அகநானூறு (101 - 150)
#101 பாலை மாமூலனார் அம்ம வாழி தோழி இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகி கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் தண் கார் ஆலியின் தாவன உதிரும் பனி படு பன் மலை இறந்தோர்க்கு முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே #102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன் உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் காவலர் அறிதல் ஓம்பி பையென வீழா கதவம் அசையினன் புகுதந்து உயங்கு படர் அகல முயங்கி தோள் மணந்து இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் நல்காமையின் அம்பல் ஆகி ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே #103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின் விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி காமர் சேவல் ஏமம் சேப்ப முளி அரில் புலம்ப போகி முனாஅது முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் மனை இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்_வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என நள்ளென் யாமத்து உயவு துணை ஆக நம்மொடு பசலை நோன்று தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே #104 முல்லை மதுரை மருதன் இளநாகனார் வேந்து வினை முடித்த_காலை தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென் வேல் இளையர் இன்புற வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் வாங்கு சினை பொலிய ஏறி புதல பூ கொடி அவரை பொய் அதள் அன்ன உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை இனிது செய்தனையால் எந்தை வாழிய பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் ஆய் தொடி அரிவை கூந்தல் போது குரல் அணிய வேய்தந்தோயே #105 பாலை தாயங்கண்ணனார் அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலை தொடலை தைஇ மெல்லென நல் வரை நாடன் தன் பாராட்ட யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள் நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி சில் பரி குதிரை பல் வேல் எழினி கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழு தொடை மறவர் தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் முகை தலை திறந்த வேனில் பகை தலைமணந்த பல் அதர் செலவே #106 மருதம் ஆலங்குடி வங்கனார் எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப நாம் அது செய்யாம் ஆயினும் உய்யாமையின் செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் களிறு பெறு வல்சி பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே #107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார் நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் மாலை இன் துணை ஆகி காலை பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப மண மனை கமழும் கானம் துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே #108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார் புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் வரை முதல் சிதறிய வை போல் யானை புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி படு மழை பொழிந்த பானாள் கங்குல் ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் இருள் இடை தமியன் வருதல் யாவதும் அருளான் வாழி தோழி அல்கல் விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் காயா மென் சினை தோய நீடி பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் மை ஆடு சென்னிய மலை கிழவோனே #109 பாலை கடுந்தொடைகாவினார் பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி காடு கால்யாத்த நீடு மர சோலை விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் வறன்_உறு குன்றம் பல விலங்கினவே #110 நெய்தல் போந்தை பசலையார் அன்னை அறியினும் அறிக அலர் வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க பிறிது ஒன்று இன்மை அறிய கூறி கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனம் ஆக எய்த வந்து தட மென் பணை தோள் மட நல்லீரே எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த கொழு மீன் வல்சி என்றனம் இழுமென நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ என காலின் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால் ஒழிகோ யான் என அழி_தக கூறி யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் நெடும் தேர் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் என்றும் என் மகட்கே #111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி வருவர் வாழி தோழி அரச யானை கொண்ட துகில் கொடி போல அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர மழை என மருண்ட மம்மர் பல உடன் ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்த கேழல் அட்ட நல் கோள் செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப குருதி ஆரும் எருவை செம் செவி மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட புண் தேர் விளக்கின் தோன்றும் விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே #112 குறிஞ்சி ஆவூர் கிழார் கூனல் எண்கின் குறு நடை தொழுதி சிதலை செய்த செம் நிலை புற்றின் மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் பனி இரும் சோலை எமியம் என்னாய் தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே நாள் இடைப்படின் என் தோழி வாழாள் தோள்_இடை முயக்கம் நீயும் வெய்யை கழிய காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான் தோய் வெற்ப கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் தொன்று இயல் மரபின் மன்றல் அயர பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே #113 பாலை கல்லாடனார் நன்று அல் காலையும் நட்பின் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற நல்காது துறந்த காதலர் என்றும் கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் அல்கு வன் சுரை பெய்த வல்சியர் இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் அறு துறை அயிர் மணல் படு_கரை போகி சேயர் என்றலின் சிறுமை உற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் பராரை அலங்கல் அம் சினை குடம்பை புல்லென புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு மெய் இவண் ஒழிய போகி அவர் செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே #114 முல்லை கேளாய் எல்ல தோழி வேலன் வெறி அயர் களத்து சிறு பல தாஅய விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் வான்_அக மீனின் விளங்கி தோன்றும் அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் அணங்கு சால் அரிவையை காண்குவம் பொலம் படை கலி_மா பூண்ட தேரே #115 பாலை மாமூலனார் அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று அறை மிசை தாஅம் அத்த நீள் இடை பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு நம் நீத்து உறையும் பொருள்_பிணி கூடாமையின் நீடியோரே #116 மருதம் பரணர் எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர பெரிய நாண் இலை மன்ற பொரி என புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல் மாழை நோக்கின் காழ் இயல் வன முலை எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து அலர் ஆகின்றால் தானே மலர் தார் மை அணி யானை மற போர் செழியன் பொய்யா விழவின் கூடல் பறந்தலை உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் ஓடு புறம் கண்ட ஞான்றை ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே #117 பாலை மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை வளம் கெழு திரு நகர் புலம்ப போகி வெருவரு கவலை ஆங்கண் அருள்வர கரும் கால் ஓமை ஏறி வெண் தலை பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம் கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே #118 குறிஞ்சி கபிலர் கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் தேம் கமழ் இணர வேங்கை சூடி தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய் பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள் அளியள் தான் நின் அளி அலது இலளே #119 பாலை குடவாயி கீரத்தனார் நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை தொடை அமை பீலி பொலிந்த கடிகை மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள மற புலி உழந்த வசி படு சென்னி உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை மை தோய் சிமைய மலை முதல் ஆறே #120 நெய்தல் நக்கீரனார் நெடுவேள் மார்பின் ஆரம் போல செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப எல்லை பைப்பய கழிப்பி குட_வயின் கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு மதர் எழில் மழை கண் கலுழ இவளே பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது அழல் தொடங்கினளே பெரும அதனால் கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ வல் வில் இளையரொடு எல்லி செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே #121 பாலை மதுரை மருதன் இளநாகன் நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் வேனில் நீடிய வான் உயர் வழி நாள் வறுமை கூரிய மண் நீர் சிறு குள தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து அல்கு_உறு வரி நிழல் அசைஇ நம்மொடு தான் வரும் என்ப தட மென் தோளி உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண் கரு முக முசுவின் கானத்தானே #122 குறிஞ்சி பரணர் இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று வலம் சுரி தோகை ஞாளி மகிழும் அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் இல் எலி வல்சி வல் வாய் கூகை கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் வளை கண் சேவல் வாளாது மடியின் மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து ஆதி போகிய பாய் பரி நன் மா நொச்சி வேலி தித்தன் உறந்தை கல் முதிர் புறங்காட்டு அன்ன பல் முட்டு இன்றால் தோழி நம் களவே #123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார் உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடா படிவத்து ஆன்றோர் போல வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் மழை மருள் பல் தோல் மா வண் சோழர் கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெரும் கடல் ஓதம் போல ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே #124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து சென்றீக என்ப ஆயின் வேந்தனும் நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு இன்றே புகுதல் வாய்வது நன்றே மாட மாண் நகர் பாடு அமை சேக்கை துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற பாசறை வருத்தம் வீட நீயும் மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய காலை எய்த கடவு-மதி மாலை அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை அரமிய வியல் அகத்து இயம்பும் நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே #125 பாலை பரணர் அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப தாது உறு குவளை போது பிணி அவிழ படாஅ பைம் கண் பா அடி கய வாய் கடாஅம் மாறிய யானை போல பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் தனியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரண் இல் காலை கைதொழு மரபின் கடவுள் சான்ற செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின் விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் சூடா வாகை பறந்தலை ஆடு பெற ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே #126 மருதம் நக்கீரர் நின வாய் செத்து நீ பல உள்ளி பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறை தயங்க கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் காலை தந்த கணை கோட்டு வாளைக்கு அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான் பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை-கொல்லோ நீயே கிளி என சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய கயல் என அமர்த்த உண்கண் புயல் என புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் மின் நேர் மருங்குல் குறு_மகள் பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே #127 பாலை மாமூலனார் இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய வலம் படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடு சால் நன் கலம் பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் நிலம் தின துறந்த நிதியத்து அன்ன ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் தங்கலர் வாழி தோழி செம் கோல் கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி கல்லா மழவர் வில் இடம் தழீஇ வருநர் பார்க்கும் வெருவரு கவலை மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் பழி தீர் காதலர் சென்ற நாட்டே #128 குறிஞ்சி கபிலர் மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇ காமம் கடலினும் உரைஇ கரை பொழியும்மே எவன்-கொல் வாழி தோழி மயங்கி இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் குறும் சுனை குவளை வண்டு பட சூடி கான நாடன் வரூஉம் யானை கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி மாரி வானம் தலைஇ நீர் வார்பு இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர் தளர் அடி தாங்கிய சென்றது இன்றே #129 பாலை குடவாயில் கீரத்தனார் உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் குவளை உண்கண் இவளொடு செலற்கு என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே #130 நெய்தல் வெண்கண்ணனார் அம்ம வாழி கேளிர் முன் நின்று கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை பேஎய் தலைய பிணர் அரை தாழை எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் வயிறு உடை போது வாலிதின் விரீஇ புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம் கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் நல் தேர் வழுதி கொற்கை முன்துறை வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே #131 பாலை மதுரை மருதன் இளநாகனார் விசும்பு உற நிவந்த மா தாள் இகணை பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என வீளை அம்பின் விழு தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம் நம்மொடு வருக என்னுதி ஆயின் வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே #132 குறிஞ்சி தாயங்கண்ணனார் ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி வால் நிண புகவின் கானவர் தங்கை அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின் கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப துளி தலை தலைஇய சாரல் நளி சுனை கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை வேங்கை விரி இணர் ஊதி காந்தள் தேன் உடை குவி குலை துஞ்சி யானை இரும் கவுள் கடாஅம் கனவும் பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே #133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார் குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர் புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப கார் தலைமணந்த பைம் புதல் புறவின் வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் கொல்லை இதைய குறும் பொறை மருங்கில் கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று வான் கொள் தூவல் வளி தர உண்கும் எம்மொடு வருதல் வல்லையோ மற்று என கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த வரி மரல் கறிக்கும் மட பிணை திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே #134 முல்லை சீத்தலை சாத்தனார் வானம் வாய்ப்ப கவினி கானம் கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என மணி மருள் பூவை அணி மலர் இடையிடை செம் புற மூதாய் பரத்தலின் நன் பல முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் செய்கை அன்ன செம் நில புறவின் வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை வாழை வான் பூ ஊழ்_உறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை கடு மான் தேர் ஒலி கேட்பின் நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே #135 பாலை பரணர் திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப பசலை பாய்ந்த நுதலேன் ஆகி எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் காடு இறந்தனரே காதலர் அடு போர் வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போல கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே #136 மருதம் விற்றூற்று மூதெயினனார் மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு வரையா வண்மையொடு புரையோர் பேணி புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து கடி நகர் புனைந்து கடவுள் பேணி படு மண முழவொடு பரூஉ பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று பூ கணும் இமையார் நோக்குபு மறைய மென் பூ வாகை புன் புற கவட்டு இலை பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி தூ உடை பொலிந்து மேவர துவன்றி மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர் இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் உறு வளி ஆற்ற சிறு வரை திற என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணி பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே #137 பாலை உறையூர் முதுகூத்தனார் ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணி பிடி அடி நசைஇ களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே வென்று எறி முரசின் விறல் போர் சோழர் இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போல பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும் தோளா முத்தின் தெண் கடல் பொருநன் திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் தொல் கவின் தொலைந்தன நோகோ யானே #138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார் இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி குவளை உண்கண் தெண் பனி மல்க வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி உடலுநர் கடந்த கடல் அம் தானை திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ கடம்பும் களிறும் பாடி நுடங்குபு தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ நீடு நின்னொடு தெளித்த நன் மலை நாடன் குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் கொழு மடல் புது பூ ஊதும் தும்பி நன் நிறம் மருளும் அரு விடர் இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே #139 பாலை இடைக்காடனார் துஞ்சுவது போல இருளி விண் பக இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் காமர் துணையொடு ஏமுற வதிய அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் பரப்பியவை போல் பாஅய் பல உடன் நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல் யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் கருவி கார் இடி இரீஇய பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே #140 நெய்தல் அம்மூவனார் பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் இரும் கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி நெல்லின் நேரே வெண் கல் உப்பு என சேரி விலைமாறு கூறலின் மனைய விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே #141 பாலை நக்கீரர் அம்ம வாழி தோழி கைம்மிக கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவர புலர்ந்து தூ மலர் கஞலி தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழை கூந்தல் குறும் தொடி மகளிர் பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால் வெல் போர் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை தேம் கமழ் நெடு வரை பிறங்கிய வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே #142 குறிஞ்சி பரணர் இல மலர் அன்ன அம் செம் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் பொறையன் கடுங்கோ பாடி சென்ற குறையோர் கொள்கலம் போல நன்றும் உவ இனி வாழிய நெஞ்சே காதலி முறையின் வழாஅது ஆற்றி பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப தொடி கண் வடு கொள முயங்கினள் வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே #143 பாலை ஆலம்பேரி சாத்தனார் செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின் நீடு சினை வறிய ஆக ஒல்லென வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும் வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே வசை இல் வெம் போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும் பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த தண் கமழ் நீலம் போல கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே #144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் வருதும் என்ற நாளும் பொய்த்தன அரி ஏர் உண்கண் நீரும் நில்லா தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என சிறிய சொல்லி பெரிய புலப்பினும் பனி படு நறும் தார் குழைய நம்மொடு துனி தீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர் வாள் குவி முகம் சிதைய நூறி மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின்_வயின் இமைப்ப அமர் ஓர்த்து அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே #145 பாலை கயமனார் வேர் முழுது உலறி நின்ற புழல் கால் தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் வற்றல் மரத்த பொன் தலை ஓதி வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு வாள் வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் அன்னி குறுக்கை பறந்தலை திதியன் தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய நன்னர் மெல் இணர் புன்னை போல கடு நவை படீஇயர் மாதோ களி மயில் குஞ்சர குரல குருகோடு ஆலும் துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற என் அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே #146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார் வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர் பொய்கை பகல் செல மறுகி மட கண் எருமை மாண் நாகு தழீஇ படப்பை நண்ணி பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை யார்-கொல் அளியள் தானே எம் போல் மாய பரத்தன் வாய்மொழி நம்பி வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து ஆயமும் அயலும் மருள தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே #147 பாலை ஔவையார் ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீள் இடை வெள்ளி வீதியை போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் தோளும் தொல் கவின் தொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே #148 குறிஞ்சி பரணர் பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி உறு புலி உரற குத்தி விறல் கடிந்து சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட கடும் பரி குதிரை ஆஅய் எயினன் நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என காணிய செல்லா கூகை நாணி கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை பெரிதால் அம்ம இவட்கே அதனால் மாலை வருதல் வேண்டும் சோலை முளை மேய் பெரும் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே #149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார் சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் அத்த நீள் இடை போகி நன்றும் அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ அரும் சமம் கடந்து படிமம் வவ்விய நெடு நல் யானை அடு போர் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே #150 நெய்தல் குறுவழுதியார் பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி எல்லினை பெரிது என பன் மாண் கூறி பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் நனைத்த செருந்தி போது வாய் அவிழ மாலை மணி இதழ் கூம்ப காலை கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து வாரார்-கொல் என பருவரும் தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே |
---|