<<முந்திய பக்கம்

குறுந்தொகை (51 - 100)

# குன்றியனார்
# 51 நெய்தல்
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்			5
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே

# பனம்பாரனார்
# 52 குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே	5

# கோப்பெருஞ்சோழன்
# 53 மருதம்
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை		5
நேர் இறை முன்கை பற்றி
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே

# மீனெறி தூண்டிலார்
# 54 குறிஞ்சி
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே		5

# நெய்த கார்க்கியர்
# 55 நெய்தல்
மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே		5

# சிறைக்குடி ஆந்தையார்
# 56 பாலை
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்
வருக தில் அம்ம தானே
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே	5

# சிறைக்குடி ஆந்தையார்
# 57 நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து			5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே

# வெள்ளிவீதியார்
# 58 குறிஞ்சி
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல			5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே

# மோசிகீரனார்
# 59 பாலை
பதலை பாணி பரிசிலர் கோமான்
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ மற்றே முயலவும்
சுரம் பல விலங்கிய அரும் பொருள்		5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே

# பரணர்
# 60 குறிஞ்சி
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்			5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே

# தும்பிசேர்கீரன்
# 61 மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர்
பொய்கை ஊரன் கேண்மை			5
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே

# சிறைக்குடி ஆந்தையார்
# 62 குறிஞ்சி
கோடல் எதிர் முகை பசு வீ முல்லை
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே		5

# உகாய்க்குடி கிழார்
# 63 பாலை
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே

# கருவூர் கதப்பிள்ளை
# 64 முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மட கண் குழவி அலம்வந்து அன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட்டோரே			5

# கோவூர் கிழார்
# 65 முல்லை
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள
தான் வந்தன்றே தளி தரு தண் கார்
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே		5

# கோவர்த்தனார்
# 66 முல்லை
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே			5

# அள்ளூர் நன்முல்லை
# 67 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே		5

# அள்ளூர் நன்முல்லை
# 68 குறிஞ்சி
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே

# கடுந்தோட் கரவீரன்
# 69 குறிஞ்சி
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என
கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்				5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே

# ஓரம்போகியார்
# 70 குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள்
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி
அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே		5

# கருவூர் ஓதஞானி
# 71 பாலை
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்கு_உறு மகளே

# மள்ளனார்
# 72 குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே		5

# பரணர்
# 73 குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே		5

# விட்ட குதிரையார்
# 74 குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆன் ஏறு போல
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே		5

# படுமரத்து மோசிகீரனார்
# 75 மருதம்
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண் கோட்டு யானை சோனை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்
யார் வாய் கேட்டனை காதலர் வரவே		5

# கிள்ளிமங்கலங்கிழார்
# 76 குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு
செல்ப என்பவோ கல் வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும்			5
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே

# மதுரை மருதன் இளநாகனார்
# 77 பாலை
அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு			5
எளிய ஆகிய தட மென் தோளே

# நக்கீரனார்
# 78 குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்			5
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே

# குடவாயி கீரனக்கன்
# 79 பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை
அலங்கல் உலவை ஏறி ஒய்யென
புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்			5
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்கு
செல்லாது ஏகல் வல்லுவோரே

# ஔவையார்
# 80 மருதம்
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி		5
முனை ஆன் பெரு நிரை போல
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே

# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 81 குறிஞ்சி
இவளே
நின் சொல் கொண்ட என் சொல் தேறி
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள்
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும்		5
நிலவும் இருளும் போல புலவு திரை
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே

# கடுவன் மள்ளன்
# 82 குறிஞ்சி
வார்_உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல்
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும்			5
அரும் பனி அற்சிரம் வாராதோரே

# வெண்பூதன்
# 83 குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே		5

# மோசிகீரன்
# 84 பாலை
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே		5

# வடம வண்ணக்கன் தாமோதரன்
# 85 மருதம்
யாரினும் இனியன் பேர் அன்பினனே
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்			5
யாணர் ஊரன் பாணன் வாயே

# வெண்கொற்றன்
# 86 குறிஞ்சி
சிறை பனி உடைந்த சே அரி மழை கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்		5
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே

# கபிலர்
# 87 குறிஞ்சி
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே		5

# மதுரை கதக்கண்ணன்
# 88 குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி
தொன் முரண் சொல்லும் துன் அரும் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடு நாணலமே தோழி நாமே			5

# பரணர்
# 89 மருதம்
பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய		5
நல் இயல் பாவை அன்ன இ
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே

# மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
# 90 குறிஞ்சி
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி
வரை இழி அருவி உண்துறை தரூஉம்		5
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே

# ஔவையார்
# 91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண் கை			5
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே

# தாமோதரன்
# 92 நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறை பறவை
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே	5	

# அள்ளூர் நன்முல்லையார்
# 93 மருதம்
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பு இலம்_கடையே

# கதக்கண்ணன்
# 94 முல்லை
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே		5
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே

# கபிலர்
# 95 குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல்
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள்
நீர் ஓர் அன்ன சாயல்
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே		5

# அள்ளூர் நன்முல்லை
# 96 குறிஞ்சி
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே

# வெண்பூதி
# 97 நெய்தல்
யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே

# கோக்குளமுற்றன்
# 98 முல்லை
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே			5

# ஔவையார்
# 99 முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு		5
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே

# கபிலர்
# 100 குறிஞ்சி
அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல் வில் ஓரி கொல்லி குட வரை		5
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே