<<முந்திய பக்கம்

குறுந்தொகை (251 - 300)

# 251 முல்லை
மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்து என அதன்_எதிர்
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன
கார் அன்று இகுளை தீர்க நின் படரே
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே
# இடைக்காடன்

# 252 குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ என கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலே
# கிடங்கில் குலபதி நக்கண்ணன்

# 253 பாலை
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல்
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே
# பூங்கண்ணன்

# 254 பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன வாரா தோழி
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர்
எய்தினரால் என வரூஉம் தூதே
# பார்காப்பான்

# 255 பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே
# கடுகு பெரும் தேவன்

# 256 பாலை
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே

# 257 குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம்
அகலினும் அகலாது ஆகி
இகலும் தோழி நம் காமத்து பகையே
# உறையூர் சிறுகந்தன்

# 258 மருதம்
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே
அலர் ஆகின்றால் பெரும காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே
# பரணர்

# 259 குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல்
பல் இதழ் மழை கண் மாஅயோயே
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல்
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ
நெஞ்சம் நன்றே நின்_வயினானே
# பரணர்

# 260 பாலை
குருகும் இரு விசும்பு இவரும் புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும்
வருவர்-கொல் வாழி தோழி பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே
# கல்லாடனார்

# 261 குறிஞ்சி
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும்
அஞ்சுவரு பொழுதினானும் என் கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே
# கழார் கீரன் எயிற்றி

# 262 பாலை
ஊஉர் அலர் எழ சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே
# பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 263 குறிஞ்சி
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோ_தக்கன்றே தோழி மால் வரை
மழை விளையாடும் நாடனை
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே
# பெருஞ்சாத்தன்

# 264 குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த_காலும் பயப்பு ஒல்லாதே
# கபிலர்

# 265 குறிஞ்சி
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும்
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன் இஃது ஆகா ஆறே
# கருவூர் கதப்பிள்ளை

# 266 பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே
# நக்கீரர்

# 267 பாலை
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம்
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே
# காலெறி கடிகையார்

# 268 நெய்தல்
சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே
# கருவூர் சேரமான் சாத்தன்

# 269 நெய்தல்
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனி சென்றனள் அதனால்
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே
# கல்லாடனார்

# 270 முல்லை
தாழ் இருள் துமிய மின்னி தண்ணென
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி குவளை
குறும் தாள் நாள்_மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே
# பாண்டியன் பன்னாடு தந்தான்

# 271 மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனை தேறி
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது
தவ பல் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே
# அழிசி நாச்சாத்தனார்

# 272 குறிஞ்சி
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே
# ஒருசிறைப்பெரியன்

# 273 பாலை
அல்கு_உறு பொழுதில் தாது முகை தயங்க
பெரும் காடு உளரும் அசை வளி போல
தண்ணிய கமழும் ஒண் நுதலோயே
நொந்தன ஆயின் கண்டது மொழிவல்
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம்
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே
# சிறைக்குடி ஆந்தையார்

# 274 பாலை
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னா கானமும் இனிய பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே
# உருத்திரன்

# 275 முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே
# ஒக்கூர் மாசாத்தியார்

# 276 குறிஞ்சி
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே
# கூழி கொற்றன்

# 277 பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை
எ_கால் வருவது என்றி
அ-கால் வருவர் எம் காதலோரே
# ஓரில் பிச்சையார்

# 278 பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே
# பேரிசாத்தன்

# 279 முல்லை
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும்
இரும் பல் குன்றம் போகி
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே
# மதுரை மருதன் இளநாகனார்

# 280 குறிஞ்சி
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணர புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே
# நக்கீரர்

# 281 பாலை
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின்
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூ
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே
# குடவாயில் கீரத்தன்

# 282 பாலை
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே
# நாகம்போத்தன்

# 283 பாலை
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே
# பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 284 குறிஞ்சி
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலை குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே
# மிளைவேள் தித்தன்

# 285 பாலை
வைகா வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ்
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே
# பூத தேவன்

# 286 குறிஞ்சி
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே
# எயிற்றியனார்

# 287 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி
செழும் பல் குன்றம் நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே
# கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 288 குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே
# கபிலர்

# 289 முல்லை
வளர்பிறை போல வழிவழி பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே
பட்ட மாரி படாஅ_கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே
# பெரும் கண்ணனார்

# 290 நெய்தல்
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர்
கல் பொரு சிறு நுரை போல
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே
# கல்பொருசிறுநுரையார்

# 291 குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே
அது புலந்து அழுத கண்ணே சாரல்
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே
# கபிலர்

# 292 குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே
# பரணர்

# 293 மருதம்
கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சே_இழை அந்தில்
கொழுநன் காணிய அளியேன் யானே
# கள்ளில் ஆத்திரையன்

# 294 நெய்தல்
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும்
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும்
நொதுமலர் போல கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை
தழையினும் உழையின் போகான்
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே
# அஞ்சில் ஆந்தையார்

# 295 நெய்தல்
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை
பெரு நல குறு_மகள் வந்து என
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே
# தூங்கலோரி

# 296 நெய்தல்
அம்ம வாழி தோழி புன்னை
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவன் காணின் முன் நின்று
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள்
இன்னள் ஆக துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே
# பெரும்பாக்கன்

# 297 குறிஞ்சி
அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனம் தலை நல்ல கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே
# காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்

# 298 குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர்
மட பிடி பரிசில் மான
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே
# பரணர்

# 299 நெய்தல்
இது மற்று எவனோ தோழி முதுநீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன்
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே
# வெண்மணி பூதி

# 300 குறிஞ்சி
குவளை நாறும் குவை இரும் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே
# சிறைக்குடி ஆந்தையார்