<<முந்திய பக்கம்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்


@4 நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - நான்காம் ஆயிரம்


#2899
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

#2900
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே

#2901
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே

#2902
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே

#2903
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே

#2904
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே

#2905
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவைஅவை-தொறும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே

#2906
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே

#2907
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

#2908
பரந்த தண் பரவையுள் நீர்-தொறும் பரந்து உளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும்
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே

#2909
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே

#2910
வீடு-மின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்-மினே

#2911
மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னு-மின் நீரே

#2912
நீர் நுமது என்று இவை
வேர் முதல் மாய்த்து இறை
சேர்-மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே

#2913
இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை_இல் அ நலம்
புல்கு பற்று அற்றே

#2914
அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர்
செற்ற அது மன் உறில்
அற்று இறை பற்றே

#2915
பற்று இலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே

#2916
அடங்கு எழில் சம்பத்து
அடங்க கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே

#2917
உள்ளம் உரை செயல்
உள்ள இ மூன்றையும்
உள்ளி கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே

#2918
ஒடுங்க அவன்-கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை
விடும்-பொழுது எண்ணே

#2919
எண் பெருக்கு அ நலத்து
ஒண் பொருள் ஈறு_இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே

#2920
சேர்த்தட தென் குரு
கூர் சடகோபன் சொல்
சீர் தொடை ஆயிரத்து
ஓர்த்த இ பத்தே

#2921
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே

#2922
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே

#2923
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே

#2924
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே

#2925
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன்
வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே

#2926
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே

#2927
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே

#2928
நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

#2929
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி
தலத்து எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே

#2930
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே

#2931
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை
அமர் பொழில் வளம் குருகூர் சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே

#2932
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ

#2933
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே

#2934
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே

#2935
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில்_வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ

#2936
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால்
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே

#2937
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே

#2938
என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே

#2939
நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே

#2940
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன்
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே

#2941
உடல் ஆழி பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே

#2942
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே

#2943
வள ஏழ்_உலகில் முதலாய வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே

#2944
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே

#2945
மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே

#2946
தான் ஓர் உருவே தனி வித்தாய் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே

#2947
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே

#2948
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே

#2949
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே

#2950
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே

#2951
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே

#2952
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே

#2953
மாலே மாய பெருமானே மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே

#2954
பரிவது இல் ஈசனை பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரி வகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே

#2955
மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே

#2956
ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே

#2957
அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே

#2958
கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே

#2959
அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே

#2960
நீள் கடல் சூழ் இலங்கை_கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழி-மின்னே

#2961
கழி-மின் தொண்டீர்கள் கழித்து
தொழு-மின் அவனை தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே

#2962
தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனி கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே

#2963
கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவை-கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே

#2964
மாதவன்-பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து
ஓத வல்லார் பிறவாரே

#2965
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று
துறவி சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே

#2966
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே

#2967
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாய பிரானை என் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகி பருகி என்
மாய பிறவி மயர்வு அறுத்தேனே

#2968
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ

#2969
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்ய கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே

#2970
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ

#2971
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே

#2972
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே

#2973
அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்ப துழாவி என் ஆவி
அமர தழுவிற்று இனி அகலும்மோ

#2974
அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே

#2975
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே

#2976
ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே

#2977
அம்மானாய் பின்னும்
எம் மாண்பும் ஆனான்
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே

#2978
கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே

#2979
வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே

#2980
வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே

#2981
கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே

#2982
கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே

#2983
ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே

#2984
சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே

#2985
நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே

#2986
நீர் புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே

#2987
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே

#2988
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே

#2989
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரை_கண்ணன்
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே

#2990
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர்
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே

#2991
ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே

#2992
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே

#2993
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே

#2994
நாவினுள் நின்று மலரும் ஞான கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனி கமல_கண்ணன் என் கண்ணின் உளானே

#2995
கமல_கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னை கண்_நுதலானொடும் தோற்றி
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே

#2996
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி
கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார்
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே

#2997
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்கு கண்ணபிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர் சடகோபன்
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே

#2998
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ்_உலகும் தொழ
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த அ
கருமாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே

#2999
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே

#3000
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரை_கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே

#3001
நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய்

#3002
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை கண்டுகொண்டனை நீயுமே

#3003
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இ உலகினில்
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே

#3004
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே

#3005
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே

#3006
நம்பியை தென் குறுங்குடி நின்ற அ
செம்பொனே திகழும் திருமூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ

#3007
மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரை கண்ணொடு
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே

#3008
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை தென் குருகூர் சடகோபன் சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே

#3009
வாயும் திரை உகளும் கானல் மட நாராய்
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே

#3010
கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான்
தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே

#3011
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்ற கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்ற தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே

#3012
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி-தோறு ஊழியே

#3013
ஊழி-தோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே

#3014
நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள்
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே

#3015
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ வாழி கனை இருளே

#3016
இருளின் திணி வண்ணம் மா நீர் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே

#3017
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே

#3018
வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்-பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே

#3019
சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே

#3020
திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே

#3021
ஏ பாவம் பரமே ஏழ்_உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய்
கோபால கோளரி ஏறு அன்றியே

#3022
ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால்-தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே

#3023
தேவும் எ பொருளும் படைக்க
பூவில் நான்முகனை படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே

#3024
தகும் சீர் தன் தனிமுதலினுள்ளே
மிகும் தேவும் எ பொருளும் படைக்க
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே

#3025
எவரும் யாவையும் எல்லா பொருளும்
கவர்வு இன்றி தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ள சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே

#3026
பள்ளி ஆலிலை ஏழ்_உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்று பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன்
கள்ள மாய மனக்கருத்தே

#3027
கருத்தில் தேவும் எல்லா பொருளும்
வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே
திருத்தி திண் நிலை மூ_உலகும் தம்முள்
இருத்தி காக்கும் இயல்வினரே

#3028
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே

#3029
கள்வா எம்மையும் ஏழ்_உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே

#3030
ஏத்த ஏழ்_உலகும் கொண்ட கோல
கூத்தனை குருகூர் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே

#3031
ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னை பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே

#3032
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒத்தாய் எ பொருட்கும் உயிராய் என்னை பெற்ற
அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே

#3033
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே

#3034
எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவி கைம்மாறு
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே

#3035
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே

#3036
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை
சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே

#3037
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே

#3038
குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே

#3039
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்து பருகி களித்தேனே

#3040
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே

#3041
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன் கூடிநின்று ஆடு-மினே

#3042
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இ வாள் நுதலே

#3043
வாள் நுதல் இ மடவரல் உம்மை
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மை
காண நீர் இரக்கம் இலீரே

#3044
இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே

#3045
இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிக
கலங்கி கைதொழும் நின்று இவளே

#3046
இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள_வண்ணர் தகவுகளே

#3047
தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகி நின்று உள் உளே

#3048
உள்உள் ஆவி உலர்ந்துஉலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே

#3049
வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை
தஞ்சம் என்று இவள் பட்டனவே

#3050
பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே

#3051
ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்-மினே

#3052
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே

#3053
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே

#3054
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே

#3055
என்னுள் கலந்தவன் செம் கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ்_உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எ பொருளும் தான் இலையே

#3056
எ பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும்
அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே

#3057
ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே

#3058
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ

#3059
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே

#3060
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே

#3061
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே

#3062
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே

#3063
கூறுதல் ஒன்று ஆரா குட கூத்த அம்மானை
கூறுதலே மேவி குருகூர் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே

#3064
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள்
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே

#3065
சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின்
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே

#3066
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே

#3067
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே

#3068
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே

#3069
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என்
முன்னை தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னை கோளரியே முடியாதது என் எனக்கே

#3070
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்_உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே

#3071
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்

#3072
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைம் தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே

#3073
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே

#3074
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ்
நண்ணி தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே

#3075
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே

#3076
நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே

#3077
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே

#3078
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே

#3079
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே

#3080
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே

#3081
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே

#3082
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன்
காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே

#3083
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல்வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே

#3084
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே

#3085
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே

#3086
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே

#3087
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலை தென் குருகூர் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே

#3088
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே

#3089
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே

#3090
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே

#3091
புலன் ஐந்தும் மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரை செற்றான்
பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே

#3092
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும்
மூவா தனிமுதலாய் மூ_உலகும் காவலோன்
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே

#3093
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேச கிடந்ததே

#3094
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே

#3095
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே

#3096
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என்
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

#3097
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே

#3098
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே

#3099
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே

#3100
ஈதே யான் உன்னை கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞான
கை தா கால கழிவு செய்யேலே

#3101
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என்
கை ஆர் சக்கர கண்ணபிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே

#3102
எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே

#3103
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே

#3104
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே

#3105
வாராய் உன் திருப்பாத மலர் கீழ்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே

#3106
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்கார கனியே உன்னை யானே

#3107
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

#3108
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடும் சுடர் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே

#3109
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர் சடகோபன்
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே

#3110
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகி சார்வது சதிரே

#3111
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே

#3112
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை அடைவது அது கருமமே

#3113
கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

#3114
திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழி படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புற மலை சார போவது கிறியே

#3115
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே

#3116
நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே

#3117
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே

#3118
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழ களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழ கருதுவதே துணிவது சூதே

#3119
சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போது அவிழ் மலையே புகுவது பொருளே

#3120
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

#3121
முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடி சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே

#3122
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ

#3123
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே

#3124
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே

#3125
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே

#3126
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே

#3127
வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே

#3128
மாசூணா சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே

#3129
மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே

#3130
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே

#3131
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே

#3132
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்_வண்ணனே
அ நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே

#3133
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ

#3134
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரத போர்
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னை சார்வது ஓர் சூழ்ச்சியே

#3135
சூழ்ச்சி ஞான சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே

#3136
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே

#3137
கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நல் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே

#3138
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே

#3139
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே

#3140
கூவிக்கூவி கொடுவினை தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே

#3141
தலைப்பெய் காலம் நமன்-தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டுகொண்டு
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே

#3142
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை
குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே

#3143
ஒழிவு_இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமைசெய்யவேண்டும் நாம்
தெழி குரல் அருவி திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே

#3144
எந்தை தந்தைதந்தை தந்தைதந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே

#3145
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரை
கண்ணன் செம் கனி வாய் கருமாணிக்கம்
தெள் நிறை சுனை நீர் திருவேங்கடத்து
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே

#3146
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே

#3147
சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர் திருவேங்கடத்தானையே

#3148
வேம் கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே

#3149
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

#3150
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

#3151
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

#3152
வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே

#3153
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர் சடகோபன் சொல்
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே

#3154
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே

#3155
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே

#3156
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே

#3157
சாதி மாணிக்கம் என்கோ சவி கொள் பொன் முத்தம் என்கோ
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே

#3158
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ

#3159
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ
மால் என்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே

#3160
வானவர் ஆதி என்கோ வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே

#3161
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதி சடையன் என்கோ நான்முக கடவுள் என்கோ
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே

#3162
கண்ணனை மாயன்-தன்னை கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே

#3163
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம்-தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே

#3164
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே

#3165
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே

#3166
தண் கடல் வட்டத்து உள்ளாரை தமக்கு இரையா தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே

#3167
மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்ட தடுகுட்டமாய் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே

#3168
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே

#3169
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே

#3170
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்தி குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே

#3171
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே

#3172
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே

#3173
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே

#3174
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன்-தன்னை
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே

#3175
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே

#3176
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே

#3177
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன்-தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ

#3178
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ

#3179
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே

#3180
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே

#3181
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே

#3182
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே

#3183
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே

#3184
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே

#3185
கடல்_வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆருயிர்
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-கொல் கண்களே

#3186
கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே

#3187
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய_கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே

#3188
ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே

#3189
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே

#3190
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே

#3191
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே

#3192
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மை சன்மசன்மாந்தரம் காப்பரே

#3193
சன்மசன்மாந்தரம் காத்து அடியார்களை கொண்டுபோய்
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே

#3194
நம்பனை ஞாலம் படைத்தவனை திருமார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான்-தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே

#3195
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே

#3196
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும்
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார்அடியார்-தம் அடியார்அடியார்-தமக்கு
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே

#3197
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
முடிவு ஆர கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே

#3198
முடியானே மூ_உலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர்
கொடியானே கொண்டல்_வண்ணா அண்டத்து உம்பரில்
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே

#3199
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையை செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே

#3200
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம்
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே

#3201
கைகளால் ஆர தொழுதுதொழுது உன்னை
வைகலும் மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ள காண விரும்பும் என் கண்களே

#3202
கண்களால் காண வரும்-கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே

#3203
செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும்
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று
புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே

#3204
ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடை
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே

#3205
கோலமே தாமரை கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எ நாள் கண்டுகொள்வனே

#3206
கொள்வன் நான் மாவலி மூ அடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே

#3207
பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே

#3208
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர் சடகோபன் சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே

#3209
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே

#3210
உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே

#3211
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழி-தோறு ஊழி நிலாவப்போம்
வழியை தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழிய கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே

#3212
என் ஆவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள்
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே

#3213
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ

#3214
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே

#3215
சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே

#3216
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே

#3217
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே

#3218
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இ உடல் நீங்கிப்போய்
சென்றுசென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும்என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே

#3219
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்-தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே

#3220
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறைவு இலனே

#3221
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே

#3222
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூ_உலகுக்கு உரிய
கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே

#3223
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே

#3224
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே

#3225
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே

#3226
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய்
மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே

#3227
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய்
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே

#3228
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை பெற்று ஒன்றும் தளர்வு இலனே

#3229
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே

#3230
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தி தன் மூ_உலகுக்கும் தரும் ஒரு நாயகமே

#3231
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ

#3232
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய் குமை தின்பர்கள்
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ

#3233
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ

#3234
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர்
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம்
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ

#3235
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார்
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ

#3236
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ

#3237
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார்
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே

#3238
குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ

#3239
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ

#3240
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே

#3241
அஃதே உய்ய புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே

#3242
பாலனாய் ஏழ்_உலகு உண்டு பரிவு இன்றி
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே

#3243
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே

#3244
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே

#3245
கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடம் தோளியே

#3246
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ
கோளியார் கோவலனார் குட கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே

#3247
மாதர் மா மண்_மடந்தை-பொருட்டு ஏனமாய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே

#3248
மடந்தையை வண் கமல திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே

#3249
கொம்பு போல் சீதை-பொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்

#3250
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்

#3251
என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம்
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே

#3252
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே

#3253
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே

#3254
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே

#3255
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே

#3256
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த மாய பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின்
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே

#3257
கண்ணி எனது உயிர் காதல் கனக சோதி முடி முதலா
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூ_உலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே

#3258
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று
ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே

#3259
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதி திருவுருவம் என்னது ஆவி மேலதே

#3260
என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ்_உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே

#3261
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரை-கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்

#3262
யானும் ஏத்தி ஏழ்_உலகும் முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே

#3263
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே

#3264
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே

#3265
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே

#3266
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே

#3267
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே

#3268
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே

#3269
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே

#3270
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே

#3271
திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும்
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே

#3272
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும்
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே

#3273
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும்
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும்
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே

#3274
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே

#3275
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே

#3276
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே

#3277
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே

#3278
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே

#3279
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம்
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே

#3280
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே

#3281
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே

#3282
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே

#3283
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை
கூனல் சங்க தடக்கை-அவனை குடம் ஆடியை
வான கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே

#3284
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்-தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே

#3285
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இ பத்தால்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே

#3286
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே

#3287
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே

#3288
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின்
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே

#3289
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளை பெறுதிரே

#3290
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள்
கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவள பொடி கொண்டு நீர் இட்டிடு-மின் தணியுமே

#3291
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே

#3292
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்
வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே

#3293
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய் தூய்
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே

#3294
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்து-மின் உன்னித்தே

#3295
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே

#3296
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே

#3297
சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று
காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே

#3298
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே

#3299
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல்
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே

#3300
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டா பீடு உடை அப்பனையே

#3301
அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலை கடைந்த
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடும்-கொல் என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்துதுவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே

#3302
நோக்கிநோக்கி உன்னை காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்-தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே

#3303
அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்
நறும் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னை கண்டுகொண்டே

#3304
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே

#3305
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே

#3306
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞான கண்களாலே கண்டு தழுவுவனே

#3307
தழுவிநின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை
குழுவு மாட தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும்
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே

#3308
ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம்குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே

#3309
மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன்
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன்
பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே

#3310
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞான சிறு குழவி
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே

#3311
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே

#3312
தளிர் நிறத்தால் குறைவு இல்லா தனி சிறையில் விளப்பு உற்ற
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே

#3313
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
குறிய மாண் உரு ஆகி கொடும் கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே

#3314
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே

#3315
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே

#3316
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல்
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே

#3317
உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே

#3318
உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானை தடம் குருகூர் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே

#3319
நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாம் ஆறே

#3320
சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே

#3321
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல்_வண்ணா அடியேனை
பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணிக்கொள்ளே

#3322
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே

#3323
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே

#3324
மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர்
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே

#3325
ஆயே இ உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே

#3326
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே

#3327
கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே

#3328
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே

#3329
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே

#3330
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே

#3331
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே

#3332
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே

#3333
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள்
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே

#3334
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே

#3335
போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே

#3336
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர்-அதனுள்
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே

#3337
புக்கு அடிமையினால் தன்னை கண்ட மார்க்கண்டேயன்-அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே

#3338
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
உளம் கொள் ஞானத்து வைம்-மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே

#3339
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால்
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே

#3340
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே

#3341
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்
ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே

#3342
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே

#3343
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே

#3344
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து
நின்-கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே

#3345
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே

#3346
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழிய கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண்
அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே

#3347
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர்
எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே

#3348
மேலா தேவர்களும் நில தேவரும் மேவி தொழும்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலா தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே

#3349
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க
தேவு ஆர் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே

#3350
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான்
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய்
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே

#3351
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை
ஏர் வள ஒண் கழனி குருகூர் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே

#3352
பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம்

#3353
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே

#3354
திரியும் கலியுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே

#3355
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே
தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே

#3356
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இ உலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே

#3357
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே

#3358
நிறுத்தி நும் உள்ளத்து கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே

#3359
இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக அ தெய்வ_நாயகன் தானே
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே

#3360
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே

#3361
மிக்க உலகுகள்-தோறும் மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே

#3362
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை
கலி வயல் தென் நன் குருகூர் காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே

#3363
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே

#3364
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே

#3365
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே

#3366
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே

#3367
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே

#3368
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே

#3369
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவும் ஆம்-கொலோ தையலார் முன்பே

#3370
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே

#3371
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்-தன்னை
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே

#3372
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார்
நா மடங்கா பழி தூற்றி நாடும் இரைக்கவே

#3373
இரைக்கும் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான்-தன்னை
விரை கொள் பொழில் குருகூர் சடகோபன் சொன்ன
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்

#3374
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிருளாய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே

#3375
ஆவி காப்பார் இனி யார் ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே

#3376
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே

#3377
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே

#3378
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே

#3379
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே

#3380
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய்
சேண் பாலது ஊழியாய் செல்கின்ற கங்குல்வாய்
தூ பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ

#3381
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே

#3382
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே

#3383
நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளியாய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே

#3384
உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ

#3385
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே

#3386
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை முனியாதே
தென் நன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே

#3387
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றி கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே

#3388
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே

#3389
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே

#3390
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

#3391
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே

#3392
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே

#3393
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே

#3394
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமி தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே

#3395
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல்
அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே

#3396
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே

#3397
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே

#3398
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே

#3399
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே

#3400
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே

#3401
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே

#3402
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ
உற்றீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் யான் உற்று என்னுடை பேதை உரைக்கின்றவே

#3403
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்_வண்ணன் ஏற-கொலோ
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே

#3404
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே

#3405
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே

#3406
கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

#3407
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே

#3408
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே

#3409
கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்_முகில்_வண்ணா
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே

#3410
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே

#3411
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே

#3412
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்க சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

#3413
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தை தாய் தந்தையே முழு ஏழ்_உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர்
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே

#3414
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே

#3415
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்க சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே

#3416
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூம் தண் துழாய் முடியாய் தெய்வ_நாயகனே

#3417
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே

#3418
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே

#3419
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே

#3420
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள்
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே

#3421
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய் உன்னை காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

#3422
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்

#3423
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூரா குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே

#3424
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே

#3425
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்-போது
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே

#3426
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே

#3427
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

#3428
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆக கொண்ட குருகூர் சடகோபன்
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே

#3429
மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ

#3430
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே

#3431
சூடு மலர் குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓம புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே

#3432
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே

#3433
நல் நல தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்வி புகை
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே

#3434
காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே

#3435
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே

#3436
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே

#3437
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழ கூடும்-கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே

#3438
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே

#3439
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடி மேல்
சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே

#3440
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும்
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே

#3441
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே

#3442
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே

#3443
கள்ள வேடத்தை கொண்டு போய் புரம் புக்க ஆறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

#3444
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே

#3445
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே

#3446
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து என்னை செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே

#3447
திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே

#3448
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று-கொல் கூடுவதே

#3449
கூடி நீரை கடைந்த ஆறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு_அணையானே

#3450
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும்
ஏக சிந்தையனாய் குருகூர் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே

#3451
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே

#3452
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானை கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே

#3453
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள்
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கர கை கனி வாய் பெருமானை கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே

#3454
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்து-மினே

#3455
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்று-மினே

#3456
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானை கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே

#3457
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே

#3458
திருந்த கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள்
கரும் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே

#3459
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன்-தன்னை கண்ணனை நெடுமாலை கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறு-மின் வேறுகொண்டே

#3460
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்-மின்களே

#3461
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வன் அடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே

#3462
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ

#3463
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே

#3464
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள்
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல்
மா இரும் கடலை கடைந்த பெருமானாலே

#3465
ஆலின் நீள் இலை ஏழ்_உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே

#3466
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே

#3467
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள்
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர்
கழகம் ஏறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே

#3468
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார்
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே

#3469
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கு_இல் கீர்த்தி வெள்ள கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே

#3470
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின்
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே

#3471
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர்
நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே

#3472
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே

#3473
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடி திருவிண்ணகர் கண்டேனே

#3474
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே

#3475
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே

#3476
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே

#3477
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூ_உலகே

#3478
மூ_உலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய்
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே

#3479
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே

#3480
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய்
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே

#3481
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய்
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே

#3482
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே

#3483
காண்-மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே

#3484
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே

#3485
கேய தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண்
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே

#3486
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே

#3487
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும்
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
மேவ காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே

#3488
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும்
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே

#3489
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே

#3490
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டு உரு கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே

#3491
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே

#3492
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழிய கடாய்
உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இ மண்ணின் மிசையே

#3493
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய்
விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே

#3494
நாயகன் முழு ஏழ்_உலகுக்குமாய் முழு ஏழ்_உலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே

#3495
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே

#3496
குமுறும் ஓசை விழவு ஒலி தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே

#3497
கரை கொள் பைம் பொழில் தண் பணை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே

#3498
நிற்கும் நால்மறை_வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே

#3499
குழையும் வாள் முகத்து ஏழையை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே

#3500
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்

#3501
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே

#3502
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே

#3503
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே

#3504
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே

#3505
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லிமங்கலத்தை சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே

#3506
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீல கரு நிற மேக நியாயற்கு
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏல குழலி இழந்தது சங்கே

#3507
சங்கு வில் வாள் தண்டு சக்கர கையற்கு
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே

#3508
நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு
கறங்கிய சக்கர கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே

#3509
பீடு உடை நான்முகனை படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்கு தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே

#3510
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே

#3511
கற்பக கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என்
வில் புருவ கொடி தோற்றது மெய்யே

#3512
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடை சாயே

#3513
சாய குருந்தம் ஒசித்த தமியற்கு
மாய சகடம் உதைத்த மணாளற்கு
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என்
வாச குழலி இழந்தது மாண்பே

#3514
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே

#3515
பொற்பு அமை நீள் முடி பூம் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே

#3516
கட்டு எழில் சோலை நல் வேங்கட_வாணனை
கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே

#3517
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே

#3518
ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே
போரும்-கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே

#3519
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ

#3520
கொல்லை என்பர்-கொலோ குணம் மிக்கனள் என்பர்-கொலோ
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே

#3521
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு
தேவி போய் இனி தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே

#3522
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய்
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே

#3523
மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே

#3524
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே

#3525
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே

#3526
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே

#3527
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே

#3528
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே

#3529
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே

#3530
ஓடிவந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே

#3531
தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள்
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே

#3532
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செம் கண் கரு முகிலை செய்ய வாய் செழும் கற்பகத்தை
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே

#3533
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கல்-மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம் சொல்லி
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே

#3534
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழி பிரான்
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே

#3535
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள்
மாசு_அறு நீல சுடர் முடி வானவர் கோனை கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே

#3536
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்
கார் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனை கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே

#3537
வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே

#3538
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின்-கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே

#3539
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்-பால்
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே

#3540
மண்ணும் விண்ணும் மகிழ குறளாய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே

#3541
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சால பல நாள் உகம்-தோறு உயிர்கள் காப்பானே
கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே
சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ

#3542
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறா
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே

#3543
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி
யுள் மீது ஆடி உரு காட்டாதே ஒளிப்பாயோ

#3544
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னை காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ

#3545
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே

#3546
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே

#3547
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவி கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ

#3548
குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே

#3549
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு
உரிய தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே

#3550
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே

#3551
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே

#3552
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே

#3553
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே

#3554
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே

#3555
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே

#3556
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே

#3557
நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே

#3558
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே

#3559
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே

#3560
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும்
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே

#3561
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே

#3562
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகா வகை செய்து போதிகண்டாய்
கன்னலே அமுதே கார் முகில்_வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே

#3563
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே

#3564
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே

#3565
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ

#3566
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே

#3567
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே

#3568
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே

#3569
குலம் முதல் அடும் தீவினை கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய்
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே

#3570
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ

#3571
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே

#3572
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும்
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே

#3573
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே

#3574
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும்
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும்
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே

#3575
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே

#3576
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே

#3577
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும்
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே

#3578
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே

#3579
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே

#3580
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே

#3581
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும்
கடி கமழ் கொன்றை சடையனே என்னும் நான்முக கடவுளே என்னும்
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே

#3582
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன்
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே

#3583
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள்
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே

#3584
நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே

#3585
செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே

#3586
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே

#3587
முனிந்து சகடம் உதைத்து மாய பேய் முலை உண்டு மருது இடை போய்
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னை காட்டு-மினே

#3588
காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா
கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே

#3589
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன்
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே

#3590
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார் கடல்_வண்ணனோடு என் திறத்து
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே

#3591
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
கார்_வண்ணன் கார் கடல் ஞாலம் உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப்பேரெயில் மாநகரே

#3592
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே

#3593
ஊழி-தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே

#3594
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே

#3595
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே

#3596
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

#3597
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே

#3598
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடை சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடை தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடை பாரதம் கை அறை போழ்தே

#3599
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிர புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே

#3600
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே

#3601
நேர் சரிந்தான் கொடி கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

#3602
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே

#3603
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே

#3604
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவி கற்பார்க்கே

#3605
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

#3606
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்ய செய்து நடந்தமை கேட்டுமே

#3607
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும்
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே

#3608
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ
பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து
நன்மை புனல் பண்ணி நான்முகனை பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே

#3609
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை
தாழ படாமல் தன்-பால் ஒரு கோட்டிடை தான் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்று கேட்டும் உணர்ந்துமே

#3610
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே

#3611
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டை சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசா செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே

#3612
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே

#3613
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே

#3614
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே

#3615
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனை தென் குருகூர் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே

#3616
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ
தாமரை_கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே

#3617
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர்
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ

#3618
காத்த எம் கூத்தா ஓ மலை ஏந்தி கல் மாரி-தன்னை
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே

#3619
எங்கு தலைப்பெய்வன் நான் எழில் மூ_உலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெம் கதிர் வச்சிர கை இந்திரன் முதலா தெய்வம் நீ
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே

#3620
என்னுடை கோவலனே என் பொல்லா கருமாணிக்கமே
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்-பால் உன்னை கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே

#3621
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப
செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே

#3622
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ

#3623
ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ

#3624
காண்டும்-கொலோ நெஞ்சமே கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே

#3625
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே

#3626
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கர செல்வன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே

#3627
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன்
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே

#3628
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே

#3629
வாலியது ஓர் கனி-கொல் வினையாட்டியேன் வல்வினை-கொல்
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே

#3630
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல்
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன்
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே

#3631
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல்
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே

#3632
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல்
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்-மின்களே

#3633
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே

#3634
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன்
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே

#3635
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல்
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே

#3636
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய்
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே

#3637
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே

#3638
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே

#3639
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய்
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே

#3640
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே

#3641
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய்
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே

#3642
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அற கொண்டிட்டு நீ
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே

#3643
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ
துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே

#3644
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய்
துயரம் செய் காமங்களாய் துலையாய் நிலையாய் நடையாய்
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே

#3645
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே

#3646
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே

#3647
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே

#3648
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே

#3649
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ

#3650
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னை கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே

#3651
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்கு தான் தன்னை சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ

#3652
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனை கவி தான் சொல்லி
ஒப்பிலா தீவினையேனை உய்யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே

#3653
சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை
பார் பரவு இன் கவி பாடும் பரமரே

#3654
இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னை பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே

#3655
வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆக புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எ நாள் சிந்தித்து ஆர்வனோ

#3656
ஆர்வனோ ஆழி அங்கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே

#3657
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை
உற பல இன் கவி சொன்ன உதவிக்கே

#3658
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே

#3659
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே

#3660
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ

#3661
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொலோ

#3662
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே

#3663
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே

#3664
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே

#3665
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர்
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே

#3666
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே

#3667
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே

#3668
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே

#3669
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே

#3670
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே

#3671
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய்

#3672
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா

#3673
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே

#3674
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன்தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ

#3675
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ

#3676
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே ஏழ்_உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே

#3677
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா

#3678
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே

#3679
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய் தெளி-தொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே

#3680
தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த பேர் உதவி கைம்மாறா
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே

#3681
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே

#3682
நங்கள் வரி வளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய் தளர்ந்தேன்
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே

#3683
வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே

#3684
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின்
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே

#3685
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன்
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் ஆழிவலவனை ஆதரித்தே

#3686
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழி-தோறு ஊழி ஒருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே

#3687
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே

#3688
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன்
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே

#3689
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள்
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே

#3690
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்

#3691
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள்மலர் பாதம் அடைந்ததுவே

#3692
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே

#3693
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள்
சங்கு சக்கர கையவன் என்பர் சரணமே

#3694
சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே

#3695
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆர தொழ காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே

#3696
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே

#3697
கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே

#3698
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே

#3699
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே

#3700
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழி திருமாலே

#3701
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என்
ஒரு மா முதல்வா ஊழி பிரான் என்னை ஆளுடை
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே

#3702
கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே

#3703
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன்
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே

#3704
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே

#3705
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன்
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே

#3706
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான்
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான்
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே

#3707
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே

#3708
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே

#3709
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே

#3710
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும்
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும்
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும்
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே

#3711
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர்
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே

#3712
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே
கொடை பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம்
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே

#3713
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே

#3714
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே

#3715
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதி செ வாய் முகிழதா
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாச தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே

#3716
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ
காண வாராய் கரு நாயிறு உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே

#3717
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய்
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால்
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே

#3718
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர் கமல கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல
தூ நீர் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே

#3719
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட மா நீர் கொண்டல் வண்ணனே

#3720
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால்
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே

#3721
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணிக்கொள்ளாய்
செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே

#3722
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும்
தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே

#3723
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள்
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால்
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தரமதுரை பிறந்த மாயனே

#3724
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே

#3725
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன்
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே

#3726
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே

#3727
திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உரு கெட வாளி பொழிந்த ஒருவனே

#3728
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்-தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாய பிரானே

#3729
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாச பொழில் மன்னு கோயில் கொண்டானே

#3730
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே

#3731
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே

#3732
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே

#3733
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி
தான நகரும் தன தாய பதியே

#3734
தாய பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே

#3735
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பக சோலை திருக்கடித்தானமே

#3736
சோலை திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே

#3737
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே

#3738
இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே

#3739
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே

#3740
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான்
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான்
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே

#3741
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள்
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே

#3742
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும்
கருமாணிக்க குன்றத்து தாமரை போல்
திருமார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே

#3743
செ வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தம்மோடு
எவ்வாய் சுடரும் தம்மில் முன் வளாய் கொள்ள
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே

#3744
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார்
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து
சிறியேனுடை சிந்தையுள் மூ_உலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே

#3745
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் எவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ_உலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே

#3746
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால்
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே

#3747
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை
அடி சேர்வகை வண் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இ பத்தும் சன்மம்
விட தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே

#3748
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல்_வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கு கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே

#3749
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான்
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன்
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை
ஒடியா இன்ப பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே

#3750
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வை பெற ஊர்ந்து இற ஏறி யானும் தானாய் ஒழிந்தானே

#3751
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே

#3752
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே

#3753
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே

#3754
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே

#3755
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல்
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே

#3756
கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையை கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே
வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே

#3757
உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே

#3758
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால்
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே

#3759
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல்
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர்
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ

#3760
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே

#3761
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரை பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே

#3762
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூ_உலகு உண்டு உமிழ் தேவபிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே

#3763
புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர்
முனைவன் மூ_உலகு ஆளி அப்பன் திருவருள் மூழ்கினளே

#3764
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிற கண்ணபிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே

#3765
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின்
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல் இலை தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே

#3766
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர்
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே

#3767
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான்
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே

#3768
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர்
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே

#3769
நேர்பட்ட நிறை மூ_உலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே

#3770
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே

#3771
வியன் மூ_உலகு பெறினும் போய் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ்
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே

#3772
உறுமோ பாவியேனுக்கு இ உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன்
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே

#3773
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே

#3774
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே

#3775
நுகர்ச்சி உறுமோ மூ_உலகின் வீடுபேறு தன் கேழ் இல்
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே

#3776
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி
முனி மா பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே

#3777
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர் கடலை படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே

#3778
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே

#3779
வாய்க்க தமியேற்கு ஊழி-தோறு ஊழிஊழி மா காயாம்
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே

#3780
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே

#3781
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே

#3782
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே

#3783
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே

#3784
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே

#3785
சதுரம் என்று தம்மை தாமே சம்மதித்து இன் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே

#3786
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே

#3787
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே

#3788
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே

#3789
யாதும் இல்லை மிக்கு அதனில் என்றுஎன்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே

#3790
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே

#3791
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே

#3792
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய்
தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே

#3793
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமை குற்றேவல்செய்து உன் பொன்
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே

#3794
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே

#3795
புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே

#3796
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே

#3797
காய் சின பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசை கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே

#3798
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உளம் நலம் கூர
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே

#3799
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே

#3800
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே

#3801
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே

#3802
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன்-தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே

#3803
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே

#3804
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே

#3805
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே

#3806
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம்
தரும் தேவனை சோரேல் கண்டாய் மனமே

#3807
மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே

#3808
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே

#3809
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே

#3810
இன்றி போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே

#3811
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே

#3812
தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே

#3813
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோலம் நீள் குருகூர் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே

#3814
மை ஆர் கரும்_கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உன்னை காண கருதும் என் கண்ணே

#3815
கண்ணே உன்னை காண கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே

#3816
அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே

#3817
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண்
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே

#3818
அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானை பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காண கருதும் கருத்தே

#3819
கருத்தே உன்னை காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே

#3820
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே

#3821
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும்
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே

#3822
கண்டுகொண்டு என் கண் இணை ஆர களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே

#3823
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே

#3824
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே

#3825
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்-மின் குயில் பேடைகாள்
என் உயிர் கண்ணபிரானை நீர் வர கூவுகிலீர்
என் உயிர் கூவி கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ

#3826
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே

#3827
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே

#3828
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே

#3829
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடை பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட
நம் திருமார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்

#3830
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆருயிர் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்

#3831
கூட்டுண்டு நீங்கிய கோல தாமரை கண் செ வாய்
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேக குழாங்கள்காள்
காட்டேல்-மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே

#3832
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறி கொன்றீர்
தயிர் பழம் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே

#3833
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்

#3834
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே

#3835
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ_உலகும் உருகுமே

#3836
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினை-தொறே

#3837
நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர்
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே

#3838
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்

#3839
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே

#3840
திருவருள்செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே

#3841
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே

#3842
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறைபட்டது என் ஆருயிர் கோள் உண்டே

#3843
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேக தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே

#3844
ஆருயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேக தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே

#3845
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்ற பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே

#3846
கடியனாய் கஞ்சனை கொன்ற பிரான்-தன்னை
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே

#3847
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே

#3848
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே

#3849
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய்
அ கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே

#3850
திருமேனி அடிகளுக்கு தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன்
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே

#3851
தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்பு-மினே

#3852
தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரை தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே

#3853
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண்
சுடர் பவள வாயனை கண்டு ஒரு நாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே

#3854
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும்
புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே

#3855
பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக்களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே

#3856
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அக மேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே

#3857
ஒழிவு இன்றி திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே

#3858
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும் வகை உண்டு-கொலோ கொடியேற்கே

#3859
கொடி ஏர் இடை கோகனகத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ

#3860
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே

#3861
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப்பணி செய்ய புகுந்தேன்
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா

#3862
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே

#3863
கண்டே களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

#3864
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே

#3865
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே

#3866
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ_உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ

#3867
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா

#3868
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை
திண்ணம் மதிள் தென் குருகூர் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே

#3869
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ

#3870
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்

#3871
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ

#3872
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ

#3873
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ
யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே

#3874
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்

#3875
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ

#3876
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான்

#3877
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்

#3878
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே

#3879
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே

#3880
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே

#3881
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே

#3882
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே

#3883
மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே

#3884
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே

#3885
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே

#3886
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே

#3887
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே

#3888
பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

#3889
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே

#3890
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே

#3891
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும்
தோளும் நான்கு உடை சுரி குழல் கமல கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே

#3892
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே

#3893
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே

#3894
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியை தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே

#3895
தொண்டீர் வம்-மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன்
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே

#3896
கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே

#3897
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே

#3898
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே

#3899
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய்
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே

#3900
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள்

#3901
ஏத்து-மின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனை குருகூர் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே

#3902
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே

#3903
இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே

#3904
ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசு-மினே

#3905
பேசு-மின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

#3906
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்

#3907
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்ல கேள்-மின் நாமும் போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே

#3908
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே

#3909
கடு வினை களையலாகும் காமனை பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நட-மினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்

#3910
நாம் உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்து கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

#3911
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே

#3912
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே

#3913
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா

#3914
தகவிலை தகவிலையே நீ கண்ணா தட முலை புணர்-தொறும் புணர்ச்சிக்கு ஆரா
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே

#3915
வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே

#3916
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால்

#3917
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்

#3918
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே

#3919
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே

#3920
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே

#3921
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல்
மிக பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

#3922
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே

#3923
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே

#3924
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள்
கார்_மேக_வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே

#3925
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே

#3926
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்
மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே

#3927
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே

#3928
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத்து_அணையானே

#3929
நாகத்து_அணையானை நாள்-தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே

#3930
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே

#3931
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்

#3932
கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே

#3933
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே

#3934
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே

#3935
கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே

#3936
நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே

#3937
தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே ஆள்வானே

#3938
ஆள்வான் ஆழி நீர்
கோள்வாய் அரவு_அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே

#3939
நாடீர் நாள்-தோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே

#3940
மேயான் வேங்கடம்
காயாமலர்_வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே

#3941
மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே

#3942
சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில்_வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆர்ஆர் அமரரே

#3943
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமர தொழுவார்கட்கு
அமரா வினைகளே

#3944
வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவி போம்
சுனை நல் மலர் இட்டு
நினை-மின் நெடியானே

#3945
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இ பத்து
அடியார்க்கு அருள் பேறே

#3946
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே

#3947
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே

#3948
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே

#3949
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

#3950
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே
நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே

#3951
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே

#3952
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே

#3953
மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே

#3954
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே

#3955
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான்
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே

#3956
காட்டி தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இ பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே

#3957
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்-மின் திருமாலிருஞ்சோலை
வஞ்ச கள்வன் மா மாயன் மாய கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே

#3958
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே

#3959
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான்
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே

#3960
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே

#3961
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே

#3962
திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூ_உலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழிஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே

#3963
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே

#3964
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

#3965
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி-தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே

#3966
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே

#3967
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய் புக்கு தானே தானே ஆனானை
தேன் ஆங்கார பொழில் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே

#3968
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே

#3969
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ்_உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்க பிடித்தேனே

#3970
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே

#3971
எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்ப
களிது ஆகிய சிந்தையனாய் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே

#3972
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே

#3973
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே

#3974
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலை
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே

#3975
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்-கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே

#3976
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான்
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே

#3977
உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே

#3978
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே

#3979
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே

#3980
நாரணன் தமரை கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே

#3981
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே

#3982
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே

#3983
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே

#3984
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

#3985
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

#3986
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று
முடி உடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே

#3987
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

#3988
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

#3989
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே

#3990
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லா
கனி வாய் தாமரை கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

#3991
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ

#3992
கூவி கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லா கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவி கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே

#3993
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள் மிசை நீயே ஓ
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே

#3994
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என்
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆருயிரை
ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

#3995
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ

#3996
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ

#3997
பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய் பயன் ஆயவை ஆய்
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்ற கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ

#3998
முதல் தனி வித்தேயோ முழு மூ_உலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ

#3999
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே

#4000
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே