கடல் வெள்ளம்-தன்னுள்
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான்
சோர்வுறு பாலின் வேலைச் சிறு துளி தெறித்தவேனும்
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான்

#25
பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும்
உருவமும் தெரியா வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான்

#26
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்கக் குத்தி
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கிப்
பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரைக்
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான்

#27
பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர்
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான்

#28
அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரியச் சொன்னான்

#29
கல்விக்-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருதக் கள்வர்
வல் வில் கை வீர மற்று இவ் வானரர் வலியை நோக்கி
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம்
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார்

#30
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான்
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும்
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறாய்
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்

#31
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற
வன்கணார்-தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான்

#32
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னைக் கொல்லும்
நோய் தெரிந்து உணரான் தேடிக் கொண்டனன் நுவல யாங்கள்
வாய் தெரிந்து உணரா வண்ணம் கழறுவார் வணங்கி மாய
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார்

#33
எல்லை_இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர் மகர வேலை கவிக் குல வீரர் தூர்த்துக்
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர்

#34
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம்
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல்
ஒத்துற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால்

#35
சண்டம் கொள் வேகமாகத் தனி விடை உவணம் தாங்கும்
துண்டம் கொள் பிறையான் மௌலித் துளவினானோடும் தொல்லை
அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும் அறமிலாதான்
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால்

#36
தீட்டிய மழு வாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம்
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும்
வீட்டி என் தாதைக்காக மெய்ப் பலி விசும்புளோரை
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்

#37
தாழ்வு_இலாத் தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும்
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு_இலாச் சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால்

#38
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லையாயின் அஞ்சல் என்று அவரை ஐயன்
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம்
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார்

#39
அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும்
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும்
வரவும் நோக்கி இலங்கையர்_மன்னவன்
இரவின் எண்ணிட வேறு இருந்தான் அரோ

#40
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும்
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான்
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும்
சார்கிலா நெடு மந்திரசாலையே

#41
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரைப் பொருள்
புணரும் கேள்வியர்_அல்லர் பொறியிலர்
கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர்
துணரும் நல் விளக்கு ஏந்தினர் சுற்றினார்

#42
நணியர் வந்து மனிதர் நமக்கு இனித்
துணியும் செய் வினை யாது எனச் சொல்லினான்
பணியும் தானவர் ஆதியர் பல் முடி
மணியினால் விளங்கும் மலர்த் தாளினான்

#43
கால வெம் கனல் போலும் கணைகளால்
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம்
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால்

#44
கிழி படக் கடல் கீண்டதும் மாண்டது
மொழி படைத்த வலி என மூண்டது ஓர்
பழி படைத்த பெரும் பயத்து அன்னவன்
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால்

#45
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர்
துடைத்த வானர வீரர் தம் தோள்களைப்
புடைத்தவாறும் புணரியைப் போக்கு_அற
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால்

#46
காந்து வெம் சின வீரர் கணக்கிலார்
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர
வேந்த வெற்பை ஒருவன் விரல்களால்
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால்

#47
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையைத்
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரைக்
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ

#48
என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்
தின்று வாயை விழி வழித் தீ உக
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான்

#49
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான்
ஆன காலை அடியின் இறைஞ்சி அச்
சேனை_நாதன் இனையன செப்பினான்

#50
கண்மை இ நகர் வேலை கடந்த அத்
திண்மை ஒன்றும் அலால் திசைக் காவலர்
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ்
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா

#51
கூசும் வானரர் குன்று கொடு இக் கடல்
வீசினார் எனும் வீரம் விளம்பினாய்
ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய
ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ

#52
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை
பதி புகுந்தனர் தம்மைப் படுப்பது ஓர்
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான்

#53
முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொறிக் கண்ணினன் வேத்திரம்
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான்

#54
வாயில் காவலன் கூறி வணங்கலும்
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர்
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று எனப்
போய் அவன் புகல புகுந்தார் அரோ

#55
மனைக்-கண் வந்து அவன் பாதம் வணங்கினார்
பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார்

#56
வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத்
தள்ளவாரி நிலைமையும் தாபதர்
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று_அனான்

#57
அடியம் அ நெடும் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின்
படியை நோக்கி எப்பாலும் படர்குறும்
கடிய வேகக் கலுழனின் கண்டிலேம்

#58
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ
கவலை வேலை எனும் கரை கண்டிலா
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும்
துவலையே வந்து சொல்லியது இல்லையோ

#59
எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும்
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும்
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன்
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே

#60
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே
தேர் உலாவு கதிரும் திருந்து தன்
பேர் உலாவும் அளவினும் பெற்றனன்
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு

#61
சேது பந்தனம் செய்தனன் என்றது இப்போது
வந்த புது வலியோ ஒரு
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய
ஏது அந்தம் இலாத இருக்கவே

#62
மருந்து தேவர் அருந்திய மாலை-வாய்
இருந்த தானவர்-தம்மை இரவி முன்
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின்
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான்

#63
பற்றி வானர வீரர் பனைக் கையால்
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இறச்
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர்
வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான்

#64
சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமைக்
குரங்கு அலாமை தெரிந்தும் அக் கொற்றவன்
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார்

#65
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன்
சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார்
குற்றம் யாவையும் கோளொடு நீங்குக
இற்றை_நாள் முதல் ஆயு உண்டாக என்றார்

#66
வைது எனக் கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை
நொய்தினின் அடைத்து மானத் தானையான் நுவன்ற நம் ஊர்
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும்
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும்

#67
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன்
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இப் பகையைத் தீர
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான்
கிட்டிய போது செய்வது என் இனிக் கிளத்தல் வேண்டும்

#68
ஆண்டுச் சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமேல்
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ
வேண்டியது எய்தப்பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ

#69
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ

#70
வந்தவர் தானையோடு மறிந்து மாக் கடலில் வீழ்ந்து
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏயச் சொன்னான்

#71
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமைத்து என்னா
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு
செது நெறி நிலையினாரே என்பது தெரியச் செப்பும்

#72
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலித்
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக
மாசற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும்
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார்

#73
அன்னவற்கு இளவல்-தன்னை அரு மறை பரம் என்று ஓதும்
நல் நிலைநின்று தீர்ந்து நவை_இலா உயிர்கள்-தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்னப் பல வகை நின்ற தூயோன்
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ

#74
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள்
செவ் வழி நாணும் சேடன் தெரி கணை ஆகச் செய்த
கவ்வு அயில் கால நேமிக் கணக்கையும் கடந்தது என்பார்

#75
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார்
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார்
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார்
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார்

#76
அப் பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேரறுப்பதாக
இப் பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார்
ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார்

#77
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும்
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார்

#78
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம்
மீன் உடை அகழி வேலை விலங்கல் மேல் இலங்கை_வேந்தன்
தானுடை வரத்தை எண்ணித் தருமத்தின் தலைவர்தாமே
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார்

#79
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார்
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன்
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கைத் தெய்வம்
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார்

#80
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய்யிலாதான்
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞானத்
தம்பியே சாற்றிப் போனான் என்பதும் சமையச் சொன்னார்

#81
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும் உன்றன் மேல் அன்பினாலும்
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன்
சீதையை விடுதியாயின் தீரும் இத் தீமை என்றான்

#82
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில்
இற்றை_நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய்
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான்

#83
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப்புறத்தது ஆக
காது வெம் செரு வேட்டு என்னைக் காந்தினர் கலந்த போதும்
சீதை-தன் திறத்தினாயின் அமர்த் தொழில் திறம்புவேனோ

#84
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம்
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர்
முன் தருக என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம்
சென்றன இன்று வந்த குரங்கின் மேல் செல்கலாவோ

#85
சூலம் ஏய் தடக் கை அண்ணல்தானும் ஓர் குரங்காய்த் தோன்றி
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க என் கை அயில் முகப் பகழி அம்மா

#86
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சிப் போன
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள்
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண

#87
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால்
அற்றை_நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்காப்
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா

#88
உள்ளமே தூது செல்ல உயிர்_அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே

#89
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சிப்
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும்
தொல் நகர் காண்பான் போலக் கதிரவன் தோற்றம் செய்தான்

@10 இலங்கை காண் படலம்

#1
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போலப்
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால்

#2
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமலக் கையான்
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான்

#3
கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசை சிகரக் குன்றின்
உதயம் அது ஒழியத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான்

#4
துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை சொரியத் தோன்றும்
விமலத் திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன்
அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன
கமலத் திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான்

#5
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும்
கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த காட்சி
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான்
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக் குன்றம் போன்றான்

#6
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன்
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான்
இணை நெடும் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான்

#7
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம்
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்துக் காட்டார்
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவிப் புலவர் அம்மா

#8
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடைப் பரிதி நாண
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும்
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசையச் செய்த
தொழில் தெரிகிலவால் தங்கண் சுடர் நெடும் கற்றை சுற்ற

#9
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச
சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும் தோற்றம்
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால்
எரிகின்றதாயே காண் இக் கொடி நகர் இருந்தது இன்னும்

#10
மாசு அடை பரந்து நீண்ட மரகதத் தலத்து மான
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிறக் கற்றை சுற்ற
ஆசு_அறக் குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக
பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்

#11
தீச் சிகை சிவணும் சோதிச் செம் மணிச் செய்த தூணின்
தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால் கருமை தோன்றா
மீச்செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ
காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ காணாய்

#12
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை
அல் படி நிறத்தவேனும் ஆடகத் தலத்தை ஆழ
கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி கையால்
பொன் பொடி மெய்யில் பூசி பொன்_மலை என்னப் போவ

#13
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின்
காசு உடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவுகின்ற
வீசு பொன் கொடிகள் எல்லாம் விசும்பினின் விரிந்த மேக
மாசறத் துடைத்து அவ் வானம் விளக்குவ போல்வ மாதோ

#14
நூல் படத் தொடர்ந்த பைம்பொன் சித்திரம் நுனித்த பத்திக்
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி
சால்பு அடுத்து அரக்கன் மாடத் தனி மணி நடுவண் சார்த்தி
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர்

#15
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண்
பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ பண்பால்
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம்

#16
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற
மாரனும் மருளச் செய்த மாளிகை மற்றோர் சோதி
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை

#17
கோல் நிறக் குனி வில் செம் கைக் குமரனே குளிர் வெண் திங்கள்
கால் நிறக் கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி
வால் நிறத் தரளப் பந்தர் மரகதம் நடுவண் வைத்த
பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய்

#18
கோள் அவாவு அரி_ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய்
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி
வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம்

#19
கொற்ற வான் சிலைக் கை வீர கொடி மிடை மாடக் குன்றை
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர்
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்கர் ஆர்ந்த
கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ காணாய்

#20
வாகை வெம் சிலைக் கை வீர மலர்க் குழல் புலர்த்த மாலைத்
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுறப் போர்த்த தையல்
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்

#21
காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே கற்ற
தேவர்-தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்தது
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய்

#22
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின்
துணைவரைப் பிரிந்து போந்து மருங்கு எனத் துவளும் உள்ளப்
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும்
கண மயில் குழுவின் நம்மைக் காண்கின்றார்-தம்மைக் காணாய்

#23
நாள்_மலர்த் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து
யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார்
வாழ்வு இனிச் சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம்
பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய்

#24
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி
சொன்னவா சொல்லா வண்ணம் அதிசயம் தோன்றும் காலை
அன்ன மா நகரின் வேந்தன் அரிக் குலப் பெருமை காண்பான்
சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான்

@11 இராவணன் வானரத் தானை காண் படலம்

#1
கவடு உகப் பொருத காய் களிறு_அன்னான்
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும்
சுவடு உடைப் பொரு_இல் தோள் கொடு அனேகம்
குவடு உடைத் தனி ஒர் குன்று என நின்றான்

#2
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும்
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான்

#3
செம்பொன் மௌலி சிகரங்கள் தயங்க
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள்
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான்

#4
தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்
பக்கமும் நிழல் பரப்பி வியப்பால்
மிக்கு நின்ற குடை மீது விளங்க

#5
கைத் தரும் கவரி வீசிய காலால்
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
தத்தி வீழ் அருவியின் திரள் சால
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ

#6
வானகத்து உறும் உருப்பசி வாசத்
தேன் அகத் திரு திலோத்தமை செவ் வாய்
மேனகைக் குல அரம்பையர் மேல் ஆம்
சானகிக்கு அழகு தந்து அயல் சார

#7
வீழியின் கனி இதழ் பணை மென் தோள்
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று
ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர்
சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற

#8
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள்
இழை படிந்த இள வெண் நிலவு ஈன
குழை படிந்தது ஒரு குன்றில் முழங்கா
மழை படிந்து_அனைய தொங்கல் வயங்க

#9
ஓத நூல்கள் செவியின் வழி உள்ளம்
சீதை சீதை என ஆருயிர் தேய
நாத வீணை இசை நாரதனார் தம்
வேத கீத அமுது அள்ளி விழுங்க

#10
வெம் கரத்தர் அயில் வாளினர் வில்லோர்
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர்
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர்
பொங்கு அரத்த விழியோர் புடை சூழ

#11
கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்
நல் இலங்கை முதலோர் நவையில்லோர்
சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர்
வில் இலங்கு படையோர் புடை விம்ம

#12
பார் இயங்குநர் விசும்பு படர்ந்தோர்
வார் இயங்கு மழையின் குரல் மானும்
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும்
தூரியம் கடலின் நின்று துவைப்ப

#13
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர்
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட

#14
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக்
கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர்
மஞ்சு உகக் குமுறு சொல்லினர் வல் வாய்க்
கிஞ்சுகத்த கிரி ஒத்தனர் கிட்ட

#15
கூய் உரைப்ப குல மால் வரையேனும்
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள்
வாய் உரைத்த கலவைக் களி வாசம்
வேய் உரைப்பது என வந்து விளம்ப

#16
வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும்
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லாக்
காத்திரத்தர் மனை காவல் விரும்பும்
சூத்திரத்தர் பதினாயிரர் சுற்ற

#17
தோரணத்த மணி வாயில் மிசை சூல்
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்
ஆரணத்து அமுதை அ மறை தேடும்
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான்

#18
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன் அது போழ்தின்
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம்
துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்

#19
ஆக ராகவனை அவ்வழி கண்டான்
மாக ராக நிறை வாள் ஒளியோனை
ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும்
வேக ராகு என வெம்பி வெகுண்டான்

#20
ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
மேனியே உரைசெய்கின்றது வேறு இச்
சேனையோரை அடையத் தெரி என்ன
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும்

#21
இங்கு இவன் படை இலங்கையர்_மன்னன்
தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால்
அங்கை வாள் கொடு அவள் ஆகம் விளங்கும்
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான்

#22
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிறக் கரும் கடலுள் நேமியின் நின்று
துறக்கம் எய்தியவரும் துறவாத
உறக்கம் என்பதனை ஓட முனிந்தான்

#23
கை அவன் தொட அமைந்த கரத்தான்
ஐய வாலியொடு இவ் அண்டம் நடுங்கச்
செய்த வன் செருவினின் திகழ்கின்றான்
வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான்

#24
தந்தை மற்றையவன் சார்வு_இல் வலத்தோர்
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண
மந்தரத்தினொடும் வாசுகியோடும்
சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான்

#25
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு
தொடர்ந்தவன் உலகு சுற்றும் எயிற்றின்
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே

#26
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண்
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும்
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான்
காலன் என்பர் இவனைக் கருதாதார்

#27
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல்_அன்னான்
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன்
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ
ஆறாத முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான்

#28
முக்காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான்
புக்கு ஆலம் எழப் புணரி புலவோர் கலக்கும்
அக் காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான்
இக் காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான்

#29
சேனாபதி-தன் அயலே இருள்செய்த குன்றின்
ஆனா மருங்கே இரண்டு ஆடகக் குன்றின் நின்றார்
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்
வானோர்-தம் மருத்துவர் மைந்தர் வலிக்-கண் மிக்கார்

#30
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண்
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண்
சிவன் காண் அயன் காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான்

#31
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்னக்
கர பல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன்

#32
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன்
போன்று நின்றவன் பனசன் இப் போர்க்கு எலாம் தானே
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன்-தனக்கு எதிரே
தோன்றுகின்றவன் சுடேணன் மூதறிவொடு தொடர்ந்தோன்

#33
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை
முதுகு நொய்து எனச் செய்தவன் கனலையும் முனிவோன்
கதிரவன்_மகற்கு இட மருங்கே நின்ற காளை
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம்

#34
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ
விண்ணின் மீனினைக் குணிப்பினும் வேலையுள் மீனை
எண்ணி நோக்கினும் இக் கடல் மணலினை எல்லாம்
கண்ணி நோக்கினும் கணக்கிலை என்றனன் காட்டி

#35
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறுநகைசெய்தான்
புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின்
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான்

@12 மகுட பங்கப் படலம்

#1
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன்
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான்
முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால்
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான்

#2
நாறு தன் குலக் கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா
கூறும் மங்கையர் குழாத்திடை கோபுரக் குன்றத்து
ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன் என்றான்

#3
கருதி மற்றொன்று கழறுதல் முனம் விழிக் கனல்கள்
பொருது புக்கன முந்துறச் சூரியன்_புதல்வன்
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல
பருதி மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் எனப் பாய்ந்தான்

#4
சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து
சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் சென்றான்
ததையச் செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை
உதையக் குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான்

#5
பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து
தள்ளும் பொன் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன் மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான்

#6
கரிய கொண்டலைக் கருணை அம் கடலினைக் காணப்
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும்
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார்

#7
கால இருள் சிந்து கதிரோன்_மதலை கண்ணுற்று
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான்
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான்

#8
இத் திசையின் வந்த பொருள் என் என இயம்பான்
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப
குத்தினன் உரத்தில் நிமிர் கைத் துணை குளிப்ப

#9
திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான்
ஒருபது திசைக்-கணும் ஒலித்த ஒலி ஒப்ப
தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக் கை
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான்

#10
அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான்

#11
உதைத்தவன் அடித் துணை பிடித்து ஒரு கணத்தில்
பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி
மதக் கரியை உற்று அரி நெரித்து என மயக்கி
சுதைத் தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான்

#12
துகைத்தவன் உடல் பொறை சுறுக்கொள இறுக்கி
தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி
வகைப் பிறை நிறத்து எயிறு உடைப் பொறி வழக்கின்
குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான்

#13
கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை
பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி
மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில்
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரித்தான்

#14
திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி
பெருத்து உயர் தடக் கை கொடு அடுத்து இடை பிடித்து
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான்

#15
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான்
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார்

#16
விழுந்தனர் சுழன்றனர் வெகுண்டனர் திரிந்தார்
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார்
எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார்
ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும்

#17
அந்தர அருக்கன்_மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடைக் கரம் வலி கயிறது ஒப்ப
எந்திரம் எனத் திரி இரக்கம்_இல் அரக்கன்
மந்தரம் எனக் கடையும் வாலியையும் ஒத்தான்

#18
ஊறு படு செம்புனல் உடைத்த கரை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர அன்னார்
பாறு பொருகின்றன பருந்து இவை எனப் போய்
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம்

#19
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான்

#20
பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்
செங்கதிரவன்சிறுவனை திரள் புயத்தால்
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான்

#21
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார்
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள்
மீ புர மடங்கல் என வெம் கதிரவன்_சேய்
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான்

#22
ஒன்றுற விழுந்த உருமைத் தொடர ஓடா
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
தின்றிடுவென் என்று எழு சினத் திறல் அரக்கன்
பின் தொடர வந்து இரு கரத் துணை பிடித்தான்

#23
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான்
எந்திரம் எனக் கடிது எடுத்து அவன் எறிந்தான்
கந்துகம் எனக் கடிது எழுந்து எதிர் கலந்தான்

#24
படிந்தனர் பரந்தனர் பரந்தது ஓர் நெருப்பின்
கொடும் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த
நெடும் சுவர் பிளந்தன நெரிந்த நிமிர் குன்றம்
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும்

#25
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார்
பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று
அறிந்திலர் அரக்கரும் அமர்த் தொழில் அயர்ந்தார்

#26
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி_வண்ணன்
மன் உயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான்

#27
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ நின்னை
இன்றி யான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம்
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான்

#28
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன்
கையிடைப் புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல்
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராயாகில்
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே

#29
ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம் அந்தோ
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன்
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செருக்களத்தின் என்னைக்
கொன்றாயும் நீயே உன்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன்

#30
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார்
திறம்-தனை உலகின் நீக்கிப் பின் உயிர் தீர்வென் என்றால்
புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன்

#31
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு
ஒழிவு_அரும் உதவிசெய்த உன்னை யான் ஒழிய வாழேன்
எழுபது வெள்ளம்-தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி
செழு நகர் அடைந்த போழ்தும் இத் துயர் தீர்வது உண்டோ

#32
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கிப்
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான்

#33
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமரச் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே

#34
என்பு உறக் கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும்
புன் புலத்து அரக்கன்-தன்னைத் தீண்டிய புன்மை போக
அன்பனை அமரப் புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான்
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால்

#35
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்குமங்கும்
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர்
சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை நோக்கிச் சொல்லும்

#36
கல்லினும் வலிய தோளாய் நின்னை அக் கருணையில்லோன்
கொல்லுதல் செய்தானாகின் கொடுமையால் கொற்றம் பேணி
பல் பெரும் பகழி_மாரி வேரொடும் பறிய நூறி
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன்

#37
பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மைதானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும்
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ

#38
இ நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தியாயின்
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ
உன்னை யான் தொடர்வல் என்னைத் தொடரும் இவ் உலகம் என்றால்
பின்னை என் இதனைக் கொண்டு விளையாடிப் பிழைப்ப செய்தாய்

#39
காட்டிலே கழுகின்_வேந்தன் செய்தது காட்டமாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அக் கிளி_அனாளை
மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன்

#40
வன் பகை நிற்க எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம்
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்குத் தந்த
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன்

#41
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலைக் களிற்றின் சீற்றக்
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடைக் குரக்குப் புன் தோள்
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன்

#42
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர்
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும்
வால் வலி காட்டிப் போந்த வள நகர் புக்கு மற்று என்
கால் வலி காட்டிப் போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ

#43
இன்னன பலவும் பன்னி இறைஞ்சிய முடியன் நாணி
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப
அன்னவன்-தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான்

#44
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கிவிட்டாய்

#45
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த
வீரதை விடை_வலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ

#46
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள்
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும்
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த
திரு மணி பறித்துத் தந்த வென்றியே சீரிது அன்றோ

#47
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கிக்கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு
அடி மணி இட்டாய் அன்றே அரிக் குலத்து அரச என்றான்

#48
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா
இன்று இது வென்றி என்றுஎன்று இராமனும் இரங்கி சொன்னான்

#49
தன் தனிப் புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அவ் அரக்கனுக்கு ஒளிப்பான் போல
வன் தனிக் குன்றுக்கு அப்பால் இரவியும் மறையப் போனான்

#50
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல்
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய
செங்கதிர்மைந்தன் செய்த வென்றியை நிறையத் தேக்கிப்
பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான்

#51
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை_வேந்தன்
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆகப்
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான்

@13 அணி வகுப்புப் படலம்

#1
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான்
பானத்தான் அல்லன் தெய்வப் பாடலான் அல்லன் ஆடல்
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான்

#2
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும்
பையுயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல் தலைப் பரப்பினாலும்
மெய்யனைத் திரையின் வேலை மென் மலர்ப் பள்ளி ஆன
ஐயனைப் பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன்

#3
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில்காப்பான்
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான்

#4
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னைப்
பிழை_அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கிக்
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான்

#5
வீரிய விரைவின் எய்தி பதினெழு வெள்ளத்தோடும்
மாருதி மேலை வாயில் உழிஞை மேல் வருவதானான்
ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனையோடும் வெற்றிச்
சூரியன்_மகனைத் தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான்

#6
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன்
தென்திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும்
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி

#7
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம்
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்தச் சொன்னான்
தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான்

#8
சார்த்தூலன் இதனைச் சொல்ல தழல் சொரி தறுகணானும்
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி
போர்த் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின்-நின்றும்
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா

#9
மா அணை நீலக் குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன
தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்

#10
செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினைத் தேர
மை_அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான்
பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி
ஐ_இரண்டு ஆய கோடிப் பேய்க் கணம் காப்பது ஆக்கி

#11
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான்

#12
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு இனம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

#13
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ
முழுமுதல் படைகள் ஏந்தி இராக்கதர் முனைந்த போது
தொழுது தம் படைகள் கைவிட்டு ஓடுவார் சுரர்கள் என்றால்
விழுமிது குரங்கு வந்து வெறுங்கையால் கொள்ளும் வென்றி

#14
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க
வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா
மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான்

#15
புக்கு எரி மடுத்து இவ் ஊரைப் பொடிசெய்து போயினாற்குச்
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ
இக் கிரி பத்தின் மௌலி இன மணி அடங்கக் கொண்ட
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும்

#16
தொடைக் கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து
படைக்கலம் உடைய நாம் அப் படை இலாப் படையை ஈண்ட
அடைக்கலம் புகுவது அல்லால் இனிப் புகும் அரணும் உண்டோ

#17
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால்
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான்
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னைப் பேச்சு விட்டான்

#18
காட்டிய காலகேயர் கொழு நிணக் கற்றை காலத்
தீட்டிய படைக் கை வீரச் சேனையின் தலைவ தெள்ளி
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு
கீழ்த் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும்

#19
காலன்-தன் களிப்புத் தீர்த்த மகோதர காலையே போய்
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
நால்_ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி

#20
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள்
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ
நூற்றிரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர

#21
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால்
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும்
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்னச் சொன்னான்

#22
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால்
புடை உள பொருது கொண்டு போர் பெறாப் பொங்குகின்ற
இடையிடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்துவிட்டான்

#23
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ நான்மறை முனிவர்க்கேயோ
பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ
இலங்கையர்_வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம்

#24
அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர்-தம்மைக் கண்ணுற்று
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான்

#25
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத் தூர்ப்ப
அளப்ப_அரும் தூளிச் சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல்
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும்
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து

#26
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் தாவி
அந்தர குல மீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப்ப
செம் தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான்

#27
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும்
கார்க் கடல் புறத்தது ஆக கவிக் கடல் வளைந்த காட்சி
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அப் பதகன் மூதூர்

#28
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின்
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும்

@14 அங்கதன் தூதுப் படலம்

#1
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி
வெள்ளம் ஓர் ஏழுபத்துக் கணித்த வெம் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான்

#2
தூதுவன் ஒருவன்-தன்னை இவ் வழி விரைவில் தூண்டி
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்குமாகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான்

#3
அரக்கர்_கோன் அதனைக் கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான்
குரக்கு இனத்து இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான்
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்னச் சொன்னான்

#4
தேசருக்கு இடுக்கண் செய்தான் தேவியைச் சிறையில் வைத்தான்
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன் உயிர் புடைத்துத் தின்றான்
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான்
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி மேல் செல்வான்

#5
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியைப் பிரிவுசெய்தான்
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல் மேல் சென்ற
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான்

#6
அன்னவன்-தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல்
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர்
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால்

#7
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும்
மறந்தனை எனினும் மற்று இவ் இலங்கையின் வளமை நோக்கி
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின்
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல்செய்தான்

#8
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ
புயத் துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத் துறை அறனும் அஃதே என்று இவை சமையச் சொன்னான்

#9
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத் தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

#10
நன்று என அவனைக் கூவி நம்பி நீ நண்ணலார்-பால்
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான்
அன்று அவன் அருளப்பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ

#11
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டுத்
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும்
சின்னபின்னங்கள் செய்ய செருக்களம் சேர்தல் நன்றோ
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக எனச் சொல்லிடு என்றான்

#12
அறத் துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று
மறத் துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்குமாகின்
புறத்து உற எதிரே வந்து போர் தரப் புகல்தி என்றான்

#13
பார் மிசை வணங்கிச் சீயம் விண் மிசைப் படர்வது என்ன
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான்
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன்
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான்

#14
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க ஆழித்
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன்
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான்

#15
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சித்
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானைக் கண்டான்

#16
கல் உண்டு மரம் உண்டு ஏழைக் கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே இவனை வெல்லத் தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ
எல்லுண்ட படை கைக் கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில்
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான்

#17
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில் வில்லின் மேல் கணை ஒன்று ஏவிக்
கொன்றவன்தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்
ஒன்று இவன்-தன்னைச் செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார்

#18
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த காதல்
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்-கண் பேழ் வாய்ப்
பணி பறித்து எழுந்த மானக் கலுழனின் இவனைப் பற்றி
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான்

#19
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணிக்
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன
கொடும் தொழில் மடங்கல்_அன்னான் எதிர் சென்று குறுகி நின்றான்

#20
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்
வன் திறல் வாலி_சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்

#21
பூத_நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இப் பூ மேல்
சீதை_நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும்
வேத_நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான்

#22
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றிக்
குரங்கு எலாம் கூட்டி வேலைக் குட்டத்தைச் சேது கட்டி
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும்
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான்

#23
கங்கையும் பிறையும் சூடும் கண்_நுதல் கரத்து நேமி
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னைச் சாரார்
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது
இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ யாவன் என்றான்

#24
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னைச்
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச்
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண
மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான்

#25
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அறச் சான்றும் உண்டால்
நிந்தனை இதன் மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல்
தந்தனென் நினக்கு யானே வானரத் தலைமை தாழா
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான்

#26
தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றிப்
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்
சீதையைப் பெற்றேன் உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான்

#27
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை
உன் அரசு உனக்குத் தந்தேன் ஆளுதி ஊழி காலம்
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றிசெய்ய
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான்

#28
அங்கதன் அதனைக் கேளா அங்கையோடு அங்கை தாக்கித்
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான்

#29
வாய் தரத் தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்

#30
அடுவெனே என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ
தொடுவெனே குரங்கைச் சீறிச் சுடர்ப் படை என்று தோன்றா
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்குத் தூத
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான்

#31
கூவி இன்று என்னை நீ போய்த் தன் குலம் முழுதும் கொல்லும்
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானைத்
தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்-கண்
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான்

#32
பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும்
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி
அரிந்த நாள் வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ

#33
கிளையொடும் படைஞரோடும் கேடு_இலா உயிர்கட்கு எல்லாம்
களை எனத் தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும்
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ

#34
ஏந்து_இழை-தன்னைக் கண்ணுற்று எதிர்ந்தவர்-தம்மை எற்றிச்
சாந்து எனப் புதல்வன்-தன்னைத் தரையிடைத் தேய்த்துத் தன் ஊர்
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலைத் தாவிப்
போந்த பின் வந்திலாதான் இனிப் பொரும் போரும் உண்டோ

#35
உடைக் குலத்து ஒற்றர்-தம்பால் உயிர் கொடுத்து உள்ளக் கள்ளம்
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்றக்
குடைத் தொழில் உம்பி கொள்ளக் கொடுத்துழி வேலை கோலி
அடைத்துழி வந்திலாதான் இனிச் செயும் ஆண்மை உண்டோ

#36
மறிப்புண்ட தேவர் காண மணி வரைத் தோளின் வைகும்
நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர் முன்னே நென்னல்
பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி
பறிப்புண்டும் வந்திலாதான் இனிப் பொரும் பான்மை உண்டோ

#37
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி
ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து உரை உறுதி பார்க்கின்
துன்று இரும் குழலை விட்டுத் தொழுது வாழ் சுற்றத்தோடும்
பொன்றுதியாயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான்

#38
நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட
பாரிலே பட்ட வானப் பரப்பிலே பட்ட எல்லாம்
போரிலே பட்டு வீழப் பொருத நீ ஒளித்துப் புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளையச் சொன்னான்

#39
சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவினான்
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை
எற்று-மின் என நால்வரை ஏவினான்

#40
ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
தாவினான் அவர்-தம் தலை போய் அறக்
கூவினான் அவன் கோபுர வாயிலில்
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான்

#41
ஏமம் சார எளியவர் யாவரும்
தூமம் கால்வன வீரன் சுடு சரம்
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான்

#42
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான்
இந்து விண்-நின்று இழிந்துளதாம் என
வந்து வீரன் அடியில் வணங்கினான்

#43
உற்ற போது அவன் உள்ளக் கருத்து எலாம்
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும்
முற்ற ஓதி என் மூர்க்கன் முடித் தலை
அற்ற போது அன்றி ஆசை அறான் என்றான்
**கம்பராமாயணம் யுத்த காண்டம்-1
&611 - மிகைப் பாடல்கள்

@1. கடல் காண் படலம் - மிகைப் பாடல்கள்

#1
மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன் சாலவும்
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன்
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார்

#2
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன்
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார்

@2. இராவணன் மந்திரப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
மோதரன் முதலிய அமைச்சர்-தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்
காது வெம் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்-தம்மொடும்

#2
கும்பகம் மேவியோன் குறித்த வீடணத்
தம்பியர்-தம்மொடும் தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும்

#3
மாலியவான் முதல் வரம்பு_இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும் விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும் தழுவி மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்

#4
பின்னும் ஒன்று உரைத்தனன் பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு
இ நிலை பிடித்தனை இறைவ நீ எனா
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான்

#5
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து
அருமை கண்டு அளித்தனன் அழிவிலாதது ஓர்
பெரு வரம் என்றிடின் பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே

#6
கறை மிடற்று இறை அன்று கமலத் தேவு அன்று
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ

#7
ஓது பல் அரும் தவம் உஞற்றல் இலதேனும்
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ

#8
உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேல்_நாள்

#9
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும்
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ

#10
நிரம்பிடுகில் ஒன்று அதை நெடும் பகல் கழித்தும்
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா

#11
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால்
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா

#12
ஆலம் அயில்கின்றவன் அரும் சிலை முறித்து
வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க
கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார்
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ

#13
ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கிச்
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான்
மூதுரை கொள்வோனும் அதுவே முறைமை என்றான்

#14
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம்
கன்றி நயனத்திடை பிறந்தன கடைத் தீ
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான்

#15
நகைத்து இளவலைக் கடிது நோக்கி நவில்கின்றான்
பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்
திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும்
வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி

#16
புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்-தன்
வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய்
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என்
சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ

#17
பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்
மிகுத்த திறல் வானவரும் வேத முதல் யாவும்
வகுத்து அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ

#18
நிறம்-தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி
துறந்தனை அரும் சமரம் ஆதல் இவை சொன்னாய்
இறந்துபட வந்திடினும் இப் பிறவி-தன்னில்
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல்

#19
எனக் கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும்
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல
சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன் இது ஊழின்
வினைத் திறம் எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே

#20
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே
பொறுத்தருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி
உறுத்துதல் செய் கும்பகருணத் திறலினோனும்
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான்

#21
ஏது_இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி
தீதொடு துணிந்து பினும் எண்ணுதல் சிறப்போ
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன் ஐயா
போதியது நம் அரசு பொன்ற வரு காலம்

#22
என அவன் அடித் துணை இறைஞ்சி வாய் புதைத்து
இனிய சித்திரம் என ஏங்கி நின்று தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்

#23
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ

#24
ஈசன்-தன்வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன்
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்றக்
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன்

#25
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே
சுமந்து நீ தவம் புரிக எனச் சுக்கிரன் உரைப்ப
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்த்திடத் தருக்கி
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின்

#26
நின்று பல் பகல் கழிந்திட நிமலன் நெஞ்சு உருகி
நன்றுநன்று என நயந்து எனை வரும்படி அழைத்து
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ

#27
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை முதல் நாள்
சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல்
கோத்து வெம் சமம் புரிந்திலென் எனது உளம் கூசி

#28
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இவ் வரம் எனக்குத்
தந்த தேவனுக்காயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய்

#29
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும்

@3. இரணியன் வதைப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதலாய்
தாது உலாவிய தொடை புயந்து இரணியன் தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார்

#2
இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர் பொருளோ
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும்
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்
வந்து இவன் பதம் முறைமுறை வணங்கிட வாழ்ந்தான்

#3
திருமகட்கு இறை உலகினும் சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன்-தன் பொருப்பினும் ஏகிச்
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது ஆங்கு
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும்

#4
ஓம் அரியாய நம் என ஒழிவுறாது ஓதும்
நாம நான்மறை விடுத்து அவன்-தனக்கு உள்ள நாமம்
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்
ஆம் அது ஓதுகில் அவன்-தனக்கு ஒப்பவர் யாரோ

#5
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவப் பெருமை
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர்
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால்

#6
குனிப்பு இலாத பல்லாயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை நோக்கில்
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான்

#7
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை
உன்னும் நான்மறையோடு அருள் நீதியும் பொறையும்
இன்ன யாவும் மற்று உருவுகொண்டுளது என உவந்தே
மன் உயிர்த் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான்

#8
நடுங்கி அந்தணன் நா புலர்ந்து அரும் புலன் ஐந்தும்
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய்ப்
பிடுங்கும் மெல் உரை புதல்வனுக்கு இனையன பேசும்

#9
என்று அவ் வேதியன் இவையிவை இயம்பலும் இது கேட்டு
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய்
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான்

#10
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து நன்று இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன்
மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான்

#11
அழிவு_இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன்
ஒழிவு_இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம்
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார்

#12
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல்
பயிர்ப்புறும் அதனிலே பாசம் நீக்கி வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர்

#13
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும்
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்தோன்
இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான்

#14
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும்
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய்
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லாப்
பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை போய பின் புகழ் ஐயா

#15
இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர் மேல் ஏற்றிப்
புவனம்-தன்னிலே நூக்கும் என்று அவுணர்_கோன் புகல
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன்-தன்னைப்
பவனன்-தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார்

#16
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடும் திறல் அவுணர்
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள்

#17
ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம்
ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்

#18
கயம் மேவும் இடங்கர் கழல் கதுவ
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம் மதக் கரி அன்று
உயுமாறு உதவுற்றிட வந்திலையோ

#19
வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்
காதும் பிரமக் கொலை காய உலைந்து
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து இரவு ஓட்டிலையோ

#20
அது கண்டு அடல் வஞ்சகர் அப்பொழுதில்
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி
புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன் என்றனரால்

#21
மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம்
விடம் அஞ்ச எழுந்தனன் வெய்யவனே

#22
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன்
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது அம்மா

#23
ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி
சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம்
போதும் ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன் என்று
ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்துச் சொல்வான்

#24
அப்புறத்து அளவு_இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம்
துப்புடைக் கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம்

#25
இத்திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்த காலை
பொய்த் திறல் கனகன் வேண்டும் போர் பல இயற்றி பின்னும்
எத்தனை கோடிகோடி மாயங்கள் இயற்ற நோக்கி
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான்

#26
நெருப்பு எனக் கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச
பொருப்பு இனம் எவையும் சிந்திப் பொடிபடக் குதித்து போர் வாள்
தரிப்புறச் சுழற்றித் தாக்க வருதலும் தரும மூர்த்தி
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை பற்றா

#27
அழிவிலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய
எழில் உலாம் உருவுகொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி
கழியவே பிளத்தலோடும் கனக மா மேரு விண்டு
கிழியவே குருதி ஓதம் கிளர்ந்த போல் கிளர்ந்தது அம்மா

#28
இரணியன் வயிர மார்பும் இரு பிளவாகக் கீறிக்
கரை அறும் அவுண வெள்ளப் படை எலாம் கடிதின் மாய்த்து
தரை முதல் ஆன அண்டப் பரப்பு எலாம் தானே ஆகிக்
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான்

#29
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல்
நங்கை-தனை ஏவுதலும் நாராயணக் கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி
பொங்கு பரம் சுடராய் எங்கும் பொலிய நின்றான்

#30
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழில் புதல்வன்
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து
வேதாந்த மெய்ப்பொருளே என்று விளம்பலுற்றான்

#31
சீலம் உறுவோய் உனக்குச் செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன் என விரும்பி
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்
மேலாம் அமரர்களும் யாரும் விளம்ப என்றான்

@4. வீடணன் அடைக்கலப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ
உரைத்திடும் உறுதிகள் நன்றுநன்று எனா
சிரித்தனன் கதம் எழுந்து இனைய செப்புவான்

#2
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க
கொன்று தின்றிடு-மின் எனத் தூதரைக் கோறல்
வென்றி அன்று என விலக்கினை மேல் விளைவு எண்ணித்
துன்று தாரவன் துணை எனக் கோடலே துணிந்தாய்

#3
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்
சீரிது என்று உணர்கிலை சீறிப் பொங்கினாய்
ஓர் தரும் அறிவிலார்க்கு உரைக்கும் புந்தியார்
தேர்வுறின் அவர்களின் சிறந்த பேதையோர்

#4
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு_இலாக்
கொற்றவ சரண் எனக் கூயது ஓர் உரை
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா

#5
எந்தையே இராகவ சரணம் என்ற சொல்
தந்தவர் எனைவரோ சாற்று-மின் என
மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம் அரோ

#6
மேலை_நாள் அமுதமும் விடமும் வெண்_கடல்
மூலமாய் உதித்தன முறையின் முற்றுதல்
சாலுமோ ஒன்று எனக் கருதல் தக்கதோ
ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே

#7
ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான்
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ

#8
எப்பொருள் ஏவரே உலகின் ஓர் முறை
ஒப்பினும் குணத்து இயல் உணரின் பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து அகம்
மெய்ப்பொருள் கோடலே விழுமிது என்பரால்

#9
ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர்-தமக்கு உணர ஒண்ணுமோ
தேவர்கள்_தேவன் நீ தெளியின் அன்னவர்
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால்

#10
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன்
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்குச் சொல்லி
பேதம் அற்று இருந்தும் அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும்
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது அன்றோ

#11
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னாப்
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான்

#12
வானவர் இதனைக் கூற வலம்கொடு தானை வைப்பை
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும் தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான்

@5. ஒன்னார் வலி அறி படலம் - மிகைப் பாடல்கள்

#1
திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும்
அருள் சுரந்து அரக்கனை அருகு இருத்தியே
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல்
பொருள் உளது எமக்கு அது புகலக் கேட்டியால்

#2
மருக் கிளர் தாமரை வாச நாள்_மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த காலையில்

#3
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு
இலங்குறு மலர் அயன் எண்_இல் யோசனை
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு
இலங்கை என்று ஒரு பெயர் ஈந்த மேலை_நாள்

#4
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின் எண்_இல் நாள்
போயிடத் துணிந்து அவை புந்தி ஓரினும்
ஓயுமோ அறிந்தவை உரைப்பென் ஆழியாய்

#5
பேயர்கள் என்ன யான் பிதற்ற பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது ஆழியாய்

#6
ஈங்கு இவை அன்றியும் ஏழு தீவினும்
ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும்
தாங்கிய சக்கரவாளச் சார்பினும்
ஆங்கு அவன் படை-தனக்கு அளவை இல்லையால்

#7
ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய
தீயவர் தேவரைச் செறுத்து தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்
நாயக அறிந்தமை நவிலக் கேட்டியால்

#8
இன்னும் மைந்தர்கள் இயம்பின் மூவாயிர கோடி
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும்
துன்னும் ஆள் வகைத் தொகுதியும் செறிந்திட மேல்_நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப்படுத்தோர்

#9
பண்டு அவன் தவத்து உமை_ஒரு_பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன்

#10
சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன் சிவன் கொடுத்திடப் பெரு வரம் பெரியோய்
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான்

#11
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி
ஆதி நாயகி-தன்னைக் கண்டு அணி நகர் அரணும்
காது வெம் சினத்து அரக்கர்-தம் வலிமையும் கடந்தான்

#12
இலங்கை வெந்தது வேறு இனி இயம்புவது எவனோ
அலங்கலோடு செஞ்சாந்தமும் அன்று தான் அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை_வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான்

@7. வருணன் அடைக்கலப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர்
என்றும் மெய்ப் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி
கொன்று எமைக் காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான்

@8. சேது பந்தனப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின்
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரைக் கடல்
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை
ஏற்றுதும் எனப் படைத்தலைவர் யாருமே

#2
வல் விலங்கு வழாத் தவர்-மாட்டு அருள்
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ
இவ் விலங்கல் விடோம் இனி என்ப போல்
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான்

#3
ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்
மருவு வான் கொடி மாட இலங்கையில்
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ

#4
மணல் பரப்பும் மணிப் பரப்பும் ஒளி
தணல் பரப்புவ போன்றன தான் கவி
உணர் பரப்பும் உறு கவியின் தொகை
கண பரப்பு கடல் பரப்பு ஆனதே

#5
வரைப் பரப்பும் மணல் பரப்பும் அனல்
தரை பரப்புவது என்ன தனித்தனி
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால்

#6
இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்
அன்ன சேனைத்தலைவரும் ஆழியைத்
துன்னி நின்று விடாது இடை தூர்த்தலால்
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே

@9. ஒற்றுக் கேள்விப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
என்று நளனைக் கருணையின் தழுவி அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே
வென்றி இனி என்று படையோடு உடன் விரைந்தான்

#2
இறுத்தனன் ஏழுபத்து வெள்ளமாம் சேனையோடும்
குறித்திடும் அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்
பொறுத்த மூ_ஏழு தானைத்தலைவர்களோடும் பொய் தீர்
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா

#3
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு_இலாத் தச்சன் கேள்வி
வாட்டம்_இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா

#4
போயினன் அமலன் பாதம் பொருக்கென வணங்கி இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான்
நாயகன்தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே

#5
அவ் வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர் கவியின் வீரர்

#6
என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு இலங்கை_வேந்தன்
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான்

#7
ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும் அவரை நோக்கி
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய்
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான்

#8
இன்னவாறு இவர்-தம்மை இங்கு ஏவிய
மன்னர்_மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு_இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்

#9
சொல்லும் மந்திரச்சாலையில் தூய் மதி
நல் அமைச்சர் நவை_அறு கேள்வியர்
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே
அல் அரக்கர்_பதியும் அங்கு ஓதுவான்

#10
ஈது எலாம் உரைத்து என் பயன் இன்று போய்க்
காதி மானுடரோடு கவிக் குலம்
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும்
போதில் மாலியவானும் புகலுவான்

#11
என்னும் வாய்மை இயம்புறு போதினில்
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா
துன்னு காவலர்தம்மிடைச் சொல்லினார்

#12
என்னச் சாரர் இசைத்தனர் வேலையைக்
கன்னல் ஒன்றில் கடந்து கவிக் குலம்
துன்னு பாசறைச் சூழல்கள்-தோறுமே
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம்

#13
வருணன் அஞ்சி வழிகொடுத்து ஐய நின்
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன்
திரிபுரச் செயல் செய்தது அங்கு ஓர் கணை

#14
செவித் துளை இருபதூடும் தீ சொரிந்தென்னக் கேட்டு
புவித்தலம் கிழிய அண்டம் பொதிருற திசையில் நின்ற
இபத் திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால்
குவித் தடம் புயமே கொட்டி கொதித்து இடை பகரலுற்றான்

#15
தானை அம் தலைவன் ஈது சாற்றலும் தறுகண் வெம் போர்க்
கோன் அழன்று உருத்து வீரம் குன்றிய மனிதரோடு
வானரக் குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால்
ஊன் அறக் குறைப்பென் நாளை ஒரு கணப்பொழுதில் என்றான்

#16
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய்
மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால்
பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான்

#17
இந்திரன் செம்மல் தம்பி யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன் என்றனர் சமரை வேட்டு
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரியச் சொன்னார்

#18
எரி எனச் சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற
நிருதரைக் கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி
விருதர்கள் ஆதி வெள்ளப் படைத் தொகை விரைந்து நாளைப்
பொரு திறம் அமையும் என்னா புது மலர்ச் சேக்கை புக்கான்

@10. இலங்கை காண் படலம் - மிகைப் பாடல்கள்

#1
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர்
விண்தலம் அளவும் செம்பொன் கோபுரம் விளங்கும் வீதி
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர்க் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான்

@11. இராவணன் வானரத் தானை காண் படலம் - மிகைப் பாடல்கள்

#1
ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற எண்கினாலே
நாறு இட்டது என்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான்

#2
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து
உற்றனர் எனினும் பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு ஊத
கொற்றவன் அருளும் கொண்டோன் குடாவடிக்கு இறைவன் கூற்றம்
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் எனப் பேணும் நீரான்

#3
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம் ஒன்றை
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான் வெற்றி
ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன்

#4
அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான்
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும்
வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன்

#5
பிளக்கும் மன்பதையும் நாகர் பிலனையும் கிளக்கும் வேரோடு
இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம் பிடுங்கி ஏந்தி
அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும்
துளக்கம்_இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார்

#6
குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற
மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க மேருச்
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன்

#7
நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தானை சுற்ற
காற்றின் மா மகற்குக் கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான்
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்தச்
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம்

#8
நாடில் இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ_எழுவர்
ஆடல் வெம் படைத்தலைவர்கள் ஆறுபத்து ஏழு
கோடி வீரர்கள் குன்று எனக் குவவிய தோளாய்
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார்

#9
அழிவு_இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
ஒழிவு_இலாத பல்லாயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர்
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன்

@12. மகுட பங்கப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி
இடித்து அலம்வரக் கதறி எய்த்திட இரங்காது
அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால்
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான்

#2
எறிந்திட விழுந்து இரவி_சேய் அறிவு சோர்வுற்று
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி
பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட மருங்கில்
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான்

#3
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்துக் கூப்பி
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான்
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான்

#4
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு
குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல் வீரன் காண
தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை வெம் சீயம்
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கிக் கூறும்

#5
இரவி போய் மறையும் முன்பு அங்கு இராமனும் இலங்கை நின்ற
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்துக்கொண்டாம்

#6
தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக் காட்டி
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக் காத்து
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும்
கை வைத்த நேமியோன்-தன் கால் வைத்த கருத்தமே யாம்

#7
பூசலைக் குறித்து இராமன் பொரும் கவிச் சேனை வெள்ளம்
மாசற வகுத்து நாலு திக்கினும் வளையச் செய்து
பாசமுற்றுடைய நண்பின் படைத்துணையவர்களோடும்
பாசறை இருந்தான் அந்தப் பதகனும் இழிந்து போனான்

@13. அணி வகுப்புப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
இறைவன் மற்று இதனைக் கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி
பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய்
உறு சமர்க்கு எம்மைக் கூவி ஏவிடாது ஒழிந்தாய் யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார்

#2
அமைச்சர் மற்று இதனைக் கூறி அரச நீ விடைதந்தீமோ
இமைப்பிடைச் சென்று வந்த குரங்கு இனப் படையை எல்லாம்
கமைப்பு_அறக் கடிது கொன்றே களைகுவம் என்ற போதில்
சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான்

#3
எரி நெருப்பு என்னப் பொங்கி இராவணன் என்னும் மேலோன்
உரை செறி அமைச்சரோடும் உறு படைத்தலைவரோடும்
கரி பரி இரதம் காலாள் கணக்கறும் வெள்ளச் சேனை
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரியச் சொன்னான்

#4
இ முறை அரக்கர்_கோமான் அணிவகுத்து இலங்கை மூதூர்
மும்மதில் நின்ற தானை நிற்க மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும் நல்கி
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச் சேர்ந்தான்

@14. அங்கதன் தூதுப் படலம் - மிகைப் பாடல்கள்

#1
சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை_வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி குரை கழல் வணங்குமாகில்
வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளித்தே கானில்
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன்-தனக்கு அளிப்பென் என்றான்

#2
தப்பு இல வீடணற்கு இலங்கை தானமாச்
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே

#3
அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்
புரம் ஒரு மூன்றும் தீயப் பொடிசெய்தோன்-தன்னொடு அ நாள்
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ

#4
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாதாகில்
இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ அறிதும் எங்கள்
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன்

#5
முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும்
அந்த ஆயிரத்தோளானை அரக்கிய மழு_வலாளன்
வந்து எதிர்கொள்ள வீரச் சிலையும் வெவ் வலியும் வாங்கும்
சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான்

#6
பசை_அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த போதும்
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான்
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான்
திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது என்றான்

#7
ஆதி அம் பரன் அங்கதன் ஓதல் கேட்டு
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு
ஓதினான் அங்கு அமரர்கள் உய்யவே
**