<<முந்திய பக்கம்

சேக்கிழார் அருளிய பெரியபுராணம்
2. தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

புராணம் புராணத்தின் பெயரைச் சொடுக்குக
  1. தில்லைவாழ் அந்தணர் புராணம் (10)
  2. திருநீலகண்ட நாயனார் புராணம் (44)
  3. இயற்பகை நாயனார் புராணம் (36)
  4. இளையான்குடிமாற நாயனார் புராணம் (27)
  5. மெய்ப்பொருள் நாயனார் புராணம் (24)
  6. விறன்மிண்ட நாயனார் புராணம் (11)
  7. அமர்நீதி நாயனார் புராணம் (49)
1. தில்லைவாழ் அந்தணர் புராணம்
@1 தில்லைவாழ் அந்தணர் புராணம்
#1
ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி
சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி
#2
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூம் கழல் போற்றி போற்றி
#3
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார்
#4
பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார்
#5
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார்
#6
மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார்
அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார்
#7
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்
#8
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
#9
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட
அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார்
#10
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்

மேல்

@2 திருநீலகண்ட நாயனார் புராணம்
#1
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்
மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்
#2
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார்
#3
அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார்
#4
அவர்-தம்-கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார்
#5
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார்
#6
மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார்
#7
ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார்
#8
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றி செய்ய
இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார்
#9
இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து
தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார்
#10
இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட
மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண
நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி
#11
கீளொடு கோவணம் சாத்தி கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல்
தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன்
நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும்
#12
நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட
இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்
#13
நண்ணிய தவ சிவ யோக நாதரை
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார்
#14
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின்
#15
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று
#16
தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என
#17
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்
#18
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்
#19
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால்
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்
#20
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து
சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்
#21
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்
#22
மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார்
#23
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்
#24
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி
பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்
#25
கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன
#26
ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி
போவதும் செய்யேன் என்றான் புண்ணிய பொருளாய் நின்றான்
#27
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான்
#28
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்
#29
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற
வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என
#30
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார்
#31
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில்
எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார்
#32
அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார்
#33
நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார்
நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என
#34
நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார்
#35
திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால்
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார்
#36
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு
திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று
பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார்
#37
மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன்
சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர்
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார்
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார்
#38
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி
வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்
#39
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று
தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
#40
அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல
இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார்
#41
கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி
விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்
#42
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும்
சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர்-தாமும்
வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால்
என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே
#43
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள்
இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே
#44
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல்
செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன்

மேல்

@3 இயற்பகை நாயனார் புராணம்
#1
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர்
நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக
#2
அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார்
#3
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில்
#4
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்
#5
வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார்
#6
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர்
கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்
#7
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்
#8
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா
கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்
#9
இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்
#10
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்
#11
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய
நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு
பொன் திகழ் அறுவை சாத்தி பூம் கச்சு பொலிய வீக்கி
#12
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க
ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே
தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்
#13
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்
#14
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி
பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார்
#15
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு
பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்
#16
மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா
தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று
#17
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை
ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்
#18
ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார்
#19
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு
நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர்
#20
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும்
சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே
#21
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்
#22
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில்
ஆண் தகை வீரர்-தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி
காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்
#23
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்
#24
மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும்
ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்
#25
திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்
#26
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே
#27
தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்
#28
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான்
#29
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்
#30
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்
#31
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார்
பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார்
#32
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன
#33
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று
#34
திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம்
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த
பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார்
#35
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில்
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்
#36
இன்புறு தாரம்-தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன்

மேல்

@4 இளையான்குடி மாற நாயனார் புராணம்
#1
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார்
#2
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்
#3
ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின்
#4
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார்
#5
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்
#6
செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்
#7
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்
#8
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர்
நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்
#9
மாரி காலத்து இரவினில் வைகி ஓர்
தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன்
#10
ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து
ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கி தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று
#11
நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும்
இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என
#12
மாது கூறுவள் மற்று ஒன்றும் காண்கிலேன்
ஏதிலாரும் இனி தருவார் இல்லை
போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை
தீது செய்வினையேற்கு என் செயல் என்று
#13
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற
#14
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப்பட்டனர்
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார்
#15
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்-தான்
கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு
உருகுகின்றது போன்றது உலகு எலாம்
#16
எண்ணும் இ உலகத்தவர் யாவரும்
துண்எனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து
#17
உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா
கொள்ள முன் கவித்து குறியின் வழி
புள் உறங்கும் வயல் புக போயினார்
வள்ளலார் இளையான்குடி மாறனார்
#18
காலினால் தடவி சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன
கோலி வாரி இடா நிறைய கொண்டு
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர்
#19
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார்
#20
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை
#21
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க
#22
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று
#23
கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி
இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன
உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்
#24
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற
செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்
#25
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக
சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி
#26
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்
#27
இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார்
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன்

மேல்

@5 மெய்ப்பொருள் நாயனார் புராணம்
#1
சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி
மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்
#2
அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து
வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்
#3
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார்
#4
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார்
#5
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான்
#6
இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக
செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான்
#7
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி
கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்
#8
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும்
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி
சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான்
#9
கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன
தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான்
#10
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான்
#11
கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி
வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று
#12
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல்
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான்
#13
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த
மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன
நாறு பூம் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன்
#14
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி
புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார்
#15
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார்
#16
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான்
நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார்
#17
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட
தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார்
#18
அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த
பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான்
#19
அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர
வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்
#20
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்
#21
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று
நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்
#22
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே
பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார்
#23
தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர
கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்
#24
இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன்

மேல்

@6 விறன்மிண்ட நாயனார் புராணம்
#1
விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி
பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு
#2
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்
#3
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம்
#4
அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி
எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர்
#5
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார்
#6
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்
#7
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்
#8
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால்
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்
#9
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின்
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்
#10
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்
#11
வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம்

மேல்

@7 அமர்நீதி நாயனார் புராணம்
#1
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு
காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை
#2
மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா
எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால்
அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார்
#3
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்
#4
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்
#5
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்
திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார்
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள்
#6
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர்
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி
நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான்
மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி
#7
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும்
சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும்
#8
முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய
#9
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக
தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய்
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக
#10
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்
#11
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழி கோவணம் ஈவது கேட்டு
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்
#12
என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே
நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச
#13
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார்
#14
ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்
#15
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர்
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார்
#16
தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார்
#17
போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி
பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்
#18
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்
#19
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற
தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர்
#20
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்
#21
பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார்
#22
மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்
#23
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று
#24
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க
#25
நின்ற வேதியர் வெகுண்டு அமர்நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்று-ஆல்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா
#26
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்
#27
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார்
#28
செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி
நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா
பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார்
#29
பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள
#30
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக
இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர்
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர்
#31
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா
எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார்
#32
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட
குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்
#33
நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி
#34
உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு
அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார்
#35
முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர்
தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு
#36
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச
#37
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்
#38
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும்
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்
#39
தவம் நிறைந்த நான்_மறை பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு
அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ
#40
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று
உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார்
#41
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினை துலை எனும் சலத்தால்
இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்
#42
மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி
புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து
#43
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி
தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்
#44
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான்
#45
மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார்
கதிர் விசும்பிடை கரந்திட நிரைந்த கற்பகத்தின்
புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்
#46
அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம்
கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார்
#47
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும்
முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும்
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர்
#48
நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல
கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார்
#49
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்
மேல்