<<முந்திய பக்கம்

அகநானூறு (101 - 150)

#101 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர்
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல்
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர்
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பன் மலை இறந்தோர்க்கு
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே

#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பி பையென
வீழா கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகல முயங்கி தோள் மணந்து
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே

#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்ப போகி முனாஅது
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் மனை
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்_வயின்
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே

#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்து வினை முடித்த_காலை தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர்
வாங்கு சினை பொலிய ஏறி புதல
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே

#105 பாலை தாயங்கண்ணனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தன் பாராட்ட
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி
சில் பரி குதிரை பல் வேல் எழினி
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழு தொடை மறவர்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம்
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர் செலவே

#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே

#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்
மாலை இன் துணை ஆகி காலை
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே

#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம்
வரை முதல் சிதறிய வை போல் யானை
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும்
இருள் இடை தமியன் வருதல் யாவதும்
அருளான் வாழி தோழி அல்கல்
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடி
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள்
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே

#109 பாலை கடுந்தொடைகாவினார்
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி
காடு கால்யாத்த நீடு மர சோலை
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன்_உறு குன்றம் பல விலங்கினவே

#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனம் ஆக எய்த வந்து
தட மென் பணை தோள் மட நல்லீரே
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ என காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால்
ஒழிகோ யான் என அழி_தக கூறி
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே

#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகில் கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்த கேழல் அட்ட நல் கோள்
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப
குருதி ஆரும் எருவை செம் செவி
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே

#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும்
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்
தோள்_இடை முயக்கம் நீயும் வெய்யை
கழிய காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான் தோய் வெற்ப
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்
தொன்று இயல் மரபின் மன்றல் அயர
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே

#113 பாலை கல்லாடனார்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன்
அல்கு வன் சுரை பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினை குடம்பை புல்லென
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு
மெய் இவண் ஒழிய போகி அவர்
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே

#114 முல்லை
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண்
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
வான்_அக மீனின் விளங்கி தோன்றும்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்கு சால் அரிவையை காண்குவம்
பொலம் படை கலி_மா பூண்ட தேரே

#115 பாலை மாமூலனார்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருள்_பிணி
கூடாமையின் நீடியோரே

#116 மருதம் பரணர்
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாண் இலை மன்ற பொரி என
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல்
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் தானே மலர் தார்
மை அணி யானை மற போர் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே

#117 பாலை
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம்
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே

#118 குறிஞ்சி கபிலர்
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன்
தேம் கமழ் இணர வேங்கை சூடி
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தான் நின் அளி அலது இலளே

#119 பாலை குடவாயி கீரத்தனார்
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை
தொடை அமை பீலி பொலிந்த கடிகை
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள
மற புலி உழந்த வசி படு சென்னி
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை
மை தோய் சிமைய மலை முதல் ஆறே

#120 நெய்தல் நக்கீரனார்
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பி குட_வயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு
மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால்
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே

#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல்
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்கு_உறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே

#122 குறிஞ்சி பரணர்
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின்
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே

#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே

#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்த கடவு-மதி மாலை
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே

#125 பாலை பரணர்
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப
தாது உறு குவளை போது பிணி அவிழ
படாஅ பைம் கண் பா அடி கய வாய்
கடாஅம் மாறிய யானை போல
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகை பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே

#126 மருதம் நக்கீரர்
நின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் என
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்
மின் நேர் மருங்குல் குறு_மகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே

#127 பாலை மாமூலனார்
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
கல்லா மழவர் வில் இடம் தழீஇ
வருநர் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே

#128 குறிஞ்சி கபிலர்
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்-கொல் வாழி தோழி மயங்கி
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்
குறும் சுனை குவளை வண்டு பட சூடி
கான நாடன் வரூஉம் யானை
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்பு_உழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே

#129 பாலை குடவாயில் கீரத்தனார்
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின்
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே

#130 நெய்தல் வெண்கண்ணனார்
அம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை
பேஎய் தலைய பிணர் அரை தாழை
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும்
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே

#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என
வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே

#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி
வால் நிண புகவின் கானவர் தங்கை
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும்
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே

#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப
கார் தலைமணந்த பைம் புதல் புறவின்
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே

#134 முல்லை சீத்தலை சாத்தனார்
வானம் வாய்ப்ப கவினி கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செம் நில புறவின்
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழ்_உறுபு உதிர்ந்த
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே

#135 பாலை பரணர்
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி
பேது உற்றிசினே காதலம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே

#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர் பேணி
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூ கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
தூ உடை பொலிந்து மேவர துவன்றி
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே

#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே

#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி
உடலுநர் கடந்த கடல் அம் தானை
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி
நன் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே

#139 பாலை இடைக்காடனார்
துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்
பரப்பியவை போல் பாஅய் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல்
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவி கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே

#140 நெய்தல் அம்மூவனார்
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர்
இரும் கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே

#141 பாலை நக்கீரர்
அம்ம வாழி தோழி கைம்மிக
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவர புலர்ந்து தூ மலர் கஞலி
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்
வெல் போர் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே

#142 குறிஞ்சி பரணர்
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு
ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி
சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள்
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே

#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன்
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே

#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லி பெரிய புலப்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்_வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே

#145 பாலை கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சர குரல குருகோடு ஆலும்
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே

#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி
மட கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணி பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர்
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாய பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின்
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து
ஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே

#147 பாலை ஔவையார்
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளி வீதியை போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே

#148 குறிஞ்சி பரணர்
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின்
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என
காணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே

#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்
அத்த நீள் இடை போகி நன்றும்
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே

#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறி
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்ப காலை
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து
வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே