<<முந்திய பக்கம்

புறநானூறு (51 - 100)

# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
செம் புற்று ஈயல் போல
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே

# 52 மருதன் இளநாகனார்
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல்
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்து
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு
வட புல மன்னர் வாட அடல் குறித்து
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட
பலி கண்மாறிய பாழ்படு பொதியில்
நரை மூதாளர் நாய் இட குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே

# 53 பொருந்தில் இளங்கீரனார்
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை கடு மான் பொறைய
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல நின் புகழே என்றும்
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே தாழாது
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே

# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடை இன்று குறுகி
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மை
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும்_காலை
பாசிலை தொடுத்த உவலை கண்ணி
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே

# 55 மதுரை மருதன் இளநாகனார்
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
கடும் சினத்த கொல் களிறும்
கதழ் பரிய கலி_மாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும்
நெஞ்சு உடைய புகல் மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே

# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
கடல் வளர் புரி வளை புரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்_உறு திரு மணி புரையும் மேனி
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும்
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல் இசை நால்வருள்ளும்
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே அதனால்
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசை
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே

# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க
நனம் தலை பேரூர் எரியும் நைக்க
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின்
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே

# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போக நும் புணர்ச்சி வென்று_வென்று
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே

# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனோர்க்கே

# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து
தொழுதனம் அல்லமோ பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன்
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே

# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்
கொண்டை கூழை தண் தழை கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர்
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும்
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன்
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே தாழாது
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்த காண்டல் அதனினும் இலமே

# 62 கழா தலையார்
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு
குருதி செம் கை கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவினோரும் ஆற்ற
அரும்_பெறல்_உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே

# 63 பரணர்
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என் ஆவது-கொல் தானே கழனி
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே

# 64 நெடும்பல்லியத்தனார்
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோ தில் சில் வளை விறலி
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின்
குடுமி கோமான் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே

# 65 கழாஅ தலையார்
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்ப
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மற தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே

# 66 வெண்ணி குயத்தியார்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானை கரிகால்வளவ
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை
மிக புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே

# 67 பிசிராந்தையார்
அன்ன சேவல் அன்ன சேவல்
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனைய
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன் நாட்டு படினே கோழி
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணிய தன்
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே

# 68 கோவூர் கிழார்
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன்
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே

# 69 ஆலந்தூர் கிழார்
கையது கடன் நிறை யாழே மெய்யது
புரவலர் இன்மையின் பசியே அரையது
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண
பூட்கை இல்லோன் யாக்கை போல
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை
வையகம் முழுதுடன் வளைஇ பையென
என்னை வினவுதி ஆயின் மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி
புலா களம் செய்த கலாஅ தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை
பகை புலம் படர்தலும் உரியன் தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவன் கண்ட பின்றை பூவின்
ஆடு வண்டு இமிரா தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே

# 70 கோவூர் கிழார்
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை
இனிய காண்க இவண் தணிக என கூறி
வினவல் ஆனா முது வாய் இரவல
தைஇ திங்கள் தண் கயம் போல
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர்
அடு தீ அல்லது சுடு தீ அறியாது
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன்
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல்
இன் நகை விறலியொடு மென்மெல இயலி
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால்
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே

#72
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர்
இளையன் இவன் என உளைய கூறி
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

#73
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை
கழை தின் யானை கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல சென்று அவண்
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே

# 74 பாடியவன் சேரமான் கணைக்கா லிரும்பொறை
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இ உலகத்தானே

# 75 பாடியவன் சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே மை அற்று
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே

# 76 இடைக்குன்றூர் கிழார்
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இ உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து
செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலிய சூடி
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக
நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி
பொருதும் என்று தன் தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே

# 77 இடைக்குன்றூர் கிழார்
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து
குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி
நெடும் தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ
கவிந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

# 78 இடைக்குன்றூர் கிழார்
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள்
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மின்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர்
மாண் இழை மகளிர் நாணினர் கழிய
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே

# 79 இடைக்குன்றூர் கிழார்
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே

# 80 சாத்தந்தையார்
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல
இரு தலை ஒசிய எற்றி
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே

# 81 சாத்தந்தையார்
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே

# 82 சாத்தந்தையார்
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று_உற்று என
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே

# 83 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி
இரு பால் பட்ட இ மையல் ஊரே

# 84 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே

# 85 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே
ஆடு அன்று என்ப ஒருசாரோரே
நல்ல பல்லோர் இரு நன் மொழியே
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரை போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே

# 86 காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே

# 87 ஔவையார்
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

# 88 ஔவையார்
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நல் போர்
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே

# 89 ஔவையார்
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என
வினவல் ஆனா பொரு படை வேந்தே
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசி_உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே

# 90 ஔவையார்
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்
மற புலி உடலின் மான் கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை
வழு இல் வன் கை மழவர் பெரும
இரு நில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே

# 91 ஔவையார்
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார்
களம் பட கடந்த கழல் தொடி தட கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீல மணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொல் நிலை
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

# 92 ஔவையார்
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே

# 93 ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே

# 94 ஔவையார்
ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின்
நீர் துறை படியும் பெரும் களிறு போல
இனியை பெரும எமக்கே மற்று அதன்
துன் அரும் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே

# 95 ஔவையார்
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து
கொல் துறை குற்றில மாதோ என்றும்
உண்டு ஆயின் பதம் கொடுத்து
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே

# 96 ஔவையார்
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின்
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்
கை_மான் கொள்ளுமோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

# 97 ஔவையார்
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின்
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர்
நறும் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இரும் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின்
பரூஉ பிணிய தொடி கழிந்தனவே
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைம் தார் கெட பரிதலின்
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானை
பொலம் தும்பை கழல் பாண்டில்
கணை பொருத துளை தோலன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள்
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல் போரான் என
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல்
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி
குறும் தொடி மகளிர் தோள் விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே

# 98 ஔவையார்
முனை தெவ்வர் முரண் அவிய
பொர குறுகிய நுதி மருப்பின் நின்
இன களிறு செல கண்டவர்
மதில் கதவம் எழு செல்லவும்
பிணன் அழுங்க களன் உழக்கி
செலவு அசைஇய மறு குளம்பின் நின்
இன நன் மா செல கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்
மார்பு உற சேர்ந்து ஒல்கா
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோள் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடு பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார்
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே

# 99
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல்
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே

# 100 ஔவையார்
கையது வேலே காலன புனை கழல்
மெய்யது வியரே மிடற்றது பசும் புண்
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ
சுரி இரும் பித்தை பொலிய சூடி
வரி வயம் பொருத வய களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே