<<முந்திய பக்கம்

கம்பராமாயணம் - யுத்த காண்டம்-2

** கம்பராமாயணம்
***யுத்த காண்டம்-2
&62 யுத்த காண்டம்-2

@15 முதற் போர் புரி படலம்

#1
பூசலே பிறிது இல்லை என புறத்து
ஆசை-தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் படையின்னிடம் பற்றிய
வாசல்-தோறும் முறையின் வகுத்திரால்

#2/
மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீரர் பரவையின் மும்முறை
கற்ற கைகளினால் கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால்

#3
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அறத்
தடு-மின் போர்க்கு வருக எனச் சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலாக்
கொடி மதில் குடுமித்தலைக் கொள்க என்றான்

#4
தடம் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே
மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை
இடங்கர் மா இரிய புனல் ஏறிட
தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால்

#5
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல்
ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே

#6
விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ்
முளையினோடும் களைந்து முடிப்ப போல்
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை
வளையம் வன் கையில் வாங்கின வானரம்

#7
இகழும் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழிதானும் அழுவது போன்றதே

#8
தண்டு இருந்த பைம் தாமரை தாள் அறப்
பண் திரிந்து சிதைய படர் சிறை
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையைக்
கொண்டு இரிந்தன அன்னக் குழாம் எலாம்

#9
ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய
தாள தாமரை அன்னங்கள் தாவிட
வாளை தாவின வானரம் தாவவே

#10
தூறு மா மரமும் மலையும் தொடர்
நீறு நீர் மிசைச் சென்று நெருக்கலான்
ஏறு பேர் அகழ்-நின்றும் எனைப் பல
ஆறு சென்றன ஆர்கலி மீது அரோ

#11
இழுகு மாக் கல் இடும்-தொறு இடும்-தொறும்
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே

#12
தன்மைக்குத் தலையாய தசமுகன்
தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும்
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ

#13
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே

#14
வட்ட மேரு இது என வான் முகடு
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண்
தொட்ட வானரம் தோன்றின மீத்தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே

#15
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால்
நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால்
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால்

#16
அறைந்த மா முரசு ஆனைப் பதாகையால்
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம்
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே

#17
கோடு அலம்பின கோதை அலம்பின
ஆடல் அம் பரித் தாரும் அலம்பின
மாடு அலம்பின மா மணித் தேர் மணி
பாடு அலம்பின பாய் மத யானையே

#18
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர்
கருக் கொள் காலம் விதி கொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே

#19
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும்
கல் கொடும் சென்றது அக் கவியின் கடல்
வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இக் கடல்

#20
அம்பு கற்களை அள்ளின அம்பு எலாம்
கொம்பு உடைப் பணை கூறுற நூறின
வம்பு உடைத் தட மா மரம் மாண்டன
செம் புகர்ச் சுடர் வேல் கணம் செல்லவே

#21
மாக் கை வானர வீரர் மலைந்த கல்
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால்
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே

#22
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம்
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர்
பற்களோடும் சொரிதர பற்றிய
கற்களோடும் உருண்ட கவிகளே

#23
நின்று மேரு நெடு மதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று தீயவர் ஆருயிர் சிந்தின
குன்றின் வீழும் உருமின் குழுவினே

#24
எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன
கதிர்க் கொடும் கண் அரக்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே

#25
கடித்த குத்தின கையின் கழுத்து அறப்
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை
முடித்த வானரம் வெம் சினம் முற்றின

#26
எறிந்தும் எய்தும் எழு முளைத் தண்டு கொண்டு
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால்
குறைந்த வானர வீரர் குழுக்களே

#27
செப்பின் செம்புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை
குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு
உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே

#28
வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே

#29
தங்கு வெம் கனல் ஒத்துத் தயங்கிய
பொங்கு வெம் குருதிப் புனல் செக்கர் முன்
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து
அங்குமிங்கும் நின்று ஆடினவாம் அரோ

#30
கொன் நிறக் குருதிக் குடை புட்களின்
தொல் நிறச் சிறையில் துளி தூவலால்
பல் நிறத்த பதாகைக் பரப்பு எலாம்
செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே

#31
பொழிந்து சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
இழிந்த மாக் கடல் என்ன இழிந்ததே

#32
பதனமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின
விதன வெம் கண் இராக்கதர் வெள்ளமே

#33
பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
நீந்தி ஏகும் நெருக்கிடைச் செல்வன
சாய்ந்துசாய்ந்து சரம் படத் தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த சிலசில ஓடின

#34
தழிய வானர மாக் கடல் சாய்தலும்
பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே

#35
முரசும் மா முருடும் முரல் சங்கமும்
உரைசெய் காளமும் ஆகுளி ஓசையும்
விரைசும் பல்_இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே

#36
ஆய காலை அனைத்து உலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்து என
மேய சேனை விரி கடல் விண் குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே

#37
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து எனக்
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின மும்மத ஓங்கலே

#38
சூழி யானை மதம் படு தொய்யலின்
ஊழி_நாள் நெடும் கால் என ஓடுவ
பாழி ஆள் வயிரப் படி பல் முறை
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே

#39
பிடித்த வானரம் பேரெழில் தோள்களால்
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்
மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம்
குடித்துக் கால்வன போன்ற குதிரையே

#40
கேள்_இல் ஞாலம் கிளத்திய தொல் முறை
நாளும்நாளும் நடந்தன நள் இரா
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன
மீளும் மாலையும் போன்றனர் வீரரே

#41
பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற
தொத்தி மீண்டிலவால் நெடும் தூளியே

#42
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு இனப் பெரும் தானை குலைந்து போய்
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழிச் சென்றவால்

#43
சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான்

#44
வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான்

#45
களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறு மா மணித் தேரும் உருட்டி வெம்
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான்

#46
அன்ன காலை அரிக் குல வீரரும்
மன்னன் முன் புக வன்கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெரும் செரு-தன்னில்
வந்து தலைமயக்குற்றனர்

#47
கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண்ணிலர்
வில் துரந்தன வெம் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே

#48
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால்

#49
பாடுகின்றன பேய்க் கணம் பல் விதத்து
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார்

#50
யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
பானல் பட்ட பல கணை_மாரியின்
சோனை பட்டது சொல்ல_அரும் வானரச்
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர்

#51
காய்ந்த வானர வீரர் கரத்தினால்
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம்புண்_நீர்
பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச்
சாய்ந்ததால் நிருதக் கடல் தானையே

#52
தங்கள் மாப் படை சாய்தலும் தீ எழ
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினைக்
கங்க சாலம் தொடரக் கடல் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான்

#53
வந்து தாக்கி வடிக் கணை மா மழை
சிந்தி வானரச் சேனை சிதைத்தலும்
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்
நொந்து சூரியன்_கான்முளை நோக்கினான்

#54
நோக்கி வஞ்சன் நொறில் வய மாப் பரி
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான்

#55
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார்
குலைகுலைந்து கொடி நகர் நோக்கினார்
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே

#56
வீழி வெம் கண் இராக்கதர் வெம் படை
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர்
சூழும் வானர வீரர் துவன்றியே

#57
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம்
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவிக் குலம்

#58
வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும் கொடும் காலனின்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார்
பொன்றி வீழ்ந்த புரவியும் பூட்கையும்

#59
தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே

#60
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய்
நெரிய ஊழி நெருப்பு என வீசினான்

#61
தேரும் பாகரும் வாசியும் செம் முகக்
காரும் யாளியும் சீயமும் காண் தகு
பாரின் வீழப் புடைப்ப பசும் புணின்
நீரும் வாரியதனை நிறைத்ததே

#62
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
வெருக்கொண்டு ஓடிட வெம் படைக் காவலர்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம்
துரக்க வானரச் சேனை துணிந்தவே

#63
கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர்
சண்டமாருதம் என்ன தட வரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா

#64
தொடுத்த வாளிகள் வீழும் முன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லெனப்
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட

#65
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக
கார் இழிந்த உரும் எனக் காய்ந்து எதிர்
பார் கிழிந்து உகப் பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம்தரப் போர்செய்தான்

#66
தத்தி மார்பின் வயிரத் தடக் கையால்
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர்
மொத்தி நின்று முடித் தலை கீழ் உற
பத்தி வன் தடம் தோள் உறப் பற்றுவான்

#67
கடித்தலத்து இரு கால் உற கைகளால்
பிடித்துத் தோளைப் பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினில் எற்றிட மூளைகள்
வெடித்து இழிந்திட வீந்தனனாம் அரோ

#68
தன் படைத்தலைவன் படத் தன் எதிர்
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியன்
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான்

#69
வாங்கி வார் சிலை வானர மாப் படை
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி
தூங்கு மாரி எனச் சுடர் வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனனாம் அரோ

#70
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறுவேறு படுதலின் வெம்பியே
ஈறு_இல் வானர மாப் படை எங்கணும்
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா

#71
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று எனச்
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும்
வென்றி வில்லின் விடு கணை_மாரியால்
ஒன்று நூறு உதிர்வுற்றது அக் குன்றமே

#72
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டும் வில்லும் கொடியும் வயப் பரி
பூட்டும் தேரும் பொடித் துகள் ஆயவே

#73
தேர் இழந்து சிலையும் இழந்திட
கார் இழிந்த உரும் எனக் காந்துவான்
பார் இழிந்து பரு வலித் தண்டொடும்
ஊர் இழந்த கதிர் என ஓடினான்

#74
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உகப்
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர்
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும்
மீ எடுத்து விசும்புற வீசினான்

#75
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல்
செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே

#76
அடித்தலோடும் அதற்கு இளையாதவன்
எடுத்த தண்டைப் பறித்து எறியா இகல்
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான்
குடித்து உமிழ்ந்து எனக் கக்கக் குருதியே

#77
குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே

#78
மற்று நீலன் அரக்கனை மாடு உறச்
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும்
இற்று மால் வரை என்ன விழுந்தனன்

#79
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார்

#80
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார்
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே

#81
நூற்றிரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல்
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்
காற்றின் மா மகன் கை எனும் காலனால்

#82
அன்ன காலை அயிந்திர வாய் முதல்
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்
மன்ன கேள் என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்க செவியிடைச் செப்பினார்

#83
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்
படச் சிதைந்தது நம் படை என்றனர்

#84
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தென்திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அச் சுபாரிசன் போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார்

#85
கீழை வாயில் கிளர் நிருதப் படை
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார்

#86
என்ற வார்த்தை எரி புகு நெய் எனச்
சென்று சிந்தை புகுதலும் சீற்றத் தீ
கன்று கண்ணின் வழிச் சுடர் கான்றிட
நின்றுநின்று நெடிது உயிர்த்தான் அரோ

#87
மறித்தும் ஆர் அவன் ஆருயிர் வவ்வினான்
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும்
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன்

#88
உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால்
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார்

#89
அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே
என்ன என்ன எயிற்று அகல் வாய்களைத்
தின்னத்தின்ன எரிந்தன திக்கு எலாம்

#90
மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி உயர் படையான் மற்று அக்
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான் என்று மீட்டும் விளம்பினான்

#91
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால்

#92
கருப்பை போல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன்தான் இன்று பொன்றினான்
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ

#93
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான்
வற்கம் ஆயின மாப் படையோடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே

#94
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான்
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான்

#95
ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல்
மா இரும் கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது

#96
ஏற்றி எண்ணி இறைஞ்சி இடக் கையால்
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆருயிர் கொண்டதே

#97
மற்றும் வான் படை வானவர் மார்பிடை
இற்றிலாதன எண்ணும் இலாதன
பற்றினான் கவசம் படர் மார்பிடைச்
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான்

#98
பேரும் கற்றைக் கவரிப் பெரும் கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன்
ஊரும் வெண்மை உவா மதிக் கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான்

#99
போர்த்த சங்கப் படகம் புடைத்திட
சீர்த்த சங்கக் கடல் உக தேவர்கள்
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே

#100
தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடும் தானையில் முற்றினான்
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்
மேரு மால் வரை என்ன விளங்கினான்

#101
ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இரும் திசைகளைத் தொடரும் தொல் கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

#102
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர் எனக் கடக்கும் தொல் செருக்
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிகச்
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே

#103
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்தப் பங்கிகள்
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே

#104
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்
ஆனையின் கொடிகளும் அளவித் தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே

#105
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம்
தூயன சுமந்து பின்தொடர சுற்று ஒளிர்
சே இரு மணி நெடும் சேமத் தேர் தெரிந்து
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே

#106
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழத்
தோன்றினன் உலகு எனத் தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான்

#107
ஓதுறு கரும் கடற்கு ஒத்த தானையான்
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெரும் களம் புகுந்துளான் எனத்
தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார்

#108
ஆங்கு அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு_அற
வீங்கின இராகவன் வீரத் தோள்களே

#109
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்
இடையுறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடையுறு நோக்கினின் காணும் காட்சியான்

#110
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள்
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு எனச்
சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான்

#111
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர்
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்
தேவியைத் திரு மறு மார்பின் தீர்ந்தனன்
நோவிலள் என்பது நோக்கினான்-கொலோ

#112
நல் புறக் கோதை தன் நளினச் செம் கையின்
நிற்புறச் சுற்றிய காட்சி நேமியான்
கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம்
பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால்

#113
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு_அரு நாள் வரச் சிவந்த தாமரை
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் எனத்
ததைவுறு நிரை விரல் புட்டில் தாங்கினான்

#114
பல் இயல் உலகுறு பாடை பாடு அமைந்து
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை_அறு கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவு_இலாத் தூணி தூக்கினான்

#115
கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
அளவு_அறு செம் சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்
இள வரிக் கவட்டிலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்

#116
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் தானும் தான் என
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம்

#117
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால் கடல்_வண்ணன் தான் வளரும் மால் இரும்
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல்

#118
ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான்
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரி சிலை தம்பி மாப் படைக்
கூழையின் நெற்றி நின்றானைக் கூடினான்

#119
என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின் பொழி எயிறு உடைக் கவியின் வெள்ளமும்
தென்புலக் கிழவனும் செய்கை கீழ்ப்பட
புன் புலக் களத்திடைப் பொருத போலுமால்

#120
துமிந்தன தலை குடர் சொரிந்த தேர்க் குலம்
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன
குவிந்தன பிணக் குவை சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே

#121
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வயக்
கொடும் குரம் துணிந்தன புரவி குத்தினால்
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே

#122
தெற்கு இது வடக்கு இது என்னத் தேர்கிலார்
பல் குவை பரந்தன குரக்குப் பல் பிணம்
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர்ச் சவம்
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின

#123
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன்
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினைச்
செவ் வழிக் கோதையின் தெறிக்க சிந்தின
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம்

#124
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியலுற்றன சில இறந்தவால் சில
வெருவலுற்றன சில விம்மலுற்றன
பொருகளத்து உயிரொடும் புரண்டு போம் சில

#125
பொர கரு நிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம்_இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கு இனம் உற்றது என் கூறின் தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார்

#126
வீடணன் ஒருவனும் இளைய வீரனும்
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொள்கையால்
நாடினர் நின்றனர் நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே

#127
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னற்பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள்
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்னக் கேட்டார்

#128
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன
காந்திய உருமின் விட்டான் கவிக் குலத்து அரசன் அக் கல்
நீந்த_அரு நெருப்புச் சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம்
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான்

#129
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி
திண் நெடும் சிகரம் நீறாய்த் திசைதிசை சிந்தலோடும்
கண் நெடும் கடும் தீக் கால கவிக் குலத்து அரசன் கையால்
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கிக் கொண்டான்

#130
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்டத் தக்க
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள எனக் கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான்
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன்

#131
அக் கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி
திக்கு இரிதரப் போர் வென்ற சிலையினை வளைய வாங்கி
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான்

#132
சுடு கணை படுதலோடும் துளங்கினான் துளங்கா முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா முன்னர்
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான்

#133
பரிதி சேய் தேறா முன்னம் பரு வலி அரக்க பல் போர்
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்துப் பொங்கி
வருதியேல் வாவா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல்

#134
மீ எழு மேகம் எல்லாம் வெந்து வெம் கரியின் சிந்தித்
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கிக்
காய் கணை ஐந்தும்_ஐந்தும் கடுப்புற தொடுத்துக் கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான்

#135
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடிக்
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்றப் பொன் தோள்
பூட்டிய வலயத்தோடும் பூழியாய்ப் போயிற்று அன்றே

#136
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர்
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான்

#137
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை_வேந்தன்
சாரதி தலையைத் தள்ளிச் சென்றது நிருதர் சாய

#138
மாறி ஓர் பாகன் ஏற மறி திரைப் பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும்
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கணுற்றான்

#139
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய்ச்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளிப்
பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர்
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம்

#140
என்று உரைத்து எயிற்றுப் பேழ் வாய் எரி உக நகைசெய்து யாணர்ப்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமுப் போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான்
சென்றது குரக்குச் சேனை கால் எறி கடலின் சிந்தி

#141
கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள் உற்ற
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமையக் கண்டான்
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன

#142
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம்

#143
ஆற்றல் சால் அரக்கன்தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம்
வீற்றுவீற்றாகி உற்ற தன்மையும் வீரன் தம்பி
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா

#144
கட்டு அமை தேரின் மேலும் களி நெடும் களிற்றின் மேலும்
விட்டு எழு புரவி மேலும் வெள் எயிற்று அரக்கர் மேலும்
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி எங்கும் பரந்தது குருதிப் பவ்வம்

#145
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர்
அகங்களைக் கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால்
உகங்களின் கடை சென்றாலும் ஓய்வில ஓடலுற்ற

#146
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில்செய்ய
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன் தம்பியைச் சுற்றும் பற்றி

#147
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கை மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன

#148
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத
பொறுத்தனன் பகழி_மாரி பொழிந்தனன் உயிரின் போகம்
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான

#149
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம்
மலை எலாம் அற்ற பொன் தார் மார்பு எலாம் அற்ற சூலத்து
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்றச்
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி

#150
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண்
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்டத்
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தம்தம்
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய

#151
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த
புரவி மேல் பூட்கை வீழ்ந்த பூட்கை மேல் பொலன் தேர் வீழ்ந்த
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ

#152
கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால்

#153
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய
வெற்றி வெம் படைகள் யாவும் வெம் தொழில் அரக்கர் மேற்கொண்டு
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறாய்
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே

#154
குன்று அன யானை மானக் குரகதம் கொடித் தேர் கோப
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும்
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும்
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல்

#155
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பிக்
காய்ந்தது அவ் இலங்கை_வேந்தன் மனம் எனும் காலச் செம் தீ

#156
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுகச் சென்றான்
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம்

#157
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா
போக்கு இன்று உனக்கு அணித்தால் எனப் புகன்றான் புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான்

#158
எய்தான் சரம் எய்தா வகை இற்றீக என இடையே
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார்
பெய்தால் எனச் சர_மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான்

#159
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான்
வாங்கும் சரம் வாங்கா வகை அறுத்தான் அறம் மறுத்தான்

#160
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா
பொய்ப் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான்
கைப் போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான்
இப் போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான்

#161
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால்
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய்
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்

#162
எடுத்தான் வலத் தடக் கையினை இது போய் உலகு எல்லாம்
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் எனக் கொடியாற்கு எதிர் காண்பாய் எனக் காட்டா

#163
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால்_ஐந்தினொடு இயைந்தாய்
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பாம் என உயிர்ப்பான்

#164
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும்
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின்
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால்

#165
பரக்கப் பல உரைத்து என் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக் கண் திசைக்கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய்
குரக்குத் தனிக் கரத்தின் புடைப் பொறை ஆற்றுவை-கொல்லாம்

#166
என் தோள் வலியதனால் எடுத்து யான் எற்றவும் இறவா
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கைத் தல நிரையால்
குன்றே புரை தோளாய் மிடல் கொடு குத்துதி குத்தப்
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான்

#167
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின்
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான்

#168
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய்

#169
முத்தேவர்கள் முதலாயினர் முழு மூன்று உலகிடையே
எத் தேவர்கள் எத் தானவர் எதிர்வார் இகல் என் நேர்
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில்
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால்

#170
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால்
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய்
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல்
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால்

#171
திசை அத்தனையையும் வென்றது சிதையப் புகழ் தெறும் அவ்
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை
அசையத் தரை அரைவித்தனை அழி செம்புனல் அதுவோ
பசையற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய்

#172
பூணித்து இவை உரைசெய்தனை அதனால் உரை பொதுவே
பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால்
நாணித் தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும்
காணக் கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான்

#173
வீரத் திறம் இது நன்று என வியவா மிக விளியா
தேரின் கடிது இவரா முழு விழியின் பொறி சிதறா
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிரக் கரம் அதனால்

#174
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள்
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா
உயிர் உக்கன நிருதக் குலம் உயர் வானரம் எவையும்
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம்

#175
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி_நீர்
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும்
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும்
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம்

#176
கைக்குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தட மார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின்

#177
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய்
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய
தள்ளாடிய வடமேருவின் சலித்தான் அறம் வலித்தான்

#178
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம்
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார்
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம்
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார்

#179
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால்
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான்

#180
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய்
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா
பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான்

#181
வலி என்பதும் உளதே அது நின்-பாலது மறவோய்
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய்
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன்
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய்

#182
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும்_ஏறு எனக் குத்த
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான்

#183
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரைசெய்தாய்
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க எனக் கொடுத்தான்

#184
உறுக்கித் தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல்
இறுக்கிப் பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய
முறுக்கிப் பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய
குறுக்கிக் கரம் நெடும் தோள் புறம் நிமிரக் கொடு குத்த

#185
பள்ளக் கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையா
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்
கள்ளக் கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால்
தள்ளத் தளர் வெள்ளிப் பெரும் கிரி ஆம் எனச் சலித்தான்

#186
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த
சலித்ததால் அறம் சலித்தது மெய் மொழி தகவும்
சலித்தது அன்றியும் புகழொடு சுருதியும் சலித்த
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும்

#187
அனைய காலையின் அரிக் குலத் தலைவர் அவ்வழியோர்
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார்

#188
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய
பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம்
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர்

#189
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின்
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம்
சுருக்கமுற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார்

#190
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிரச்
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல்
கன்றி ஓடிடக் கல் மழை நிகர்த்தன கற்கள்

#191
இரிந்து நீங்கியது இராக்கதப் பெரும் படை எங்கும்
விரிந்து சிந்தின வானத்து மீனொடு விமானம்
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம்
கரிந்த கண்டகர் கண்மணி என் பல கழறி

#192
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால்

#193
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய

#194
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடிப்பொடியாகி
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன்
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார்

#195
அடல் துடைத்தும் என்று அரிக் குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ்
கடல் துடைத்தன களத்தின்-நின்று உயர்தரும் பூழி
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி

#196
கொல்வென் இக் கணமே மற்று இவ் வானரக் குழுவை
வெல்வென் மானிடர் இருவரை எனச் சினம் வீங்க
வல் வன் வார் சிலை பத்து உடன் இடக் கையின் வாங்கித்
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான்

#197
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி
கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும்
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த

#198
அந்தி வானகம் ஒத்தது அவ் அமர்க் களம் உதிரம்
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால்
பந்திபந்தியாய் மடிந்தது வானரப் பகுதி
வந்து மேகங்கள் படிந்தன பிணப் பெரு மலை மேல்

#199
நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன்
காலனார்-வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன்
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன்

#200
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார்
சுற்றும் வானரப் பெரும் கடல் தொலைந்தது தொலையாது
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான்

#201
நூறு கோடிய நூறு நூறாயிர கோடி
வேறுவேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி
ஏறு சேவகன் தம்பி அவ் இராவணன் எடுத்த
ஆறு_நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான்

#202
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர்
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர்
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளைப்
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில்

#203
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம்
நன்று நோக்கமும் நன்று கைக் கடுமையும் நன்று
நன்று கல்வியும் நன்று நின் திண்மையும் நலனும்
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான்

#204
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அக் கரியோன்
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான்

#205
வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாளும் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான்

#206
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான்

#207
இரியலுற்றது வானரப் பெரும் படை இமையோர்
பரியலுற்றனர் உலைந்தனர் முனிவரும் பதைத்தார்
விரி திரைக் கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார்
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த

#208
அஞ்சினான்_அலன் அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான்_அலன் துளங்கினான் என்பது துணியா
எஞ்சு_இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான்

#209
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன
எள்_இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான்

#210
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண் வகை மூர்த்தியைத் துளக்கி வெண் பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்

#211
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன்
நிலைகொள் மாக் கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும்
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான்
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான்

#212
எடுக்கலுற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான்
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான்

#213
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித் துணை அதனால்
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான்

#214
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அர_ஏறு_அனான் சிறிதினில் தேற
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய்யிலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான்

#215
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல்
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினைத் துரந்தான்

#216
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான்
சீரில் செல்கின்றது இல்லை இச் செரு எனும் திறத்தால்
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான்

#217
நூறு பத்துடை நொறில் பரித் தேரின் மேல் நுன் முன்
மாறு_இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறு நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்

#218
நன்றுநன்று எனா நாயகன் ஏறினன் நாமக்
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான்

#219
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்

#220
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன்
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின்
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே

#221
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின் எவ் வண்ணம் விளம்பும் தன்மை
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுறப் புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான் வீரன் மேலைத் தன் பதமே ஒத்தான்

#222
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால்
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலமது ஆகச்
சாரிகை திரியல் ஆன மாருதி தாமப் பொன் தோள்

#223
ஆசி சொல்லினர் அரும் தவர் அறம் எனும் தெய்வம்
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார்

#224
அண்ணல் அஞ்சன_வண்ணனும் அமர் குறித்து அமைந்தான்
எண்ண_அரும் பெரும் தனி வலிச் சிலையை நாண் எறிந்தான்
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய்ப் பெய்து
உண்ணும் காலத்து அவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை

#225
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர்
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி
கோவை நின்ற பேரண்டமும் குலைந்தன குலையாத்
தேவதேவனும் விரிஞ்சனும் சிரதலம் குலைந்தார்

#226
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான்

#227
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள்
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான்

#228
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி
ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும் ஐ_இரண்டு அம்பு
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான்

#229
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான்

#230
மீன் உடைக் கரும் கடல் புரை இராக்கதர் விட்ட
ஊன் உடைப் படை இராவணன் அம்பொடும் ஓடி
வானரக் கடல் படா வகை வாளியால் மாற்றி
தான் உடைச் சரத்தால் அவர் தலைமலை தடிந்தான்

#231
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில்
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும்
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான்
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன்

#232
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடிப்
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனைக் கைக்
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
ஓடுகின்றன உலப்பு இல உதிர_ஆறு உவரி

#233
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு
இற்ற கொய் உளைப் புரவிய தேர்க் குலம் எல்லாம்
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல்
சுற்றும் வாசியும் துமிந்தன அமர்க்களம் தொடர்ந்த

#234
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண்
கார் இழந்து வெம் கலின மாக் கால்களும் இழந்து
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள்

#235
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுறத் தழுவி

#236
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும்
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகைப் படைகள்
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலைப்
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன

#237
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி
சென்று தீர்வு இல எனைப் பல கோடியும் சிந்தி
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம்

#238
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி
பேரும் ஓர் இடம் இன்று எனத் திசை-தொறும் பிறங்கி
காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான்
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான்

#239
முரண் தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி
புரண்டு தோள் உறப் பொலன் கொள் நாண் வலம்படப் போக்கி
திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான்

#240
முறுவல் எய்திய முகத்தினன் முளரி அம் கண்ணன்
மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து உற வாங்கி
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான்

#241
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண்
ஏற்றுறா முனம் இடை அறக் கணைகளால் எய்தான்
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர்
ஆற்று கொய் உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான்

#242
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா முன்னம்
இற்று அவிந்து உக எரி கணை இடை அற எய்தான்
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபடக் குறைந்தான்
கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான்

#243
மாற்றுத் தேர் அவண் வந்தன வந்தன வாரா
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான்
சேற்றுச் செம்புனல் படு களப் பரப்பிடைச் செம் கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான்

#244
மின்னும் பல் மணி மவுலி மேல் ஒரு கணை விட்டான்
அன்ன காய் கதிர் இரவி மேல் பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில்
பொன்னின் மா மணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த

#245
செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய
பொறிந்தவாய் வயக் கடும் சுடர்க் கணை படும் பொழுதின்
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அவ் அரக்கன்-தன் மகுடம்

#246
அண்டர்_நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு
கொண்டு போகப் போய்க் குரை கடல் குளித்த அக் கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன் தன்னை
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும்

#247
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான்
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல்
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன்

#248
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன்
ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான்

#249
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன்

#250
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின்றான் எனக் கொள்ளா
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்

#251
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி

#252
உடைப் பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும்
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும்
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய்

#253
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர்
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும்
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து

#254
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும்
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல்

#255
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல்

@16 கும்பகருணன் வதைப் படலம்

#1
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான்

#2
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும்
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான்

#3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான்
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அப்
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கிப் புக்கான்

#4
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை

#5
மந்திரச் சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும்
தந்திரச் சுற்றத்தாரும் தன் கிளைச் சுற்றத்தாரும்
எந்திரப் பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர்
சிந்துரக் களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான்

#6
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை
ஈண்டு நம் தூதர்-தம்மை இவ் வழித் தருதி என்றான்
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரைக் கொண்டு புக்கான்

#7
மனகதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இவ்
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான்

#8
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல்
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம்
தாழ்விலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல்கொண்டார்

#9
மூ வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம
தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான்

#10
பண் நிறை பவளச் செவ் வாய் பைம் தொடி சீதை என்னும்
பெண் இறைகொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான்

#11
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிரத் தோளான்
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல் நகு நெடும் கண் செவ் வாய் மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்

#12
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும்
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை_வேந்தை
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடைப் பீடம் சார்ந்தான்

#13
இருந்தவன் இலங்கை_வேந்தன் இயற்கையை எய்த நோக்கிப்
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடாப்
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான்

#14
கவை உறு நெஞ்சன் காந்திக் கனல்கின்ற கண்ணன் பத்துச்
சிவையின் வாய் என்னச் செம் தீ உயிர்ப்புறத் திறந்த மூக்கன்
நவை_அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை_அறப் புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான்

#15
சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்-தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே

#16
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்
இளையவன்-தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப

#17
எறித்த போர் அரக்கர் ஆவி எண்ணிலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை

#18
மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்றிரண்டு எனினும் நேரே
குலை உறக் குளித்த வாளி குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ

#19
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழித்
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும்
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ

#20
மேருவைப் பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால்
பாரினை உருவும் என்றால் கடல்களைப் பருகும் என்றால்
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்த கோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே

#21
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார்
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
கருதவே உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே

#22
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் எனச் செய்யுள் கொண்ட தொடை எனத் தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை எனப் பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ

#23
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்

#24
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா

#25
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அக்
கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்
பார்த்த போது அவனும் மற்று அத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார்

#26
முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெம் சிலையும் வீரன்
அற்புத வில்லுக்கு ஐய அம்பு எனக் கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம்
தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா

#27
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும் போது அரியே ஒக்கும்
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரைக் கலந்த காலை
சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ

#28
குடக்கதோ குணக்கதேயோ கோணத்தின் பாலதேயோ
தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்தானோ
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில்
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும்

#29
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப்பாலது அன்றே
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்
காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான்

#30
போய் இனித் தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கித்
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்

#31
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையைப் பெற்றேன்
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்குப் புகுந்தது என்றான்

#32
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி
இன் உரைப் பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய்
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்

#33
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார்
விளைவன சொன்ன போதும் கொள்கிலை விடுதி கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம்
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான்

#34
ஆயவன் உரைத்தலோடும் அப்புறத்து இருந்தான் ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து
தீ எழ நோக்கி என் இச் சிறுமை நீ செப்பிற்று என்னா
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்

#35
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு
வென்றியே ஆக மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கிப்
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை

#36
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன்
ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய்

#37
வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ
புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ புகழ்க்கு மேலோய்

#38
தேவியை விடுதியாயின் திறல் அது தீரும் அன்றே
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ
தா_அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே
காவல விடுதி இன்று இக் கையறு கவலை நொய்தின்

#39
இனி இறை தாழ்த்தியாயின் இலங்கையும் யாமும் எல்லாம்
கனி உடை மரங்கள் ஆக கவிக் குலம் கடக்கும் காண்டி
பனி உடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத்
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான்

#40
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர்
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய்
புல் நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய்

#41
ஆங்கு அவன்-தன்னைக் கூவி ஏவுதிஎன்னின் ஐய
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரைத் தானே
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்துக் கொண்டான்

#42
பெறுதியே எவையும் சொல்லி பேரறிவாள் சீரிற்று
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ

#43
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார்
தென்திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார்

#44
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம்
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக
கொண்டுறு தடக் கை பற்றி குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார்

#45
ஓத நீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசிக் காற்றால்
கோது_இலா மலைகள் கூடி வருவது போவதாக
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார்
போதுவான் அருகு செல்லப் பயந்தனர் பொறி கொள் கண்ணார்

#46
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார்
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவியதனினூடு
சங்கொடு தாரை சின்னம் சமைவுறச் சாற்றலுற்றார்

#47
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான்

#48
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து
மட்டு அற உறங்குவான்-தன் மார்பிடை மாலை மான
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார்
தட்டுறு குறங்கு போலத் தடம் துயில் கொள்வதானான்

#49
கொய் மலர் தொங்கலான்-தன் குரை கழல் வணங்கி ஐய
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார்

#50
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர்
படை பேரா வரும் போதும் பதையாத உடம்பானை
மடை பேராச் சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும்
தொடை பேராத் துயிலானைத் துயில் எழுப்பிக் கொணர்க என்றான்

#51
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன்-தன் மாடு அணுகி
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப
பொன்றினவன் எழுந்தால் போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்

#52
மூ வகை உலகும் உட்க முரண் திசைப் பணைக் கை யானை
தாவரும் திசையின்-நின்று சலித்திட கதிரும் உட்க
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன்

#53
விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்_வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான்

#54
உறக்கம் அவ்வழி நீங்கி உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்

#55
ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் களும் நுங்கினான்
ஏறுகின்ற பசியை எழுப்பினான்
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்

#56
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை_ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான்

#57
இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்
சொரிந்த சோரி தன் வாய் வரத் தூங்குவான்

#58
உதிர_வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான்
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்
கதிர வாள் வயிரக் கழல் காலினான்

#59
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்
வரும் களிற்றினைத் தின்றனன் மால் அறா
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான்

#60
சூலம் ஏகம் திருத்திய தோளினான்
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்
காலன் மேல் நிமிர் மத்தன் கழல் பொரு
காலன் மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்

#61
எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான்
அயில் தலைத் தொடர் அங்கையன் சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான்

#62
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான்
கடல் கிடந்தது நின்றதன் மேல் கதழ்
வட கடும் கனல் போல் மயிர்ப் பங்கியான்

#63
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை எனத்
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்

#64
காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்

#65
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும்
கோயில் எய்தினன் குன்று அன கொள்கையான்

#66
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர்_அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான்

#67
வன் துணைப் பெரும் தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்

#68
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி கதிர்க் குழாம்
புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்

#69
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்
சோர விட்ட சுடர் மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான்

#70
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் எனக் கடல் மேனியில்
தெய்வம் நாறு செஞ்சாந்தமும் சேர்த்தினான்

#71
விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு_நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்

#72
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால் என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியாநின்றான்

#73
வானரப் பெரும் தானையர் மானிடர்
கோ நகர்ப் புறம் சுற்றினர் கொற்றமும்
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் என்றான்

#74
ஆனதோ வெம் சமம் அலகு_இல் கற்பு உடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே

#75
கிட்டியதோ செரு கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே

#76
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா

#77
புலத்தியன் வழிமுதல் வந்த பொய்_அறு
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை_அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

#78
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும்
படுத்தனை பல வகை அமரர்-தங்களை
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால்

#79
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்

#80
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ

#81
காலினின் கரும் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள சீதை போகிலள்
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ

#82
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல்
நன்று அது நாயக நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி போக்கிலாய்

#83
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர்
செய் திறம் அன்னது தெரியக் கேட்டியால்

#84
பந்தியில்பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் என்று உணரக் கூறினான்

#85
உறுவது தெரிய அன்று உன்னைக் கூயது
சிறு தொழில் மனிதரைக் கோறி சென்று எனக்கு
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான்

#86
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் என உளையக் கூறினான்

#87
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய் தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான்

#88
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும்
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம் போர் எனப் போதல் மேயினான்

#89
அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான்
இன்னம் ஒன்று உரை உளது என்னக் கூறினான்

#90
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று அரோ

#91
இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்
தந்திரம் காற்றுறு சாம்பல் பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்

#92
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அப் பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின்பாலதே

#93
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய
பெற்றனென் விடை எனப் பெயர்ந்து போயினான்

#94
அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்
எவ்வழியோர்களும் இரங்கி ஏங்கினார்
இவ் வழி அவனும் போய் வாயில் எய்தினான்

#95
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால்
வரும் படை வந்தது வானுளோர்கள்-தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே

#96
தேர்க் கொடி யானையின் பதாகை சேண் உறு
தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ
போர்க் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ

#97
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால்

#98
தேர் செலக் கரி செல நெருக்கிச் செம் முகக்
கார் செலத் தேர் செலப் புரவி கால் செலத்
தார் செலக் கடை செலச் சென்ற தானையும்
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால்

#99
ஆயிரம் கோளரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம்
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இரும் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான்

#100
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால்

#101
நறை உடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர்
முறைமுறை கைக்கொடு முடுகி நீட்டுவார்

#102
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே

#103
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார்

#104
பாந்தளின் நெடும் தலை வழுவிப் பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான்

#105
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும்
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால்

#106
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர்
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன்

#107
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇப்
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது
அழுங்கல்_இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன்

#108
அரக்கன் அவ் உரு ஒழித்து அரியின் சேனையை
வெருக்கொளத் தோன்றுவான் கொண்ட வேடமோ
தெரிக்கிலேன் இவ் உரு தெரியும் வண்ணம் நீ
பொருக்கென வீடண புகறியால் என்றான்

#109
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய
பேர் இயல் இலங்கை_வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன்
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான்

#110
தவன் நுணங்கியரும் வேதத்தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து அலரின் மேலைத் திசைமுகன் உணரும் தேவன்
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய்

#111
ஆழியாய் இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம்முனோன்
தாழ்வு_இலா ஒரு தம்பியோன்
ஊழி நாளும் உறங்குவான்

#112
காலனார் உயிர்க் காலனால்
காலின் மேல் நிமிர் காலினான்
மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான்

#113
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க நின்று சுழற்றினான்

#114
கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்
அழிந்து மீன் உக ஆழி நீர்
இழிந்து காலினின் எற்றுவான்

#115
ஊன் உயர்ந்த உரத்தினான்
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்
தான் உயர்ந்த தவத்தினான்
வான் உயர்ந்த வரத்தினான்

#116
திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கிலான்
இறங்கு தாரவன் இன்று-காறு
உறங்கலால் உலகு உய்ந்ததால்

#117
சூலம் உண்டு அது சூர் உளோர்
காலம் உண்டது கைக் கொள்வான்
ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான்

#118
மின்னின் ஒன்றிய விண்ணுளோர்
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில்
என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி விழித்திலான்

#119
தருமம் அன்று இதுதான் இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான்

#120
மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான்

#121
நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்

#122
என்று அவன் உரைத்தலோடும் இரவி_சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான்

#123
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை_வேந்தன்
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம்
சேகு_அறத் தெருட்டி ஈண்டுச் சேருமேல் சேர்ப்பென் என்றான்
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான்

#124
தந்திரக் கடலை நீந்தித் தன் பெரும் படையைச் சார்ந்தான்
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்னச் சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான்

#125
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்தத் தெளிவிலார் போல மீள
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான்

#126
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால்
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ

#127
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று என்னா
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ

#128
அறப் பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார் தங்கள் ஆருயிர் துறந்த போதும்
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம்

#129
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும்
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ
பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்

#130
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமைதானும்
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றிப் பெற்றாய்
வேதியர் தேவன் சொல்லால் விளிவு_இலா ஆயுப் பெற்றாய்
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய்

#131
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான்
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார்
கூற்றமும் நின்றது எம்மைக் கொல்லிய விதியும் நின்ற
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய்

#132
ஐய நீ அயோத்தி_வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலையென்னின் மற்று இவ் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை_மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கடன் கழிப்பாரைக் காட்டாய்

#133
வருவதும் இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீராப்
பொருவ_அரும் செல்வம் துய்க்கப் போதுதி விரைவின் என்றான்
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை எனக் கழறலுற்றான்

#134
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே

#135
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென்
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி

#136
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும்

#137
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ

#138
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை
ஒக்கும் இன் உயிர்_அன்னாரை உதவிசெய்தாரோடு ஒன்ற
துக்கம் இத் தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர்
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே

#139
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கிலாதோர்
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மைதானோ
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான்

#140
கண்_நுதல் தீமை செய்யக் கமலத்து முளைத்த தாதை
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்திப் பின்னை
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ

#141
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடல் உறச் சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர்
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
மடல் உடை அலங்கல் மார்ப மதியுடையவர்க்கு மன்னோ

#142
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை
தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றிப் பொருந்திற்று உண்டோ

#143
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா

#144
திரு_மறு_மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வப்
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு_இலா நாளும் பெற்றாய்
ஒருமையே அரசுசெய்வாய் உரிமையே உனதே ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா

#145
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால்
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார்
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி

#146
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார் இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே
புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்

#147
முனிவரும் கருணைவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்
கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ

#148
வேத_நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான்
காதலால் என் மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே
ஆதலால் அவனைக் காண அறத்தொடும் திறம்பாது ஐய
போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான்

#149
தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான்

#150
நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்
தார்க் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தியாகின்
கார்க் கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி

#151
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு_இலா வரத்தினால் நீ
உலைவு_இலாத் தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய்
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால்
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால்

#152
கருத்து_இலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாமாகின் அன்றோ திருத்தலாம் தீராதாயின்
பொருத்துறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

#153
தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்பச் சுற்றும்
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும்
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண் மேல்

#154
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆகப்
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் கால_பாசத்தால் பிணிப்ப கூசி
துணை இன்றிச் சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல்

#155
செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்

#156
அனுமனை வாலி_சேயை அருக்கன்_சேய்-தன்னை அம் பொன்
தனு_உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னைக்
கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும் கடந்து மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி

#157
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட
காலம் கொள் உலகும் ஓட கறங்கு எனத் திரிவென் காண்டி

#158
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வராகின்
கரு வரை கனகக் குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம்
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான்

#159
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாயாகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய்_அல்லை யாரும் தொழ நிற்பாய் என்னச் சொன்னான்

#160
போதி நீ ஐய பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மா துயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ

#161
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

#162
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுகப் புல்லி
நின்றுநின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான்
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான்

#163
வணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப

#164
கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டுக் காலும் விட்டான்
பிள்ளைமை துறந்தான் என்னாப் பேதுறும் நிலையன் ஆகி
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான்

#165
எய்திய நிருதர்_கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய்
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம்
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான்

#166
கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும் முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன்
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார்

#167
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும்
கனை கடல் கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி
முனை தொழில் முயன்றதாக மூ வகை உலகும் முற்றத்
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி

#168
ஓடின புரவி வேழம் ஓடின உருளைத் திண் தேர்
ஓடின மலைகள் ஓட ஓடின உதிரப் பேராறு
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல்
ஓடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா

#169
மூளையும் தசையும் என்பும் குருதியும் நிணமும் மூரி
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க

#170
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்திப்
பெய்தனர் அரக்கர் பற்றிப் பிசைந்தனர் அரிகள் பின்றா
வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர்
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம்

#171
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும்
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கித்
தேரினை ஓட்டி வந்தான் திருவினைத் தேவர்-தங்கள்
ஊரினை நோக்கா வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான்

#172
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப
பூழியில் பட்டு செந்நீர்ப் புணரியில் பட்டு பொங்கும்
சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும் துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம்

#173
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரித்
தின்றுதின்று உமிழும் பற்றிச் சிரங்களைத் திருகும் தேய்க்கும்
மென்றுமென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும்

#174
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடைத் தேய்க்கும் வாரி
நீரிடைக் குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும்
தேரிடை எற்றும் எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி

#175
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும்
மறைந்தன பெருமை தீர்ந்த மலைக் குலம் வற்றிவற்றிக்
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச

#176
மற்று இனி ஒருவர் மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே
அற்றன தீங்கும் என்னா அரிக் குலத் தலைவர் பற்றி
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான்

#177
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் எல்லாம் பொடிப்பொடி ஆகிப் போன
இல்லை மற்று எறியத் தக்க எற்றுவ சுற்றும் என்ன
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி

#178
குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி
சென்று மேல் எழுந்து பற்றி கைத்தலம் தேயக் குத்தி
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடியக் கீளா
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடிப்போன

#179
மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான்

#180
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா
புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும்
பயம்கொள கரங்கள் ஓச்சிக் குத்தினான் உதைத்தான் பல் கால்

#181
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான்
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால்
மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறுங்கையான் என்று வெள்கி

#182
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான்

#183
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி
வீற்றுவீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம்
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம்

#184
இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன்
தடக் கையால் பிடித்துக்கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த

#185
பிடித்தது சுழற்றி மற்று அப் பெரு வலி அரக்கன்-தன்னை
இடித்து உரும்_ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா போல்
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி
கொடித் தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான்

#186
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி
பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை
வென்றவன்தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான்

#187
நும் முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி
மும்முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கித்
தெம் முனை இராமன் பாதம் வணங்கிடச் செல்வென் என்றான்

#188
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக் காட்டலை என்னின் பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர் நல்லது நினைந்தாய் நேரே
வந்தனைபுரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார்

#189
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று வானவர் மார்பின் தைத்த
முத்தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால் போல்
கைத்தலம் காலும் தூங்கக் கிடத்தலைக் கருதி என்றான்

#190
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க
பொன் தடம் தோளின் வீசிப் புடைத்தனன் பொறியின் சிந்தி
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிரத் தண்டு

#191
தண்டு இற தடக் கை ஓச்சி தழுவி அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுறக் குனிக்கும் காலை
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான்

#192
மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று
பறித்து அவன் நெற்றி முற்றப் பரப்பிடை பாகம் உள்ளே
செறித்து எனச் சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான்

#193
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன
மலையினைக் கையின் வாங்கி மாருதி வயிர மார்பின்
உலையுற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்பக்
குலையுறு பொறிகள் சிந்த வீசித் தோள் கொட்டி ஆர்த்தான்

#194
அவ்வழி வாலி_சேயை அரிக் குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி
எவ்வம்_இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான்

#195
எறிகுவென் இதனை நின் மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி வல்லை மாற்றினையென்னின் வன்மை
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான்

#196
மாற்றம் அஃது உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்

#197
மாருதி வல்லையாகின் நில் அடா மாட்டாயாகின்
பேருதி உயிர் கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன் தோள் மேல் ஏற்றான்
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எவ் உலகும் உட்க

#198
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா குல வரை அமரின் ஆற்றா
துளக்குறும் நிலையன்_அல்லன் சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான்

#199
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும்
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த முச்சூல்
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி

#200
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா

#201
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச
துங்கத் தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான்

#202
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன

#203
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன குரங்கின்
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன் ஒரு தனிச் சுமித்திரை சிங்கம்

#204
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்னச்
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை

#205
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப
சிலைக் கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ
உலைக் கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி
குலக் கயங்களில் குளித்தன குடித்தன குருதி

#206
அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ
சில சிரத்தினைத் துணித்து அவை திசை கொண்டு செல்வ
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள்

#207
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடைப்
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ
செருப் பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின்

#208
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடைக் குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும் இவ் விசை ஒக்கும் பிறழா

#209
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட
ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும்
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி

#210
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த
செருப் புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம்
பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட

#211
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலை படப்பட மயங்கின சாய்ந்த
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை

#212
பல்லவக் கணை பட படு புரவிய பல் கால்
வில் உடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த
எல்லையற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள்

#213
பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிரத்
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள்

#214
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர்
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள்

#215
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில்
புரிந்த வானரத் தானையில் புக்கன புயலின்

#216
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி
போனபோன வன் திசை-தொறும் பொறிக் குலம் பொடிப்ப
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த

#217
கரம் குடைந்தன தொடர்ந்து போய்க் கொய் உளை கடு மாக்
குரம் குடைந்தன வெரிநுறக் கொடி நெடும் கொற்றத்
தரம் குடைந்தன அணி நெடும் தேர்க் குலம் குடைந்த
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா

#218
துரக்கம் மெய்யுணர்வு இருவினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம்
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி

#219
மறக் கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை போல்
நிறக் கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அத்
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம்

#220
ஒருவரைக் கரம் ஒருவரைச் சிரம் மற்று அங்கு ஒருவர்
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால்
விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு
இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி

#221
சிலவரைக் கரம் சிலவரைச் செவி சிலர் நாசி
சிலவரைக் கழல் சிலவரைக் கண் கொளும் செயலால்
நிலவரைத் தரு பொருள் வழித் தண் தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன சரங்கள்

#222
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர்
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி
திறத்திறம் படத் திசை-தொறும் திசை-தொறும் சிந்திப்
புறத்தின் ஓடினர் ஓடின குருதியே போல

#223
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான்
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான்

#224
படர் நெடும் தடம் தட்டிடைத் திசை-தொறும் பாகர்
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன்
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான்

#225
தொளை கொள் வான் நுகச் சுடர் நெடும் தேர் மிசைத் தோன்றி
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான்
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான்

#226
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானரக் குழுவும்
நூறு பத்து உடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ் அனுமன்-தன் தடம் தோள்

#227
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல்
துன்னு பேரொளி இலக்குவன் தோன்றிய தோற்றம்
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ

#228
ஆங்கு வீரனோடு அமர்செய்வான் அமைந்த வாள் அரக்கன்
தாங்கு பல் கணைப் புட்டிலும் தகைபெறக் கட்டி
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க
வாங்கினான் நெடு வடவரை புரைவது ஓர் வரி வில்

#229
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

#230
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள்
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால்
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான்

#231
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்

#232
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு
மண் இரண்டு உறக் கிழிந்தது என்று இமையவர் மறுக
கண் இரண்டினும் தீ உக கதிர் முகப் பகழி
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான்

#233
கொம்பு நால் உடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் எனச் செல்வ
வெம்பு வெம் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான்

#234
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவப்
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முகக் கடும் கணைப் புத்தேள்
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான்

#235
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால்
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால்
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உருச் சரம் அற்ற

#236
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன் மேல் அழுத்தி
ஏறு வெம் சரம் இரண்டு இளங்குமரன் மேல் ஏற்றி
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில்
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன்

#237
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி
துறைத் தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெம் கரி பரி யாளி மாப் பூதம்
திறத் திறம் படத் துணித்து அவன் தேரையும் சிதைத்தான்

#238
தேர் அழிந்தது செங்கதிர்ச்செல்வனை சூழ்ந்த
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார்
நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
பார வெம் சிலை அழிந்து எனத் துமிந்தது அப் பரு வில்

#239
செய்த போரினை நோக்கி இத் தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடும் கோளரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார்

#240
ஊன்று தேரொடு சிலையிலன் கடல் கிளர்ந்து ஒப்பான்
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச்சிகைத்தாய்
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினைத் தொட்டான்

#241
இழியப் பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா
கிழியப் பாய் புனல் கிளர்ந்து எனக் கிளர் சினத்து அரக்கன்
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள்
ஒழியப் பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான்

#242
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து

#243
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும்
சொரிந்த வெம் படை துணிந்திட தடுப்ப_அரும் தொழிலால்
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான்

#244
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தால் அன முரண் கண்
அரக்கர் செம் மயிர்க் கரும் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெரும் கனலிடைப் பெய்துபெய்து எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட

#245
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின்
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும்
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப
நெரியும் பல் பிணப் பெரும் கரை கடந்தில நீத்தம்

#246
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம்
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட தொகையாய்
அற்ற துண்டங்கள் படப்படத் துணிந்தன அனந்தம்

#247
குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை
தண்டை தோள்வளை கடகம் என்று இனையன தறுகண்
கண்டகண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில்

#248
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள்
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்க் கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி

#249
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான்
பூண்ட வெம் செரு இரவி_கான்முளையொடு பொருதான்
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார்

#250
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன்
செறிந்து எழு கதிரவன்_சிறுவன் சீறினான்
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே

#251
அ மலை-நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின்
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன

#252
இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற
அவ்வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார்

#253
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான்
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து நீங்கு எனா
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார்

#254
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா
எல்லவன்_கான்முளை உணரும் ஏல்வையில்
கொல் என எறிந்தனன் குறைவு_இல் நோன்பினோர்
சொல் எனப் பிழைப்பு_இலாச் சூலம் சோர்விலான்

#255
பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான்

#256
சித்திர வன முலைச் சீதை செவ்வியால்
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேரொலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே

#257
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான்

#258
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர்
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும்
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய
பின் இகல் பழுது எனப் பெயர்ந்து போயினான்

#259
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி_கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால்

#260
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும்
தருக்கு இனி இன்றொடும் சமையும்தான் எனா
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா வகை
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான்

#261
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர்
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார்

#262
உறுக்கினர் ஒருவரையொருவர் உற்று இகல்
முறுக்கினர் முறைமுறை அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலா வகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான்

#263
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலாத்
தண்டல்_இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர்
எண் தரு கருமம் மற்று இதனின் இல் எனக்
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர்

#264
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து
அரற்றின கவிக் குலம் அரக்கர் ஆர்த்தனர்

#265
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானரத்தலைவர் உள் முகிழ்த்து
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர்
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார்

#266
புழுங்கிய வெம் சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல்_இல் கோள் முகத்து அரவம் ஆயினான்
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான்

#267
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மைக் கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்துப்
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன்

#268
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்
கரும் கடல் கடந்த அக் காலன் காலன் வாழ்
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன்

#269
ஆயிரம்_பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்
காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன்
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார்

#270
தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான்
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான்

#271
உடைப் பெரும் துணைவனை உயிரின் கொண்டுபோய்
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என
தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து உற
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம்

#272
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால்

#273
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்
இனக் கொடும் பகழியின் மதிலை எய்தினான்
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என
சினக் கொடும் திறலவன் திரிந்து நோக்கினான்

#274
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்து பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான்-தனை

#275
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ்
துடித்தன புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால்
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம்

#276
மாக் கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனைத்
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர்
காக்க வந்தனை இது காணத் தக்கதால்

#277
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால்

#278
தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன்
ஈடுறும் இவனைக் கொண்டு எளிதின் எய்தினேன்

#279
காக்கிய வந்தனையென்னின் கண்ட என்
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம் முனைப்
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய்

#280
ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர்
பேதுறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி
கோதை வெம் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான்

#281
என்றலும் முறுவலித்து இராமன் யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான்

#282
மீட்டு அவன் சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்

#283
சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன்

#284
குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும்
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான்
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான்

#285
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை

#286
கண்டனன் நாயகன்-தன்னைக் கண்ணுறா
தண்டல்_இல் மானமும் நாணும் தாங்கினான்
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன் எழுந்து போய்த் தமரைக் கூடினான்

#287
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர்
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே

#288
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறைப்
போந்தனளாம் எனப் பொருமல் நீங்கினான்

#289
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு
அத் திசைப் போயினன் அல்லது ஒண்ணுமோ

#290
அக் கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி_அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும் உணர்ந்தனன் உதிரப் போர்வையான்

#291
தாது ராகத் தடம் குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான்

#292
எண் உடைத் தன்மையன் இனைய எண்ணிலாப்
பெண் உடைத் தன்மையன் ஆய பீடையால்
புண் உடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்
கண் உடைச் சுழிகளும் குருதி கால்வன

#293
ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும் தன்
நாசியைப் பார்க்கும் முன் நடந்த நாள் உடை
வாசியைப் பார்க்கும் இ மண்ணைப் பார்க்குமால்
சீசீ உற்றது எனத் தீயும் நெஞ்சினான்

#294
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் எனப்
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான்

#295
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான்
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான்

#296
விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான்

#297
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால்
கூசின குரக்கு வெம் குழுவைக் கொண்டு எழுந்து
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால்

#298
தோல் இடைத் துரக்கவும் துகைக்கவும் சுடர்
வேல் உடைக் கூற்றினால் துணிய வீசவும்
காலிடைக் கடல் எனச் சிந்தி கை கெட
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால்

#299
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால்

#300
இடுக்கு இலை எதிர் இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாமெனின் குரங்கின் தானையை
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா
முடுக்கினன் இராமனைச் சாம்பன் முன்னியே

#301
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான்

#302
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன்
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான்

#303
ஆடவர்க்கு அரசனும் தொடர அவ்வழி
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ம் கணை
ஈடு உறத் துரந்தனன் அவையும் இற்று உகக்
கேடகப் புறத்தினால் கிழிய வீசினான்

#304
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செங்கணான்
மறித்து ஒரு வடிக் கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே

#305
அற்றது தடக் கை வாள் அற்றது இல் என
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து
உற்றனன் ஊழித்தீ அவிய ஊதுவான்

#306
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடும் கேடகம் புரட்டிப் போர்த்தது ஓர்
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்

#307
அந்தரம் அன்னது நிகழும் அவ்வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மாப் படை

#308
வில் வினை ஒருவனும் இவனை வீட்டுதற்கு
ஒல் வினை இது எனக் கருதி ஊன்றினான்
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே

#309
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர்ப் படை
காத்தது கருணனை கண்டு மாய மாக்
கூத்தனும் வருக எனக் கடிது கூவினான்

#310
சூழி வெம் கட கரி புரவி தூண்டு தேர்
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி
ஏழ்_இரு கோடி வந்து எய்திற்று என்பரால்
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான்

#311
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான்

#312
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும்
மரம் கிடந்தன மலைக் குவை கிடந்தனவாம் என மாறாடிக்
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்விச்
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர் கொடு திரிவாரை

#313
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடையிடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறித் தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக

#314
படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி
குடைந்து வையகம் புக்குறத் தேக்கிய குருதியால் குடர் சோரத்
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும்

#315
வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல் நெடும் புரவிய முறைமுறை அச்சொடும் பொறி அற்று
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடைத் தலைத்தலை மாறாடி
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணித் தேர்கள்

#316
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம்

#317
வேத_நாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரைக்
காதல் விண்ணிடைக் கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை

#318
பனிப் பட்டால் எனக் கதிர் வரப் படுவது பட்டது அப் படை பற்றார்
துனிப்பட்டார் எனத் துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான்
இனிப் பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ
தனிப்பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன்

#319
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தெரிந்து அம்மா

#320
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய்
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம்
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான்

#321
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத் துறை வழுவாத
கொற்ற நீதியும் குல முதல் தருமமும் என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால் எங்களைப் பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும்
அற்ற எங்கை போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா

#322
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அவ் வகை நிலை நோக்கித்
தாக்கு_அணங்கு_அனையவள் பிறர் மனை எனத் தடுத்தனென் தக்கோர் முன்
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய்

#323
உங்கள் தோள் தலை வாள் கொடு துணித்து உயிர் குடித்து எம் முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகைசெய்ய
செம் கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி
எங்கை போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா

#324
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய்
செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான்

#325
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வலக்கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நிலக் குடர் கவர்ந்து எனக் கொண்டான்
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன

#326
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு_அரும் தனி மேனி
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி

#327
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு_இலா மெய்யன மேல் சேர்ந்த
கண்_நுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி

#328
தாக்குகின்றன நுழைகில தலையது தாமரைத் தடம் கண்ணான்
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன

#329
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர்
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும்
சாந்து செய்குவனாம் என முறைமுறை அரைத்தனன் தரையோடும்

#330
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும்
பிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன் கறங்கு எனப் பெரும் சாரி

#331
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாயக்
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர்
மண்டலச் சுடராம் எனக் கேடகம் வாங்கினன் வாளோடும்

#332
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார்
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த

#333
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்துக்
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும்
வலக்கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும்
இலக்கை அற்றது அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி

#334
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ மறத் தொழில் இவன்-மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேரெழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானரக் குலம் எல்லாம்

#335
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட பண்டையின் மும்மடி குமைகின்றபடி நோக்கி
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம்

#336
மாறு வானரப் பெரும் கடல் ஓடத் தன் தோள்-நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட
கூறுகூறுபட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட
ஏறு சேவகன் மேல் எழுந்து ஓடினன் மழைக் குலம் இரிந்து ஓட

#337
ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால்
வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான

#338
சந்திரப் பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் கடைவுறும் அ நாளில்
சுந்தரத் தடம் தோள்வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிரத் தோள்

#339
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை
சுவண வண்ண வெம் சிறை உடைக் கடு விசை முடுகிய தொழிலானும்
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அவ் உயர் பொன் தோள்

#340
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் தொளைத்து ஒரு பணை ஆக்கி
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி
முழக்கினால் என முழங்கு பேரார்ப்பினான் வானர முந்நீரை
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக

#341
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களைக் குடிப்பானை
சலத்த காலனைத் தறுகணர்க்கு அரசனைத் தருக்கினின் பெரியானை
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான்

#342
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி
குந்தி வந்தனன் நெடு நிலம் குழிபட குரை கடல் கோத்து ஏற

#343
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை
ஏறு சேவகன் எரி முகப் பகழியால் இரு நிலம் பொறை நீங்க
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட

#344
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன
செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும்
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம்

#345
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால்
காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி
மீதுமீது தன் அகத்து எழு காற்றினால் விசை கொடு திசை செல்ல
ஊதஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன

#346
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி
பேயின் ஆர்ப்பு உடைப் பெரும் களம் எரிந்து எழப் பிலம் திறந்தது போலும்
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான்

#347
அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்
மையல் நோய் கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான்

#348
சிந்துரச் செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா
எந்திரத் தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
கந்தரப் பொன் கிரி ஆண்மை களிறு_அனையான் கண் நின்ற
சுந்தரப் பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான்

#349
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
மைக் கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்
இக் கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர் என் கடைக்கூட்டால்

#350
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்

#351
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான்
ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான்
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய்

#352
தம்பி என நினைந்து இரங்கித் தவிரான் அத் தகவில்லான்
நம்பி இவன்-தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால்
உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன்

#353
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்

#354
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா
சிரம் கொண்டான் கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான்

#355
மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி
மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது அ முகக் குன்றம்

#356
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான்

@17 மாயா சனகப் படலம்

#1
அவ்வழி கருணன் செய்த பேரெழில் ஆண்மை எல்லாம்
செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம் சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ் வழி இலங்கை_வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்

#2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான்

#3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி
கணத்து வன் சனகன்-தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்
மணத் தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி

#4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுகப் புல்லி
அனையவன்-தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன் எழுந்து போனான்
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான்

#5
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச
துன் இருள் இரிந்து தோற்பச் சுடர் மணித் தோளில் தோன்றும்
பொன் அரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான்

#6
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி மின் அணி அரவின் சுற்றி
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன
முளைப் பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும்
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான்

#7
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கிப்
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து இயற்றினாளைக்
கண்களால் அரக்கன் கண்டான் அவளை ஓர் கலக்கம் காண்பான்

#8
இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை-நின்றும்
கட்ட தோள் கானம் சுற்றக் கழல் ஒன்று கவானின் தோன்ற
வட்ட வெண் கவிகை ஓங்கச் சாமரை மருங்கு வீசத்
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன் இனைய சொன்னான்

#9
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான்
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால்
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக்கொண்டான்

#10
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர்

#11
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர் வயிரத் தோளை மெலிவித்தீர் வேனில் வேளை
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர் இன்னம் என்என் செய்வித்துத் தீர்திர் அம்மா

#12
பெண் எலாம் நீரே ஆக்கிப் பேர் எலாம் உமதே ஆக்கிக்
கண் எலாம் நும் கண் ஆக்கிக் காம_வேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர்

#13
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ

#14
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்த பத்தி
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே

#15
அறம் தரும் செல்வம்_அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேரெழில் மானம் கொல்ல
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்துஇறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார்

#16
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல்
இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு
சுந்தரக் குமுத செவ் வாய் அமுது அலால் அமுதச் சொல்லீர்

#17
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக் கூட
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான்

#18
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள்
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள்

#19
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகரத் தக்க
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய்
கிழிகிலை நெஞ்சம் வஞ்சக் கிளையொடும் இன்று-காறும்
அழிகிலை என்ற போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம்

#20
வான் உள அறத்தின் தோன்றும் சொல் வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால்
தான் உள பத்துப் பேழ் வாய் தகாதன உரைக்கத் தக்க
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய்

#21
வாசவன் மலரின் மேலான் மழு_வலான் மைந்தன் மற்று அக்
கேசவன் சிறுவர் என்ற இந்தத் தன்மையோர்-தம்மைக் கேளாய்
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என்
ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி

#22
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை_அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணியமூர்த்தி-தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்

#23
சென்றுசென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன்
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்பக்
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை

#24
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்று ஆகித் தாமரைக் கண்ணது ஆகி
கனக் கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பிலாதாய்

#25
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னைக்
கொன்றன மானம் தோன்ற கூற்று எனச் சீற்றம் கொண்டான்
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி
ஒன்று என வாழ்தி போல் என்று இடி உரும் ஒக்க நக்கான்

#26
இனத்துளார் உலகத்துள்ளார் இமையவர் முதலினார் என்
சினத்துளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னைப்
புனத் துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ

#27
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால்
உளைத்தன குரங்கு பல் கால் என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம்
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா

#28
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும்
வெற்றியர்-தம்மைச் செல்லச் சொல்லினென் விரைவின் என்றான்

#29
என்று அவன் உரைத்த காலை என்னை இ மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த
நின்றுநின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீளத்
தின்றுதின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள்

#30
இத்தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும்
அத்தலை அன்ன செய்யச் சிறியரோ வலியர் அம்மா
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா
கைத்தனள் உள்ளம் வெள்ளக் கண்ணின் நீர்க் கரையிலாதாள்

#31
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி_அனையான் முன்னர்க் காட்டினன் வணங்கக் கண்டாள்
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள்

#32
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடைப் பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள்
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள்

#33
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும்
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள்
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார்

#34
எந்தையே எந்தையே இன்று என்-பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும்
வெம் துயர் வீங்கித் தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள்

#35
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்
மட்டு உண்டார் மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண் தோள்
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால்

#36
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்புப் போவாள்
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள்

#37
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இற்கடன்கள் செய்ய
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்
சிறையிடைக் காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே

#38
வன் சிறைப் பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாயப்
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் எனப் புலவர் நின்றார்
என் சிறை தீர்க்குவாரைக் காண்கிலேன் என்னின் வந்த
உன் சிறை விடுக்கற்பாலார் யார் உளர் உலகத்து உள்ளார்

#39
பண் பெற்றாரோடு கூடாப் பகை பெற்றாய் பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால்
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார்

#40
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன
பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன் உம்மை எல்லாம்
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால்

#41
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம்
பொருந்தினேன்_அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன்_அல்லேன்
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால்
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா

#42
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை
கல் எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்
இல் எனச் சிறந்துநின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன்

#43
இணை_அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள் தோள் ஆர்த்துப் பூழியில் புரளக் கண்டேன்
மணவினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ

#44
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆருயிர்த் தங்கைமீரே
என்னை ஈன்றெடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ

#45
மேருவின் உம்பர்ச் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும்
நீர் உடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்
போரிடைக் கொண்டாரேனும் வஞ்சனை புணர்த்தாரேனும்
ஆர் உமக்கு அறையற்பாலார் அனுமனும் உளனோ நும்-பால்

#46
சரதம் மற்று இவனைத் தந்தார் தவம்புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனைக் கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள்
வரதனும் வாழ்வான்_அல்லன் தம்பியும் அனையன வாழான்
விரதமுற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல்

#47
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி
துடைத்தது பகையை சேனை எனச் சிலர் சொல்லச்சொல்ல
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி
உடைத்தது விதியே என்றுஎன்று உளைந்தனள் உணர்வு தீர்வாள்

#48
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
தாங்குவாள்_அல்லள் துன்பம் இவளையும் தாங்கித் தானும்
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான்

#49
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகாப்
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும்
வேரற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும்
ஆருயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம்_அன்னாய்

#50
இமையவர் உலகமேதான் இவ் உலகு ஏழுமேதான்
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியேதான்
சமைவுறத் தருவென் மற்று இத் தாரணி மன்னற்கு இன்னல்
சுமை உடைக் காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன்

#51
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன்
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாமத் தெய்வப்
பொலம் கிளர் மானம்தானே பொது அறக் கொடுப்பென் புத்தேள்
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன்

#52
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன்
சுந்தரப் பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின்

#53
எந்தை-தன் தந்தை தாதை இவ் உலகு ஈன்ற முன்னோன்
வந்து இவன்தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும்

#54
தேவரே முதலா மற்றைத் திண் திறல் நாகர் மண்ணோர்
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார்
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான்

#55
இத் திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும் வீடணன் புலவர்_கோமான்
கைத் திருச் சரங்கள் உன்றன் மார்பிடைக் கலக்கற்பால
மைத் திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கற்பால

#56
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்லத் தக்கன சாப நாணின்
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா

#57
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணைக்
கல்லுவ காகம் வந்து கலப்பன கமல_கண்ணன்
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ களிப்புக் கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம்

#58
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன்
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்றுப் பேழ் வாய்ப்
பெரும் பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய் என்ன
அரும்பு இயல் துளவப் பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள்

#59
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்

#60
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி
தையல் மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான்

#61
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான்

#62
பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமையுற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின்-பொருட்டாகப் பட்டேன்
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்

#63
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உகப் பொருமுகின்றான்

#64
அவ் உரை கேட்ட நங்கை செவிகளை அமையப் பொத்தி
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க
இவ் உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி
செவ்வுரை அன்று இது என்னாச் சீறினள் உளையச் செப்பும்

#65
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும்
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேணத் தக்க
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா

#66
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும்
மொழி கொடு வாழ்வது அல்லால் முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம்

#67
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிரத் திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி

#68
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே

#69
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகாச்
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்னச் சொன்னாள்

#70
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன்
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இக் கணத்தினின் முன்
கொன்று உயிர் குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவிக் கொண்டான்

#71
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும்
உன்னையும் கொல்லாய் மற்று இவ் உலகையும் கொல்லாய் யானோ
இன் உயிர் நீங்கி என்றும் கெடாப் புகழ் எய்துகின்றேன்
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள்

#72
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான்
பரந்த வெம் பகையை வென்றால் நின் வழிப் படரும் நங்கை
அரந்தையள் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின்

#73
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண்
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல

#74
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும்
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச
தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின்

#75
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போதப்
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய
திறம்திறமாக நின்ற கவிப் பெரும் கடலைச் சிந்தி
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார்

#76
ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன்
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும்
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான்

#77
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான்
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற

#78
தம்பியோ வானவராம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ
நம்பியோ இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ

#79
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன்
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன்
உன் நிலைமை ஈது ஆயின் ஓடைக் களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப் புகாரோ புரந்தரனார்

#80
வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய் வான் அடைந்தால்
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார்
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள்

#81
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும்
மல் ஒன்று தோளாய் வடமேரு மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றால்

#82
மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும்
தீண்டினவா ஒன்றும் செயலற்றவாம் தெறித்து
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி

#83
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும்

#84
தன்னைத்தான் தம்பியைத்தான் தானைத் தலைவனைத்தான்
மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான்
பின்னைக் கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே

#85
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல்
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய்
சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப
பூழி அணை மேல் துயின்றனையோ போர்க்களத்தே

#86
செந்தேன் பருகித் திசைதிசையும் நீ வாழ
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன் பிரியேன் தனி போகத் தாழ்க்கிலேன்
வந்தேன் தொடர மதக் களிறே வந்தேனால்

#87
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்
தொண்டைக்கனி வாய் துடிப்ப மயிர் பொடிப்பக்
கெண்டைத் தடம்_கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்

#88
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள்
தீங்கு இலாக் கற்பின் திரு_மடந்தை சேடியாம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்

#89
கண்டாள் கருணனைத் தன் கண் கடந்த தோளானைக்
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனைக் கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்

#90
தாவ_அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத
மூவரையும் மேலை_நாள் மூவா_மருந்து உண்ட
தேவரையும் வைப்பேன் சிறை என்னச் சீறினான்

#91
அக் கணத்து மந்திரியர் ஆற்றச் சிறிது ஆறி
இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
முக் கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான்

#92
கூறோம் இனி நாம் அக் கும்பகருணனார்
பாறு ஆடு வெம் களத்துப் பட்டார் எனப் பதையா
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன
மாறு ஓர் திசை நோக்கிப் போனார் மகோதரனார்

#93
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத்
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள்

#94
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்
அந்தம்_இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா
சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள்

#95
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகவாம் அரோ

@18 அதிகாயன் வதைப் படலம்

#1
கொழுந்துவிட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே

#2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும் தழுவச் சார்ந்து அவர்
வேக வெம் சிலைத் தொழில் விலக்கி மீள்கிலீர்

#3
எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும்
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர்
தடுத்தலீர் எம்பியை தாங்ககிற்றிலீர்
கொடுத்தலீர் உம் உயிர் வீரக் கோட்டியீர்

#4
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால்
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால்

#5
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர்
தோற்று அலம்வந்து உகத் துரந்து தொல் நெடும்
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்

#6
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர்
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி
வல்லது மடிதலே என்னின் மாறுதிர்
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான்

#7
நதி காய் நெடு மானமும் நாணும் உறா
மதி காய் குடை மன்னனை வைது உரையா
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்

#8
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான்
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல்
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ

#9
வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-தம்மைத்
தளையில் கொடு தந்திலெனோ
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ

#10
காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும் சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ

#11
உம்பிக்கு உயிர் ஈறுசெய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான்

#12
கிட்டிப் பொருது அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு இரு வில்லினரைக்
கட்டித் தருவென் இது காணுதியால்

#13
சேனைக் கடலோடு இடை செல்க எனினும்
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும்
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான்
இத்திறம் உன்னி அரக்கர்_பிரான்

#14
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான்
பின்_நாள் அவ் இராமன் எனும் பெயரான்
தன் ஆருயிர் கொண்டு சமைக்குவெனால்

#15
போவாய் இதுபோது பொலம் கழலோய்
மூவாயிர கோடியரோடு முரண்
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று
ஏவாதன யாவையும் ஏவினனால்

#16
கும்பக் கொடியோனும் நிகும்பனும் வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன்
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்

#17
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம் வன்
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண்
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய்

#18
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல அடும்
கோ மத்த நெடும் கரி கொடியாடும்
போம் அத்தனை வெம் புரவிக் கடலே

#19
என்றே விடை நல்க இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு வாள்
பொன் தாழ் கவசம் புகுதா முகிலின்
நின்றான் இமையோர்கள் நெளிந்தனரால்

#20
பல்வேறு படைக்கலம் வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால்
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மாவில்
வேறு தெரிப்புறும் மேனியினான்

#21
இழை அஞ்சன மால் களிறு எண்ணில் அரி
முழை அஞ்ச முழங்கின மும்முறை நீர்
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள்
மழை அஞ்ச முழங்கின மா முரசே

#22
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடிப்
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால்
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர்

#23
அடியோடு மதக் களி யானைகளின்
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன்
தடியோடு துடங்கிய தாரைய வெண்
கொடியோடு துடங்கிய கொண்மு எலாம்

#24
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்
ஆறு ஆடின பாய் பரி யானைகளும்
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம்

#25
தேர் சென்றன செங்கதிரோனொடு சேர்
ஊர் சென்றன போல் ஒளி ஓடைகளின்
கார் சென்றன கார் நிரை சென்றன போல்
பார் சென்றில சென்றன பாய் பரியே

#26
மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால்

#27
கண்டான் அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெம் களன் ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன் வந்த சினத் திறலோன்

#28
மலை கண்டன போல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம்
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும்
தலை கண்டிலன் நின்று சலித்தனனால்

#29
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று திசைக் களிறு அன்று ஒரு திண்
கடல் அன்று இது என் எந்தை கடக் கரியான்
உடல் என்று உயிரோடும் உருத்தனனால்

#30
எல்லே இவை காணிய எய்தினனோ
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில்
செல்லேன் எனின் இவ் இடர் தீர்குவெனோ

#31
என்னா முனியா இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்த்து
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால்

#32
வா நீ மயிடன் ஒரு வல் விசையில்
போ நீ அவ் இலக்குவனில் புகல்வாய்
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால்
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்

#33
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான் என முன் சொல் வழங்குதியால்

#34
கோளுற்றவன் நெஞ்சு சுடக் குழைவான்
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால்

#35
தீது என்று அது சிந்தனை செய்திலெனால்
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ
தூது என்று இகழாது உன சொல் வலியால்
போது என்று உடனே கொடு போதுதியால்

#36
செரு ஆசையினார் புகழ் தேடுறுவார்
இருவோரையும் நீ வலி உற்று எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்
வருவோரை எலாம் வருக என்னுதியால்

#37
சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்
வந்தான் என என் எதிரே மதியோய்
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்

#38
வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல் இமையோர் எதிரே
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால்

#39
விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார்
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால்

#40
உறைதந்தன செங்கதிரோன் உருவின்
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர்
திறை தந்தன தெய்வ நிதிக் கிழவன்
முறை தந்தன தந்து முடிக்குவெனால்

#41
மாறா மத வாரிய வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன பல் பகலும்
தேறாதன செம் கண வெம் களி மா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்

#42
செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா
இம்பர் நடவாதன ஈகுவெனால்

#43
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்

#44
மற்றும் ஒரு தீது_இல் மணிப் பணி தந்து
உற்று உன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்

#45
ஏகித் தனி சென்று எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்
ஓகைப் பொருள் உண்டு என ஓதினனால்

#46
போதம் முதல் வாய்மொழியே புகல்வான்
ஏதும் அறியான் வறிது ஏகினனால்
தூதன் இவனைச் சுளியன்-மின் எனா
வேதம் முதல் நாதன் விலக்கினனால்

#47
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும்
மின் வந்த எயிற்றவன் வில்_வல உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்
மன் வந்த கருத்து என மன்னர்பிரான்

#48
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா
வில்லாளன் இளங்கிளையோன் வினவ
பல்லாயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால்

#49
உன் மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன் நாடி அவன்
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல்
பொன் மேனிய என்னொடு போதுதியால்

#50
சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன் விரைந்து
ஐயப்படல் அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி தெரித்தனெனால்

#51
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என் நேடி எனின்
தன் தாதை படும் துயர் தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்

#52
வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று
ஏனோர்களும் இவ் உரை கேண்-மின் இவன்
தானே பொருவான் அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான் அமைவான்

#53
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும்
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும்
தழுவா உடன் ஏகுதி தாழல் எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்

#54
எல்லாம் உடன் எய்திய பின் இவனே
வில்லானொடு போர்செய வேண்டும் எனா
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன்
சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால்

#55
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்
சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால்

#56
கடம் ஏய் கயிலைக் கிரி கண்_நுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை
திடமே உலகில் பல தேவரொடும்
வடமேரு எடுக்க வளர்த்தனனால்

#57
மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய
காலால் நெடு வேலை கலக்கிடுமால்

#58
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ
ஆழிக் கிரி தள்ளும் ஓர் அங்கையினால்

#59
காலங்கள் கணக்கு இற கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்-வாய்
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள்
சூலம்-கொல் எனப் பகர் சொல் உடையான்

#60
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள் புனை வாகையினான்
மிகை ஆருயிர் உண் என வீசிய வெம்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்

#61
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள்
அயிர் ஒப்பன நுண் துகள்செய்து அவர்-தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்

#62
கற்றான் மறை நூலொடு கண்_நுதல்-பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம்
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான்

#63
அறன் அல்லது நல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் பணி மற்று அணியான்
திறன் அல்லது ஓர் ஆருயிரும் சிதையான்
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான்

#64
காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்

#65
மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள்
அதி கைதவர் ஆழி அனந்தனையும்
விதி கைம்மிக முட்டிய வெம்மையினார்

#66
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள்
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா
வாரா அமர்செய்க என வந்தனனால்

#67
வல்லார் உரு ஆயிரமாய் வரினும்
நல்லார் முறை வீசி நகும் திறலார்
மல்லால் இளகாது மலைந்தனன் மால்
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்

#68
தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன் போல் ஒளிர் மேனியனை புகழோய்
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா

#69
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய்
தருவோம் நின் மனத்தது தந்தனமால்

#70
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும்
வெல்லும்படி நும்மை விளம்பும் எனக்
கொல்லும்படியால் அரி கூறுதலும்

#71
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின்
தொடையில் படுகிற்றும் எனத் துணியா
அடையச் செயகிற்றி அது ஆணை எனா
நடையில் படு நீதியா நல்குதலும்

#72
விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ்
எட்டா ஒருவன் தன் இட தொடையை
ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ்வலியால்
பட்டார் இது பட்டது பண்டு ஒருநாள்

#73
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா
நனி சாட விழுந்தனர் நாள் உலவா
பனியா மது மேதை படப் படர் மேதினி
ஆனது பூவுலகு எங்கணுமே

#74
விதியால் இவ் உகம்-தனில் மெய் வலியால்
மது ஆனவன் எம் முன் மடிந்தனனால்
கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால்

#75
என்றான் அவ் இராவணனுக்கு இளையான்
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும்
மின்தான் உமிழ் வெண் நகை வேறு செயா
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால்

#76
எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும் வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும்
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்

#77
வான் என்பது என் வையகம் என்பது என் மால்தான்
என்பது என் வேறு தனிச் சிலையோர்
யான் என்பது என் ஈசன் என் இமையோர்
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல்

#78
தெய்வப் படையும் சினமும் திறலும்
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம்
எய்தற்கு உளவோ இவன் இச் சிலையில்
கை வைப்பு அளவே இறல் காணுதியால்

#79
என் தேவியை வஞ்சனைசெய்து எழுவான்
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி நெடுந்தகையாய்

#80
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம்
மாகாயன் நெடும் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்

#81
நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு வந்தது அயர்த்தனையோ

#82
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான்
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும்
தவன் அல்லன் எனில் தனியே வலியோன்
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ

#83
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ

#84
கொல்வானும் இவன் கொடியோரை எலாம்
வெல்வானும் இவன் அடல் விண்டு என
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ
செல்வாய் என ஏவுதல் செய்தனனால்

#85
அக் காலை இலக்குவன் ஆரியனை
முக்காலும் வலம்கொடு மூதுணர்வின்
மிக்கான் அடல் வீடணன் மெய் தொடரப்
புக்கான் அவன் வந்து புகுந்த களம்

#86
சேனைக் கடல் சென்றது தென் கடல் மேல்
ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா
ஆனைக் கடல் தேர் பரி ஆள் மிடையும்
தானைக் கடலோடு தலைப்படலும்

#87
பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு
அசும்புற உருகிய உலகம் ஆர்த்து எழ
குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின்
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே

#88
தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும் ஆர்ப்பின் ஓதையும்
ஏம் உடைக் கொடும் சிலை இடிப்பும் அஞ்சித் தம்
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே

#89
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக
இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின்
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே

#90
கிட்டின கிளை நெடும் கோட்ட கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த வானரம்
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன

#91
இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அறக்
கடித்தன கவிக் குலம் கால்கள் மேற்படத்
துடித்தன குருதியில் துரக ராசியே

#92
அடைந்தன கவிக் குலம் எற்ற அற்றன
குடைந்து எறி கால் பொர பூட்கைக் குப்பைகள்
இடைந்தன முகில் குலம் இரிந்து சாய்ந்து என
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே

#93
தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
கால் படக் கை படக் கால பாசம் போல்
வால் படப் புரண்டனர் நிருதர் மற்று அவர்
வேல் படப் புரண்டனர் கவியின் வீரரே

#94
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவிக் குலம் வீச விம்மலால்
உர வரும் கான் எனப் பொலிந்தது உம்பரே

#95
தட வரை கவிக் குலத் தலைவர் தாங்கின
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி மேல்
விடவிட விசும்பிடை மிடைந்து வீழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே

#96
இழுக்கினர் அடிகளின் இங்குமங்குமா
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை உதிர_ஆற்றினே

#97
மிடல் உடைக் கவிக் குலம் குருதி வெள்ள நீர்
இடையிடை நீந்தின இயைந்த யானையின்
திடரிடைச் சென்று அவை ஒழுக்கச் சேர்ந்தன
கடலிடைப் புக்கன கரையும் காண்கில

#98
கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம் போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே

#99
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது தகைப் பெரும் கவியின் தானையே

#100
அத்துணை இலக்குவன் அஞ்சல்அஞ்சல் என்று
எத்துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன்
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை
மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான்

#101
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும்
கால் மறைந்து ஒளிப்பு_இலாக் கடையின் கண் அகல்
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அவ் ஒலி

#102
துரந்தன சுடு சரம் துரந்த தோன்றல
கரந்தன நிருதர்-தம் கரை_இல் யாக்கையின்
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற
பரந்தன குருதி அப் பள்ள வெள்ளத்தின்

#103
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம்
வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள்

#104
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி
கல் இடை அறுத்து மாக் கடிந்து தேர் அழீஇக்
கொல் இயல் யானையைக் கொல்லும் கூற்றினே

#105
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின
முற்று அரு முப்பகல் திங்கள் வெண் முளை
உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன

#106
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன
துண்ட வெண் பிறைத் துணை கவ்வி தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே

#107
கூர் மருப்பு இணையன குறைந்த கையன
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன
போர்முகக் குருதியின் புணரி புக்கன
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன

#108
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற
கண் அகன் தேர்க் குலம் மறிந்த காட்சிய
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன

#109
அடக் கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு_அரும் வினை அறச் சிந்தி மெய் உயிர்
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன

#110
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல்
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ

#111
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும்
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும்
கானினும் மலையினும் பரந்த கால் புனல்
வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே

#112
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன
மேக்கு உயர் அங்குசக் கைய வெம் கரி
நூக்குவ கணிப்பு_இல அரக்கர் நோன் பிணம்

#113
கோள் உடைக் கணை படப் புரவி கூத்தன
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில
ஆள் உடைக் குறைத்தலை அதிர ஆடுவ
வாள் உடைத் தடக் கைய வாசி மேலன

#114
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள் குறைத்தலைக் குழாம்
கை வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனைப் பல இரத மேலன

#115
தாதையைத் தம்முனைத் தம்பியைத் தனிக்
காதலை பேரனை மருகனைக் களத்து
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர்
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார்

#116
தூண்டு_அரும் கணை படத் துமிந்து துள்ளிய
தீண்ட_அரு நெடும் தலை தழுவிச் சேர்ந்தன
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ

#117
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே

#118
விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவைத்
துளக்குவார் உடல் பொறை துணிந்து துள்ளுவார்
இளக்குவார் அமரர் தம் சிரத்தை ஏன் முதுகு
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால்

#119
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான்
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான்
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன்

#120
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த
பரந்தன விசும்பிடை ஒடுங்க பண்டுடை
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும்
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான்

#121
அண்ணல்-தன் வடிக் கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே

#122
காலனும் குலிசனும் காலசங்கனும்
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார்

#123
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன_அரும் படைக்கலம் துணித்து தூவினன்
நல் நெடும் தலைகளைத் துணித்து நால் வகைப்
பல் நெடும் தானையைப் பாற நூறினான்

#124
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம்
தூண்டினர் மருங்கு உறச் சுற்றினார் தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார்

#125
போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்
தாக்கினார் திசை-தொறும் தடக் கை மால் வரை
நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு
ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார்

#126
எறிந்தன எய்தன எய்தி ஒன்றோடொன்று
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால்
மறைந்தன உலகொடு திசையும் வானமும்

#127
அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்பு உடைத் தடக் கைகள் துணித்துச் சுற்றிய
முப்புடை மதமலைக் குலத்தை முட்டினான்
எப்புடை மருங்கினும் எரியும் வாளியான்

#128
குன்று அன மத கரி கொம்பொடு கரம் அற
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை

#129
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட
இரு தொடை புரசையொடு இறுபவர் எறி படை
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள்
பொருது உடைவன மத மழையன புகர் மலை

#130
பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர்
மருமமும் அழிபட நுழைவன வடி கணை
உருமினும் வலியன உருள்வன திசைதிசை
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன

#131
இறுவன கொடியவை எரிவன இடையிடை
துறுவன சுடு கணை துணிவன மத கரி
அறுவன அவைஅவை கடவினர் தடி தலை
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள்

#132
மிடலொடு விடு கணை_மழையினும் மிகை உள
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு
கடலொடு பொருதது கரியொடு கரி என

#133
மேலவர் படுதலின் விடும் முறை இல மிடல்
ஆலமும் அசனியும் அனையன அடு கரி
மால் உறு களியன மறுகின மதம் மழை
போல்வன தமதம எதிரெதிர் பொருவன

#134
கால் சில துணிவன கரம் அறுவன கதழ்
வால் சில துணிவன வயிறுகள் வெளி பட
நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழை என

#135
முட்டின முட்டு_அற முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன்
விட்டனவிட்டன விடு கணை படு-தொறும்
பட்டன பட்டன படர் பணை குவிவன

#136
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ்
தறுகணர் தகை_அறு நிலையினர் சலம் உறு
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என

#137
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர்
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை
வில்லியை இனிது உற விடு கணை_மழையினர்
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர்

#138
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன்
இந்திரதனு என எழு சிலை குனிவுழி
தந்தியின் நெடு மழை சிதறின தரையின

#139
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின்
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின்
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம்
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா

#140
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதிக் கடை உறு கால்
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம்
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம்
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா

#141
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ
பறை அற்றம்_இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு
இறை அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன்
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா

#142
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார்
அதிரத் தனி அதிர்கைக் கரி அளவற்றன உளவா
எதிர்பட்டு அனல் பொழியக் கிரி இடறித் திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகிக் கடல் நடு உற்றவும் உளவால்

#143
கண்ணின்-தலை அயில் வெம் கணை பட நின்றன காணா
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இன மா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை போல்
உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால்

#144
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின்
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல்
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார்

#145
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம்
போரின் தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும்
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம்
காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா

#146
நூறாயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம்
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான்

#147
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன்
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு
அருகு ஓடுவ வர உந்தினர் அசனிப் படி கணை கால்
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே

#148
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய்
அலகற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும்
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால்

#149
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும்
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும்
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே

#150
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால்
புடை கொண்டு எறி குருதிக் கடல் புணர்கின்றன பொறி வெம்
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால்

#151
ஒற்றைச் சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய்
வெற்றிக் கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில் போல்
வற்றக் கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும்
கொற்றக் கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான்

#152
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும்
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும்
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால்

#153
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ
கோல் ஏறின உரும்_ஏறுகள் குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய

#154
இவ் வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார்
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையைச்
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான்
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் எனத் தகையான்

#155
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான்
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி போல் வரு திறலான்
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார்
போர்த் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான்

#156
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால்
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனாப்
பொரும் காலையில் மலை மேல் விழும் உரும்_ஏறு எனப் புடைத்தான்

#157
மிதியால் பல விசையால் பல மிடலால் பல இடறும்
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின்
நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும்
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான்

#158
பறித்தான் சில பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில பணை போன்று
இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால்
கறித்தான் சில கவர்ந்தான் சில கரத்தால் சில பிடித்தான்
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான்

#159
வாரிக் குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும்
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின்
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும்

#160
வாலால் வர வளைக்கும் நெடு மலைப்பாம்பு என வளையா
மேல் ஆளொடு பிசையும் முழு மலை மேல் செல விலக்கும்
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும்
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு எனத் தொலைக்கும்

#161
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறாயிரம் மாறா
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய
தொய்யல் படர் அழுவக் கொழும் சேறாய் உகத் துகைப்பான்

#162
வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன்
நூறாயிரம் படுத்தான் இது நுவல் காலையின் இளையோன்
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசைக் காவலர் இரிந்தார்

#163
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானைப் பிணம் எற்ற
நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால்
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான்

#164
உதிரக் கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய்
எதிரக் கடு நெடும் போர்க்களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான்
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான்
அதிரக் கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான்

#165
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான்
இப்போது இவன் உயிர் போம் என உரும்_ஏறு என எறிந்தான்
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால்
துப்போ எனத் துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான்

#166
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானரக் குலத்தோர்க்கு
ஏறு ஆங்கு அதும் எறியாத முன் முறியாய் உக எய்தான்
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்
பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து அவன் நெடு வில்லினைப் பறித்தான்

#167
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான்
மறித்து ஆங்கு ஓர் சுடர்த் தோமரம் வாங்கா மிசை ஓங்கா
செறித்தான் அவன் இடத் தோள் மிசை இமையோர்களும் திகைத்தார்

#168
சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் எனச் சுளித்தான்
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும்_ஏறு என ஆர்த்தான்
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான்
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார்

#169
சூலப் படை தொடுவான்-தனை இமையாத முன் தொடர்ந்தான்
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான்
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின்
மூலத்திடைப் புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான்

#170
கண்டான் எதிர் அதிகாயனும் கனலாம் எனக் கனன்றான்
புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான்
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா
திண் தேரினைக் கடிது ஏவு எனச் சென்றான் அவன் நின்றான்

#171
அன்னான் வரும் அளவின்-தலை நிலைநின்றன அனிகம்
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார்
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான்
சொன்னான் இவை அதிகாயனும் வடமேருவைத் துணிப்பன்

#172
தேய்த்தாய் ஒரு தனி எம்பியைத் தலத்தோடு ஒரு திறத்தால்
போய்த் தாவினை நெடு மாக் கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய்
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன்
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய்

#173
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை_மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன்

#174
பிழையாது இது பிழையாது எனப் பெரும் கைத்தலம் பிசையா
மழையாம் எனச் சிரித்தான் வடமலையாம் எனும் நிலையான்
முழை வாள் அரி_அனையானையும் எனையும் மிக முனிவாய்
அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான்

#175
ஆம்ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான்
கோமான் தனிப் பெரும் தூதனும் எதிரே செருக் கொடுத்தான்
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் எனக் கழறா
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான்

#176
தேர் மேல் செலக் குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால்
கார் மேல் துயில் மலை போலியைக் கரத்தால் பிடித்து எடுத்தான்
பார் மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்படப் படுத்தான்
போர் மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் எனப் போனான்

#177
இமையிடையாகச் சென்றான் இகல் அதிகாயன் நின்றான்
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான்
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான்

#178
பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான் புறத்து நின்று
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம்
ஆணிப்பொன் ஆனான்-தன்னைப் பின்னும் கண்டு அறிவென் என்னா
தூணிப் பொன் புறத்தான் திண் தேர் இளவல் மேல் தூண்டச் சொன்னான்

#179
தேர் ஒலி கடலைச் சீற சிலை ஒலி மழையைச் சீற
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான்
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட

#180
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி_மைந்தன்
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால்
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்கப்
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான்

#181
ஆம் என அமலன்_தம்பி அங்கதன் அலங்கல் தோள் மேல்
தாமரைச் சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற
கோமகன் ஆற்றல் நோக்கிக் குளிர்கின்ற மனத்தர் ஆகிப்
பூ_மழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர் புலவர் எல்லாம்

#182
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர்
போயின திசைகள் எங்கும் கறங்கு எனச் சாரி போமால்
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும்
தீ எழ உவரி நீரைக் கலக்கினான் சிறுவன் அம்மா

#183
அத் தொழில் நோக்கி ஆங்கு வானரத்தலைவர் ஆர்த்தார்
இத் தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆகக் களிற்றினும் புரவி மேலும்
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி

#184
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரித் திண் தேர்
முழங்கின முகரப் பாய்மா முழங்கின முழு வெண் சங்கம்
முழங்கின தனுவின் ஓதை முழங்கின கழலும் தாரும்
முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை

#185
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலினக் காலப்
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம்பொன் திண் தேர்
எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம்
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி

#186
மன்னவன் தம்பி மற்று அவ் இராவணன் மகனை நோக்கி
என் உனக்கு இச்சை நின்ற எறி படைச் சேனை எல்லாம்
சின்னபின்னங்கள்பட்டால் பொருதியோ திரிந்து நீயே
நல் நெடும் செருச் செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான்

#187
யாவரும் பொருவர்_அல்லர் எதிர்ந்துள யானும் நீயும்
தேவரும் பிறரும் காணச் செருவது செய்வ எல்லாம்
காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும் வேறே
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன்

#188
உமையனே காக்க மற்று அங்கு உமை_ஒரு_கூறன் காக்க
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி
அமை உருக்கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான்

#189
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்கத் தக்கேன்
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான்

#190
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான்
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான்

#191
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவைப் பிளக்கற்பால
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்துச் சிந்தி
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான்

#192
எய்தனன் எய்த எல்லாம் எரி முகப் பகழியாலே
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம்
செய்தனன் துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை வெம் கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத

#193
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்றத்
தேறலாம் துணையும் தெய்வச் சிலை நெடும் தேரின் ஊன்றி
ஆறினான் அது காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான்

#194
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கிலாவாறும் கண்டான்
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி_மாரி மாரியின் மும்மை தூர்த்தான்

#195
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும்
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன்

#196
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போலக்
குறைந்தன சுடரின் மும்மைக் கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை

#197
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார்

#198
அங்கதன் நெற்றி மேலும் தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன் மேல் ஏவி மேகச்
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான்

#199
வாலி_சேய் மேனி மேலும் மழை பொரு குருதி வாரி
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி போல் ஒழுகக் கண்டான்
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து
மேலவன் சிரத்தைச் சிந்தி வில்லையும் துணித்தான் வீரன்

#200
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி
ஏற்ற வல் அரக்கன்-தன் மேல் எரி முகக் கடவுள் என்பான்
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா
வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான்

#201
பொரு படை இரண்டும் தம்மில் பொருதன பொருதலோடும்
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான்
சொரி கணை_மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான்

#202
பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும்
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான்
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை எனப் பொழியும் வில்லான்

#203
கோல் முகந்து அள்ளிஅள்ளி கொடும் சிலை நாணில் கோத்து
கால் முகம் குழைய வாங்கிச் சொரிகின்ற காளை வீரன்-பால்
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை
நான்முகன் படையால் அன்றிச் சாகிலன் நம்ப என்றான்

#204
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு அவ் வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரியக் கண்டார்

#205
பூ_மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார்
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளித்
தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது குரக்குச் சேனை
கோமகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான்

#206
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன்
அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன்
மந்திரசித்தி அன்ன சிலைத் தொழில் வலி இது ஆயின்
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான்

#207
ஏந்து எழில் ஆகத்து எம் முன் இறந்தனன் என்று நீ நின்
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான்

#208
தேரிடை நின்று கண்கள் தீ உகச் சீற்றம் பொங்கப்
பாரிடைக் கிழியப் பாய்ந்து பகலிடைப் பரிதி என்பான்
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான்

#209
வீசின மரமும் கல்லும் விலங்கலும் வீற்று வீற்றா
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர் மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனைப் பார்த்தான்

#210
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத் தன் கை
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான்

#211
அவ்விடை வெறுங்கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால்
இவ்விடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர்
வெவ் விடம் என்னப் பொங்கி அவனிடை எறிந்த வீச்சுத்
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவிக்கொண்டான்

#212
அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்
இத் தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார்
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தடக் கை கொண்டான்
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான்

#213
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவைத் தேக்கி
ஊர்மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமைத் திண்பான்
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்தப் பூட்கை மேலான்

#214
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம்
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம்
சீற்றம்தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை

#215
வேகமாக் கவிகள் வீசும் வெற்பு இனம் விழுவ மேன்மேல்
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால்

#216
காலிடைப்பட்டும் மானக் கையிடைப்பட்டும் கால
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்குச் சேனை

#217
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான்
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர

#218
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே
ஆறு_இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான்
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில்
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி

#219
பின் நெடும் குன்றம் தேடிப் பெயர்குவான் பெயரா வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி
தன் நெடு மகனைப் பற்றிப் பிடித்தது தடக் கை நீட்டி

#220
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன
கொடும் படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான்
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்றுநன்று என்ன நக்கார்

#221
தறைத்-தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம்-தன்னில்
நிறைத் தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்னக்
குறைத் தலை வேழம் வீழ விசும்பின் மேற்கொண்டு நின்றான்
பிறைத் தலை வயிர வாளி மழை எனப் பெய்யும் கையான்

#222
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி
வீங்கிய விசையின் நீலன் அரக்கன் மேல் செல்ல விட்டான்
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால்
ஓங்கல் போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான்

#223
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன
கை உடை மலை ஒன்று ஏறிக் காற்று எனக் கடாவி வந்தான்
வெய்யவன் அவனைத்தானும் மேற்கொளா வில்லினோடு
மொய் பெரும் களத்தின் இட்டான் மும்மதக் களிற்றின் முன்னர்

#224
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை
கட்டு அமை வயிரக் கோட்டால் களம் பட வீழ்த்திக் காலால்
எட்டி வன் தடக் கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீசப்
பட்டிலன் தானே தன் போர்க் கரியினைக் படுத்து வீழ்த்தான்

#225
தன் கரி தானே கொன்று தடக் கையால் படுத்து வீழ்த்தும்
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கிப்
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான்
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான்

#226
உன்மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தைக் கண்டும் மாண்ட மத மத்தமலையைப் பார்த்தும்
சன்மத்தின் தன்மையானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான்

#227
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினைப் பழித்த தோளான்
வெய்யன் என்று உரைக்கச் சாலத் திண்ணியான் வில்லின் செல்வன்
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழப் பிறங்கு பல் பேய்
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்

#228
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்சப்
பார்க்கின்றான் பொன்றினாரைப் பழிக்கின்றான் பகழி_மாரி
தூர்க்கின்றான் குரங்குச் சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான்

#229
சென்றவன்-தன்னை நோக்கிச் சிரித்து நீ சிறியை உன்னை
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன்தானே
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று
கொன்றவன்-தன்னைக் கொன்றே குரங்கின் மேல் கொதிப்பென் என்றான்

#230
வாய் கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கைப்
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கைப் பேணி
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான்

#231
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன்
கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான்

#232
அசும்பு உடைக் குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அத்
தசும்பு உடைக் கொடும் தேர்-தன்னைத் தடக் கையால் எடுத்து வீசப்
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி
விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல் நான்ற மெய்யான்

#233
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம்
நீரிடை அழுந்திப் பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடைக் குதியா முன்னம் இடபனும் பதக நீ போய்
ஆரிடைப் புகுதி என்னா அந்தரத்து ஆர்த்துச் சென்றான்

#234
அல்லினைத் தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னைக்
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை
பல் உடைப் பில வாயூடு பசும் பெரும் குருதி பாய
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல

#235
குரங்கினுக்கு அரசும் வென்றிக் கும்பனும் குறித்த வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார்
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார்
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர்

#236
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரித்
துடைத்தார் விழியில் தழல்_மாரி சொரிந்தார்
உடைத் தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவிப்
புடைத்தார் பொருகின்றனர் கோளரி போல்வார்

#237
தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான்
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான்
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான்

#238
பொன்றப் பொருவேன் இனி என்று பொறாதான்
ஒன்றப் புகுகின்றது ஓர் காலம் உணர்ந்தான்
நின்று அப் பெரியோன் நினையாத முன் நீலன்
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்

#239
அத் தண்டு கொடுத்தது கைக் கொடு அடைந்தான்
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார்

#240
அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான்
முடியும் இவன் என்பது ஓர் முன்னம் வெகுண்டான்
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான்

#241
தோளில் புடையுண்டு அயர் சூரியன்_மைந்தன்
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான்
வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டு
ஆளித் தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான்

#242
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார்
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும்
பொடியாயின தண்டு பொருந்தினர் புக்கார்

#243
மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்
பத்துத் திசையும் செவிடு எய்தின பல் கால்
தத்தித் தழுவி திரள் தோள் கொடு தள்ளி
குத்தித் தனிக் குத்து என மார்பு கொடுத்தார்

#244
நிலையில் சுடரோன்_மகன் வன் கை நெருங்க
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம்

#245
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான்
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன்
கை வாய் வழி சென்று அவன் ஆருயிர் கக்கப்
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்

#246
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன்
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான்
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார்

#247
சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான்
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர்
தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்
நீலக் கிரி மேல் நிமிர் பொன் கிரி நேர்வான்

#248
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்

#249
தடை ஏதும் இல் குலம் முனிந்து சலத்தால்
விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கைப்
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான்

#250
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார் மிகு தானை அரக்கர் குறைந்தார்

#251
ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார்
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்
பாடித்தலை உற்றவர் எண்ணிலர் பட்டார்

#252
தண்ணீர் தருக என்றனர் தாவுற ஓடி
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார்
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால்
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார்

#253
விண் மேல் நெடிது ஓடினர் ஆருயிர் விட்டார்
மண் மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க
புண் மேல் உடை மேனியினார் திசை போனார்

#254
அறியும்மவர்-தங்களை ஐய இவ் அம்பைப்
பறியும் என வந்து பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண்ணிலர் தம் மனை பெற்றார்
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார்

#255
பரி பட்டு விழ சிலர் நின்று பதைத்தார்
கரி பட்டு உருள சிலர் கால் கொடு சென்றார்
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்
எரி பட்ட மலைக்-கண் இருந்தவர் என்ன

#256
மண்ணின்-தலை வானர மேனியர் வந்தார்
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார்
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார்

#257
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார்
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார் சிலர் சிலர் பருகிப் பட்டார்

#258
மக்களைச் சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி தம்மைக் கொண்டு ஓடிப்போனார்
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால்
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார்

#259
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்திப்
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடிப்போன
துன்ன_அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார்

#260
நோக்கிய இலங்கை_வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான்
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வராய
கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார்

#261
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம்
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கொன்று
தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித்தள்ளி
வாங்கிய கடல் போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான்

#262
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றிப்
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை
நசையிடைக் கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும்

#263
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும்
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணிப்
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும்

#264
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார்
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி
இரியலிட்டு அலறி ஓயாப் பூசலிட்டு ஏங்கி வந்தாள்

#265
மலைக் குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலைக் குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள்
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்

#266
வீழ்ந்தனள் அரக்கன் தாள் மேல் மென்மைத் தோள் நிலத்தை மேவ
போழ்ந்தனள் பெரும் பாம்புப் என்ன புரண்டனள் பொருமிப் பொங்கிச்
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழக் கண்டும் அறிந்திலாதாள்

#267
மாட்டாயோ இக் காலம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியைக் காட்டாயோ

#268
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே

#269
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறத்துள்ளார்கள் எல்லாரும் வீடினார்
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ

#270
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்ணிறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ
பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ

#271
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐய

#272
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து
கன்று படப் பதைத்த தாய் போல் கவல்வாளை
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார்

#273
தானை நகரத்துத் தளரத் தலைமயங்கிப்
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார்

#274
தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை

@19 நாகபாசப் படலம்

#1
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ
தழுவித் தலைப்பெய்து தம் கை கொடு மார்பின் எற்றி
அழும் இத் தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான்
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான்

#2
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடுபட்டான்-கொல்
அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான்

#3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார்
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான்

#4
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான்

#5
சொல்லாத முன்னம் சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான்
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான்
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன்

#6
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் உரைத்தான்

#7
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
என்றானும் எனைச் செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்

#8
அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை
விக்கல் பொரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை புந்தியில்லாய்
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ

#9
என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான்
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன்

#10
வெம் கண் நெடு வானரத் தானையை வீற்றுவீற்றாய்ப்
பங்கம் உற நூறி இலக்குவனைப் படேனேல்
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை

#11
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல்
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான்

#12
பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும்
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்
சோம்பித் துறப்பென் இனிச் சோறும் உவந்து வாழேன்

#13
மருந்தே நிகர் எம்பி-தன் ஆருயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்திப்
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து பாரின்
இருந்தேன் எனின் நான் அவ் இராவணி அல்லென் என்றான்

#14
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி இவ் இன்னலின் சிந்தைசெய்தேன்

#15
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும்
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன் வானை வென்றான்

#16
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்க்-கண் வந்தான்
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த
உயர் வெம் சிலை அச் சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி
துயரின்-தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால்

#17
தோளில் கணைப் புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும்
மாளப் புனல் வற்றினும் வாளி அறாத வன்கண்
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ

#18
பல்லாயிர கோடி படைக்கலம் பண்டு தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த மேரு
வில்லாளன் கொடுத்த விரிஞ்சன் அளித்த வெம்மை
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான்

#19
நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும்
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர்

#20
பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்
மின் சென்று அறியா மழு_வாளன் விடைக்கும் மேல்_நாள்
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும்
முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும்

#21
ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன்-தன்
சாயாப் பெரும் சாய் கெடத் தாம்புகளால் தடம் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா

#22
செதுகைப் பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது
கைத் திசையானையை ஓட்டியது என்னலாமே
மதுகைத் தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா

#23
அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று
எத்தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான்

#24
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்னச்
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்

#25
தூமக் கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க
தாமக் குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம
நாமக் கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப

#26
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத
தார் ஆர் புரவிக் கடல் பின் செல தானை வீரப்
பேர் ஆழி முகம் செலச் சென்றனன் பேர்ச்சியில்லான்

#27
நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான்

#28
யார் இவன் வருபவன் இயம்புவாய் என
வீர வெம் தொழிலினான் வினவ வீடணன்
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான்

#29
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான்
கண் அகன் பெரும் படைத்தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால்

#30
மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை_சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும்
போர்செய்த குருதியால் புகழின் பூணினாய்

#31
பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால்

#32
இனி அவை மறையுமோ இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு
அனுமனைப் பிணித்துளன் ஆன போது இவன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ

#33
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும்
நன்று என மொழிதலும் நணுகினான் அரோ
வன் திறல் மாருதி இலங்கைக் கோமகன்
சென்றனன் இளவல் மேல் என்னும் சிந்தையான்

#34
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே

#35
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்
செங்கதிரோன்_மகன் முன்பு சென்றனன்
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே

#36
இரு திரைப் பெரும் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன மனத்தினால் சினம்
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே

#37
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே

#38
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளை புரந்தராதியர்

#39
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்
முற்றுறு கடையுகத்து இடியின் மும்மடி
பெற்றன பிறந்தன சிலையின் பேரொலி

#40
கல் பட மரம் பட கால வேல் பட
வில் படு கணை பட வீழும் வீரர்-தம்
எல் படும் உடல் பட இரண்டு சேனையும்
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால்

#41
எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ

#42
வெட்டிய தலையன நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய குரங்கின் மொய் உடல்
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ

#43
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம்

#44
வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
தாள்களைத் துணித்தனர் தலையைத் தள்ளினர்
தோள்களைத் துணித்தனர் உடலைத் துண்ட வன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார்

#45
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின உடலைச் சிந்தின
கரங்களை கழல்களை ஒடியக் காதின
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே

#46
சுடர்த்-தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன
உடர்த்-தலை வைர வேல் உருவ உற்றவர்
மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன

#47
அடர்ந்தன கிரிகளை அசனி_ஏறு எனத்
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள்
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசித் தழல் கரடி காதுவ

#48
கொலை மதக் கரியன குதிரை மேலன
வல மணித் தேரன ஆளின் மேலன
சிலைகளின் குடுமிய சிரத்தின் மேலன
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ

#49
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு இனப் பிணத்தின் குப்பை
மண்டு வெம் குருதி ஆறு அ மறி கடல் மடுத்த மாதோ

#50
பனி வென்ற பதாகை என்றும் பல் உளைப் பரிமா என்றும்
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும்
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை

#51
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா வண்ணம் தன் உளே தழுவி கூற்றம்
எங்கு உள உயிர் என்று எண்ணி இணைக் கையால் கிளைத்தது என்ப
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை

#52
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கித் தம்மில்
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார்

#53
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம்
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளிப்
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார்
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர்

#54
சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு_நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும்
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாசக் கையான்

#55
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால்
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில்
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கதக் குமுதன் கொன்றான்

#56
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரியச் செப்பும்
குறி உடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே கொள்ளா
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத

#57
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மானப்
பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர் பயம் இன்று இன்றே
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்லச் சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார்

#58
பொரும் குலப் புரவியான திரைகளும் கலம் பொன் தேரும்
இரும் களி யானையான மகரமும் இரியல்போக
நெருங்கிய படைகளான மீன் குலம் நெரிந்து சிந்தக்
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கிப் புக்கான்

#59
மயிந்தனும் துமிந்தன்தானும் மழைக் குலம் கிழித்து வானத்து
உயர்ந்து எழும் எருவை_வேந்தர் உடன்பிறந்தவரை ஒத்தார்
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான் கவயன் காலின்
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான்

#60
பெரும் படைத்தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை
வரம்பு_இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும்
சரிந்தது நிருதர் தானை தாக்கினன் அரக்கன் தானே

#61
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலித்
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல்_வலோன்
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான்

#62
சிங்க_ஏறு கடல் போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா
அங்கதாதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான்

#63
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர்த் தடம் கல் வரை தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த போல்
வெற்றி வெம் கணை படப்பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய்
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால்

#64
சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்றுசென்று உற நெருக்கலால்
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல ஊடு சென்ற பல வாளியே

#65
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய்
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல்
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசிவீசி உடன் வீழுமால்

#66
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள் போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால்

#67
விழிக்குமேல் விழிய நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக மேனிய
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின் மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே

#68
மொய் எடுத்த கணை_மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்
எய்விடத்து எறியும் நாணின் ஓசை அலது யாதும் ஒன்று செவியுற்றிலார்
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால்
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு தேவர்கள் கலங்கினார்

#69
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அக்
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய்
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான்

#70
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால்
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார்

#71
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மராமரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு வலி நன்றுநன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன்
நெற்றியின்-தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான்
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான்

#72
அக் கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு போல் உறா
இக் கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான்
உக்கது அக் கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய்

#73
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய்
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான்

#74
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம்

#75
என்னொடே பொருதியோ அது அன்று எனின் இலக்குவப் பெயரின் எம்பிரான்-தன்னொடே
பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான்
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொருப் படா உயர் புயத்தினான்

#76
எங்கு நின்றனன் இலக்குவப் பெயர் அவ் ஏழை எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும்
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே

#77
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர்
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால்
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச் சொலும்
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன்

#78
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை கொடு ஏவினான்
குன்று நின்று அனைய வீர மாருதி-தன் மேனி மேல் அவை குழுக்களாய்ச்
சென்றுசென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான்

#79
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள்
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல்
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால்

#80
செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல விட்ட குன்று திசையானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால்
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால்

#81
விலங்கல் மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்
சலம் கை மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்
வலம்கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான்

#82
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடகக்
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான்
மன்றல் நாறு தட மேனி மேல் உதிர_வாரி சோர வரும் மாருதி
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான்

#83
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தடக் கையின் இடந்து நேர்
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான்

#84
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மும்மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய்
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான்

#85
மேருமேரு என அல்லஅல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம்
மார்பின் மேலும் உயர் தோளின் மேலும் உற வாலி_காதலன் வழங்கினான்
சேருமே அவை தனுக் கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும்
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா வகை நுறுக்கினான்

#86
நெற்றி மேலும் உயர் தோளின் மேலும் நெடு மார்பின் மேலும் நிமிர் தாளினும்
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புகப்புக
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக
வற்றி ஓடு உதிர_வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான்

#87
மற்றை வீரர்கள்-தம் மார்பின் மேலும் உயர் தோளின் மேலும் மழை மாரி போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார்
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அப்
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான்

#88
பிழைத்தது கொள்கை போத பெரும் படைத்தலைவர் யாரும்
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே
அழைத்து இவன்-தன்னை யானே ஆருயிர் கொளப்படாதே
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்னச் சொன்னான்

#89
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடித் தேவர்
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால்
உய் திறன் உண்டோ மற்று இவ் உலகினுக்கு உயிரோடு என்றான்

#90
என்பது சொல்லக் கேட்ட இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன்-தன்
பெரும் தம்பி என்றான் ஆம் எனச் சாரன் சொன்னான்

#91
தீயவன் இளவல்-தன் மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கதத் தலைவர் எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய் நண்ணினை நாங்கள் காணப்
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்துப் புக்கார்

#92
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடித் திண் தேரும்
ஆடல் மாக் களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி

#93
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்னப்
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர்

#94
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில்
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகைக் காட்டைச்
சுட்டன துரக ராசி துணித்தன பனைக் கைம்மாவை
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா

#95
உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர்
கலக்குறு கண்ணர் ஆகிக் கடையுறக் காணல் ஆற்றார்
விலக்க_அரும் பகழி_மாரி விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார்

#96
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த
ஆளியின் துப்பின் வீரர் பொருகளத்து ஆர்த்த ஆழித்
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணைத் தொகையும் அம்மா

#97
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றிச்
சிறையன என்ன நோக்கித் தேவரும் திகைப்பத் தேற்றித்
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அறத் துவன்றி வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ

#98
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத

#99
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார்
மையல் தார்க் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார்
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார்

#100
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றித் தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளித்
தெற்றின புருவத்தோன் தன் மனம் எனச் செல்லும் தேரான்
உற்றனன் இளையகோவை அனுமனும் உடன் வந்து உற்றான்

#101
தோளின் மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான்
ஆளி போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார்
காளியே அனைய காலன் கொலை அன கனலின் வெய்ய
வாளி மேல் வாளி தூர்த்தார் மழையின் மேல் மழை வந்து அன்னார்

#102
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல்
பொடித்த இவ் உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி

#103
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத
வெம் பொறி கதுவ விண்ணில் வெந்தன கரிந்து வீழ்ந்த
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த வேலைக் கலம் எனக் கலங்கிற்று அண்டம்

#104
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும்
எரி கணைப் படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை
தெரிகிலர் செவிடு செல்லக் கிழிந்தன திசைகள் எல்லாம்

#105
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார்
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும்

#106
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம்
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ

#107
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான்
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன்
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து அரக்கன் எய்தான்
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான் அண்ணல்

#108
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான் கொண்டல்
மீட்டு ஒரு கோடி கோடி வெம் சினத்து அரக்கன் விட்டான்
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன்

#109
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான்

#110
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான்
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான்
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால்
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான்

#111
தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் தடுத்து வீழ்த்தான் தாமரைக்கண்ணன் தம்பி

#112
வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்
வச்சிரப் பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான்
முச்சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்
முச்சிரப் பகழி கோடி தொடுத்து அவை தடுத்தான் முன்பன்

#113
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான்

#114
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும்
மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை
பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம்
கைம்மிகக் கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர்

#115
வீழியின் கனி போல் மேனி கிழிபட அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள் மேல் ஆயிரம் பகழி தூவி
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ்_இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்

#116
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர்
பின் கொண்டார் இளையகோவைப் பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும்
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி போல் குருதி கண்டார்
வில் கொண்டான் இவனே என்னா வெருக் கொண்டார் முனிவர் எல்லாம்

#117
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலைக் கை வாளி
நூறுநூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறுவேறு இயற்றி வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி
ஆறுநூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான்

#118
காள மேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி
தோளின் மேல் மார்பின் மேலும் சுடர் விடு கவசம் சூழ
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி

#119
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மாப் புரண்ட போதும்
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும்
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான்

#120
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்பார்ப் பேசுக பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான்

#121
வாயிடை நெருப்புக் கால உடல் நெடும் குருதி வார
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான்

#122
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர்
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலைக் கணை
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான்

#123
அத் திறத்தினில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான்

#124
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற_அரும்
காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்
தீயவன் பெரும் சேவகன் சென்னி மேல்
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான்

#125
நெற்றி மேல் ஒரு நூறு நெடும் கணை
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான்

#126
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின்
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான்

#127
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான்

#128
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்
தூயவன் சுடர்த் தோள் இணை மேல் சுடர்
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான்

#129
ஏறிஏறி இழிந்தது அல்லால் இகல்
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும்
ஆறு கோடி பகழியின் ஐ_இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான்

#130
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர்
வீசிவீசி வணங்கினர் விண்ணவர்
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு
தூசு வீசினர் நல் நெறி துன்னினார்

#131
அக் கணத்தின் ஓர் ஆயிரமாயிரம்
மிக்க வெம் கண் அரக்கர் அவ் வீரனோடு
ஒக்க வந்துற்று ஒருவழி நண்ணினார்
புக்கு முந்தினர் போரிடைப் பொன்றுவான்

#132
தேரர் தேரின் இவுளியர் செம் முகக்
காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார்

#133
பார்த்தபார்த்த திசை-தொறும் பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓதையும் அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும் விண்ணினைத் தூர்த்தவால்

#134
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால்

#135
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர்
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான்
சிந்தினன் சர_மாரி திசைதிசை
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான்

#136
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
எற்றுகின்றன எய்த எறிந்தன
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை
ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால்

#137
குடர் கிடந்தன பாம்பு என கோள் மதக்
திடர் கிடந்தன சிந்தின தேர்த் திரள்
படர் கிடந்தன பல் படைக் கையினர்
கடர் கிடந்தன போன்ற களத்தினே

#138
குண்டலங்களும் ஆரமும் கோவையும்
கண்டநாணும் கழலும் கவசமும்
சண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால்

#139
அரக்கன்_மைந்தனை ஆரியன் அம்பினால்
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர்
சிரக் கொடும் குவைக் குன்று திரட்டினான்
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே

#140
சுற்றும் வால் கொடு தூவும் துவைக்கும் விட்டு
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர்
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே

#141
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால்
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே

#142
மாவும் யானையும் வாள் உடைத் தானையும்
பூவும் நீரும் புனை தளிரும் என
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால்
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே

#143
உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை
சரதம் ஆகத் தரை படச் சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே

#144
அவ் இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என
எவ்விடத்தினும் வீழ்ந்த இனத்-தலைத்
தெவ் அடங்கும் அவ் வலியவர் தேறினார்

#145
தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார்
மாறுமாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்

#146
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட உற்ற பொறுத்தன போவன
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம்

#147
வாலி_மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்
காலின் வந்த அரக்கனை கா இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான்

#148
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம் எனத் தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடைச் சென்றதால்

#149
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள்
தந்தை_தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால்

#150
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அக் கணத்து
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்
கழிந்து போகலை நில் என கைக் கணை
பொழிந்து சென்றனன் தீ எனப் பொங்கினான்

#151
இந்திரன்_மகன்_மைந்தனை இன் உயிர்
தந்து போக எனச் சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும்
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார்

#152
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம்
சிரமும் தேரும் புரவியும் திண் கரிக்
கரமும் ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாங்கினார்

#153
அனைய காலையில் ஆயிரமாயிரம்
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர்
நினையும் மாத்திரத்து ஆருயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான்

#154
ஆனையும் தடம் தேரும் தன் ஆருயிர்த்
தானையும் பரியும் படும் தன்மையை
மான வெம் கண் அரக்கன் மனக்கொளா
போன வென்றியன் தீ எனப் பொங்கினான்

#155
சீர்த் தடம் பெரும் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால்

#156
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும்
கார் செலா இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது பிணத்தின் பிறக்கமே

#157
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி எனக் கூறினான்

#158
ஆய வீரரும் ஐய அமர்த்தலை
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை
மாய வெம் கணை_மாரி வழங்கினை
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார்

#159
வந்து நேர்ந்தனர் மாருதி மேல் வரும்
அந்தி_வண்ணனும் ஆயிரமாயிரம்
சிந்தினான் கணை தேவரை வென்றவன்
நுந்தநுந்த முறைமுறை நூறினான்

#160
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும்
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்

#161
கதிரின்_மைந்தன் முதலினர் காவலார்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்
எதிரில் நின்ற இராவணி ஈடுற
வெதிரின் காட்டு எரி போல் சரம் வீசினான்

#162
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான்
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான்

#163
தெரி கணை_மாரி பெய்ய தேர்களும் சிலைக் கைம்மாவும்
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்கக் கண்டார்
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடிப்போனார்

#164
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் நசை உலர்ந்த நாவர்
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி
பாடுறு புண்கள்-தோறும் பசும் புனல் பாயப்பாய
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார்

#165
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார்
செம் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற தெய்வப்
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்தப் புல்லி
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார்

#166
பொறிக் கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார்
மறிக் கொளும் சிறுவர்-தம்மை மற்று உள சுற்றம்-தம்மைக்
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி
நெறிக்கொளும் கூற்றை நோக்கி ஆருயிர் நெடிது நீத்தார்

#167
தாமரைக்கண்ணன் தம்பி தன்மை ஈதாயின் மெய்யே
வேம் அரைக் கணத்தின் இவ் ஊர் இராவணி விளிதல் முன்னம்
மா மரக் கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே
போம் எனத் தமரைச் சொல்லிச் சிலர் உடல் துறந்து போனார்

#168
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார்
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்துயிர்த்து உழைப்பதானார்

#169
தேரிடைச் செல்லார் மானப் புரவியில் செல்லார் செம் கண்
காரிடைச் செல்லார் காலின் கால் எனச் செல்லார் காவல்
ஊரிடைச் செல்லார் நாணால் உயிரின் மேல் உடைய அன்பால்
போரிடைச் செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார்

#170
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கிப்
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தைக் கழித்து வீழ்த்தான்

#171
கவசத்தைக் கழித்து வீழ்ப்பக் காப்புறு கடன் இன்று ஆகி
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி யாம் இத்
திவசத்தின் முடித்தும் வெம் போர் எனச் சினம் திருகிச் சென்றார்

#172
மாருதி மேலும் ஐயன் மார்பினும் தோளின் மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடைத் தேரும் அத் தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான்

#173
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிரத் தண்டார்
உரும் எனக் கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார்
பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர் புடைத்தலோடும்
பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக்கொண்டான்

#174
தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார்
கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும் என்று அச்சம்கொண்டார்
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவிசெய்தார்

#175
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம்

#176
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன்_மைந்தன்
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னாச்
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார்

#177
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்திச்
சித்திர வில்_வலோனும் சின்னபின்னங்கள் செய்தான்

#178
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து
நெருங்கினார் நெருங்கக் கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்

#179
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

#180
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப் படுத்தியேல் பட்டான் அன்றேல்
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான்

#181
அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும்
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான்

#182
அழித்த தேர் அழுந்தா முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர்_அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான்

#183
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார்

#184
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன்
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாயச் செல்வன்
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான்

#185
தணிவு_அறப் பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும்
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்
அணு எனச் சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான்

#186
வாங்கினான் மலரின்_மேலான் வானக மணி நீர் கங்கை
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி

#187
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்த் தொழில் அஞ்சி அப்பால்
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார்
நாயகற்கு இளையகோவும் அன்னதே நினைந்து நக்கான்
மாயையைத் தெரிய உன்னார் போர்த் தொழில் மாற்றி நின்றார்

#188
அது கணத்து அனுமன் தோள்-நின்று ஐயனும் இழிந்து வெய்ய
கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி
முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான்

#189
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடிக்
கட்டினது என்ப-மன்னோ காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி

#190
இறுகுறப் பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக்கடவான்_அல்லன் மாயம் என்று உணர்வான்_அல்லன்
உறு குறைத் துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான்
அறுகுறைக் களத்தை நோக்கி அந்தரமதனை நோக்கும்

#191
மற்றையோர்-தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின வயிரத் தூணின் மலையினின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார்

#192
கால் உடைச் சிறுவன் மாயக் கள்வனைக் கணத்தின் காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென் என்று உறுக்கும் வேலை
ஏல்புடைப் பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்து என்ன சுற்றிப் பிணித்தது வயிரத் தோளை

#193
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடைப் புரள்வர் வானில்
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மைச்
சிலையவற்கு இளையகோவை நோக்குவர் உள்ளம் தீவர்

#194
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர்
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின்
ஈடுறத் தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி நகைசெய்வர் விழுவர் அஞ்சார்

#195
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல்
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி
வீரனைக் கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார்

#196
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான்
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற

#197
மலைத்-தலைக் கால மாரி மறித்து எறி வாடை மோத
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்
கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம்

#198
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மானத்
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை_சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்

#199
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான்

#200
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன
எதிரெதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன்
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன்
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான்

#201
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன்
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்
இப் பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும்
அப் பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான்

#202
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்தழிந்து இழியும் ஆகச்
செம்புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறிப்
பம்பு பேரொளிய நாகம் பற்றிய படிவத்தோடும்
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான்

#203
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரித்
தயங்கு பேராற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான்

#204
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான்

#205
ஈர்க்கு அடைப் பகழி_மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர்க் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான்
வார்க் கடை மதுகைக் கொங்கை மணிக் குறு முறுவல் மாதர்
போர்க் கடைக் கரும் கண் வாளி புயத்தொடு பொழியப் புக்கான்

#206
ஐ_இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி
மை_அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவத் தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான்

#207
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறித் தீருதி இடர் நீ எந்தாய்
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடைக் கோயில் புக்கான்

#208
இத்தலை இன்னலுற்ற வீடணன் இழைப்பது ஓரான்
மத்துறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான்
அத்தலைக் கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான்
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான்

#209
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்டபடியைக் கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன்
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும்
வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான்

#210
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான்
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம்
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தம்தம்
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரைக் கண் போல்

#211
போர் அவன் புரிந்த போதே பொரு_அரு வயிரத் தண்டால்
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரிந்தேன்_அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன்

#212
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத்-தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன்
அத்தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற
இத்தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலைச் சூலம் போல்வேன்

#213
அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை
வினை உள பலவும் செய்யத் தக்கன வீர நீயும்
நினைவிலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா
இனையன சொல்லித் தேற்றி அனலன் மற்று இனைய செய்தான்

#214
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா
போயினன் அனலன் போய் அப் புண்ணியவன் பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்
ஆயிரம் பெயரினானும் அரும் துயர்க் கடலுள் ஆழ்ந்தான்

#215
உரைத்திலன் ஒன்றும் தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓடக்
கரைத்திலன் கண்ணின் நீரைக் கண்டிலன் யாதும் கண்ணால்
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கிப்பொங்கி
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி

#216
விம்மினன் வெதும்பி வெய்துற்று ஏங்கினன் இருந்த வீரன்
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணிப்
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான்

#217
இழிந்து எழும் காள மேகம் எறி கடல் அனைய மற்றும்
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை

#218
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல்
சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற
சூரியன் உச்சி உற்றால் ஒத்தது அவ் உலகின் சூழல்

#219
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றிப் பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி
உடை உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தைக் கண்டான்

#220
பிணப் பெரும் குன்றினூடும் குருதி நீர்ப் பெருக்கினூடும்
நிணப் பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும்
மணப் பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்தினும் பாதிப் போதில் தம்பியைச் சென்று கண்டான்

#221
ஐயன்தான் அவன் மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி
உய்யலன் என்ன ஆவி உயிர்த்துயிர்த்து உருகுகின்றான்
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின்
வெய்யவன்-தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான்

#222
உழைக்கும் வெய்து_உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்

#223
தாமரைக் கையால் தாளைத் தைவரும் குறங்கைத் தட்டும்
தூ மலர்க் கண்ணை நோக்கும் மார்பிடைத் துடிப்பு உண்டு என்னா
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும்
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும்

#224
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரைக்
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர்
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான்

#225
வீரரை எல்லாம் நோக்கும் விதியினைப் பார்க்கும் வீரப்
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில்
யார் இது பட்டார் என் போல் எளிவந்த வண்ணம் என்னும்
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான்

#226
எடுத்த போர் இலங்கை_வேந்தன் மைந்தனோடு இளையகோவுக்கு
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னைக்
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான்

#227
அவ் உரை அருளக் கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி
இவ் வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த போதும்
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன்
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாயச் செய்கை

#228
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியின் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள்
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும்

#229
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாளத்
தூண்டினன் பகழி_மாரி தலைவர்கள் தொலைந்து சோர
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான்

#230
அனுமன் மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய
தனு வலம் காட்டிப் பின்னை நாற்பது வெள்ளத் தானை
பனி எனப்படுவித்து அன்னான் பலத்தையும் தொலைத்து பட்டான்
இனி என வயிர வாளி எண்ணில நிறத்தின் எய்தான்

#231
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான்
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான்

#232
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில்
போய் அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான் அம்பின் வெம்பும்
காயத்தான் என்னச் சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான்

#233
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம் என்றான்

#234
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனைத் தீர்க்கும்
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறிக் காண் என்று
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சாலச்
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரியச் சொன்னான்

#235
ஆழி அம் செல்வ பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றித்
தாழ்வுறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது ஆணை
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால்

#236
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம்

#237
தான் விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை
தேன் விடு துளவத் தாராய் இது இதன் செய்கை என்றான்

#238
ஈந்துள தேவர் மேலே எழுகெனோ உலகம் யாவும்
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்தப்
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான்

#239
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின்
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகைப் போழ்தின்

#240
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை_வேந்தன்
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால்

#241
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி
நின்றுநின்று உன்னிஉன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்
தன் துணைத் தம்பி-தன் மேல் துணைவர் மேல் தாழ்ந்த அன்பான்

#242
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம்-தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கை மால் யானை அன்னான்

#243
இத் தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய்
எத் தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லையதன்-வாய்
அத் தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால்
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான்

#244
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வடமேரு வையம் ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான்

#245
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திருமேனி கண்டு கிளர்வான்
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான்
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய

#246
அல்லைச் சுருட்டி வெயிலைப் பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி நிலவைத் திரட்டி விரிகின்ற சோதி மிளிர
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர

#247
நன்-பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன்
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய

#248
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான்

#249
முடி மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில் மேல் நிமிர்ந்த ஒளியான்
அடி மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னிஉன்னி அழிவான்
கொடி மேல் இருந்து இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்
படி மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான்

#250
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர் மேல் அயன்-தன் முதலோர்-தம்
தாதை_தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய்
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான்

#251
தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந்நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#252
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய்
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய்
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால்
அழுவாய் ஒருத்தன் உளை போலும் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#253
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய்
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய்
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய்
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#254
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய்
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய்
ஊணாய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வாய பெண்ணின் உருவாய்
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#255
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால்
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#256
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும்
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#257
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய்
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய்
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#258
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#259
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#260
எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#261
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய்
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறும் அவை தேறும் என்று தெளியாய்
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்

#262
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னிஉன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிரச்
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இவ் உலகு ஏழும் மூடு சிறையான்

#263
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர்
பாசம் கலந்த பசி போல் அகன்ற பதகன் துரந்த உரகம்

#264
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும்

#265
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால்
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர் மேல் அவ் வள்ளல் கடை_நாள்
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலைநின்ற தெய்வ நெறியால்

#266
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான்

#267
ஐய நீ யாரை எங்கள் அரும் தவப் பயத்தின் வந்து இங்கு
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான்

#268
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தித்
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணைச் செல்வ
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால்
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய

#269
கண்டிலை முன்பு சொல்லக் கேட்டிலை கடன் ஒன்று எம்-பால்
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான்

#270
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாயப்
பிறவியின் பகைஞ நல்கு விடை எனப் பெயர்ந்து போனான்

#271
ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும்
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால்
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்

#272
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும்
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீளப்
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான்

#273
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சிக்
குழைவுற அனந்தன் உச்சிக் குன்றின்-நின்று அண்ட_கோளம்
எழ மிசை உலகம் மேல்மேல் ஏங்கிட இரிந்து சிந்தி
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ

#274
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படரக் கண்கள்
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும்
குழிப்ப_அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான்

#275
தாதை சொல் தலைமேல்கொண்ட தாபதன் தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும் அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும் அன்றி அவ் ஊர் யார் உளர் துயில் பெறாதார்

#276
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்றச் சேனை
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில்
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான்

#277
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில்
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண்
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி_சேய் ஆர்ப்பின் பெற்றி

#278
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும்
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தைத் தருமம் நல்க

#279
என்பது சொல்லிப் பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன்
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்றப்
பொன் பொதி விளக்கம் கோடிப் பூம் குழை மகளிர் ஏந்தத்
தன் பெரும் கோயில்-நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான்

#280
தாங்கிய துகிலார் மெள்ளச் சரிந்து வீழ் குழலார் தாங்கி
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார் மெல்லத்
தூங்கிய விழியார் தள்ளித் துளங்கிய நடையார் வல்லி
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார்

#281
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல்
கானமும் தள்ளத்தள்ள களியொடும் கள்ளம் கற்ற
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க

#282
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி
உழைஉழை சுருட்டி மென் பூக் குவித்து இடைக்கு இடையூறு என்னா
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செவ் வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும்

#283
தேனிடை கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்

#284
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப் புலம் தொடர்தலோடும்
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர்
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்

#285
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்கத்
தரிக்கிலன் மடங்கல்_ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன
கருக் கிளர் மேகம் அன்ன களிறு_அனையானைக் கண்டான்

#286
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன் தோன்றல்
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்துக் கேட்டான்
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான்

#287
உருவின உரத்தை முற்றும் உலப்பு_இல உதிரம் வற்றப்
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள்
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல்

#288
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன் அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ

#289
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில்
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான்

#290
வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும்
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அக் கொற்றத்தோனை
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல்
என்றனன் என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்

#291
வார் கழல் கால மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேரொலி அரவம் விண்ணைப் பிளந்திட குரங்கு பேர்ந்த
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான்

#292
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்னப்
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார்
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா

#293
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறியப் போன
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும்
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்

#294
பாசத்தால் பிணிப்புண்டாரைப் பகழியால் களப்பட்டாரைத்
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான்
வாசத் தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான்

#295
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்
முன்னையின் வலியர் ஆகி மொய்க் களம் நெருங்கி மொய்த்தார்
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்

#296
ஏத்த_அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈதாயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம்

#297
உண்டு உலகு ஏழும்_ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான்
மண்டலம் திரிந்த போதும் மறி கடல் மறைந்த போதும்
கண்டிலன் போலும் சொற்ற கலுழன் அன்று என்னைக் கண்ணால்

#298
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில் என் சிலையின் பொங்கி
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அவ் அருணன் தம்பி

#299
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி
மீண்டவர்-தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமைப் போர்கள்
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தைச் சொன்னான்

#300
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கிச்
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால் உன் மனத் துயர் மீட்பென் என்றான்
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணிக் கோயில் புக்கான்
**கம்பராமாயணம் - யுத்த காண்டம்2
&621 - மிகைப் பாடல்கள்

@15 யுத்த காண்டம்2 - முதற் போர் புரி படலம் - மிகைப் பாடல்கள்

#1
ஆதி நாயகன் அங்கு அது கூறும் முன்
பாத மீது பணிந்து அருள் பற்றியே
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார்

#2
அன்ன போது அங்கு அரக்கர்_பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன்
முன்னி வெம் சமர் மூண்டு எழுந்துற்றதே

#3
ஆர்த்த போதில் அரும் திறல் சிங்கனும்
சூர்த்த நோக்கு உடைச் சூரனும் துற்கனும்
கூர்த்த வெம் கதிர்க் கோபனொடு ஆதியாய்
வேர்த்து அரக்கர் வியன் படை வீசினார்

#4
போர்செய் காலை இடும்பனும் பொங்கி அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேரு மீது இடி வீழ்ந்து எனத் தாக்கலும்
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான்

#5
வரு சுமாலி_மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன் பின்னரும்
வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே
சொரியும் மா மழை போல் சரம் தூவினான்

#6
வால் அறுந்து வயிறு துணிந்து இரு
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கமாம்
மேல் அறுந்து விளிந்தன வெம் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே

#7
நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடும் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா
கால வெம் கனல் போல் கனன்றான் அரோ

#8
கனலும் வெம் கண் அரக்கன் கடும் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற
நினைவதற்கு முன் நீலன் அங்கு ஓர் நெடும்
தனி மராமரம்தான் கொண்டு தாக்கினான்

#9
நிருதர் தானை உடைந்தது நேர்கிலாத்
தரும கோபன் சதமகன் சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார்

#10
ஏவி மற்று அயல் நின்ற அரக்கரைத்
தா_இல் என் ஒரு தேரினைத் தம் எனக்
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென

#11
ஆய்வு_அரும் சத கோடி அடல் பரி
மாய்வு_அரும் திரை போல் வரப் பூண்டது
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது

#12
ஏறினான் இடத் தோள் துடித்தே அறக்
கூறினான் குரங்கொடு மனிதரை
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழச்
சீறினான் சிவன் போல அத் தேரின் மேல்

#13
அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர்
கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே
புண்டரீகன் பதியிடைப் போயினார்

#14
வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்
உள்ளம் ஆய்ந்து ஓது இருநூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே

#15
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர் அயில் முதல் படைகள் போக்கியே
மரமொடு மலைகளைப் பிடுங்கி வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார்

#16
அண்ட கோளகை வெடித்து அவனி கீண்டுற
எண் திசாமுகங்களும் இடிய ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதெனில் விளம்ப வேண்டுமோ

#17
வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்
அச்சம்_இல் புரந்தரன் ஆதி தேவர்கள்
உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார்

#18
இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட அரக்கர்_கோமான்
கைப் படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச
முப் புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும்
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான்

#19
ஆர்த்தவன் பகழி_மாரி சொரிந்து அரிச் சேனை எல்லாம்
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செங்கதிர்ச்சிறுவன்தானும்
பார்த்து உளம் அழன்று பொங்கிப் பரு வலி அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்திப் புக்கான்

#20
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர்
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான்

#21
நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும்
பகைப் புலத்து அரக்கன் சேனைப் பரவை மேல் பொழிவதானான்

#22
எரி முகப் பகழி_மாரி இலக்குவன் சிலையின் கோலிச்
சொரிதர களிறு பொன் தேர் துரங்கமோடு இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு_இல் கோடி நெடும் படைத்தலைவர் வல்லே
பொருகளம் மீதில் சிந்திப் பொன்றினர் என்ப மன்னோ

#23
எதிர் வரும் அரக்கர்_கோமான் இலக்குவன்-தன்னை நோக்கி
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம்
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன்
முதிர்தரு கோபம் மூள மொழிந்து அமர் முடுக்கலுற்றான்

#24
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன்-தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன் அது கண்டு
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார்
நெருக்கும்படி சர_தாரையின் நெடு மா மழை சொரிந்தான்

#25
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே
இத் தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன்
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ

#26
கல் தங்கிய முழு மார்பிடைக் கவியின் கரமதனால்
உற்று ஒன்றிய குத்தின வலியதனால் உடல் உளைவான்
பற்று இன்றிய ஒரு மால் வரை_அனையான் ஒரு படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆருயிர் வந்தால் என உய்ந்தான்

#27
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல்
புதைத்து ஆங்குறும் இடி_ஏறு எனப் பொறி சிந்திய புவனம்
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான்

#28
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்-நின்றும் இரு நிலத்து இழியச்
சரித்து வானரம் மடிந்திட சர_மழை பொழிந்தான்

#29
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றிக்
கரத்தின் வெம் சிலை வளைக்கும் முன் கடும் சினத்து அரக்கன்
சிரித்து வெம் பொறி கதுவிட திசைமுகம் அடையப்
பொருத்தி வெம் சரம் பொழிந்து இவை விலக்கு எனப் புகன்றான்

#30
பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை ஏற்றுக்
கொண்ட தூயவன் கொடும் தொழில் நிருதர்கள் குழுமி
மண்டு வாள் அமர்க்களத்தில் அ மலர்க் கழல் சேறல்
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே

#31
அனைய கண்டு இகல் அரக்கருக்கு இறைவன் அப் பொழுதில்
மனம் நெருப்பு எழக் கொதித்து ஒரு மனிதன் என் வலியை
நினையகிற்றிலன் நெடும் சமர் என்னொடும் துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென் என விழி சிவந்தான்

#32
அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிரத்
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற கூற்றும்
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான்

#33
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின்
நிறம் தகும் பல நெடும் சுடர்ப் பகழிகள் நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு_இல் பல் கோடி
செறிந்திடத் திசை வானகம் வெளி இன்றிச் செறித்தான்

#34
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய்
எய்த வெம் சரம் பொடிபட யாவையும் முருக்கி
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான்
கைதவன் கணை ஏழு கொண்டு அக் கணை கடிந்தான்

#35
எய்து வெள்ளம் நூற்றிரண்டு எனத் திரண்ட கால் வயவர்
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர்
வெய்ய வீரர்கள் அளப்பிலர் கோடியர் விறல் சேர்
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார்

#36
அறுத்த வில் இழந்து அழியும் முன் ஐ_இரு கரத்தும்
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடல் பகழி
நிறுத்தி வீசினன் நெடும் திசை விசும்பொடு நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின்

#37
நிரைக்கும் ஐ_இரு சிலையிடைச் சர_மழை நிருதன்
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த
குரக்கு வான் படை குறைந்தன கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எவ்வுலகும்

#38
எறுழ் வலிப் புயத்து இராகவன் இளநகை எழும்ப
முறுவலித்து அவன் பகழிகள் யாவையும் முருக்கிப்
பிறை முகச் சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான்

#39
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது இங்கு
இளைத்து நின்றனை இன்று போய் நாளை வா
விளைக்கும் வெம் சமர் செய் விருப்பு உள்ளதேல்

#40
என்று இராமன் இயம்ப இராவணன்
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன்
நன்று சொன்னது என நகைத்து ஏகினான்

@16. யுத்த காண்டம்2 - கும்பகருணன் வதைப் படலம் -  மிகைப் பாடல்கள்

#1
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான்
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு எளிதோ காலம்
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ

#2
மானிடன் என்றே நாணி கடவுள் மாப் படைகள் யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன் இன்றை வெம் சமரம் போக
தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ என்றான் அந்த
மானம்_இல் அரக்கன் பின்னர் மாலியவானும் சொல்வான்

#3
முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்
தப்பு_அற உணர்தற்கு எட்டாத் தருமமே கை வில் ஏந்தி
இப் பிறப்பு இராமன் என்றே எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு_அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ

#4
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவியான
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்தச் செய்யும்
தீதினை வெறுத்து தேவர்_தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான்

#5
கிங்கரர் நால்வர் சென்று அக் கிரி_அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்கப் பின்னும்
வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்

#6
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்து உறங்குவாய்

#7
என்றும் ஈறு_இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செம் கையால் அலைத்தலைத்து உணர்த்தினார்

#8
என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய்
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம்
அன்று கொள்கை கேள்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான்
ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்

#9
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன்
இனைய சேனை மீண்டது என்று இராவணற்கு இயம்பலும்
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு செல்-மின் என்று
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான்

#10
சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
மன்றல் அம் தொங்கலான்-தன் மனம்-தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார்

#11
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர்
கூற்றமும் குலைய நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார்

#12
அன்னவர் உரைப்பக் கேளா அரசன் மோதரனை நோக்கி
மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி என்ன
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கிப் போவான்
பொன் என விளங்குவான் போய்த் தன் பெரும் கோயில் புக்கான்

#13
இனைய கும்பகருணன் இராக்கதர்-தனை
முனிந்து இடி_ஏறு எனச் சாற்றினான்
எனை நெடும் துயில் போக்கியது என் என
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார்

#14
அக் கணத்து அரக்கர்_கோன் அளப்பு_இல் யானை தேர்
மிக்க வான் புரவி கால் வயவர் வெள்ளமோடு
ஒக்க வான் படைப் பெரும் தலைவர் ஒன்று அற
புக்கு-மின் இளவலைப் புறத்து சூழ்ந்து என்றான்

#15
வெள்ளம் நூறு இரதம் மற்று இரட்டி வெம் கரி
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி மேம்படும்
கொள்ளை வான் படைப் பெரும் தலைவர் கோடியால்

#16
அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான்

#17
தொண்டகம் துடி கன பேரி துந்துமி
திண்டிமம் படகம் மா முரசு திண் மணி
கண்டைகள் கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால்

#18
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள்
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது எனத் தசமுகன்-தன் ஆணையால்
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப் போந்ததால்

#19
இரைக்கும் மும்மதம் பொழி தறுகண் யானையின்
நெருக்கமும் நெடும் கொடித் தொகையின் தேர்க் குலப்
பெருக்கமும் புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்-தம் பெருக்கமும் ஆயது எங்குமே

#20
நாற்படை வகை தொகை நடக்க தூளிகள்
மேற்பட விசும்பகம் மறைந்த வெண் திரை
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
கால் படு கதியினின் கரந்தது ஓடியே

#21
குரக்கு இனப் பெரும் படை குலைகுலைந்து போய்
வெருக்கொள விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்-கொலாம் நினது
உருக் கொடே கரிய குன்று உற்றவே-கொலாம்

#22
ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்
தாழ்வு_அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன்

#23
சிலை பொழி பகழி வேல் வாள் செறி சுடர்க் குலிசம் ஈட்டிப்
பல வகைப் படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர்செய்தார்
மலையொடு மரங்கள் ஓச்சி வயிரத் தோள் கொண்டு மாறாக்
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா

#24
பற்றினன் வசந்தன்-தன்னைப் பனைத் தடம் கைகளாலே
எற்றினன் இவனை மீள விடவொண்ணாது என்று சொல்லி
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழப் பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன் நிகரிலாதான்

#25
அளப்பு_இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர்க்
களப் படக் கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால்
குளப்படுக என்று வெய்யோன் குறித்து உளம் கனன்று புக்கான்

#26
நிகர்_அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மைத்
துகள் எழக் கயக்கி ஊதும் சிலவரைத் துகைக்கும் காலின்
தகர் படச் சிலவர்-தம்மைத் தாக்கிடும் தடக் கை-தன்னால்
புகவிடும் சிலவர்-தம்மை விசும்பிடைப் போக வெய்யோன்

#27
வலிதினின் சிலவர்-தம்மை வன் கையால் பற்றிப்பற்றித்
தலையொடு தலையைத் தாக்கும் சிலவரைத் தனது தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும் சிலவர் நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறிக் குருதி வாய் மடுத்துக் கொள்ளும்

#28
கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும் கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்-தம்மை சிலவரைப் பிடித்து வெய்தின்
கொடும் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து வீசும்
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி நீக்கும்

#29
பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக் குமைக்கும் கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை
நெரிதரச் சிலவர்-தம்மைக் கொடும் கையின் நெருக்கும் அன்றே

#30
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கதனை வாரி
வாயிடைப் பெய்து மூட வயிற்றிடைப் புகுந்து வல்லே
கூய் உளம் திகைத்துப் பின்னும் கொடியவன் செவியினூடே
போயது வெளியில் மீண்டும் புற்றிடைப் பறவை என்றே

#31
அவ்வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் அழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்
எவ்வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி
வெவ் வழி இசை அக் கும்பகருணன் மேல் செல்ல விட்டான்

#32
விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல்செல்ல
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகிப் போக
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்துகொண்டான்

#33
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத் தள்ளிச்
சூலம் அங்கு ஒரு கை சுற்றித் தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்-தன்னில் ஏற்றிக் கடிதில் என் தமையன் நெஞ்சில்
கோலிய துயரும் தீர்ப்பென் எனக் கொதித்து அமரின் ஏற்றான்

#34
மாருதி போதலோடும் வயப் படை தலைவர் மற்று ஓர்
மாருதம் என்னப் பொங்கி வரையொடு மரங்கள் வாரி
போர் எதிர் புகக் கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில்
சோர் தர படைகள் வாரிச் சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான்

#35
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணிக் குலிசம் ஈட்டி
எழு அயில் எஃகம் என்று இப் படை முதல் எவையும் வாரி
மழை எனப் பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும்
அளவு_அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான்

#36
இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்-தம் கரங்களைக் கடிந்தே
முலைக் குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய
விலக்க_அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார்

#37
வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால்
இட உவப்பொடும் புழுக்கினர் ஊன் இவை அறியார்

#38
குஞ்சரத் தொகை தேர்த் தொகை குதிரையின் தொகை மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்-தம் தொகை எனும் வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என இலக்குவன் பகழி
அஞ்சு எனப்படு கணத்து அவை அனைத்தையும் அழித்த

#39
வந்து அ மாப் படை அளப்பு_இல வெள்ளங்கள் மடிய
அந்தி வான் எனச் சிவந்தது அங்கு அடு களம் அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர் தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர் இப்பால்

#40
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என்
கருத்து முற்றுவென் எனச் சினம் கதுவிடக் கடும் தேர்
பரித்த திண் திறல் பாகரைப் பகைவனுக்கு எதிரே
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கெனப் புகன்றான்

#41
நாண் தெறித்தனன் பகிரண்டப் பரப்பொடு நவை போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட வயப் போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறியத்
தூண்டி மற்று அவன் இலக்குவன்-தனக்கு இவை சொல்வான்

#42
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறித்
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு
இது கண்டேன் இனிக் கழிந்தது உன் உயிர் எனக் கனன்றே
கொதிகொண்டான் அடல் சிலையினைக் குழைவுற வளைத்தான்

#43
புக்க போதில் அங்கு இலக்குவன் பொருக்கெனத் துயர் தீர்ந்து
அக் கணம்-தனில் அரக்கர்-தம் பெரும் படை அவிய
மிக்க வார் சிலை வளைத்து உரும்_ஏறொடு விசும்பும்
உட்க நாண் எறிந்து உக முடிவு எனச் சரம் பொழிந்தான்

#44
காய்கதிர்ச்சிறுவனைப் பிணித்த கையினன்
போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின்-வாய்
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன் இனைய செய்தனன்

#45
வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
கூசின அமரரும் குடர் குழம்பினார்
காய் சின அரக்கனும் கனன்ற போது அவன்
நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே

#46
கும்பகன் கொடுமையும் குலைகுலைந்து போம்
வெம்பு வெம் சேனையின் மெலிவும் நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம்பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான்

#47
ஆயிரம்_பெயரவன் அறுத்து மாற்றுறப்
போயின கேடகம் புரிந்து நோக்கினான்
பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான்

#48
போயின கேடகம் போக நோக்கினன்
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
ஏ எனும் அளவினில் எய்தச் சென்றதால்

#49
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன்
சூலம் உண்டு அளப்பு_இல கோடி பேய் சுமந்து
ஓலமிட்டு அமரர்கள் ஓட ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அக் கணம்

#50
பிடித்தனன் வலக் கையில் சூலம் பெட்பொடு
முடித்தனன் பூசனை மனத்தின் முன்னியே
விடுத்தனன் பகைவனை வென்று மீள்க எனா
தடுப்ப_அரிது எனத் தளர்ந்து அமரர் ஓடினார்

#51
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே
ஞால_நாயகன் அரிக் கடவுள் ஏந்திய
கால் வெம் கனல் படை கடிதின் ஏவி அச்
சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான்

#52
அழிந்தது சூலம் அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே
கழிந்தது எம் மனத் துயர் என்று கண்ணன் மேல்
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூ_மழை

#53
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்திப்
புரண்டு தத்துறப் பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலைக் கணை_மாரி
இருண்டது எத்திசை மருங்கினும் பறவையின் இனம் பல படி மூடி
திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன் கும்பகன் சினம் மூள

#54
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம்
நன்றுநன்று எனா சிரம் துளக்கினன் நகைத்து இவையிவை நவில்கின்றான்
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில்
பொன்றுமாறு இளைத்து இன்று போய் வருவேனேல் புகழுடைத்தது போலாம்

#55
இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ்வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண
வினை அறுந்தது வேறு இனிப் பிறப்பு இலை என்று தன் மன வேகம்-தனை
மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும்

@17. மாயா சனகப் படலம் -  மிகைப் பாடல்கள்

#1
இ மொழி அரக்கன் கூற ஏந்து_இழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த
வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு இவை விளம்பலுற்றான்

#2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய்
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான்

@18. அதிகாயன் வதைப் படலம் -  மிகைப் பாடல்கள்

#1
முதிர் போர் உறு மொய்ம்பன் முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட அங்கு
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால்

#2
தேர் வெள்ளம் அளப்பில திண் புரவித்
தார் வெள்ளம் அளப்பில தந்தி இனக்
கார் வெள்ளம் அளப்பில கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பில பெற்றதுவால்

#3
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள் எழு வல் முசலம்
வில்லோடு அயில் வெம் கதை வேல் முதலாம்
பல் ஆயுத பத்தி பரித்து உடையார்

#4
என வந்த நிசாசரன் இவ் உரையைத்
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான்

#5
என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
தன் தாமரை போல் இரு தாள் அளவாநின்றான்
உரைசெய்ய நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால்

#6
வார் ஏறு கழல் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா
தேர் ஏறு சின கடு வெம் தறுகண்
கார் ஏறு என வந்த கத தொழிலோன்

#7
வெம் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்
வெம் கணை இலக்குவன் வெகுண்டு உகாந்தத்தில்
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான்

#8
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை_மழை நெடும் தாரை வெம் மதக்
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம்
குடல் தலை குறைந்தமை கூறல் ஆவதோ

#9
அறுந்தன தலை கழுத்து அறுந்த தாள் கரம்
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி
அறுந்தன கட களிறு ஆய நாமமே

#10
அறுத்தன சில கணை அறுத்த கூறுகள்
செறுத்தன சில கணை சின்னபின்னமாய்
ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புகத்
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ

#11
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற
முதிர் சினத்து இலக்குவன் கடிகை மூன்றினில்
கொதி கொள் வெம் சர_மழை கொழிப்பக் கண்டு தாள்
அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார்

#12
அடுத்தனர் ஆனை தேர் புரவி ஆழியை
தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து வள்ளல் மேல்
விடுத்தனர் படைக்கலம் வெகுண்டு வீரனும்
தடுத்தனன் ஒரு தனித் தனுவின் வன்மையால்

#13
பெரும் கடையுக மழை பிறழ தன் ஒரு
கரம் படு சிலையினின் கான்ற மாரியின்
சரம்படச்சரம்படத் தாக்கு இராக்கதக்
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ

#14
இலக்குவக் கடவுள்-தன் ஏவின் மாரியால்
விலக்க_அரும் கரி பரி இரதம் வீரர் என்று
உலப்ப_அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே

#15
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திடப் பரும் சிலை விசையின் பற்றினான்
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே

#16
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரித்
தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி மற்று
ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான்

#17
தாருகன் எனும் படைத்தலைவன் தன் வயப்
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் எனக்
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே
வீரனை வளைத்தனர் வெகுளி மிக்குளார்

#18
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும்மத வழியே
விழ உற்றன வெறி வெம் கணை நிமிரப் பொறி சிதற
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய
உழை உற்றன உலவும்படி உலவுற்றன கரிகள்

#19
துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்றக்
கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே
உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே
கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடும் சூலம் கைக் கொண்டான்

#20
ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறித்
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய தன் கை
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்த பின் வாளி_மாரி
பாங்குறு கவியின் சேனைக் கடல் மிசைப் பரப்பி ஆர்த்தான்

#21
ஆர்த்து அரும் பகழி_மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து அடல் கவியின் சேனை துகள்படத் துணிந்து சிந்தப்
பேர்த்தனன் சிலை நாண் ஓதை பிறை முகப் பகழி பின்னும்
கோத்தனன் அனந்த கோடி கோடியின் கொதித்து வெய்யோன்

#22
உருத்து அதிகாயன் மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி_மாரி
நிரைத்தலின் இடைவிடாது நெடும் கவிச் சேனை வெள்ளம்
தரைத் தலம் அதனில் பட்டுத் தலை உடல் சிதறச் சோரி
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார்

#23
கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
தரைப் பட சரத்தின் மாரித் தசமுகன்_சிறுவன் சீறா
கரை_அறு கவியின் சேனைத்தலைவர்கள் கனலின் பொங்கி
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார்

#24
வானரத்தலைவர் பொங்கி வருதலும் அரக்கன்_மைந்தன்
போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழி-தன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்கத்
தான் அறிவு அழிந்து யாரும் தனித்தனி தலத்தின் வீழ்ந்தார்

#25
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள்
தசமுகன்_சிறுவன் பின்னும் தடம் சிலை குழைய வாங்கி
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவித் தானை வெள்ளம்
பசை_அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன் பகழி_மாரி

#26
வீரருக்கு ஒருவரான விறல் அதிகாயன் வெம் போர்
ஆர் இனித் தடுக்க வல்லார் எனப் பதைத்து அமரர் எல்லாம்
சோர்வுறத் துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல்
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி

#27
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனைக் கண்டே
செம் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து தீரா
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி
துங்க வேல் நிருதர் சேனை துணிபடச் சொரிந்தான் வாளி

#28
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு
கரு முகில் பொழிவது என்னக் கணை_மழை சொரிந்து காலாள்
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்திப்
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து அமர் கடிதின் ஏன்றான்

#29
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
திரிதர அரக்கன் சீறித் திண் சிலை குழைய வாங்கி
எரி முகப் பகழி_மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர அனுமனாதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார்

#30
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான்
கல் இடும் மாரி என்னக் கணை_மழை பொழியக் கண்ட
வில்லியும் விடாது வெய்ய கணை_மழை விலக்கி நின்றான்

#31
விறல் அதிகாயன் வீழ வெம் திறல் அரக்கன்_மைந்தர்
குறுகினர் மும்மையான ஆயிர கோடி உள்ளார்
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்துச்
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார்

#32
வருதலும் அரக்கன் மற்று அவ் வானர சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா பொங்கு அழல் என்னப் பொங்கி
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே
உரும் எனச் சொரிய வீசி உடற்றினர் ஒழிவிலாதார்

#33
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும்
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே
முற்றும்படி மோதினர் மோத முடிந்தே
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார்

#34
அளப்பு_இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும்
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு_இல மடியத் தாமும்
களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா
துளக்கம்_இல் அரக்கன் மேருத் துளங்கியது என்ன சோர்ந்தான்

@19. நாகபாசப் படலம் -  மிகைப் பாடல்கள்

#1
எரி முகப் பகழி_மாரி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
எரி முகப் பகழி_மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை
உரும் இனப் பகழி_மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான்
உரும் இனப் பகழி_மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான்

#2
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை அரக்கன் கோத்தான்
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான்
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான் மொய்ம்பன்

#3
சிந்து வாளி செறிதலும் சேவகன்
ஐந்து_நூறு கடும் கணையால் அவன்
உந்து தேரை ஒறுத்தனன் வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான்

#4
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும்

#5
பறவை நாயகன் தான் ஏக படர் உறு துயரம் நீங்கிக்
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி
இறைவனும் இளையகோவும் யாவரும் எழுந்து நின்றார்
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ

#6
இரு நிலம் கிழியப் பாயும் எறி கடல் இரைப்புத் தீரப்
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டு இனம் இரியல்போகக்
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தான்
**