<<முந்திய பக்கம்

நற்றிணை (51 - 100)

# 51 குறிஞ்சி

யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு		5
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த				10
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே

# 52 பாலை

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்		5
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்			10
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

# 53 குறிஞ்சி

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்			5
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்			10
பனியும் தீர்குவள் செல்க என்றோளே

# 54 நெய்தல்

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை		5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்			10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே

# 55 குறிஞ்சி

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்		5
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த	10
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே

# 56 பாலை

குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா		5
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே		10

# 57 குறிஞ்சி

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்		5
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே		10

# 58 நெய்தல்

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்		5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்			10
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

# 59 முல்லை

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்		5
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்_வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே	10

# 60 மருதம்

மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு		5
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின் அவண
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல்
மா இரும் கூந்தல் மடந்தை			10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே

# 61 குறிஞ்சி
கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின்		5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு
கண்ணும் படுமோ என்றிசின் யானே		10

# 62 பாலை
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று	5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள்
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே		10

# 63 நெய்தல்
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்		5
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப
பசலை ஆகி விளிவது-கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்			10
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே

# 64 குறிஞ்சி
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்		5
வறன்_உற்று ஆர முருக்கி பையென
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என்
அறிவும் உள்ளமும் அவர்_வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது		10
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே

# 65 குறிஞ்சி
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியொடு பொருத புண் கூர் யானை		5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல்
உரும் இடை கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே

# 66 பாலை
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின்		5
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையற கலுழும் என்			10
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே

# 67 நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரைய
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே		5
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்		10
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே

# 68 குறிஞ்சி
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்		5
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே	10

# 69 முல்லை
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மட பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்		5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்		10
இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே

# 70 மருதம்
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி	5
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

# 71 பாலை
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று		5
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்ப கேள்-தொறும்			10
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே

# 72 நெய்தல்
பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு_தக்கன்று அது காணும்_காலை
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது
அழி_தக்கன்றால் தானே கொண்கன்		5
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா		10
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே

# 73 பாலை
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய்
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய		5
செல்ப என்ப தாமே செ வரி
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்		10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே

# 74 நெய்தல்
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை		5
ஏதிலாளனும் என்ப போது அவிழ்			
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்			10
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே

# 75 குறிஞ்சி
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல்		5
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல
சே அரி பரந்த மா இதழ் மழை கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே			10

# 76 பாலை
வரு மழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள்		5
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே

# 77 குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர்
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்	5
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல்		10
திதலை அல்குல் குறு_மகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே

# 78 நெய்தல்
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை		5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா
வலவன் கோல் உற அறியா			10
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே

# 79 பாலை
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ
கூரை நன் மனை குறும் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர்		5
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே		10

# 80 மருதம்
மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என		5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

# 81 முல்லை
இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ்		5
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே		10

# 82 குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த
வேய் வனப்பு உற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே		5
போகிய நாக போக்கு அரும் கவலை
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை			10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே

# 83 குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்		5
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே

# 84 பாலை
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே இன்றே
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்
மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம்		5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்			10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே

# 85 குறிஞ்சி
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும்
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும்
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும்		5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்			10
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே

# 86 பாலை
அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக
கைவல் வினைவன் தையுபு சொரிந்த		5
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே

# 87 நெய்தல்
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு		5
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே

# 88 குறிஞ்சி
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண்		5
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே

# 89 முல்லை
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்		5
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த			10
புன்கண் மாலையும் புலம்பும் முந்து_உறுத்தே

# 90 மருதம்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெரும் கைதூவா
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி			5
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா			10
நயன் இல் மாக்களொடு கெழீஇ
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே

# 91 நெய்தல்
நீ உணர்ந்தனையே தோழி வீ உக
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்		5
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார்		10
கடு மா பூண்ட நெடும் தேர்
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே

# 92 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்ட சீறூர் அகன் கண் கேணி			5
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே

# 93 குறிஞ்சி
பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக நாளும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட		5
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்		10
மயிர் கண் முரசினோரும் முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே

# 94 நெய்தல்
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்		5
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்
என்ன மகன்-கொல் தோழி தன்_வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே

# 95 குறிஞ்சி
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து	5
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே		10

# 96 நெய்தல்
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்		5
துவரினர் அருளிய துறையே அதுவே
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி		10
பைஇ பைய பசந்தனை பசப்பே

# 97 முல்லை
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்		5
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட_மகளே

# 98 குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என			5
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே		10
வைகலும் பொருந்தல் ஒல்லா
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே

# 99 முல்லை
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று		5
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே			10

# 100 மருதம்
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
மாரி கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்		5
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்		10
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே