<<முந்திய பக்கம்

நற்றிணை (201 - 250)

# பரணர்
# 201 குறிஞ்சி
மலை உறை குறவன் காதல் மட_மகள்
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி		5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு
அம் வெள் அருவி குட வரை_அகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்		10
மாயா இயற்கை பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே

# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 202 பாலை
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம்
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை		5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடும் கொடி போல			10
பல் பூ கோங்கம் அணிந்த காடே

# உலோச்சனார்
# 203 நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு	5
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும்			10
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே

# மள்ளனார்
# 204 குறிஞ்சி
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண	5
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும்		10
கொடிச்சி செல் புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே

# இளநாகனார்
# 205 பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும்
துன் அரும் கானம் என்னாய் நீயே			5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு
போயின்று-கொல்லோ தானே படப்பை
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய			10
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே

# ஐயூர் முடவனார்
# 206 குறிஞ்சி
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇ
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என	5
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும்
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை			10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே

# 207 நெய்தல்
கண்டல் வேலி கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி		5
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால்		10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளே

# நொச்சி நியமங்கிழார்
# 208 பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள்
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்		5
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்பும்-குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை		10
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே

# நொச்சி நியமங்கிழார்
# 209 குறிஞ்சி
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டு என பல விளைந்து
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல்	5
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்_கால் பையுள் தீரும் படாஅது
தவிரும் காலை ஆயின் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே

# மிளைகிழான் நல்வேட்டனார்
# 210 மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈர செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்		5
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கள் செல்வம் செல்வம் என்பதுவே

# கோட்டியூர் நல்லந்தையார்
# 211 நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில்
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை		5
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு
துறு கடல் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே

# குடவாயில் கீரத்தனார்
# 212 பாலை
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்		5
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே		10

# கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்
# 213 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்ற பலவின்
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம்
குழவி சேதா மாந்தி அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்		5
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை
கொய் புனம் காவலும் நுமதோ			10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே

# கருவூர் கோசனார்
# 214 பாலை
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என	5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி	10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே

# மதுரை சுள்ளம் போதனார்
# 215 நெய்தல்
குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்		5
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போகிய		10
கோள் சுறா குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே

# மதுரை மருதன் இளநாகனார்
# 216 மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர் காண்பு_உழி வாழ்தல்
கண் உறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே		5
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்			10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே

# கபிலர்
# 217 குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போல
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்		5
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே

# காவிதி கீரங்கண்ணனார்
# 218 நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும்
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்		5
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென்-கொல்லோ			10
பரியரை பெண்ணை அன்றில் குரலே

# தாயங்கண்ணனார்
# 219 நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல்	5
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே			10

# குண்டுகட்பாலியாதனார்
# 220 குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி
உண்ணா நன் மா பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி		5
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே		10

# இடைக்காடனார்
# 221 முல்லை
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில்		5
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர்
விருந்து விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள்
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க
நடை நாள் செய்த நவிலா சீறடி			10
பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே

# கபிலர்
# 222 குறிஞ்சி
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி		5
செலவுடன் விடுகோ தோழி பல உடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடும் குன்றம் காணிய நீயே		10

# உலோச்சனார்
# 223 நெய்தல்
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்		5
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சா கண்ணர்
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே

# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 224 பாலை
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும்	5
இன்ப வேனிலும் வந்தன்று நம்_வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அற
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய			10
வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கே

# கபிலர்
# 225 குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை		5
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே

# கணி புன்குன்றனார்
# 226 பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்_நுதல்
நாம் தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து	5
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இ உலகத்தானே

# தேவனார்
# 227 நெய்தல்
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ
படு மணி யானை பசும் பூண் சோழர்		5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே

# முடத்திருமாறனார்
# 228 குறிஞ்சி
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து
அருளான்-கொல்லோ தானே கானவன்		5
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே

# 229 பாலை
சேறும் சேறும் என்றலின் பல புலந்து
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் என செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு	5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென
ஆடிய இள மழை பின்றை			10
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே

# ஆலங்குடி வங்கனார்
# 230 மருதம்
முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர		5
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்_காலே		10

# இளநாகனார்
# 231 நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்		5
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறே

# முதுவெங்கண்ணனார்
# 232 குறிஞ்சி
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்
குளவி தண் கயம் குழைய தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலி சிறுகுடி அலற
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும்		5
மா மலை நாட காமம் நல்கு என
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே

# அஞ்சில் ஆந்தையார்
# 233 குறிஞ்சி
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று		5
கூறுவென் வாழி தோழி முன் உற
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅ
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே

# 234 குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு	5
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே

# 235 நெய்தல்
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலை தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்		5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணி கலி_மா கடைஇ
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே			10

# நம்பி குட்டுவன்
# 236 குறிஞ்சி
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு	5
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே			10

# காரிக்கண்ணனார்
# 237 பாலை
நனி மிக பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை	5
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே		10

# கந்தரத்தனார்
# 238 முல்லை
வறம் கொல வீந்த கானத்து குறும் பூ
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை			5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன்
உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்				10
இனிய அல்ல நின் இடி நவில் குரலே

# குன்றியனார்
# 239 நெய்தல்
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின்		5
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும்
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி		10
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே

# நப்பாலத்தனார்
# 240 பாலை
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள்
கை கவர் முயக்கம் மெய் உற திருகி
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்		5
வெயில் வெய்து_உற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே		10

# மதுரை பெருமருதனார்
# 241 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை
புள் அடி பொறித்த வரி உடை தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன்		5
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து		10
பல் இதழ் உண்கண் கலுழ
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே

# விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்
# 242 முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ
பொன் என கொன்றை மலர மணி என
பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து		5
செல்க பாக நின் தேரே உவ காண்
கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே			10

# காமக்கணி பசலையார்
# 243 பாலை
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில்
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு	5
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என
கையற துறப்போர் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை பொருள்_வயின்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்			10
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே

# கூற்றங்குமரனார்
# 244 குறிஞ்சி
விழுந்த மாரி பெரும் தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ		5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்			10
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே

# அல்லங்கீரனார்
# 245 நெய்தல்
நகை ஆகின்றே தோழி தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்		5
தெளி தீம் கிளவி யாரையோ என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்கு உற்றமை கூறி கானல்		10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

# காப்பியம் சேந்தனார்
# 246 பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மா சினை
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி		5
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே			10

# பரணர்
# 247 குறிஞ்சி
தொன்றுபடு துப்பொடு முரண் மிக சினைஇ
கொன்ற யானை செம் கோடு கழாஅ
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ		5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே

# காசிபன் கீரனார்
# 248 முல்லை
சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணி பெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்		5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மட கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே

# உலோச்சனார்
# 249 நெய்தல்
இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்		5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ			10
சென்றது அன்றோ கொண்கன் தேரே

# மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்
# 250 மருதம்
நகுகம் வாராய் பாண பகு வாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன்
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்			5
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே		10