<<முந்திய பக்கம்

நற்றிணை (251 - 300)

# மதுரை பெருமருதிள நாகனார்
# 251 குறிஞ்சி
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நன் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி		5
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும்
தோடு இடம் கோடாய் கிளர்ந்து			10
நீடினை விளைமோ வாழிய தினையே

# அம்மெய்யன் நாகனார்
# 252 பாலை
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த			5
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்	10
நன் நா புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனை_இழை குணனே

# கபிலர்
# 253 குறிஞ்சி
புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள்		5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே

# உலோச்சனார்
# 254 நெய்தல்
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும்
துனி இல் நன் மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப		5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீல
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி			10
வானம் வேண்டா உழவின் எம்
கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே

# ஆலம்பேரி சாத்தனார்
# 255 குறிஞ்சி
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார்
வய களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ		5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திரு மணி அரவு தேர்ந்து உழல			10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே

# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 256 பாலை
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி		5
களவுடன் கமழ பிடவு தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை
மட பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்			10
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே

# வண்ணக்கன் சோருமருங்குமரனார்
# 257 குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை		5
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம்
நன் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே			10

# நக்கீரர்
# 258 நெய்தல்
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த		5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்		10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே

# கொற்றம் கொற்றனார்
# 259 குறிஞ்சி
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி		5
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போல காண்பேன் விரி திரை
கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே		10

# பரணர்
# 260 மருதம்
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை
பழன தாமரை பனி மலர் முணைஇ
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழ		5
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே		10

# சேந்தன் பூதனார்
# 261 குறிஞ்சி
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து		5
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
எருவை நறும் பூ நீடிய
பெரு வரை சிறு நெறி வருதலானே		10

# பெருந்தலை சாத்தனார்
# 262 பாலை
தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்		5
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால்
குவளை நாறும் கூந்தல் தே மொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே		10

# இளவெயினனார்
# 263 நெய்தல்
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்
இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது		5
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே			10

# ஆவூர் காவிதிகள் சாதேவனார்
# 264 பாலை
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர			5
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே

# பரணர்
# 265 குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்			5
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம்_வயினானே

# கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
# 266 முல்லை
கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்			5
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய_காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே

# கபிலர்
# 267 நெய்தல்
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்		5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல்		10
இவை மகன் என்னா அளவை
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே

# வெறி பாடிய காமக்கண்ணியார்
# 268 குறிஞ்சி
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு			5
காதல் செய்தவும் காதல் அன்மை
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம்
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே

# எயினந்தை மகன் இளங்கீரனார்
# 269 பாலை
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன்
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி		5
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே

# பரணர்
# 270 நெய்தல்
தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா		5
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே			10
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே

# 271 பாலை
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்		5
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு	10
மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே

# முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
# 272 நெய்தல்
கடல் அம் காக்கை செ வாய் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி		5
பூ உடை குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுது ஆக
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே		10

# மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
# 273 குறிஞ்சி
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்து_உறீஇ நம்_வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்			5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே	10

# காவன் முல்லை பூதனார்
# 274 பாலை
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்		5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே

# அம்மூவனார்
# 275 நெய்தல்
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற
காணார் முதலொடு போந்து என பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை
தன் உறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்		5
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து
அறன் இலாளன் புகழ என்
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே

# தொல் கபிலர்
# 276 குறிஞ்சி
கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்		5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே		10

# தும்பி சேர் கீரனார்
# 277 பாலை
கொடியை வாழி தும்பி இ நோய்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை		5
நுண் முள் வேலி தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்	10
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே

# உலோச்சனார்
# 278 நெய்தல்
படு காழ் நாறிய பராஅரை புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பன் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை		5
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி
குளம்பினும் சே_இறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே

# கயமனார்
# 279 பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு		5
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய்
சிலம்பு கழீஇய செல்வம்			10
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே

# பரணர்
# 280 மருதம்
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன்			5
பழன யாமை பாசடை புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே		10

# கழார் கீரன் எயிற்றியார்
# 281 பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும்
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும்
அடங்கா சொன்றி அம் பல் யாணர்		5
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து_உற்ற மால் இருள் நடுநாள்
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம்
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்			10
அன்பு இலர் தோழி நம் காதலோரே

# நல்லூர் சிறு மேதாவியார்
# 282 குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன்		5
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே

# மதுரை மருதன் இளநாகனார்
# 283 நெய்தல்
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை		5
முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே

# தேய்புரி பழங்கயிற்றினார்
# 284 பாலை
புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்		5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல			10
வீவது-கொல் என் வருந்திய உடம்பே

# மதுரை கொல்லன் வெண்ணாகனார்
# 285 குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட		5
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு கால் குரம்பை தன் குடி_வயின் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்			10
பகலின் வரூஉம் எறி புனத்தானே

# துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்
# 286 பாலை
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து		5
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே

# உலோச்சனார்
# 287 நெய்தல்
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழி
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்		5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்_கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என		10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே

# குளம்பனார்
# 288 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை		5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில்
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல்
சிறு கிளி கடிகம் சென்றும் இ
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே	10	

# மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்
# 289 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறி_தக இருளி
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி		5
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே

# மதுரை மருதன் இளநாகனார்
# 290 மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே		5
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே

# கபிலர்
# 291 நெய்தல்
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும்
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்		5
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லி தரீஇய இன நிரை
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே

# நல்வேட்டனார்
# 292 குறிஞ்சி
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை		5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே

# கயமனார்
# 293 பாலை
மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல்		5
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே

# புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
# 294 குறிஞ்சி
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ	5
கொன்ற யானை கோடு கண்டு அன்ன
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்பு உடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே

# ஔவையார்
# 295 நெய்தல்
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த			5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இல்_கடை ஒழிய
சேறும் வாழியோ முதிர்கம் யாமே

# குதிரை தறியனார்
# 296 பாலை
என் ஆவது-கொல் தோழி மன்னர்
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும்			5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே

# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
# 297 குறிஞ்சி
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய்
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை	5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை			10
ஐயம் இன்றி கடும் கவவினளே

# விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
# 298 பாலை
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும்
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை		5
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை		10
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே

# வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
# 299 நெய்தல்
உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண்		5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே

# 300 மருதம்
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர்
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்	5
முன்கடை நிறீஇ சென்றிசினோனே
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்			10
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே