திருமுறை பதினொன்று
** திருமுறை 11
&11 பட்டினத்து அடிகள்
@1 கோயில் நான்மணிமாலை
** நேரிசை வெண்பா
#1
பூ மேல் அயன் அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்து அளவை நாட்டுவோம் பா மேவும்
ஏத்து உகந்தான் தில்லை இடத்து உகந்தான் அம்பலத்தே
கூத்து உகந்தான் கொற்றக் குடை
** கட்டளைக் கலித்துறை
#2
குடை கொண்டு இவ் வையம் எலாம் குளிர்வித்து எரி பொன் திகிரிப்
படை கொண்டு இகல் தெறும் பார்த்திவர் ஆவதில் பைம்பொன் கொன்றைத்
தொடை கொண்ட வார் சடை அம்பலத்தான் தொண்டர்க்கு ஏவல்செய்து
கடை கொண்ட பிச்சைகொண்டு உண்டு இங்கு வாழ்தல் களிப்பு உடைத்தே
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
#3
களிவந்து அமுது ஊறிக் கல்மனத்தை எல்லாம் கசியும்படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந்து அடியேன் மனம் புகுந்தது என்றால் விரி சடையும் வெண் நீறும் செவ் வானம் என்ன
ஒளிவந்த பொன் நிறமும் தொல் நடமும் காட்டும் உடையான் உயர் தில்லை அம்பலம் ஒன்று அல்லால்
எளிவந்து இனிப் பிறர்-பால் சென்று அவர்க்குப் பொய் கொண்டு
இடை மிடைந்த புன்மொழியால் இச்சை உரையோமே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#4
உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப்பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பலவாண நீடு 5
குன்றக் கோமான்-தன் திருப்பாவையை
நீல மேனி மால் திருத்தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெரும நின்
தாது அவிழ் கொன்றைத் தாரும் ஏதம்_இல்
வீர வெள் விடைக் கொடியும் போரில் 10
தழங்கும் தமருகப் பறையும் முழங்கு ஒலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய் தீர்
விரையாக் கலி எனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மா இரு மருப்பின்
வெண் நிறச் செம் கண் வேழமும் பண் இயல் 15
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேரு மால் வரையும்
செய் வயல் தில்லை ஆகிய தொல் பெரும் பதியும் என்று
ஒரு பதினாயிரம் திரு நெடு நாமமும்
உரிமையின் பாடித் திருமணப் பந்தருள் 20
அமரர் முன் புகுந்து அறுகு சாத்தி நின்
தமர் பெயர் எழுதிய வரி நெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின் அருள்
ஆணை வைப்பில் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் 25
கானில்-வாய் நுளம்பும் கருடன் ஆதலினே
** வெண்பா
#5
ஆதரித்த மாலும் அறிந்திலன் என்று அஃது அறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே போதகத் தோல்
கம்பலத்தான் நீள் நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி
** கட்டளைக் கலித்துறை
#6
அடி ஒன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டது இப்பால்
முடி ஒன்று இவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும் வெள்ளைப்
பொடி ஒன்று தோள் எட்டுத் திக்கின் புறத்தன பூம் கரும்பின்
செடி ஒன்று தில்லைச் சிற்றம்பலத்தான்-தன் திருநடமே
** எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
#7
நடம் ஆடி ஏழ் உலகம் உய்யக்கொண்ட
நாயகரே நான்மறையோர்-தங்களோடும்
திடமாட மதில் தில்லைக் கோயில்கொண்ட
செல்வரே உமது அருமை தேராவிட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்காவிட்டால் 5
என்போல்வார்க்கு உடன் நிற்க இயல்வது அன்று
தட மாலை முடி சாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்ட ஆயம் கருதி நஞ்சு உண்டீரே
** நேரிசை ஆசிரியப்பா
#8
நஞ்சு உமிழ் பகு வாய் வெம் சின மாசுணம்
தன் முதல் முருக்க நெல் முதல் சூழ்ந்த
நீர்ச் சிறு பாம்பு தன் வாய்க்கு எதிர்வந்த
தேரையை வவ்வியாங்கு யாம் முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி 5
மறவா மறலி முறை பிறழ் பேழ் வாய்
அயில் தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள் நனி இன்றி ஒரு வயிறு ஓம்பற்குப்
பல் உயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று 10
எண் தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல் எயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலனே
** வெண்பா
#9
இலவு இதழ் வாய் வீழ்வார் இகழ்வார் அவர்-தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் இலகும் ஒளி
ஆடகம் சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்று ஆடும்
நாடகம் கண்டு இன்பான நான்
** கட்டளைக் கலித்துறை
#10
நானே பிறந்த பயன் படைத்தேன் அயன் நாரணன் எம்
கோனே எனத் தில்லை அம்பலத்தே நின்று கூத்து உகந்த
தேனே திருவுள்ளம் ஆகி என் தீமை எல்லாம் அறுத்துத்
தானே புகுந்து அடியேன் மனத்தே வந்து சந்திக்கவே
** கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
#11
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்-தம் சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர் புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர அனங்கனவனொடு நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலை பெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொடு அணிந்து திலைநகர் அம் பொன் அணியும் அரங்கின் நடம் நவில்
அங்கண் அரசை அடைந்து தொழுது இவள் அன்று முதல் எதிர் இன்று வரையுமே
** நிலைமண்டில ஆசிரியப்பா
#12
வரை ஒன்று நிறுவி அரவு ஒன்று பிணித்துக்
கடல் தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண் தோள் ஆண்ட தண்டா அமரர்க்கு
அமிர்து உணா அளித்த முது பெரும் கடவுள்
கடை யுகம் சென்ற காலத்து நெடு நிலம் 5
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செம் சேல் ஆகித் தன்
தெய்வ உதரத்துச் சிறு செலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோடு
உலகு குழைத்து ஒரு நாள் உண்டதும் 10
உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கு அவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க்கு அல்லது அவன் குறைவு இன்றே
இனையன் ஆகிய தனி முதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து 15
அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற்கு அரிய நின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடு மறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய 20
பொன் நிறக் கடவுள் அன்னம் ஆகிக்
கண்டிலாத நின் கதிர் நெடு முடியும்
ஈங்கு இவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவில் மறு இன்றி விளங்கி
ஏவரும் காண ஆடுதி அது எனக்கு 25
அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்தது எந்தை வளையாது
கல்லினும் வலிது அது நல்லிதில் செல்லாது
தான் சிறிது ஆயினும் உள்ளிடை நிரம்ப
வான் பொய் அச்சம் மாயா ஆசை 30
மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதின் புகுந்து
மண்மகன் திகிரியில் எண் மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடு_இல் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்த நின் சடையும் 35
செய்ய வாயும் மை அமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்த செம் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும் 40
வேதம் நான்கும் விழுப் பெரு முனிவரும்
ஆதி நின் திறம் ஆதலின் மொழிவது
பெரியதில் பெரியை என்றும் அன்றே
சிறியதில் சிறியை என்றும் அன்றே
நிறை பொருள் மறைகள் நான்கும் நின் அறை கழல் 45
இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்று கிழவோனே
** நேரிசை வெண்பா
#13
கிழவருமாய் நோய் மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்து
உழவரும் போய் ஓயுமா கண்டோம் மொழி தெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடம் ஆடும்
நாயனார் என்று உரைப்போம் நாம்
** கட்டளைக் கலித்துறை
#14
நாமத்தினால் என்தன் நாத் திருத்தேன் நறை மா மலர் சேர்
தாமத்தினால் உன் சரண் பணியேன் சார்வது என் கொடு நான்
வாமத்திலே ஒரு மானைத் தரித்து ஒரு மானை வைத்தாய்
சேமத்தினால் உன் திருத் தில்லை சேர்வது ஓர் செந்நெறியே
** ஆசிரிய விருத்தம்
#15
நெறிதரு குழலை அறல் என்பர்கள் நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்
நிலவினும் வெளிது நகை என்பர்கள் நிறம்வரு கலசம் முலை என்பர்கள்
அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள் அடி இணை கமல மலர் என்பர்கள்
அவயவம் இனைய மட மங்கையர் அழகியர் அமையும் அவர் என் செய
மறி மழு உடைய கரன் என்கிலர் மறலியை முனியும் அரன் என்கிலர்
மதி பொதி சடிலதரன் என்கிலர் மலை_மகள் மருவு புயன் என்கிலர்
செறி பொழில் நிலவு திலை என்கிலர் திரு நடம் நவிலும் இறை என்கிலர்
சிவகதி அருளும் அரசு என்கிலர் சிலர் நர குறுவர் அறிவு இன்றியே
** நேரிசை ஆசிரியப்பா
#16
அறிவு_இல் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும் பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக்கு ஏற்றி வினை எனும்
தொல் மீகாமன் உய்ப்ப அ நிலைக்
கரு எனும் நெடு நகர் ஒரு துறை நீத்தத்துப் 5
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடரப்
பிறப்பு எனும் பெரும் கடல் உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடும் கல் வீழ்த்து
நிறை எனும் கூம்பு முரிந்து குறையா 10
உணர்வு எனும் நெடும் பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப் படு காயச் சிறைக் கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக 15
தொல் எயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பலவாண நின்
அருள் எனும் நலத் தார் பூட்டித்
திருவடி நெடும் கரை சேர்த்துமா செய்யே
** நேரிசை வெண்பா
#17
செய்ய திருமேனிச் சிற்றம்பலவருக்கு என்
தையல் வளை கொடுத்தல் சாலுமே ஐயன் தேர்
சேயே வரும் அளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமது கையில் சங்கு
** கட்டளைக் கலித்துறை
#18
சங்கு_இடத்தான் இடத்தான் தனது ஆகம் சமைந்து ஒருத்தி
அங்கு இடத்தாள் தில்லை அம்பலக் கூத்தற்கு அவிர் சடை மேல்
கொங்கு இடு அத் தார் மலர்க் கொன்றை என்றாய் எங்கை நீயும் ஒரு
பங்கிடத்தான் வல்லையேல் இல்லையேல் உன் பசப்பு ஒழியே
** ஆசிரிய விருத்தம்
#19
ஒழிந்தது எங்கள் உறவு என்-கொலோ எரியில் ஒன்னலார்கள் புரம் முன் ஒர் நாள்
விழுந்து எரிந்து துகளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்று அவர் நடக்க நொந்து
அழிந்த சிந்தையினும் வந்ததாகிலும் ஒர் சிந்தையாய் ஒழிவது அல்லவே
** நேரிசை ஆசிரியப்பா
#20
அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்து ஏர் உழந்து கார் வரும் என்று
வித்து விதைத்தும் விண் பார்த்து இருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளை முதிர் பருவத்துப் பதி என வழங்கியும் 5
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத்து எந்திரம் கடாஅய்த்
துன்று திரைப் பரப்பில் குன்று பார்த்து இயங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாள் உழந்து ஓடியும் வாள் உழந்து உண்டும் 10
அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொல் பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடும் தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத்து ஈர்ப்ப நொய்தில்
பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்கு பிறந்தும் 15
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புள் செய்கை ஒப்பு_இல் மின் போல்
உலப்பு_இல் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய் எரி வளர்த்துப் பெய் முகில் பெயல் தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர் 20
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுள் கண்_நுதல் நடம் முயன்று எடுத்த
பாதப் போதும் பாய் புலிப் பட்டும்
மீது யாத்து அசைத்த வெள் எயிற்று அரவும்
சேய் உயர் அகலத்து ஆயிரம் குடுமி 25
மணி கிடந்து இமைக்கும் ஒரு பேர் ஆரமும்
அருள் பொதிந்து அலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங்கு 30
உள் மகிழ்ந்து உரைக்க உறு தவம் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல் நிகழ் பதந்தான்
உறுதற்கு அரியதும் உண்டோ
பெறுதற்கு அரியது ஓர் பேறு பெற்றேற்கே
** நேரிசை வெண்பா
#21
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்று ஓட ஓடித் தொழாநிற்கும் ஒற்றைக் கைம்
மா மறுகச் சீறிய சிற்றம்பலத்தான் மான் தேர் போம்
கோ மறுகில் பேதைக் குழாம்
** கட்டளைக் கலித்துறை
#22
பேதை எங்கே இனித் தேறி உய்வாள் பிரமன்-தனக்குத்
தாதை-தன் தாதை என்று ஏத்தும் பிரான் தண் புலிசைப் பிரான்
கோதை அம் தாமத் தண் கொன்றை கொடான் இன்று கொல்ல எண்ணி
ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியவே
** ஆசிரிய விருத்தம்
#23
உலவு சலதி வாழ் விடம் அமரர் தொழ உணா என
நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ் கரோடிகை உடைய புனிதர் பூசுரர்
புலிசை அலர்செய் போது அணி பொழிலின் நிழலின் வாழ்வது ஓர்
கலவ மயில்_அனார் சுருள் கரிய குழலினார் குயில்
கருதும் மொழியினார் கடை நெடிய விழியினார் இதழ்
இலவின் அழகியார் இடை கொடியின் வடிவினார் வடிவு
எழுதும் அருமையார் எனது இதயம் முழுதும் ஆள்வரே
** நேரிசை ஆசிரியப்பா
#24
ஆள் எனப் புதிதின் வந்து அடைந்திலம் அத்த நின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவது உன்
ஐந்தெழுத்தவை எம் சிந்தையில் கிடத்தி
நனவே போல நாள்-தொறும் பழகிக் 5
கனவிலும் நவிற்றும் காதலேம் வினை கெடக்
கேட்பதும் நின் பெரும் கீர்த்தி மீட்பதும்
நின் நெறி அல்லாப் புல் நெறி படர்ந்த
மதி_இல் நெஞ்சத்தை வரைந்து நிதி என
அருத்தி செய்திடுவது உருத்திர சாதனம் 10
காலையும் மாலையும் கால் பெயர்த்திடுவது உன்
ஆலயம் வலம் வருதற்கே சால்பினில்
கை கொடு குயிற்றுவது ஐய நின்னது
கோயில் பல் பணி குறித்தே ஓயாது
உருகி நின் நினைந்து அருவி சோரக் 15
கண்ணில் காண்பது எவ் உலகினும் காண்பன எல்லாம்
நீயே ஆகி நின்றது ஓர் நிலையே நாயேன்
தலை கொடு சார்வது உன் சரண் வழி அல்லால்
அலை கடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த் தவ வேடர் கைத்து அகப்படுத்தற்கு 20
வஞ்சச் சொல்லின் வார் வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங்கு அமை-வயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத்து அகப்படுத்து ஆழ்த்து
வளைவு உணர்வு எனக்கு வருமோ உளர்தரும் 25
நுரையும் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரை குடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில ஆகி இரும் கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும் 30
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும் நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க்கு அரியாய் மறைகளுக்கு எட்டாய்
நான்மறையாளர் நடுவு புக்கு அடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர் 35
அம்பலத்து ஆடும் உம்பர் நாயகனே
** நேரிசை வெண்பா
#25
நாய் அனைய என்னைப் பொருட்படுத்தி நன்கு அளித்துத்
தாய் அனையனாய் அருளும் தம்பிரான் தூய விரை
மென் துழாய் மாலொடு அயன் தேட வியன் தில்லை
மன்றுளே ஆடும் மணி
** கட்டளைக் கலித்துறை
#26
மணி வாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அ மன்றுக்கு எல்லாம்
அணியாய் அருள் நடம் ஆடும் பிரானை அடைந்து உருகிப்
பணியாய் புலன் வழி போம் நெஞ்சமே இனிப் பையப்பையப்
பிணியாய்க் கடை வழி சாதி எல்லோரும் பிணம் என்னவே
** ஆசிரிய விருத்தம்
#27
என் நாம் இனி மடவரலாய் செய்குவது இனமாய் வண்டுகள் மலர் கிண்டித்
தென்னா என முரல் பொழில் சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணி தாமம்-
தன்னால் அல்லது தீராது என் இடர் தகையாது உயிர் கரு முகில் ஏறி
மின்னாநின்றது துனி வாடையும் வர வீசாநின்றது பேசாயே
** ஆசிரியப்பா
#28
பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் 5
நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன்று ஒரு வழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியில் சிறந்தோர் கடும் திறல் மிகுந்தோர் 10
கொடையில் பொலிந்தோர் படையில் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எம் குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும் அஃது அறிதி அன்றே மாயப் 15
பேய்த்தேர் போன்று நீப்பு அரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப் பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் 20
நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின்
அழுக்குடைப் புலன் வழி இழுக்கத்தின் ஒழுகி
வளை வாய்த் தூண்டிலின் உள் இரை விழுங்கும்
பல் மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் 25
ஆசையாம் பரிசத்து யானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவது உணராது செறுவுழிச் சேர்ந்தனை
நுண் நூல் நூற்றுத் தன் கைப்படுக்கும் 30
அறிவு_இல் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர் கெழு மனத்தினோடு இயற்றுவது அறியாது
குடர் கெழு சிறை அறைக்கு உறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்று என இரங்கி 35
மறவா மனத்து மாசறும் அடியார்க்கு
அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என் நினைந்தனையே
** நேரிசை வெண்பா
#29
நினையார் மெலியார் நிறை அழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ அனைவீரும்
மெச்சியே காண வியன் தில்லையான் அருள் என்
பிச்சியே நாளைப் பெறும்
** கட்டளைக் கலித்துறை
#30
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறு உறும் யானும் என்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஓய்வொடும் சென்று
இறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கண் எல்லாம்
அறுகின்றன தில்லை ஆளுடையான் செம்பொன் அம்பலத்தே
** ஆசிரிய விருத்தம்
#31
அம்பலவர் அங்கணர் அடைந்தவர்-தமக்கே அன்புடையர் என்னும் இது என் ஆனையை உரித்துக்
கம்பலம் உவந்து அருளுவீர் மதனன் வேவக் கண்டருளுவீர் பெரிய காதல் அறியாதே
வம்பலர் நிறைந்து வசை பேச ஒரு மாடே வாடை உயிர் ஈர மணி மாமையும் இழந்து என்
கொம்பு அலமரும் தகைமை கண்டு தகவு இன்றிக் கொன்றை அருளீர் கொடியிர் என்று அருளுவீரே
** ஆசிரியப்பா
#32
அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலை தவக் கறங்கும்
புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினும் கடிதே இளமை நீக்கம் 5
அதனினும் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினும் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிது ஆக்கி
நாள்நாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மையது இதுவே இதனை 10
எனது எனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யாநிற்பன சிலவே அவற்றிடை
நன்று என்ப சிலவே தீது என்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே என்று இவை 15
கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன்று உணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்று ஒன்று
தெளிவுழித் தேறல்செல்லேம் அளிய 20
மனத்தின் செய்கை மற்று இதுவே நீயே
அரியை சால எம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவை நினைக் காணா அதுதான்
நின்-வயின் மறைத்தோ அல்லை உன்னை 25
மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையில் கரந்தோய் அல்லை
பெருமையில் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே 30
நண்ணியும் இடை ஒன்றின் மறைந்தோய் அல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே ஆகி நின்றது ஓர் நிலையே அஃதான்று
நினைப்பு அரும் காட்சி நின் நிலை இதுவே 35
நினைப்புறும் காட்சி எம் நிலை அதுவே
இனி நனி இரப்பது ஒன்று உடையம் மனம் மருண்டு
புன்மையில் நினைத்துப் புலன் வழி படரினும்
நின்-வயின் நினைந்தேம் ஆகுதல் நின்-வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்து ஒன்றும் 40
நீயே அருளல் வேண்டும் வேய் முதிர்
கயிலை புல்லென எறி விசும்பு வறிது ஆக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திரு வளர் தில்லை மூதூர்
அரு நடம் குயிற்றும் ஆதி வானவனே 45
** நேரிசை வெண்பா
#33
வானோர் பணிய மணியாசனத்து இருக்கும்
ஆனாத செல்வத்து அரசு அன்றே மால் நாகம்
பந்திப்பார் நின்று ஆடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு
** கட்டளைக் கலித்துறை
#34
வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க
ஆள்வாய் திருத் தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடில நஞ்சு உண்டிலையாகில் அன்றே
மாள்வார் சிலரை அன்றோ தெய்வமாக வணங்குவதே
#35
** ஆசிரியச் சந்த விருத்தம்
வணங்கும் இடையீர் வறிது வல்லி இடையாள் மேல் மார சர மாரி பொழியப்பெறு மனத்தோடு
உணங்கி இவள்தானும் மெலியப்பெறும் இடர்க்கே ஊதை எரி தூவி உலவப்பெறும் அடுத்தே
பிணங்கி அரவோடு சடை ஆட நடம் ஆடும் பித்தர் எனவும் இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்கு வெறியாடு மறி ஆடும் அது ஈரும் மையலையும் அல்லலையும் அல்லது அறியீரே
** ஆசிரியப்பா
#36
ஈர வேரித் தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின் மீது அசைய
வண்டு இயங்கு வரைப்பின் எண் தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற்பட்ட மேனி எந்தை 5
ஒல் ஒலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத்து ஒரு பெரும் கடவுள்
வானவர் வணங்கும் தாதையானே
மது மழை பொழியும் புது மந்தாரத்துத் 10
தேன் இயங்கு ஒரு சிறைக் கானகத்து இயற்றிய
தெய்வ மண்டபத்து ஐவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத்து அமையா நோக்கத்து
அம் மார்பு பருகச் செம்மாந்திருக்கும் 15
ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொலாளர் உறு சினம் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் 20
வார்ந்தும் குறைத்தும் மத நாய்க்கு ஈந்தும்
செக்கு உரல் பெய்தும் தீ நீர் வாக்கியும்
புழுக் குடை அழுவத்து அழுக்கு இயல் சேற்றுப்
பன்னெடும் காலம் அழுத்தி இன்னா
வரை_இல் தண்டத்து மாறாக் கடும் துயர் 25
நிரயம் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெரு வளம் சிதையாது 30
இன்பத்து அழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பம் துதையினும் துதைக முன்பில்
இளமையொடு பழகிக் கழி மூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் 35
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்தும் நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்தலானே 40
** நேரிசை வெண்பா
#37
ஆன் ஏறே போந்தால் அழிவு உண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்று அன்றே வான் ஓங்கு
வாம் மாண் பொழில் தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத் தெருவே கொண்டு
** கட்டளைக் கலித்துறை
#38
கொண்டல் வண்ணத்தவன் நான்முகன் இந்திரன் கோ மகுடத்து
அண்டர் மிண்டித் தொழும் அம்பலக் கூத்தனுக்கு அன்புசெய்யா
மிண்டர் மிண்டித் திரிவார் எனக்கு என் இனி நான் அவன்-தன்
தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே
** ஆசிரிய விருத்தம்
#39
தொடர நரைத்து அங்கம் முன்பு உளவாயின தொழில்கள் மறுத்து ஒன்றும் ஒன்றியிடாது ஒரு
சுளிவு தலைக்கொண்டு புன் புலை வாரிகள் துளை ஒழுகக் கண்டு சிந்தனை ஓய்வொடு
நடை கெட முன் கொண்ட பெண்டிர் பொறா ஒரு நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலி இருமற்கு அஞ்சி உண்டி வெறா விழும் நரக உடற்கு அன்புகொண்டு அலைவேன் இனி
மிடல் ஒடியப் பண்டு இலங்கையர்கோன் ஒரு விரலின் அமுக்குண்டு பண் பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்பு உளதாகிய வெகுளி தவிர்த்து அன்று பொன்றியிடா வகை
திடம் அருள் வைக்கும் செழும் சுடர் ஊறிய தெளி அமுதத்தின் கொழும் சுவை நீடிய
திலைநகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுர் ஆவதே
** நேரிசை ஆசிரியப்பா
#40
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர் கோனுக்கு
மா நிதி இரண்டும் ஆனாப் பெரு வளத்து
அளகை ஒன்றும் தளர்வு இன்றி நிறுவிய 5
செல்வம் கொடுத்த செல்வம் போற்றி
தாள் நிழல் அடைந்த மாணிக்காக
நாள் முறை பிறழாது கோள் முறை வலித்துப்
பதைத்து வரும் கூற்றைப் படி மிசைத் தெறிக்க
உதைத்து உயிர் அளித்த உதவி போற்றி 10
குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படு பேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல் விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத்து அவுணர் மூ எயில்
ஒல் அனல் கொளுவி ஒரு நொடி பொடிபட 15
வில் ஒன்று வளைத்த வீரம் போற்றி
பூ மென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்_நுதல் போற்றி
தெய்வ யாளி கை முயன்று கிழித்து எனக்
கரி ஒன்று உரித்த பெரு விறல் போற்றி 20
பண்டு பெரும் போர்ப் பார்த்தனுக்காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரல் பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்து என முன் நாள் 25
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலம் கொடுத்த திருவுளம் போற்றி
நின் முதல் வழிபடத் தன் மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி 30
வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவு புல் எலிக்கு மூ உலகு ஆள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்கு உளை அழல் வாய்ப் புகை விழி ஒரு தனிச் 35
சிங்கம் கொன்ற சேவகம் போற்றி
வரி மிடற்று எறுழ் வலி மணி உகு பகு வாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செம் சடை போற்றி 40
கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனல் பிழம்பு ஆகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்கும் நின் சூலம் போற்றி
கூறுதற்கு அரிய நின் ஏறு போற்றி 45
ஏக வெற்பன் மகிழும் மகட்கு இடப்
பாகம் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மா நகர் போற்றி தில்லையுள்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்து
ஆடும் நாடகம் போற்றி என்றாங்கு 50
என்றும் போற்றினும் என்தனக்கு இறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றி நின் பொலம் பூ அடிக்கே
** கோயில் நான்மணிமாலை முற்றிற்று
@2 திருக்கழுமல மும்மணிக்கோவை
** இணைக்குறள் ஆசிரியப்பா
#1
திரு வளர் பவளப் பெரு வரை மணந்த
மரகத வல்லி போல ஒரு கூறு
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய் திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலை கதிர்ப் பரிதி ஆயிரம் தொகுத்த 5
வரன்முறை திரியாது மலர் மிசை இருந்து எனக்
கதிர்விடு நின் முகம் காண்-தொறும் காண்-தொறும்
முதிரா இள முலை முற்றாக் கொழுந்தின்
திரு முகத் தாமரை செவ்வியின் மலர நின்
தையல் வாள் நுதல் தெய்வச் சிறுபிறை 10
இளநிலாக் காண்-தொறும் ஒளியொடும் புணர்ந்த நின்
செவ் வாய்க் குமுதம் செவ்வி செய்ய நின்
செம் கைக் கமலம் மங்கை வன முலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலை_மகள் தனாது நயனக் குவளை நின் 15
பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறி நின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகம் கீழ் முதல் தாழ்ந்து இங்கு
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்து 20
உலகம் மூன்றுக்கும் களைகண் ஆகி
முதல்_இல் காலம் இனிது வீற்றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர் நடைப் பருவத்து வளர் பசி வருத்த
அன்னாயோ என்று அழைப்ப முன் நின்று 25
ஞான போனகம் அருள் அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்-வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யார் என
அவனைக் காட்டுவன் அப்ப வான் ஆர்
தோஒடுடைய செவியன் என்றும் 30
பீஇடு உடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐய நீ வெளிப்பட்டு அருளினை ஆங்கே
** நேரிசை வெண்பா
#2
அருளின் கடல் அடியேன் அன்பு என்னும் ஆறு
பொருளின் திரள் புகலிநாதன் இருள் புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்கு
அண்டத்தார்தாம் ஆர் அதற்கு
** கட்டளைக் கலித்துறை
#3
ஆரணம் நான்கிற்கும் அப்பாலவன் அறியத் துணிந்த
நாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்பிரான் பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக்கரணம் கடந்த கருப்பொருளே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#4
கரு முதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழி பெரும் பொய் எனும்
தூய்மை_இல் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொரு திறல்
மை இருள் நிறத்து மதன் உடை அடு சினத்து 5
ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி
அன்பு கொடு மெழுகி அருள் விளக்கு ஏற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்பு உற
மெய் எனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் 10
பாழ் அறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
சிந்தைத் தாமரைச் செழு மலர்ப் பூம் தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன் இந்த
நெடு நில வளாகமும் அடு கதிர் வானமும்
அடையப் பரந்த ஆதி வெள்ளத்து 15
நுரை எனச் சிதறி இரு சுடர் மிதப்ப
வரை பறித்து இயங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இது எனக் கலங்கா நின்றுழி
மற்று அவர் உய்யப் பற்றிய புணையாய் 20
மிக நனி மிதந்த புகலிநாயக
அருள் நனி சுரக்கும் பிரளய விடங்க நின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டு இங்கு 25
எழுந்தருளத் தகும் எம்பெருமானே
** நேரிசை வெண்பா
#5
மானும் மழுவும் திருமிடற்றில் வாழும் இருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்து என்
உள்ளத்தே நின்ற ஒளி
** கட்டளைக் கலித்துறை
#6
ஒளிவந்தவா பொய் மனத்து இருள் நீங்க என் உள்ள வெள்ளத்
தெளிவந்தவா வந்து தித்தித்தவா சிந்தியாதது ஒரு
களிவந்தவா அன்பு கைவந்தவா கடை சார் அமையத்து
எளிவந்தவா நம் கழுமலவாணர்-தம் இன் அருளே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#7
அருள் பழுத்து அளிந்த கருணை வான் கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி நெடு நிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழை வயிறு கிழிக்கும் கழுமலவாண நின் 5
வழுவாக் காட்சி முதிரா இள முலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யான் ஒன்று உணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி 10
எனைப்பல யோனியும் நினைப்பு அரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்திலாதவர் இல்லை யான் அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் 15
வந்திராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்-வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை 20
தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான் இதன்
மேல் இனி
இளைக்குமாறு இலனே நாயேன்
நந்தாச் சோதி நின் அஞ்செழுத்து நவிலும் 25
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றது ஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திரம் ஆக என்னையும்
இடர்ப் பிறப்பு இறப்பு எனும் இரண்டின் 30
கடல் படா வகை காத்தல் நின் கடனே
** நேரிசை வெண்பா
#8
கடலான காமத்தே கால் தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கண் பெருமான்
கழுமலத்தைக் கைதொழாதார்
** கட்டளைக் கலித்துறை
#9
தொழுவாள் இவள் வளை தோற்பாள் இவள் இடர்க்கே அலர் கொண்டு
எழுவாள் எழுகின்றது என் செயவோ என் மனத்து இருந்தும்
கழுவா மணியைக் கழுமலவாணனைக் கையில் கொண்ட
மழுவாளனைக் கண்டு வந்தது என்றால் ஓர் வசை இல்லையே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#10
வசை_இல் காட்சி இசை நனி விளங்க
முன் நாள் நிகழ்ந்த பன்னீர் உகத்து
வேறுவேறு பெயரின் ஊறு இன்று இயன்ற
மை அறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலிநாயக இகல் விடைப் பாக 5
அமை நாண் மென் தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன் தோள் அவுணர்
மூ எயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர் சடைக் கடவுள் நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் 10
காமனை விழித்த மா முது தலைவ
வானவர் அறியா ஆதியானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறும் கண் நாட்டத்துக்
காண்-தொறும் காண்-தொறும் எல்லாம் யாண்டை 15
ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெள் நீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்_இல் கோடி எனைப்பல ஆகி 20
இல்லன உளவாய் உள்ளன காணாப்
பல் நாள் இருள்-வயின் பட்டேன் அன்னதும்
அன்னது ஆதலின் அடுக்கும் அது என் எனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழி வழி ஆகி வழி குழி ஆகி 25
ஒழிவு இன்று ஒன்றின் ஒன்று தடுமாற
வந்தால் போல வந்தது எந்தை நின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய் எனத் தோன்றி
மேவரும் நீயே மெய் எனத் தோன்றினை 30
ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர்-தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவு போன்று எனவே
** நேரிசை வெண்பா
#11
எனவே எழுந்திருந்தாள் என் செய்வாள் இன்னம்
சின ஏறு காட்டுதிரேல் தீரும் இன வேகப்
பாம்பு கலியான் நிமிரும் பல் நாச் சடை முடி நம்
பூம் புகலியான் இதழிப் போது
** கட்டளைக் கலித்துறை
#12
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல் உண்டு எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே இணையாகச் செப்பும்
சூதும் பெறா முலை பங்கர் தென் தோணிபுரேசர் வண்டு இன்
தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே
** பின்வரும் முதல் முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில்
** கண்டவை திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு பட்டுச்சாமி
** ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை
** மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்
** இணைக்குறள் ஆசிரியப்பா
#13
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ம் சடைப் பெரும
கருணை முது வெள்ளம் பெருகு திரு நயன
கை வலம் நெல்லி அம் கனியது போலச்
சைவ சித்தாந்தத் தெய்வ ஆகமத்தை
வரன்முறை பகர்ந்த திரு மலர் வாய 5
பவள வரை மீதில் தவள மின் என்னச்
செப்பு அரு மார்பு அணி முப்புரிநூல
பேர் இகல் ஆணவக் கார் இருளினுக்கும்
பின்தொடர் வல்வினை வன் தொடரினுக்கும்
மாயை மாமாயை ஆய பேயினுக்கும் 10
அஞ்சல் என்று அமைத்த கஞ்சம் மென் கரதல
அரு மறைச் சிரத்தும் பெருமை மெய் அன்பர்
துங்க இதயத்தும் தங்கு பொன் பாத
துன்னிய பயோதரம் மின் இனம் மிடைதலின்
அளப்பு அரும் பெருமை வளத்தினை விளைத்தலின் 15
சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
உறுகண் தீர வந்து உறும் உழை உறுதலின்
சாத முறை சுழீஇச் சோதி மீது அமர்தலின்
பணை எழு மரவம் பிணையொடு மேவலின்
காமரம் செவ்வழி காமரின் எய்தலின் 20
அளகை எதிர் எனும் ஆசையுற்று உறைதலின்
நாடகம் மருவி நீடு அறை பெருதலின்
நாட்டியத் தோகை ஈட்டம் அங்கு அணைதலின்
அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
மலை ஆசலம் என நிலை சேர் மாடம் 25
மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
நேமி மால் வரை எனப் பூமி மீது இலங்கும்
காழி மாநகரத்து ஊழி-தோறு அமர்ந்த
அமையா அன்பின் உமையாள் கொழுந
தெரிய நான்முகன் பணி பெரியநாயக நின் 30
பொன் மலர்ப் பாதம் சென்னி வைத்து இறைஞ்சுதும்
மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
பரம்பரை தவறா வரம் பெரு குரவன்
மருள் அற இரங்கி அருளிய குறி எனும்
நிந்தை_இல் கனக மந்தரம் நிறுவி 35
மாண் அறிவு என்னும் தூணிடைப் பிணித்த
நேசம் என்னும் வாசுகி கொளுவி
மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
பேரா இன்பச் சீர் ஆனந்தம்
பெறல் அறும் அமுதம் திறனொடும் பெற்று 40
ஞான வாய் கொண்டு மோனமாய் உண்டு
பிறப்பு இறப்பு என்னும் மறப் பெரும் பயத்தால்
பல் நாள் பட்ட இன் ஆங்கு அகற்றி
என்னையும் தன்னையும் மறந்திட்டு
இன்ப மேலீடு எய்துதல் பொருட்டே 45
** நேரிசை வெண்பா
#14
பொருள் ஆசை பெண் ஆசை பூ ஆசை என்னும்
மருள் ஆசையாம் மாசை மாற்றித் தெருள் ஞான
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல் நெஞ்சே
பூந்தராய்நாதரை நீ போற்று
** கட்டளைக் கலித்துறை
#15
போற்றும் பழ மறை வாசிப் புனிதர் புகலி வெற்பன்
ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்து அணிகொள் முல்லை
தூற்றும் புயல் வடகாற்றோ அடிக்கத் தொடங்கும் மதிக்
கீற்று இங்கு எனது மனம் குழம்பாகக் கிடைத்தது இன்றே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#16
இன்று என உளது என அன்று என ஆம் என
உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
பல்விதமாகச் சொல் வகைச் சமயம்
ஆகிய பயம்பில் போகுதல் குறித்த
நிலை_இல் துறை பல நிலை உள துறை சில 5
பொருந்திடும் உலகப் பெரும் கடலிடத்தின்
மயிர் நூல் கிடத்திப் பயில்வுறு தோல் எனும்
வன்புறு பலகையின் என்பு எனும் ஆணியில்
நரம்பு எனப் பெயரிய உரம் பெறு கயிற்றின்
வெரிந் உறும் என்பு எனும் பெரிய கூம்பின் 10
ஐம்பொறி ஆகிய மொய்ம்புறு வாய்தலின்
காயம் என அமைத்த மாய நாவாயில்
இருவினை என்ன அரு சரக்கு ஏற்றிக்
காமம் உலோபம் ஏமம் மாமோகம்
இதம் அறு குரோதம் மதம் மாச்சரியம் என்று 15
உரைபெறு யவனர் நிரையுற இருத்தி
நெடு நீர் என்னப்படு நெடும் நாணில்
தங்கிய மடி எனும் நங்குரம் சேர்த்தி
அற்றம்_இல் மனம் எனப் பெற்ற பாய் விரித்துத்
தடைபடா ஆசைக் கடு வளி துரப்பத் 20
தானம் ஆதி ஆன தீவுகளில்
செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
இவ்வாறு இயங்கும் அவ்வாறு அதனுள்
முன்பார் கால வன் பார் தாக்கத்
தொக்குறு மரக்கலம் பக்குவிட்டு அம்ம 25
அக் கடல் நீருள் புக்கு அறிவு அழிவுழி
மறலி என்னும் சுறவு பிடித்து ஈர்ப்பக்
கடு நரகு என்னும் படுகுழி அழுந்தி
உள துயரினுக்கு ஓர் அளவு இலை அதனால்
இ முறை இயங்குதல் செம்மை அன்று என்று 30
முற்று உணர் பெரியோய் அற்றம்_இல் வலியோய்
ஓதாது உணர்ந்த நாதாதீத
அருவு உருவு என்னும் பொருள் முழுது உடையோய்
யாவரும் நின் வயம் மேவரப் புரிவோய்
கரை அறும் இன்பப் புரை தவிர் நிமல 35
சாந்து அணி வன முலை ஏந்து_இழை பாக
ஞான மா மணம் நிறை மோன மா மலரே
வித்தகம் பழுத்த முத்தி வான் கனியே
பரை முதல் ஐம்பணை நிறைபெறக் கிளைத்த
திருத் தகு நீழல் அருள் பெரும் தருவே 40
பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
பசும்பொனில் செய்த தசும்பு பல தொக்க
தோற்றம் போல வீற்றுவீற்று அமைந்த
தீம் கனி பணை-தொறும் தாங்கு மாதளையும்
வித்துரு மத்தினை ஒத்த செம் தளிரும் 45
ஒளிர் வயிடூரியக் குளிர் மது மலரும்
மேலிடு வண்டு எனும் நீல மா மணியும்
மரகதம் என்ன விரவு காய்த் திரளும்
மறு_இல் மா மணி எனும் நறிய செம் கனியும்
கிடைத்த சீர் வணிகரின் படைத்த மாம் தருவும் 50
எண் திசை சூழ்ந்து விண் தொடும் புகலி
மேவிய பெரும ஆவி நாயகனே
கண பணக் கச்சைப் பண அரவு அசைத்த
மட்டு அலர் புழுகு அணி சட்டைநாயகன்
எனும் மீகாமன் மன்னினன் புரப்ப நீ 55
வீற்று இனிது இருக்க ஏற்ற மெய்ப் பிரணவத்
தோணியே பற்று எனத் துணிந்து
காணுறும் அறிவொடு கண்டுகொண்டேனே
** நேரிசை வெண்பா
#17
கண்டேன் புகலிக் கருத்தனைத் தன் மெய்ஞ்ஞான
வண் தேன் உண்டே மகிழும் வண்டு ஆனேன் பண்டே
அளியனும் ஆனேன் மன மெய் ஆர்பதம் வேறு இன்றிக்
குளிர் சிவானந்தம் இலங்கும்
** கட்டளைக் கலித்துறை
#18
கும்பிட்ட பத்தர்க்கு அழியாத இன்பம் கொடுக்கும் முத்தர்
வம்பிட்ட கொங்கை உமை பாகர் சண்பையர் வந்திலரேல்
கொம்பு இட்ட கோழிக் கொடி வேந்தன் கொச்சையைக் கொல்வதனால்
அம்பு இட்ட கட்சி சிற்றிடைச்சிக்கு என்னோ பயன் ஆகுவதே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#19
ஆகு வாகனனைத் தோகை வாகனனை
உற்ற சீர் மகார் எனப் பெற்ற சுந்தரனே
ஞான வாரிதியில் ஆன ஆரமுதே
கற்றவர் கருதும் நல் தவக் கரும்பே
இருள் குறும்பு எறிந்த அருள் கலா மதியே 5
கதிர்த் தொகை குன்றாது உதித்த செங்கதிரே
நிறைந்த அன்பு அலரின் உறைந்த செந்தேனே
துன்பம் ஒன்று அறியா இன்ப வாரிதியே
மறை முடி விளக்கும் சுடர்விடு மணியே
விறல் அரி பிரமன் பெறல் அரும் பொருளே 10
சிற்ப நூல் முழுதும் அற்பம் இன்று உணர்ந்த
ஓவியர் அற்புத மேவு கைத்தொழிலர்
சுத்த வெண் படிகப் பித்திகைத் தலத்தின்
நவ மணி தெளித்துக் குவவின கூர் நுதித்
தூரியம் கொண்டு சீரிதின் குயிற்றும் 15
இமைப்பு இலா நாட்டத்து அமைப்பு அரும் கலாப
நீல மேகாரமும் கோலம் ஆர் குயிலும்
துப்பு அமர் வளை வாய் ஒப்பு அறு பச்சைத்
தகை சிறைக் கிளியும் புகை நிறப் புறவும்
மேல் நிமிர் தூவிப் பால் நிற அனமும் 20
நல் மது நிகர்த்த இன் மொழிப் பூவையும்
இனம் எனக் கருதி மனம் உவந்து அணைத்த
உயிர் நிலை பெற்ற மயில் முதல் பறவையும்
கூறுபட நோக்கினர் வேறுபாடு அறியா
வளனொடு செறிந்த அளவிலா மாடத்து 25
துறைதரு கற்பு நிறை குலமடவார்
அளி முரல் குழலும் ஒளி கிளர் முகமும்
குலாவிய புருவமும் நிலா விரி குழையும்
நறிய மென் சொல்லும் சிறிய நுண் இடையும்
தத்து நீர் உவரி முத்த மாலிகையும் 30
பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
திருநகர் இது எனக் கருதி வான் முகிலும்
சந்திர விம்பமும் இந்திரதனுவும்
இலங்கு செங்கதிரும் துலங்கு வான் அமுதும்
வாரா மின்னும் தாரா கணமும் 35
ஒருங்கு வந்து இருந்த பெரும் திறன் ஏய்ப்பக்
காட்சியில் பொலிந்த மாட்சிமை சிறந்த
காழிநாயகனே வாழி பூரணனே
ஏர்தரும் பொன்கிரி சேர் கரும் கொடியும்
பொன் நிறமாம் எனச் சொன்ன தொல் மொழியும் 40
ஏதம்_இல் நிறைமதிச் சீதள நிலவால்
ஆரும் மெய் உருப்பம் தீரும் என்பதும்
மொழிதகும் இரத குளிகை தன் சேர்ந்த
காளிமச் சீருணம் நீள் இயல் கனகம்
ஆம் எனக் கூறும் தோம் அறு மொழியும் 45
கருட தியானம் மருள் தப வந்தோர்
நோக்கினில் தவிரும் தீக் கடு என்றலும்
ஆயிரம் கிரணத்து அலர் கதிர் முன்னம்
பாய் இருள் கெடும் எனப் பகர் பழமொழியும்
அம் கண் மா ஞாலத்து எங்கணும் ஒப்ப 50
இயலும் பட்டாங்கு அயல் அல என்னல்
சரத மெய்ஞ்ஞான வரத நின் சேர்ந்த
பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
திருவருள் செல்வம் பெருகுமாறு உதவி
அளித்து அருள் பேரின்பு ஆகும் 55
களித்திடும் முத்திக் காழி வான் கனியே
** நேரிசை வெண்பா
#20
காழிக்கு வேந்தர் கருணாலயர் முனம் நீ
காழிக் குமரன் கவிகையினை ஆழிக்-கண்
கண்ட-மட்டில் சூடகமும் கார் விழியில் கங்கணமும்
கொண்டனள் என்று அன்னமே கூறு
** கட்டளைக் கலித்துறை
#21
கூறுஞ் செனனக் குடில் நெடுநாள் நுழை கூன் முழுதும்
மாறும்படிக்கு மருந்து உளதோ சண்பைவாணர் கொண்ட
நீறும் திருவெழுத்து ஓர் ஐந்தும் கண்டியும் நித்தநித்தம்
தேறும் பொருள் என்று உணராத மாயச் செருக்கினர்க்கே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#22
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
எம்மனோரின் இறந்து பிறந்து உழலும்
மம்மரில் பெரிய வானவர் குழுவை
மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்
வழுத்தியும் நெஞ்சத்து அழுத்தியும் வறிதே 5
புறவு ஆர் பசும்புல் கறவாக் கல் பசு
வாயிடைச் செருகித் தூய நீர் உதவி
அரும் சுவைப் பால் கொளப் பெரும் சுரை வருடும்
பேதையர் போலவும் ஓது நஞ்சு அமரும்
எட்டியை விரும்பி மட்டு நீர்த் தேக்கி 10
ஈ நுழைகல்லா மேல் நிமிர் வேலி
உறும்படி அமைத்து நறும் கனி கொள்ளக்
கருதி முயலும் திருவிலி போலவும்
இலகு வால் அரிசி உலைபெய எண்ணி
வெற்று உமி குற்றும் பற்றிலர் போலவும் 15
அரு நிலம் உழுது அதின் எரு மிகப் பெய்து
வித்திட்டு ஆங்கே விளை பயன் கொள்ளச்
சித்தத்து உன்னும் மத்தர் போலவும்
வாழ்நாள் அனைத்தும் வீழ்நாள் ஆக்கி
இம்மையும் மறுமையும் செம்மையில் பொருந்தாது 20
இடருறும் மாந்தர் புடவியில் பலரால்
அன்னவாறு எளியனும் உன்னி மதி மயங்காது
எய்ப்பினில் உதவும் மெய்ப்பொருள் ஆகி
என்றும் ஓர் இயல்பொடு நின்ற காரண நின்
சேவடித் தாமரைப் பூவினைப் புனைந்து 25
நாத் தழும்பேற ஏத்தி உள் உருகிப்
பெருகிய அன்பு என வரும் நீர் நிறைந்த
இதய வாவிப் பதும மா மலரின்
குணன் எனப் பொருந்தும் மணமாம் நின்னைக்
கண்டு இறுமாந்து பண்டை வாதனை தீர்ந்து 30
அறை கடல் அழுந்தும் நிறைகுடமது போன்று
அசைவற்று இருக்க இசையத் தருதி
நிலை மிகப் பொருந்திப் பல முறை சாரலால்
உந்திய வன்ன உரு மருவுதலான்
மந்திரத்து உறு சுடர் மகத்து உயர்தலினால் 35
இதம் பயில் இசை கொள் பதம் கலந்து உறுதலால்
வேதமே ஒப்பு என ஓது கோபுரமும்
ஒழுக்கு நெறி சிறிதும் வழுக்கு இல அதனால்
நால் பதப் பிரிவின் மேல் பதம் அதனால்
பல கலை ஒளிர் மதி நிலவிய அதனால் 40
முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
சிவாகமம் என ஒளிர் தவா மணி மேடையும்
வெள்ளை வாரணம் மே கொள்ளுமாங்கு அதனால்
கண் தாமரை பல மட்டு ஆர்தலினால்
அம் சுமந்து ஆரம் விஞ்சி ஓங்குதலால் 45
இந்திரன் எனப் பொலி யந்திர வாவியும்
எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
கரு வலி தொலைக்கும் பெரு மலை மருந்தே
கருணை சூல் கொண்ட பெரிய வான் முகிலே
சிற்றிடைக் கரும் கண் பொன் தொடிக் கரத்தாள் 50
ஆகம் ஆர் வன முலை அணையும்
போகம் ஆர் இதழிப் பூம் கண்ணியனே
** நேரிசை வெண்பா
#23
கண் நின்று ஒளிரும் கருமணியின் உள் ஒளி போல்
உள் நின்று ஒளிரும் ஒளி விளக்கு என்று எண்ணிப்
புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்
அகலுமே பாச இருள் அன்று
** கட்டளைக் கலித்துறை
#24
இருள் அந்தகன் வரின் ஈர் எயிறே பிறை ஏய்ந்த செவ் வான்
சுருள் குஞ்சி பாசம் என அந்தி வந்தது தோகை சொல் தேன்
பருகும் புகலிப்பிரான் எனும் பானுப் பல கிரணம்
பெருகும்படி வந்து உதித்தால் மின் ஆவி பெருகுவளே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#25
பெறுவது பெற்ற உறுதி உத்தமர்கட்கு
ஆயினும் சிறந்த நேய நெஞ்சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆன பேர் உழவர் மானமோடு ஆக்கிய
முயலகன் என்னும் இயல் பெரும் கரும்பை 5
உதிரம் என்னும் முதிர் சாறு ஒழுக
நகை எனும் முத்தம் தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதம் எனும் எந்திர ஆலை இட்டு
அரைத்து அக வயிரம் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அம் கயல் செம் கண் 10
பெண்ணரசி பிரியா வண்ண மெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடு அவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களி கொள் கத்தூரி
நறுமணம் எவையும் உறு முறை பொருந்தி
உண் நீர் பெற்ற தண் நீர்ப் பந்தரும் 15
நெய் கமழ் கருணையும் குய் கமழ் கறியும்
மதி தரு நிலவு எனப் புதிய வெண் தயிரும்
வருக்கையின் கனியும் சருக்கரைக்கட்டியும்
முதல் உபகரணம் பதனொடு மரீஇத்
தளவு அரும்பு என்ன வளம் மலி போனகம் 20
மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நல் நயத்துடன் அருள் அன்னசத்திரமும்
பாடகச் சீர் அடிப் பால் மொழி மடவார்
நாடகத் தொழில் பயில் நீடு அரங்கு எவையும்
கலை பயில் கழகமும் பலர் பயில் மன்றமும் 25
உள்ளன கரவாது உவந்து எதிர்ந்து அளிக்கும்
வள்ளியோர் வாழும் மணி நெடு வீதியும்
பூமகள் உறையுளாம் என விளங்கும்
பெரும் புகழ்க் காழி விரும்பு சங்கரனே
ஏந்து எழில் புவன வேந்தன் நீ ஆதலின் 30
வளம் மலி நான்முகக் களமர் உன் ஏவலின்
உரம் பெறு குல வரைக் குறும்பு அகப்பட்ட
மண்டலம் என்னும் கண்ட நீள் வயலுள்
சராசரத் தொகுதி விராய வித்து இட்டுப்
பாதவம் மிருகம் பறவை மானிடர் 35
ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மா உறை மருமக் காவலாளர்
வளமையின் ஓம்ப விளைவு முற்றிய பின்
புரி பயன் பெறுவான் அரிதர இயற்றி
மெய் வலிக் கூற்றுவக் கைவினைமாக்களில் 40
புலால் உடை யாக்கைப் பலாலம் அது அகற்றி
அற்றம்_இல் உயிர் எனப்பெற்ற நெல் திரளைப்
பூத சாரத்து அனுப்பூதம் மகாதனு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூ வகைப் பண்டியின் மேவர ஏற்றிப் 45
பொன்_நிலம் நிரயம் இ நிலம் என்னும்
இடம்-தொறும் ஆங்கு அவை அடங்க வைத்து அவற்றுள்
ஒருசிலவற்றை நின் திருவடி வீட்டில்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசு கொள் கடமை ஆறில் ஒன்று என்னும் 50
புரை தீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்
மா சுகம் நீ உறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநாயகனே
** நேரிசை வெண்பா
#26
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்கு
ஒருவாது அருள் வரம் ஒன்று உண்டே திருமால்
விடையாய் புகலி விமலா மவுன
விடையாய் பிரியா விடை
** கட்டளைக் கலித்துறை
#27
விடையம் பொருள் என்று உணராத மார்க்கம் விரும்பு மழுப்
படை அம்புயக் கரத்து எம் தாதை ஞான பரம என்று எண்
சடை அம் புனல் அணி வேணுபுரேசன் அம் தாள் மலர் தூ
விடையம் பொருள் என்று இரு நீ என்று உண்மை விளம்பினனே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#28
விளம்புவன் யான் ஒன்று உளம் புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்து பொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்த புன்சொல்லே
ஆயினும் பயந்த தம் சேயவர் சொலும் மொழி
குழலினும் யாழினும் அழகிதாம் அது போல் 5
நற்றாய் ஆகி என் பெற்றாய் என் சொல்
திருச்செவிக்கு ஏறும் பொருத்தம் உண்டு அதனால்
கேட்டி கேட்டி வாட்டம்_இல் பெரியோய்
மது மழை பிலிற்றிப் புது மணம் விரித்துப்
பற்பல உதவும் கற்பகத் தருவும் 10
நந்தா வளன் அருள் சிந்தாமணியும்
வாமமாம் மேனிய காமதேனுவும்
அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
கடவுளர் அணி மணித் தட மகுடங்கள்
கால் துணை வருடப் போற்றினர் இறைஞ்சி 15
முனிவர் ஆசி நனி பல மொழியக்
கரம் பயில் கவரி அரம்பையர் இரட்டக்
கின்னரர் விபஞ்சி நல் நரம்பு உளரா
இசை அமுது இரும் செவி மிசை எடுத்து ஊற்ற
முடங்கு உளைச் செம் கண் மடங்கல் அணை நாப்பண் 20
அமுது உகு மென் சொல் குமுத மென் செவ் வாய்
இந்திராணி வந்து அருகு இருப்பக்
கரு முகில் ஆயிரம் திரு மலர் பூத்துச்
செம் கதிர்ச் சேகரம் துங்க வீற்றிருந்த
பெரும் திறல் கடுப்ப இருந்து விண் புரக்கும் 25
அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
பழ மறை கனிந்து மழவு பெற்று இருந்த
செம் நாத் தவிசின் முன் நாள் தங்கிப்
பனுவலாட்டி இனிது உவந்து இருப்ப
வண்டு பாண் முரன்று கிண்டுபு ததைந்து 30
பொன் தாது உண்ணா முற்றா இன்பப்
பிரசமுற்று இருந்த வர சரோருகத்தன்
நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
திண்ணிய மனத்திடை எண்ணியாங்கு இயற்றி
எம்மால் எவையும் இயன்றன என்னச் 35
செம்மாந்திருக்கும் சிறிய வாழ்க்கையும்
திதலை பூத்து அலர்ந்து மத களிறு இகலி
வரு முலை சுமந்த திருமகள் பச்சைப்
பசும் துழாய் அலங்கல் அசும்பு தேன் துளித்துக்
கடி கமழ் மார்பில் குடிபுகுந்து இருப்பத் 40
தண் நிலவு என விரி வெண் நிறப் பாற்கடல்
ஒல் ஒலித் தரங்கம் மெல் அடி வருடக்
காமர் தென்கால் எனும் சாமரை அசையத்
துத்தி நெய் பரந்து பைத்த பை அகலில்
அணி கிளர் பல கதிர் மணி விளக்கு ஒளிரச் 45
சுடிகை வான் அரவ நெடிய பூ அணை மேல்
மறு இலா நீல வரை கிடந்து என்ன
அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
அழியா இன்பம் என்று ஒழியாது உரைப்பினும்
கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி 50
இந்திரசாலம் முந்து நீள் கனவு
வெண்தேர் போல உண்டு எனத் தோன்றி
இலவாம் ஆதலின் நலம் அல ஆங்கு அவை
நிலைபேறு உடையது நின் அருள் செல்வம்
அன்னதே பெறுதற்கு உன்னினன் தமியேன் 55
அதனால்
எளிதினின் இரங்கி அளி சுரந்து அருளுதி
மரகதத்து இடையிடை தரளம் இட்டு இழைத்த
அரமியம் அதனை விரி குழை பொதுளி
அரும்பிய புன்னைப் பெரும் பொழில் எனவும் 60
ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
சேடு உயர் நீல் நிறச் செய்குன்று அதனைத்
துணர்த்த பூம் கொன்றை மணத்த கா எனவும்
மொய்க்கும் வண் சிறை அளி மைக் கரு நிறங்கள்
பளிங்கு அரிந்து இயற்றிய துளங்கு ஒளி மாடப் 65
பித்திகைத் தலத்திடைப் பத்தி பாய்தலினால்
வந்தது இங்கு இரவு எனச் சந்தத மடவார்
வார் முலை ஆடவர் மார்பிடைக் குளிப்பப்
புல்லிய கலவிப் புதிய தேன் நுகரும்
மல்லல் அம் காழி வள நகர் வாண 70
குறி குணம் கடந்த மறு_இல் மா மணியே
உறை பொருள் எங்கணும் நிறை பரிபூரண
அந்தம் ஆதி முந்தையே தவிர்ந்த
அனாதி முத்த என் ஆதி நித்த
அரு உரு இல்லா ஒரு பெரும் பொருளே 75
அளவையின் அடங்காது ஒளிர் சுக நேய
உருகு மெய் அன்பர் பருகும் ஆரமுதே
நலம் கனி பெரியநாயகி
கலந்த பேரின்பில் களித்த பண்ணவனே
** நேரிசை வெண்பா
#29
பணம் அஞ்சு அரை இருக்கப் பாவையரைச் சும்மா
புணர்கின்றீர் என்று புகலப் புணர்வார்க்கு
அரைக்காசு தந்தனம் என்றார் புகலியார் மா
அரைக்காசு என்றாள் அதற்கு மான்
** கட்டளைக் கலித்துறை
#30
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன் செங்க
ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்து அருளும்
ஏனைப் பெரும் பொருள் கல்வி மெய் செல்வம் இருந்து அளிப்பார்
தேனைத் தரும் செழும் தாமரை நாமகள் செம் திருவே
** திருச்சிற்றம்பலம்
** திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று
@3 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
** இணைக்குறள் ஆசிரியப்பா
#1
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புது மலர்த் தோடு எனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடு மால் ஏனமாய் நிலம் புக்கு 5
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி அகம் சேந்து
மறு_இல் கற்பகத்து உறு தளிர் வாங்கி 10
நெய்யில் தோய்த்த செவ்வித்து ஆகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பல் மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் 15
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாள் உகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல் விரித்து அசைத்து
நச்சு எயிற்று அரவக் கச்சை யாப்புறுத்துப்
பொலிந்து உளது ஒருபால் திருவிடை இலங்கு ஒளி 20
அரத்த ஆடை விரித்து மீது உறீஇ
இரங்கு மணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற்று ஆகும் ஒருபால் திரு இடை
செம் கண் அரவும் பைம் கண் ஆமையும்
கேழல் கோடும் வீழ் திரள் அக்கும் 25
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவள நீறு அணிந்தது ஓர் பவள வெற்பு என்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந்து அணிந்து குங்குமம் எழுதிப் 30
பொற்றாமரையின் முற்றா முகிழ் என
உலகு ஏழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
அயில் வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூ இலை வேலும் பூ வாய் மழுவும் 35
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்து உளது ஒருபால் திருக்கரம் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் 40
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திரு நெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித்து ஆகிப்
பாலில் கிடந்த நீலம் போன்று
குண்டு நீர்க் குவளையின் குளிர்ந்து நிறம் பயின்று 45
எம்மனோர்க்கு அடுத்த வெம்மை நோய்க்கு இரங்கி
உலகு ஏழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென் துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைம் கண் தலையும் 50
அரவும் மதியமும் விரவித் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடு கெழு
நெருப்பில் திரித்து அனைய உருக் கிளர் சடிலமொடு
நால் முகம் கரந்த பால் நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து 55
சேண் இகந்து உளதே ஒருபால் திருமுடி பேணிய
கடவுள் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொன் பூ வாங்கிக்
கை வைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல் மிசை வளைஇ மேல் நிவந்து 60
வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
இனைய வண்ணத்து நினைவு அரும் காட்சி
இரு வயின் உருவும் ஒரு வயிற்று ஆகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க 65
வாள் நுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வன முலை
தைவந்து வருட மெய்ம் மயிர் பொடித்தாங்கு
உலகம் ஏழும் பல் முறை ஈன்று
மருது இடங்கொண்ட ஒரு தனிக் கடவுள் நின் 70
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக் கருப்பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வு பெறல் பொருட்டே
** நேரிசை வெண்பா
#2
பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் ஒருவர்
கருதா என்பு ஆர்க்கும் கறை_மிடற்றாய் தொல்லை
மருதா என்பார்க்கு வரும்
** கட்டளைக் கலித்துறை
#3
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன் வழி போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றிலேன் புகழ் மா மருதில்
பெரும் தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசை இன்றி
இருந்தேன் இனிச் சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே
#4
ஒன்றினோடு ஒன்று சென்று முகில் தடவி
ஆடு கொடி நுடங்கும் பீடு கெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஓவ நூல் செம்மைப் பூ இயல் வீதிக்
குயில் என மொழியும் மயில் இயல் சாயல் 5
மான் மற விழிக்கும் மான் ஆர் செல்வத்து
இடை மருது இடங்கொண்டிருந்த எந்தை
சுடர் மழு வலங்கொண்டிருந்த தோன்றல்
ஆரணம் தொடராப் பூரண புராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள் 10
சோதிச் சுடர் ஒளி ஆதித் தனிப் பொருள்
ஏக நாயக யோக நாயக
யான் ஒன்று உணர்த்துவது உளதே யான் முன்
நனம் தலை உலகத்து அனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கு எனச் சுழன்றுழித் 15
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
யாய் உறு துயரமும் யான் உறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப் பெரும் துன்பமும்
நீ அலது அறிகுநர் யாரே அதனால்
யான் இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று 20
உற்பவம் துடைத்தல் நின் பிடித்து அல்லது
பிறிதொரு நெறியின் இல்லை அ நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டு ஒன்றில் படரா
உள்ளம் ஒன்று உடைமை வேண்டும் அஃது அன்றி
ஐம்புலன் ஏவல் ஆணை வழி நின்று 25
தான் அலது ஒன்றைத் தான் என நினையும்
இது எனது உள்ளம் ஆதலின் இது கொடு
நின்னை நினைப்பது எங்கனம் முன்னம்
கல் புணையாகக் கடல் நீர் நீந்தினர்
என் பிறர் உளரோ இறைவ கற்பம் 30
கடத்தல் யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல் யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும் நஞ்சு பொதி
உறை எயிற்று உரகம் பூண்ட
கறை கெழு மிடற்று எம் கண்_நுதலோயே 35
** நேரிசை வெண்பா
#5
கண் என்றும் நம்-தமக்கு ஓர் காப்பு என்றும் கற்றிருக்கும்
எண் என்றும் மூல எழுத்து என்றும் ஒண் ஐ
மருதவப்பா என்றும் உனை வாழ்த்திலரேல் மற்று
கருத அப்பால் உண்டோ கதி
** கட்டளைக் கலித்துறை
#6
கதியாவது பிறிது யாதொன்றும் இல்லை களேபரத்தின்
பொதியாவது சுமந்தால் விழப்போம் இது போன பின்னர்
விதியாம் எனச் சிலர் நோவது அல்லால் இதை வேண்டுநர் யார்
மதியாவது மருதன் கழலே சென்று வாழ்த்துவதே
#7
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்கு உதவாது
தன் உயிர்க்கு இரங்கி மன் உயிர்க்கு இரங்காது
உண்டிப் பொருட்டால் கண்டன வெஃகி
அவி அடுநர்க்குச் சுவை பகர்ந்தே
ஆரா உண்டி அயின்றனர் ஆகித் 5
தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னில் சிறந்த நல் மூதாளரைக்
கூஉய் முன் நின்று தன் ஏவல் கேட்கும்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப்பேசியும் 10
பொய்யொடு புன்மை தன் புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நல் மனைக்கிழத்தி ஆகிய அ நிலைச்
சாவுழிச் சாஅம் தகைமையள் ஆயினும் 15
மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டி வேட்டு இருப்ப
எள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம் விற்று உண்ணும்
அருள்_இல் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் 20
ஆற்றல்செல்லாது வேற்றோர் மனை-வயின்
கற்புடை மடந்தையர் பொற்பு நனி கேட்டுப்
பிழை வழி பாராது நுழை வழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்-தம்
விச்சையில் படைத்த வெவ்வேறு காட்சியின் 25
அகம் மலர்ந்து ஈவார் போல முகம் மலர்ந்து
இனிது மொழிந்து ஆங்கு உதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள் பல குறித்து அவர்
தாளின் ஆற்றல் தவிர்த்தும் கேள் இகழ்ந்து
இகமும் பரமும் இல்லை என்று 30
பயம் இன்று ஒழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனைய தன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனை மலர்ந்து
யோசனை கமழும் உற்பல வாவியில் 35
பாசடைப் பரப்பில் பால் நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகு வாய் வாளைகள்
போர்த் தொழில் புரியும் பொரு காவிரியும்
மருதமும் சூழ்ந்த மருதவாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக 40
பத்தருக்கு எய்ப்பினில் வைப்பு என உதவும்
முத்தித் தாள மூவா முதல்வ நின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருள் என நினையாது உன் அருளினை நினைந்து 45
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதல் கீளொடு பெறுவது புனைந்து
சிதவலோடு ஒன்று உதவுழி எடுத்தாங்கு 50
இடுவோர் உளர் எனின் நிலையின்-நின்று அயின்று
படு தரைப் பாயலில் பள்ளி மேவி
ஓவாத் தகவு எனும் அரிவையைத் தழீஇ மகவு எனப்
பல் உயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும் 55
பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
குளப்பு அடி நீரும் அளப்பு அரும் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற்று ஆதலின்
நின் சீர் அடியார் தம் சீர் அடியார்க்கு 60
அடிமை பூண்டு நெடுநாள் பழகி
முடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகி அவர்
கால் தலை ஏவல் என் நாய்த் தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லது ஒன்று
உண்டோ மற்று எனக்கு உள்ளது பிறிதே 65
** நேரிசை வெண்பா
#8
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பில் செறிந்த
பொருத அட்ட வில் பிழைத்துப் போந்தேன் புராணன்
மருத வட்டம்-தன்னுளே வந்து
** கட்டளைக் கலித்துறை
#9
வந்தி கண்டாய் அடியாரைக் கண்டால் மறவாது நெஞ்சே
சிந்தி கண்டாய் அரன் செம்பொன் கழல் திரு மா மருதைச்
சந்தி கண்டாய் இல்லையாயின் நமன் தமர் தாம் கொடுபோய்
உந்தி கண்டாய் நிரயத்து உன்னை வீழ்த்தி உழக்குவரே
#10
** இணைக்குறள் ஆசிரியப்பா
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையறவு உளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வுசெய்து 5
அன்பு என் பாத்தி கோலி முன்பு உற
மெய் எனும் எருவை விரித்து ஆங்கு ஐயம்_இல்
பத்தித் தனி வித்து இட்டு நித்தலும்
ஆர்வத் தெள் நீர் பாய்ச்சி நேர் நின்று
தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும் 10
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி உள் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்த பின்
ஞானப் பெரு முளை நந்தாது முளைத்துக்
கருணை இளம் தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களை அறக் களைந்து 15
சேமப்படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம் மயிர்ப் புளகம் முகிழ்ந்திட்டு அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடி மலர் மலர்ந்து
புண்ணிய
அஞ்செழுத்து அரும் காய் தோன்றி நஞ்சு பொதி 20
காள கண்டமும் கண் ஒரு மூன்றும்
தோள் ஒரு நான்கும் சுடர் முகம் ஐந்துமாய்ப்
பவள நிறம் பெற்றுத் தவள நீறு பூசி
அறுசுவை அதனினும் உறு சுவை உடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினும் களி தரும் 25
சேண் உயர் மருதமாணிக்கத் தீம் கனி
பையப்பையப் பழுத்துக் கைவர
எம்மனோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந்திருப்பச் சிலர் இதின் வாராது
மனம் எனும் புனத்தை வறும் பாழ் ஆக்கிக் 30
காமக் காடு மூடித் தீமை செய்
ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓடக்
கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர
இச்சை வித்து உதிர்த்துழி யான் எனப் பெயரிய 35
நச்சு மா மரம் நனி மிக முளைத்துப்
பொய் என் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பல் தழை பரப்பிப் பூ எனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல் காய் தூக்கிப் பின்பு 40
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவாது
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே
** நேரிசை வெண்பா
#11
உடை மணியின் ஓசைக்கு ஒதுங்கி அரவம்
படம் ஒடுங்கப் பையவே சென்று அங்கு இடைமருதர்
ஐயம் புகுவது அணி இழையார் மேல் அநங்கன்
கை அம்பு உக வேண்டிக் காண்
** கட்டளைக் கலித்துறை
#12
காணீர் கதி ஒன்றும் கல்லீர் எழுத்து அஞ்சும் வல்ல வண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர் அவன் புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம் நீறு எங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்பிரான் கழல் மேவுதற்கே
#13
** இணைக்குறள் ஆசிரியப்பா
மேவிய புன் மயிர்த் தொகையோ அ மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை 5
முடை கெழும் மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ள நின்று
ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பினுள் 10
பிரியாது ஒறுக்கும் பிணியோ தெரியாது
இன்னது யான் என்று அறியேன் தெரியா
ஏதினும் தேடினன் யாதினும் காணேன்
முன்னம்
வரைத் தனி வில்லால் புரத்தை அழலூட்டிக் 15
கண் படையாகக் காமனை ஒரு நாள்
நுண் பொடியாக நோக்கி அண்டத்து
வீயா அமரர் வீய வந்து எழுந்த
தீ வாய் நஞ்சைத் திருவமுது ஆக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து 20
பாலனுக்காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவ மணி முகிழ்த்த புது வெயில் எறிப்ப
எண்_அரும் கோடி இருடி கணங்கட்குப் 25
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடைமருத பொரு விடைப் பாக
மங்கை பங்க கங்கை நாயக நின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய 30
ஞான நாட்டம் பெற்ற பின் யானும்
நின் பெருந்தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன்
நின் நிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர் 35
தம்மையும் காணாத் தன்மையோரே
** நேரிசை வெண்பா
#14
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ
எண்ணுவார் உள்ளத்திடை மருதர் பொன் பாதம்
நண்ணுவாம் என்னும் அது நாம்
** கட்டளைக் கலித்துறை
#15
நாமே இடை உள்ளவாறு அறிவாம் இனி நாங்கள் சொல்லல்
ஆமே மருதன் மருத வனத்து அன்னம் அன்னவரைப்
பூ மேல் அணிந்து பிழைக்கச்செய்தார் ஒரு பொட்டும் இட்டார்
தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல் தக்கது அன்றே
** நேரிசை ஆசிரியப்பா
#16
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்று வளைத்து எய்த குன்றாக் கொற்றத்து
நுண் பொடி அணிந்த எண் தோள் செல்வ
கயிலை நடந்து அனைய உயர் நிலை நோன் தாள்
பிறை செறிந்து அன்ன இரு கோட்டு ஒரு திமில் 5
பால் நிறச் செம் கண் மால் விடைப் பாக
சிமையச் செம் கோட்டு இமையச் செல்வன்
மணி எனப்பெற்ற அணி இயல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயில் எனப் பேசும் மயில் இளம் பேடை 10
கதிர் ஒளி நீலம் கமலத்து மலர்ந்து அன
மதர் அரி நெடும் கண் மானின் கன்று
வரு முலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பல் முறை ஈன்ற
ஐய திரு வயிற்று அம்மைப்பிராட்டி 15
மறப்பு அரும் செய்கை அறப் பெரும் செல்வி
எமை ஆளுடைய உமையாள் நங்கை
கடவுள் கற்பின் மடவரல் கொழுந
பவள மால் வரைப் பணைக் கை போந்து அனைய
தழை செவி எண் தோள் தலைவன் தந்தை 20
பூ அலர் குடுமிச் சேவல் அம் பதாகை
மலை துளைபடுத்த கொலை கெழு கூர் வேல்
அமரர்த் தாங்கும் குமரன் தாதை
பொருதிடும் பொன்னி புண்ணியம் புரக்கும்
மருது இடங்கொண்ட மருதவாண 25
நின்னது குற்றம் உளதோ நின் நினைந்து
எண்_அரும் கோடி இடர்ப் பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்று எனத் திரியாப் 30
பாவிகள்-தமதே பாவம் யாது எனின்
முறியாப் புழுக்கல் முப்பழம் கலந்த
அறுசுவை அடிசில் அட்டு இனிது இருப்பப்
புசியாது ஒருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின் வைத்து 35
ஆற்றிய தெள் நீர் நாற்றமிட்டு இருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெள் நீர்க் குற்றம் அன்று கண் அகன்று
தேம் துளி சிதறிப் பூம் துணர் துறுமி
வாலுகம் கிடந்த சோலை கிடப்ப 40
வெள்ளிடை வெயிலில் புள்ளி வெயர் பொடிப்ப
அடி பெயர்த்திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல் தீங்கு அன்றே
** நேரிசை வெண்பா
#17
அன்று என்றும் ஆம் என்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோடு ஒவ்வாது உரைத்தாலும் என்றும்
ஒரு தனையே நோக்குவார் உள்ளத்து இருக்கும்
மருதனையே நோக்கி வரும்
** கட்டளைக் கலித்துறை
#18
நோக்கிற்றுக் காமன் உடல் பொடி ஆக நுதி விரலால்
தாக்கிற்று அரக்கன் தலை கீழ்ப்படத் தன் சுடர் வடி வாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலை உருண்டு ஓடச் சலந்தரனைப்
போக்கிற்று உயர் பொன்னி சூழ் மருது ஆளுடைப் புண்ணியமே
** நேரிசை ஆசிரியப்பா
#19
புண்ணிய புராதன புதுப் பூம் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காளகண்ட கந்தனைப் பயந்த
வாள் அரி நெடும் கண் மலையாள் கொழுந
பூதநாத பொரு விடைப் பாக 5
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி ஆகிப் பணைத்த மெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 10
கருவிடைப் புகாமல் காத்து அருள்புரியும்
திருவிடைமருத திரிபுராந்தக
மலர் தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவு அரும் 15
காடும் மலையும் புக்குக் கோடையில்
கை மேல் நிமிர்த்துக் கால் ஒன்று முடக்கி
ஐ வகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார் பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் 20
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணாது உழன்றும்
காயும் கிழங்கும் காற்று உதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் 25
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கு அவர்
அம்மை முத்தி அடைவதற்காகத்
தம்மைத்தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கு இவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுது இன்று உயர்ந்த எழு நிலை மாடத்தும் 30
செழும் தாது உதிர்ந்த நந்தனவனத்தும்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூ விரி தரங்க வாரிக் கரையிலும்
மயில் பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் 35
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்டு இட்ட
மருப்பின் இயன்ற வாள் அரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐ வகை அமளி அணை மேல் பொங்கத்
தண் மலர் கமழும் வெண் மடி விரித்துப் 40
பட்டினுள் பெய்த பத நுண் பஞ்சின்
நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர் நடை பயிற்றிப்
பொன் தோரணத்தைச் சுற்றிய துகில் என 45
அம் மென் குறங்கின் ஓம் என் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்கு மணி மேகலை மருங்கில் கிடப்ப
ஆடு அரவு அல்குல் அரும் பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வன முலை கதிர்ப்ப 50
அணி இயல் கமுகை அலங்கரித்தது போல்
மணி இயல் ஆரம் கதிர் விரித்து ஒளிர்தர
மணி வளை தாங்கும் அணி கெழு மென் தோள்
வரித்த சாந்தின் மிசை விரித்து மீது இட்ட
உத்தரீயப் பட்டு ஒருபால் ஒளிர்தர 55
வள்ளை வாட்டிய ஒள் இரு காதொடு
பவளத்து அருகாத் தரளம் நிரைத்தாங்கு
ஒழுகி நீண்ட குமிழ் ஒன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆலகாலமும் அனைத்தும் இட்டு அமைத்த 60
இரண்டு நாட்டமும் புரண்டு கடை மிளிர்தர
மதி என மாசறு வதனம் விளங்கப்
புது விரை அலங்கல் குழல் மிசைப் பொலியும்
அம் சொல் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் 65
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது
ஆடினர்க்கு என்றும் பாடினர்க்கு என்றும்
வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும் 70
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மகிழ மனம் மகிழ்ந்து
இ வகை இருந்தோம் ஆயினும் அ வகை
மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின் வழி செலுத்தலின் அந்த 75
முத்தியும் இழந்திலம் முதல்வ அத் திறம்
நின்னது பெருமை அன்றோ என் எனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லே போல் 80
நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே
** நேரிசை வெண்பா
#20
நாமம் நவிற்றாய் மனனே நாரியர்கள் தோள் தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்து ஒழியல் ஆமோ
பொருத வனத்து ஆனை உரி போர்த்து அருளும் எங்கள்
மருதவனத்தானை வளைந்து
** கட்டளைக் கலித்துறை
#21
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன் அம்புக்கு
இளையார் தனம் கண்டு இரங்கி நில்லார் இப் பிறப்பினில் வந்து
அளையார் நரகினுக்கு என் கடவார் பொன் அலர்ந்த கொன்றைத்
தளையார் இடைமருதன் அடியார் அடி சார்ந்தவரே
** நேரிசை ஆசிரியப்பா
#22
அடி சார்ந்தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக் கணுக்கு அல்லாது ஊன் கணுக்கு ஒளித்துத் 5
துளக்கு அற நிமிர்ந்த சோதித் தனிச் சுடர்
எறுப்புத் துளையின் இரு செவிக்கு எட்டாது
உறுப்பின்-நின்று எழுதரும் உள்ளத்து ஓசை
வைத்த நாவின் வழி மறுத்து அகத்தே
தித்தித்து ஊறும் தெய்வத் தேறல் 10
துண்டத் துளையில் பண்டை வழி அன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தாது எவற்றையும்
தானே ஆகி நின்ற தத்துவ
தோற்றுவது எல்லாம் தன்னிடைத் தோற்றி 15
தோற்றம் பிறிது இல் தோற்றாச் சுடர் முளை
விரி சடை மீமிசை வெண் மதி கிடப்பினும்
இருள் விரி கண்டத்து ஏக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்து நின்று அலமர
மருது இடங்கொண்ட மருதமாணிக்க 20
உமையாள் கொழுந ஒரு மூன்று ஆகிய
இமையா நாட்டத்து என் தனி நாயக
அடியேன் உறு குறை முனியாது கேள்-மதி
நின் அடி பணியாக் கல் மனக் கயவரொடு
நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்ப்பக் 25
கருப்பாசயம் எனும் இருள் சிறை அறையில்
குடர் என் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்
கூட்டுச் சிறைப் புழுவின் ஈட்டு மலத்து அழுந்தி
உடனே வருந்தி நெடுநாள் கிடந்து
பல் பிணிப் பெயர் பெற்று அல்லல்படுத்தும் 30
தண்டலாளர் மிண்டி வந்து அலைப்ப
உதர நெருப்பில் பதைபதைபதைத்தும்
வாத மத்திகையின் மோத மொத்துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாது
இடம் குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் 35
பாவப் பகுதியில் இட்டுக் காவல்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப்படுத்திப் பையென விட்ட பின்
யானும் போந்து தீனுக்கு உழன்று 40
பெரியோர்ப் பிழைத்தும் பிறர் பொருள் வௌவியும்
பரியாது ஒழிந்தும் பல் உயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய் பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி 45
ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இ நாள் இடுக்கண் எய்திப் பல் நாள்
வாடுபு கிடப்பேன் வீடு நெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு 50
என்னையும் அடிமையாகக் கொண்டே
இட்ட பச்சிலை கொண்டு ஒட்டி அறிவித்து
இச் சிறை பிழைப்பித்து இனிச் சிறை புகாமல்
காத்து அருள்செய்ய வேண்டும்
தீத் திரண்டு அன்ன செம் சடையோனே 55
** நேரிசை வெண்பா
#23
சடை மேல் ஒருத்தி சமைந்து இருப்ப மேனிப்
புடை மேல் ஒருத்தி பொலிய இடையே போய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான் கொடுப்பது
எங்கே இருக்க இவள்
** கட்டளைக் கலித்துறை
#24
இருக்கும் மருதினுக்குள் இமையோர்களும் நான்மறையும்
நெருக்கும் நெருக்கத்தும் நீளகத்துச் சென்று மீளவொட்டாத்
திருக்கும் அறுத்து ஐவர் தீமையும் தீர்த்துச் செவ்வே மனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண் சுடரே
** நேரிசை ஆசிரியப்பா
#25
சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடை உகந்து ஏறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணால் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும் 5
கரி உரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிர கரம் செம் தழல் ஏந்தினை என்றும்
வலம்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் 10
அயன் சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்த வாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலி உரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டாது அலமர 15
வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழு நீர் ஞாலம் செகுத்து உயிர் உண்ணும்
அழல் விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்_இல் கோடி
நினைவு அரும் கீர்த்தி நின்-வயின் புகழ்தல் 20
துளக்குறு சிந்தையேன் சொல்லளவு ஆதலின்
அளப்பு அரும் பெருமை நின் அளவிலது ஆயினும்
என்றன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல்படுத்தாது 25
எழு நிலை மாடத்துச் செழு முகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்பவ போல
நுண் துகில் பதாகை கொண்டுகொண்டு உகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமருது அமர்ந்த தெய்வச் செழும் சுடர் 30
அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின் நினைந்து எறிந்த அதனால்
அன்னவன்-தனக்கும் அருள் பிழைத்தின்றே
** நேரிசை வெண்பா
#26
இன்று இருந்து நாளை இறக்கும் தொழில் உடைய
புன் தலைய மாக்கள் புகழ்வரோ வென்றி மழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி
** கட்டளைக் கலித்துறை
#27
அடி ஆயிரம் தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம் பேர்
முடி ஆயிரம் கண்கள் மூவாயிரம் முற்றும் நீறு அணிந்த
தொடி ஆயிரம் கொண்ட தோள் இரண்டாயிரம் என்று நெஞ்சே
படியாய் இராப்பகல் தென் மருதாளியைப் பற்றிக்கொண்டே
** இணைக்குறள் ஆசிரியப்பா
#28
கொண்டலின் இருண்ட கண்டத்து எண் தோள்
செவ் வான் உருவில் பை அரவு ஆர்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன் சடை
மூவா முதல்வ முக்கண் செல்வ
தேவ தேவ திருவிடைமருத 5
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிராவணத் துறை ஆடும் அப்ப
கைலாயவாண கௌரிநாயக
நின் அருள் சுரந்து பொன் அடி பணிந்து 10
பெரும் பதம் பிழையா வரம் பல பெற்றோர்
இமையா நெடும் கண் உமையாள் நங்கையும்
மழைக் கவுள் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர்த் தாங்கும் குமரவேளும்
சுரி சங்கு ஏந்திய திரு நெடு மாலும் 15
வான் முறை படைத்த நான்முகத்து ஒருவனும்
தாருகன் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
பீடு உயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
ஆனாப் பெரும் திறல் வானோர் தலைவனும் 20
செயிர் தீர் நால் கோட்டு அயிராவதமும்
வாம் பரி அருக்கர் தாம் பன்னிருவரும்
சந்திரன் ஒருவனும் செம் தீக் கடவுளும்
நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் 25
எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்று இருதிறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத்து அடியரும் 30
திருந்திய அன்பில் பெருந்துறைப் பிள்ளையும்
அத் தகு செல்வத்து அவமதித்து அருளிய
சித்தம் ஆர் சிவவாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யில் கண்டு
கள்ளன் கையில் கட்டு அவிழ்ப்பித்தும் 35
ஓடும் பல் நரி ஊளை கேட்டு அரனைப்
பாடின என்று படாம் பல அளித்தும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன்-தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும் 40
வழிபடும் ஒருவன் மஞ்சனத்து இயற்றிய
செழு விதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப் பிறப்புக்கு என்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத்து ஒரு தனிக் கிடந்த 45
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம் இத் தலையும்
கிடத்தல் வேண்டும் என்று அடுத்தடுத்து இரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்தது என்று நாய்க் கட்டம் எடுத்தும் 50
காம்பு அவிழ்த்து உதிர்ந்த கனி உருக் கண்டு
வேம்புகட்கு எல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கு என்று
புரி குழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுணதேவரும் 55
இனைய தன்மையர் எண்ணிறந்தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பது ஓர் பாடும் இன்றிச்
சுத்தன் ஆயினும் தோன்றாக் கடையேன் நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் 60
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி இருப்பன் கண்டாய் பெரும
நின் உலகு அனைத்தும் நன்மை தீமை
ஆனவை நின் செயல் ஆதலின்
நானே அமையும் நலம்_இல் வழிக்கே 65
** நேரிசை வெண்பா
#29
வழி பிழைத்து நாம் எல்லாம் வந்தவா செய்து
பழி பிழைத்த பாவங்கள் எல்லாம் பொழில் சூழ்
மருதிடத்தான் என்று ஒருகால் வாய் கூப்ப வேண்டா
கருதிடத் தாம் நில்லா கரந்து
** கட்டளைக் கலித்துறை
#30
கரத்தினில் மாலவன் கண் கொண்டு நின் கழல் போற்ற நல்ல
வரத்தினை ஈயும் மருத அப்பா மதி ஒன்றும் இல்லேன்
சிரத்தினுமாய் என்றன் சிந்தையுள் ஆகி வெண்காடன் என்னும்
தரத்தினுமாய் அது நின் அடியாம் தெய்வத் தாமரையே
**திருச்சிற்றம்பலம்
** திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றுப்பெற்றது
@4 திருவேகம்பமுடையார் திருவந்தாதி
#1
மெய்த் தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிக நற்பணி செய்
கைத்தொண்டர்-தம்மிலும் நல் தொண்டு உவந்திலன் உண்பதற்கே
பொய்த் தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
இத் தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே
#2
ஏகம்பனே என்னை ஆள்பவனே இமையோர்க்கு இரங்கிப்
போகம் பல் நாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும் ஐ வாய்
நாகம் பொன் ஆரம் எனப் பொலிவுற்று நல் நீறு அணியும்
ஆகம் பொன் மா மலை ஒப்பவனே என்பன் ஆதரித்தே
#3
தரித்தேன் மனத்து உன் திகழ்தரு நாமம் தடம் பொழில்-வாய்
வரித் தேன் முரல் கச்சி ஏகம்பனே என்றன் வல்வினையை
அரித்தேன் உனைப் பணியாதவர் ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கு அடியார் அடி பூணத் தெளிந்தனனே
#4
தெளிதருகின்றது சென்று என் மனம் நின் திருவடிவம்
அளிதரு நின் அருட்கு ஐயம் இனி இல்லை அந்திச் செக்கர்
ஒளி தரு மேனி எம் ஏகம்பனே என்று உகந்தவர் தாள்
தளி தரு தூளி என்றன் தலை மேல் வைத்த தன்மை பெற்றே
#5
பெற்று உகந்தேன் என்றும் அர்ச்சனைசெய்யப் பெருகும் நின் சீர்
கற்று உகந்தேன் என் கருத்து இனிதாக் கச்சி ஏகம்பத்தின்
பற்று உகந்து ஏறும் உகந்தவனே பட நாகக் கச்சின்
சுற்று உகந்து ஏர் விடை மேல் வருவாய் நின் துணை அடியே
#6
அடி நின்ற சூழல் அகோசரம் மாலுக்கு அயற்கு அலரின்
முடி நின்ற சூழ் முடி காண்பு அரிது ஆயிற்றுக் கார் முகிலின்
இடி நின்ற சூழ் குரல் ஏறு உடை ஏகம்ப யாம் எங்ஙனே
வடி நின்ற சூலப் படை உடையாயை வணங்குவதே
#7
வணக்கம் தலை நின் திருவடிக்கே செய்யும் மையல்கொண்டோர்
இணக்கு அன்றி மற்றோர் இணக்கு அறிவோம் அல்லம் வல் அரவின்
குணக் குன்ற வில்லி குளிர் கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்
கணக்கு அன்று மற்றொரு தேவரைப் பாடும் கவி நலமே
#8
நலம் தர நான் ஒன்று சொல்லுவன் கேள்-மின் நல்லீர்கள் அன்பு
கலந்து அரனார் கச்சி ஏகம்பம் கண்டு கனல் திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்தாய் தக்கன் வேள்வி எல்லாம்
நிலம் தரமாகச் செய்தாய் என்று பூசித்து நின்-மின்களே
#9
மின்கள் என்றார் சடை கொண்டல் என்றார் கண்டம் மேனி வண்ணம்
பொன்கள் என்றார் வெளிப்பாடு தம் பொன் அடி பூண்டுகொண்ட
என்கள் என்றாலும் பிரிந்து அறியார் கச்சி ஏகம்பத்தான்
தன்கள் என்றார் உலகு எல்லாம் நிலைபெற்ற தன்மைகளே
#10
தன்மையில் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம் வணங்கும்
வன்மையில் குன்றா மதில் கச்சி ஏகம்பர் வண் கயிலைப்
பொன் மயில் சாயலும் சே அரிக் கண்ணும் புரி குழலும்
மென்மையில் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே
#11
தனமிட்டு உமை தழுவத் தழும்புற்றவர் தம் அடியார்
மனம் விட்டு அகலா மதில் கச்சி ஏகம்பர் வான் கயிலைச்
சினம் விட்டு அகலாக் களிறு வினாவி ஓர் சேய்_அனையார்
புனம் விட்டு அகலார் பகலாம் பொழுதும் நம் பூங்கொடியே
#12
பூங்கொத்து இரும் தழை ஆர் பொழில் கச்சி ஏகம்பர் பொற்பு ஆர்
கோங்கத்து இருந்த குடுமிக் கயிலை எம் பொன் ஒருத்தி
பாங்கு ஒத்து இருந்தனை ஆரணங்கே படர் கல் அருவி
ஆங்கு அத் திருந்து_இழை ஆடி வந்தால் கண்டு அடிவருத்தே
#13
வருத்தம் தரும் மெய்யும் கையில் தழையும் வன் மா வினவும்
கருத்து அந்தரிக்கும் நடக்க இன்று ஐய கழல் நினையத்
திருத் தந்து அருளும் திகழ் கச்சி ஏகம்பர் சீர்க் கயிலைத்
துருத் தந்து இருப்பது அன்று இப் புனம் காக்கும் தொழில் எமக்கே
#14
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழில் கயிலை
உம்மையும் மானிடம் இப் புனத்தே விட்ட வந்த மைந்தர்-
தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கம் கவர்வ என்றோ
அம் மையும் அம் மலர்க் கண்ணும் பெரியீர் அருளு-மினே
#15
அருளைத் தரு கம்பர் அம் பொன் கயிலையுள் எம் ஐயர் அம்பு
இருள் ஐக் கரி மறிக்கும் இவர் ஐயர் உறுத்தி எய்ய
வெருளக் கலை கணை-தன்னொடும் போயின வில்லிமைக்கு
மருளைத் தரு சொல்லி எங்கோ விலை உண்டு இவ் வையகத்தே
#16
வை ஆர் மழுப் படை ஏகம்பர் ஈங்கோய் மலைப் புனத்துள்
ஐயார் வரு கலை ஏனம் கரி தொடர் வேட்டை எல்லாம்
பொய் ஆன ஐயர் மனத்த எம் பூங்கொடி கொங்கை பொறாப்
பை ஆர் அரவு இடை ஆயிற்று வந்து பரிணமித்தே
#17
பரு முத்து உதிர்த்திடும் சீர் மத்த யானை நுதல் பகுந்திட்டு
உரும் ஒத்த திண் குரல் சீயம் திரி நெறி ஓங்கு வை வாய்ப்
பொரு முத்தலை வேல் படைக் கம்பர் பூங்கயிலைப் புனத்துள்
தரு முத்து அன நகை-தன் நசையால் வெற்ப சார்வு அரிதே
#18
அரி தன் திருக்கண் இட நிரம்பு ஆயிரம் போது அணிய
அரி தன் திருவடிக்கு அர்ச்சித்த கண்ணுக்கு அருளு கம்பர்
அரி தன் திருக்கு அங்குலியால் அழிந்த கயிலை அல் இங்கு
அரிது என்று இருப்பது எம்-பால் வெற்ப எம் ஐயர்க்கு அஞ்சுதுமே
#19
அம் சரத்தான் பொடியாய் விழத் தீ விழித்து அன்புசெய்வோர்
நெஞ்சு அரத் தாழ்வு உகந்தோர் கச்சி ஏகம்பர் நீள் கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழ நும் கொம்பு உய்யக் கும்பம் மூழ்கும்
வெம் சரத்தாரனவோ அல்லவோ இவ் வியன் முரசே
#20
சேய் தந்த அம்மை உமை கணவன் திரு ஏகம்பத்தான்
தாய்தந்தையாய் உயிர் காப்போன் கயிலைத் தயங்கு இருள்-வாய்
வேய் தந்த தோளி நம் ஊசலொடும் விரை வேங்கை-தன்னைப்
பாய் தந்து பூசல் உண்டாம் கொண்டதோ கைப்பகடு வந்தே
#21
வந்தும் மனம்பெறில் பொன்_அனையீர் மன்னும் ஏகம்பர்-தம்
முந்தும் அருவிக் கயிலை மலை உயர் தேன் இழிச்சித்
தந்தும் மலர் கொய்தும் தண் திசை மேயும் கிளி கடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சும் இச் சாரல் திரிகுவனே
#22
திரி அப் புரம் எய்த ஏகம்பனார் திகழும் கயிலைக்
கிரி அக் குறவர் பருவத்து இடு தரளம் வினையோம்
விரியச் சுருள் முதலானும் அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர் முத்தின் நீர் பெற்றது என் அங்குப் பேசு-மினே
#23
பேசுக யாவர் உமைக் கணியார் என்று பித்தர் எங்கும்
பூசுகை ஆர் திருநீற்று எழில் ஏகம்பர் பொன் கயிலைத்
தேசு கை ஆர் சிலை வெற்பர் பிரியும் பரிசு இலர் அக்
கூசுகை யாதும் இல்லாக் குலை வேங்கைப் பெயர் நும்மையே
#24
பெயரா நலத்து எழில் ஏகம்பனார் பிறை தோய் கயிலைப்
பெயராது இருக்கப்பெறு கிளிகாள் புனமே பிரிவின்
துயரால் வருந்தி மனமும் இங்கு ஓடித் தொழுது சென்றது
அயராது உரையும் வெற்பற்கு அடியேற்கும் விடைதமினே
#25
தம்மைப் பிறவிக்கடல் கடப்பிப்பவர் தாம் வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்து எழில் ஏகம்பர் மொய் கயிலை
அ மைக் கரும் கண்ணி தன்னொடு இன்பம் தரும் தண் புனமே
எம்மைக் கவலைசெயச் சொல்லியோ வல்லி எய்தியதே
#26
இயங்கும் திரிபுரம் எய்த ஏகம்பர் எழில் கயிலைத்
தயங்கும் மலர்ப் பொழில்காள் தையல் ஆடு அருவித் தடங்காள்
முயங்கும் மணி அறைகாள் மொழியீர் ஒழியாது நெஞ்சம்
மயங்கும் பரிசு பொன்னார் சென்ற சூழல் வகுத்து எமக்கே
#27
வகுப்பார் இவர் போல் மணத்துக்கு நாள் மணம் தன்னொடு இன்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக் கள்வாய்
நெகுப்பால் மலர் கொண்டு நின்றார் கிடக்க நிலாவு கம்பர்
தொகுப்பால் மணி சிந்து அருவிக் கயிலை இச் சூழ் புனத்தே
#28
புனம் குழையாது என்று மென் தினை கொய்ததும் போகலுற்ற
கனம் குழையாள் தன் பிரிய நமக்கு உறும் கையறவால்
மனம் குழையா அரும் கண் கனி பண் பல பாடும் தொண்டர்
இனம் குழையாத் தொழும் ஏகம்பர் இக் கயிலாயத்துள்ளே
#29
உள்ளம் பெரியர் அல்லாச் சிறுமானுடர் உற்ற செல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்தார்க்கு அன்றிக் கங்கை என்னும்
வெள்ளம் பெரிய சடைத் திரு ஏகம்பர் விண் அரணம்
தள் அம்பு எரியக் கொண்டார்-தம் அடியவர் சார்வது அன்றே
#30
அன்றும் பகை அடர்க்கும் பரிமாவும் மத அருவிக்
குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடை நிழல் கீழ்
நின்றும் பொலியினும் கம்பர் நல் நீறு நுதற்கு இலரேல்
என்றும் அரசும் முரசும் பொலியா இரு நிலத்தே
#31
நிலத்து இமையோரில் தலையாய்ப் பிறந்தும் மறையொடு அங்கம்
வலத்து இமைப்போதும் பிரியார் எரி வளர்த்தாலும் வெற்பன்
குலத்து உமை ஓர் பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித் தொழும்
நலத்து அமையாதவர் வேட்டுவர்-தம்மின் நடுப் படையே
#32
படையால் உயிர் கொன்று தின்று பசுக்களைப் போலச் செல்லும்
நடையால் அறிவின்றி நாண் சிறிது இன்றி நகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத்து எங்களை ஆ
ளுடையான் கழற்கு அன்பரேல் அவர் யாவர்க்கும் உத்தமரே
#33
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன் சென்னி
பத்தும் கை ஆன இருபதும் சோர்தர வைத்து இலயம்
ஒத்தும் கையால் அவன் பாடக் கயிலையினூடு கை வாள்
எத்தும் கையான் என்று உகந்து அளித்தார் கச்சி ஏகம்பரே
#34
அம்பரம் கால் அனல் நீர் நிலம் திங்கள் அருக்கன் அணு
வம்பர் அம் கொள்வது ஓர் வேழத்து உரியவன்-தன் உரு ஆம்
எம் பரன் கச்சியுள் ஏகம்பத்தான் இடையாது அடைவான்
நம் பரன் தன் அடியார் அறிவார்கட்கு நல் துணையே
#35
துணைத் தாமரை அடியும் பவளத் திரள் நல் குறங்கும்
பணைத் தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்து மின்
பிணைத்தால் அன சடையும் திரு முக்கணும் பெண் ஒர் பக்கத்து
அணைத்தார் எழில் கம்பர் எங்கள் பிரானார்க்கு அழகியவே
#36
அழகு அறிவில் பெரிதாகிய ஏகம்பர் அத்தர் கொற்றம்
பழகு அறிவில் பெரியோர்-தமைப் பற்றலர் பற்றும் அன்பின்
குழகு அறிவு ஏற்பினுள் ஒன்று அறியார் அறியாமை தெய்வம்
கிழகு எறியப்பட்டு உலந்தார் உலகில் கிடந்தனரே
#37
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பு ஒருபால் மதியம்
தொடக்குண்டு இலங்கும் அலங்கும் திரைக் கங்கை சூடும் கொன்றை
வடக் குண்டு கட்டு அத் தலை மாலை வாளால் மலைந்த வெம் போர்
கடக்கும் விடைத் திரு ஏகம்பர் கற்றைச் சடை முடியே
#38
கற்றைப் பவளச் சடை வலம் பூக் கமழ் கொன்றை அம் தார்
முற்றுற்றிலா மதியின் கொழுந்து ஏகம்பர் மொய்_குழல் ஆம்
மற்றைத் திசையில் மணிப் பொன் கொழுந்து அத் தரம் கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டு அழகாகித் திகழ்தருமே
#39
தரும் அருள் தன்மை வலப்பால் கமலக் கண் நெற்றியின் மேல்
திரு மலர்க் கண் பிளவின் திகழும் தழல் செல்வக் கம்பர்
கரு மலர்க் கண் இடப்பாலது நீலம் கனி மதர்த்து
வரு நுதல் பொட்டு அணங்குக்கு உயர்ந்து ஓங்கும் மலர்க் குழலே
#40
மலர்ந்த படத்து உச்சி ஐந்தினும் செம் சுடர் மா மணி விட்டு
அலர்ந்த மணிக் குண்டலம் வலக் காதினில் ஆடி வரும்
நலம் திரு நீள் வயிரம் வெயில் பாய நகும் மணிகள்
கலந்த செம்பொன் மகரக் குழை ஏகம்பர் காதிடமே
#41
காது அலைக்கும் வலத் தோள் பவளக் குன்றம் அங்கு உயர்ந்து
போது அலைக்கும் பனிப் பொன்மலை நீற்றின் பொலி அகலம்
தாது அலைக்கும் குழல் சேர் பணைத் தோள் நறும் சாந்து அணிந்து
சூது அலைக்கும் முலை மார்பு இடம் ஏகம்பர் சுந்தரமே
#42
தரம் பொற்பு அழியும் உலகு அட்டி எய்த்துத் தரம் தளரா
உரம் பொற்பு உடைய திரு வயிறாம் வலம் உம்பர் மும்மைப்
புரம் பொற்பு அழித்த கம்பர்க்கு உத்தரத்து இடு பூண் முலையும்
நிரம்பப் பொறாது தளர் இள வஞ்சியும் நேர்வு உடைத்தே
#43
உடைப் புலி ஆடையின் மேல் உரகக் கச்சு வீக்கி முஞ்சி
வடத்து ஒரு கோவணம் தோன்றும் அரை வலம் மற்றை அல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூ நுண் துகில்
அடல் பொலி ஏறு உடை ஏகம்பம் மேய அடிகளுக்கே
#44
அடி வலப்பாலது செந்தாமரை ஒத்து அதிர் கழல் சூழ்ந்து
இடி குரல் கூற்றின் எருத்து இறவைத்தது இளம் தளிரின்
அடி இடப்பாலது பஞ்சு உற அஞ்சும் சிலம்பு அணிந்த
வடிவு உடைத்து ஆர் கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே
#45
தருக்கு அவற்றால் மிக்க முப்புரம் எய்து அயன்-தன் தலை ஐ
நெருக்கு அவற்று ஓட மழுவாள் விசைத்தது நெற்கள் என்றும்
பருக்க அற்றாம் கச்சி ஏகம்பர் அத்தர்-தம் பாம்புகளின்
திருக்கு அவற்றால் இட்டு அருளும் கடகத் திருக்கரமே
#46
கரத்தத் தமருகத்து ஓசை கடுத்து அண்டம் மீ பிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்டு அவனி தலம் நெரியத்
தரத்தத் திசைகளுக்கு அப்புறம் போர்ப்பச் சடை விரித்து
வரத்தைத் தரு கம்பர் ஆடுவர் எல்லியும் மா நடமே
#47
நடன் நம் பிரான் உகந்து உய்யக் கொண்டான் என்று நான்மறையோர்
உடன் வந்து மூவாயிரவர் இறைஞ்சி நிறைந்த அன்பின்
கடன் அன்றி மற்று அறியாத் தில்லை அம்பலம் காளத்தியாம்
இடம் எம் பிரான் கச்சி ஏகம்பம் மேயாற்கு இனியனவே
#48
இனியவர் இன்னார் அவரை ஒப்பார் பிறர் என்ன ஒண்ணாத்
தனியவர் தையல் உடனாம் உருவர் அறம் பணித்த
முனியவர் ஏறும் உகந்த முக்கண்ணவர் சண்டி அன்புக்கு
இனியவர் காய் மழுவாள் படையார் கச்சி ஏகம்பரே
#49
பரவித் தனை நினையக் கச்சி ஏகம்பர் பண்ணும் மையல்
வரவு இத்தனை உள்ளது எங்கு அறிந்தேன் முன் அவர் மகனார்
புரவு இத்தனை அடிக்கு அக் கொடிதாய் விடியா இரவில்
அரவு இத்தனையும் கொண்டார் மடவார் முன்றில் ஆட்டிடவே
#50
இடவம் சுறுக்கெனப் பாயும் உம் சென்னி நகு தலை கண்
டிட அஞ்சுவர் மடவார் இரிகின்றனர் ஏகம்பத்தீர்
படம் அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்கு முற்
பட அஞ்சுவர் எங்ஙனே பலி வந்திடும் பாங்குகளே
#51
பாங்கு உடை கோள் புலியின் அதள் கொண்டீர் நும் பாரிடங்கள்
தாம் குடை கொள்ளப் பலி கொள்ள வந்தீர் தடக் கமலம்
பூம் குடை கொள்ளப் புனல் கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கு இடை கொள்ளக் கலை கொள்ள வந்தீர் இடைக்கும் இன்றே
#52
இடைக்கு மின் தோற்கும் இணை முலையாய் முதியார்கள்-தம் சொல்
கடைக்-கண் நன்றாம் கச்சி ஏகம்பர் ஐயம் கொளக் கடவும்
விடைக்கு முன் தோற்ற நில்லேல் நின்று இனி இந்த மொய்_குழலார்
கிடைக்கு முன் தோற்றனர் சங்கு இது ஓ தம் கிறித்துவமே
#53
கிறி பல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்
குறி பல பாடிக் குளிர் கச்சி ஏகம்பர் ஐயம் கொள்ள
நெறி பல வார்_குழலார் மெலிவுற்ற நெடும் தெருவில்
செறி பல வெள் வளை போயின தாயர்கள் தேடுவரே
#54
தேடுற்றில கள்ளம் நோக்கம் தெரிந்தில சொற்கள் முடி
கூடுற்றில குழல் கொங்கை பொடித்தில கூறும் இவள்
மாடுற்றில மணி இன் மட அல்குலும் மற்று இவள்-பால்
நாடுற்றில எழில் ஏகம்பனார்க்கு உள்ளம் நல்கிடத்தே
#55
நல்கும் புகழ்க் கடவூர் நல் மறையவன் உய்ய நண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெம் கூற்றம் குளிர் திரைகள்
மல்கும் திருமறைக்காட்டு அமிர்து என்றும் மலை_மகள் தான்
புல்கும் பொழில் கச்சி ஏகம்பம் மேவிய பொன் மலையே
#56
மலையத்து அகத்தியன் அர்ச்சிக்க மன்னி வட கயிலை
நிலையத்து அமரர் தொழ இருந்தான் நெடு மேரு என்னும்
சிலை அத்தன் பைம்பொன் மதில் திரு ஏகம்பத்தான் திகழ் நீர்
அலையத் தடம் பொன்னி சூழ் திருவையாற்று அரு மணியே
#57
மணி ஆர் அருவித் தடம் இமயம் குடக் கொல்லி கல்லின்
திணி ஆர் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்
அணி ஆர் அருவி கவர் கிளி ஓப்பும் இன் சாரல் விந்தம்
பணிவார் அரு வினை தீர்க்கும் ஏகம்பர் பருப்பதமே
#58
பருப்பதம் கார் தவழ் மந்தரம் இந்திரநீலம் வெள்ளை
மருப்பது அங்கு ஆர் கரும் குன்று இயங்கும் பரங்குன்றம் வில் ஆர்
நெருப்பது அங்கு ஆகுதி நாறும் மகேந்திரம் என்று இவற்றில்
இருப்பது அம் கா உகந்தான் கச்சி ஏகம்பத்து எம் இறையே
#59
இறைத்து ஆர் புரம் எய்த வில் இமை நல் இமவான் மகட்கு
மறைத்தார் கரும் குன்றம் வெண் குன்றம் செம் குன்றம் மன் நல் குன்றம்
நிறைத்தார் நெடும் குன்றம் நீள் கழுக்குன்றம் என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்று என்று கூறு-மினே
#60
கூறு-மின் தொண்டர் குற்றாலம் நெய்த்தானம் துருத்தி அம் பேர்
தேறு-மின் வேள்விக்குடி திருத்தோணிபுரம் பழனம்
ஆறு மின் போல் சடை வைத்தவன் ஆருர் இடைமருது என்று
ஏறு-மின் நீர் எம் பிரான் கச்சி ஏகம்பம் முன் நினைந்தே
#61
நினைவார்க்கு அருளும் பிரான் திருச்சோற்றுத்துறை நியமம்
புனை வார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம் நீர்
பனை வார் பொழில் திருவெண்காடு பாச்சில் அதிகை என்று
நினைவு ஆர்தரு நெஞ்சின் நீர் கச்சி ஏகம்பம் நண்ணு-மினே
#62
நண்ணிப் பரவும் திருவாவடுதுறை நல்லம் நல்லூர்
மண்ணில் பொலி கடம்பூர் கடம்பந்துறை மன்னு புன்கூர்
எண்ணற்கு அரிய பராய்த்துறை ஏர் கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச் சடையோன் கச்சி ஏகம்பம் காண்-மின் சென்றே
#63
சென்று ஏறி விண்ணுறும் அண்ணாமலை திகழ் வல்லம் மென் பூ
இன் தேறல் பாய் திருமாற்பேறு பாசூர் எழில் அழுந்தூர்
வன் தேரவன் திருவில் பெரும் பேறு மதில் ஒற்றியூர்
நின்று ஏர் தரு கச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே
#64
நிலாவு புகழ்த் திருவோத்தூர் திருஆமாத்தூர் நிறை நீர்
சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்
குலாவு திருப்பனங்காடு நல் மாகறல் கூற்றம் வந்தால்
அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே
#65
ஆலை அங்கு ஆர் கருகாவை கச்சூர் திருக்காரிகரை
வேலை அங்கு ஏறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
சோலை அங்கு ஆர் திருப்போந்தை முக்கோணம் தொடர் கடுக்கை
மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்து-மினே
#66
வாழப் பெரிது எமக்கு இன் அருள்செய்யும் மலர்க் கழலோர்
தாழச் சடைத் திரு ஏகம்பர்-தம்மைத் தொழாதவர் போய்
வாழப் பரல் சுரம் ஆற்றா தளிர் அடி பூம் குழல் எம்
ஏழைக்கு இடை இறுக்கும் குய பாரம் இயக்குறினே
#67
உறுகின்ற வெவ் அழல் அக் கடம் இக் கொடிக்குன் பின்வரப்
பெறுகின்ற வண்மையினால் ஐய பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென் மலர்த் தண் பொழில் கச்சியைச் சூழ்ந்து இளையோர்
குறுகின்ற பூம் குவளைக்கு உறும் தண்பணை என்று கொளே
#68
கொள்ளும் கடும் கதிரில் கள்ளித் தீச் சில வேய் உலறி
விள்ளும் வெடிபடும் பாலை என் பாவை விடலை பின்னே
தெள்ளும் புனல் கச்சியுள் திரு ஏகம்பர் சேவடியை
உள்ளும் அது மறந்தார் எனப் போவது உரைப்பு அரிதே
#69
பரிப்பு அரும் திண்மைப் படையது கானர் எனில் சிறகு
விரிப் பருந்துக்கு இரையாக்கும் வெய்யேன் அஞ்சல் செம் சடை மேல்
தரிப்பு அரும் திண் கங்கையார் திரு ஏகம்பம் அன்ன பொன்னே
வரிப் பரும் திண் சிலை ஏய் உமராயின் மறைகுவனே
#70
வன வரித் திண் புலியின் அதள் ஏகம்ப மன் அருளே
என வரு பொன் அணங்கு என் அணங்கிற்கு என் எழில் கழங்கும்
தன வரிப் பந்தும் கொடுத்து எனைப் புல்லியும் இல் பிரிந்தே
இன வரிக் கல் அதர் செல்வது எங்கே ஒல்லும் ஏழை நெஞ்சே
#71
நெஞ்சு ஆர்தர இன்பம் செய் கழல் ஏகம்பர் கச்சி அன்னாள்
பஞ்சு ஆர் அடி வைத்த பாங்கு இவை ஆங்கு அவள் பெற்றெடுத்த
வெம் சார்வு ஒழியத் தன் பின் செல முன் செல் வெடுவெடென்ற
அஞ்சா அடு திறல் காளை-தன் போக்கு இவை அந்தத்திலே
#72
இலவ வெம் கான் உனை அல்லால் தொழேம் சரண் ஏகம்பனார்
நிலவும் சுடர் ஒளி வெய்யவனே தண் மலர் மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத் தளிர் அடி செல் சுரத்து உன்
உலவும் கதிர் தணிவித்து அருள்செய் உன் உறு துணைக்கே
#73
துணை ஒத்த கோவையும் போல் எழில் பேதையும் தோன்றலும் முன்
இணை ஒத்த கொங்கையொடே ஒத்த காதலொடு ஏகினரே
அணை அத்தர் ஏறு ஒத்த காளையைக் கண்டனம் மற்று அவரேல்
பிணை ஒத்த நோக்கு உடைப் பெண் இவள்-தன்னொடும் பேசு-மினே
#74
மின் நலிக்கும் வணக்கத்து இடையாளையும் மீளியையும்
நென்னல் இப் பாக்கை வந்து எய்தினரேல் எம் மனையில் கண்டீர்
பின்னர் இப் போக்கு அரும் குன்று கடந்தவர் இன்று கம்பர்
மன் அரி தேர்ந்து தொழும் கச்சி நாட்டிடை வைகுவரே
#75
உவரச் சொல் வேடு உடைக் காடு உகந்து ஆடிய ஏகம்பனார்
அ அரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மை சுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்கு விண் மேல்
கவரக் கொடி திளைக்கும் கச்சி காணினும் கார் மயிலே
#76
கார் மிக்க கண்டத்து எழில் திரு ஏகம்பர் கச்சியின்-வாய்
ஏர் மிக்க சேற்று எழில் நெல் நடுவோர் ஒலி பொன்மலை போல்
போர் மிக்க செந்நெல் குவிப்போர் ஒலி கருப்பாலை ஒலி
நீர் மிக்க மாக் கடலின் ஒலியே ஒக்கும் நேர்_இழையே
#77
நேர்த்து அமையாமை விறல் கொடு வேடர் நெடும் சுரத்தைப்
பார்த்தமையால் இமை தீந்த கண் பொன்னே பகட்டு உரிவை
போர்த்தமையால் உமை நோக்கு அரும் கம்பர் கச்சிப் பொழிலுள்
சேர்த்தமையால் இமைப் போது அணி சீதம் சிறந்தனவே
#78
சிறை வண்டு பாடும் கமலக் கிடங்கு இவை செம்பழுக்காய்
நிறை கொண்ட பாளைக் கமுகின் பொழில் இவை தீம் கனியின்
பொறை கொண்ட வாழைப் பொதும்பு உவை புன் சடை ஏகம்பனார்
நறை கொண்ட பூம் கச்சி நாடு எங்கும் இவ் வண்ணம் நல்_நுதலே
#79
நல்_நுதலார் கரும் கண்ணும் செவ் வாயும் இவ்வாறு எனப் போய்
மன் இதழ் ஆர் திரு நீலமும் ஆம்பலும் பூப்ப வள்ளை
என்ன எலாம் ஒப்புக் காது என்று வீறிடும் ஏகம்பனார்
பொன்_நுதலார் விழியார் கச்சி நாட்டுள் இப் பொய்கையுளே
#80
உள் வார் குளிர நெருங்கிக் கரும் கிடங்கு இட்ட நல் நீர்
வள் வாளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களை ஆட்
கொள்வார் பிறவி கொடாத ஏகம்பர் குளிர் குவளை
கள் வார்தரு கச்சி நாட்டு எழில் ஏரிக் களப் பரப்பே
#81
பரப்பு ஆர் விசும்பில் படிந்த கரு முகில் அன்ன நல் நீர்
தரப் பாசிகள் மிகு பண்பொடு சேம்பு அடர் தண்பணை-வாய்ச்
சுரப்பு ஆர் எருமை மலர் தின்னத் துன்னு கரா ஒருத்தல்
பொரப் பார் பொலி_நுதலாய் செல்வக் கம்பர்-தம் பூம் கச்சியே
#82
கச்சு ஆர் முலை மலை மங்கை-கண் ஆர எண்ணான்கு அறமும்
வைச்சார் மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ விண்ணோர்
விச்சாதரர் தொழுகின்ற விமானமும் தன்மம் அறா
அச் சாலையும் பரப்பு ஆங்கு அணி மாடங்கள் ஓங்கினவே
#83
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்றது அரி உறை பாடகம் தெவ் இரிய
வாங்கின வாள் கன்னி மற்று அவர் மைத்துனி வான் கவிகள்
தாங்கின நாட்டு இருந்தாள் அவர்-தன் மனை ஆய்_இழையே
#84
இழை ஆர் அரவு அணி ஏகம்பர் நெற்றி விழியின் வந்த
பிழையா அருள் நம் பிராட்டியது இன்ன பிறங்கல் உன்னும்
நுழையா வரு திரிசூலத்தள் நோக்கு அரும் பொன் கடுக்கைத்
தழை ஆர் பொழில் உது பொன்னே நமக்குத் தளர்வு இல்லையே
#85
தளரா மிகு வெள்ளம் கண்டு உமை ஓடித் தமைத் தழுவக்
கிளை ஆர் வளைக் கை வடுப்படும் ஈங்கு ஓர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில் திரு ஏகம்பம் மற்று இது வந்து இறைஞ்சி
உளர் ஆவது படைத்தோம் மடவாய் இவ் உலகத்துளே
#86
உலவிய மின் வடம் வீசி உரும் அதிர்வு உள் முழங்கி
வலவிய மா மதம் பாய் முகில் யானைகள் வானில் வந்தால்
சுலவிய வார் குழல் பின்னர் என் பாரிர் என நினைந்து
நிலவிய ஏகம்பர் கோயில் கொடி அன்ன நீர்மையனே
#87
நீர் என்னிலும் அழும் கண் முகில்காள் நெஞ்சம் அஞ்சலை என்று
ஆர் என்னிலும் தமராய் உரைப்பார் அமராவதிக்கு
நேர் என்னிலும் தகும் கச்சியுள் ஏகம்பர் நீள் மதில்-வாய்ச்
சேர் என்னிலும் தங்கும் வாள் கண்ணி தான் அன்பர் தேர் வரவே
#88
வரம் கொண்டு இமையோர் நலம் கொள்ளும் ஏகம்பர் கச்சி அன்னாய்
பரம் கொங்கை தூவல்-மின் நீர் முத்தம் அன்பர்-தம் தேரின் முன்னே
தரம் கொண்டு பூக் கொண்டு கொன்றை பொன்னாகத் தண் காந்தள் கொத்தின்
கரம் கொண்டு பொன் சுண்ணம் ஏந்தவும் போந்தன கார் முகிலே
#89
கார்முகம் ஆர வண் கைக் கொண்ட கம்பர் கழல் தொழுது
போர் முகமாப் பகை வெல்லச் சென்றார் நினையார் புணரி
நீர் முகமாக இருண்டு சுரந்தது நேர்_இழை நாம்
ஆர் முகமாக வினைக் கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே
#90
உயிர் ஆயின அன்பர் தேர் வரக் கேட்டு முன் வாட்டமுற்ற
பயிர் ஆர் புயல் பெற்றது என்ன நம் பல்_வளை பான்மைகளாம்
தயிர் ஆர் பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர்-தம் அருள் போல்
கை இரா வளை அழுந்தக் கச்சு இறுத்தன கார் மயிலே
#91
கார் விடை வண்ணத்தன் அன்று ஏழ் தழுவினும் இன்று தனிப்
போர் விடை பெற்று எதிர் மாண்டார் என அண்டர் போதவிட்டார்
தார் விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம் பொன் நன் பூண்
மார் விடை வைகல் பெறுவார் தழுவ மழ விடையே
#92
விடை பாய் கொடுமை எண்ணாது மேலாம் கன்னி வேல் கரும் கண்
கடை பாய் மனத்து இளம் காளையர் புல்கு ஒலி கம்பர் கச்சி
மடை பாய் வயலின முல்லையின் மான் கன்றொடு ஆன் கன்று இனம்
கடை பாய்-தொறும் பதி மன்றில் கடல் போல் கலந்து எழுமே
#93
எழு மலர்த் தண் பொழில் ஏகம்பர் கச்சி இரும் கடல்-வாய்க்
கொழு மணப் புன்னைத் துணர் மணல் குன்றில் பரதர் கொம்பே
செழு மலர்ச் சேல் அல்ல வாள் அல்ல வேல் அல்ல நீலம் அல்ல
முழு மலர்க் கூர் அம்பின் ஓர் இரண்டாலும் முகத்தனவே
#94
முகம் பாகம் பண்டமும் பாகம் என்று ஓதிய மூதுரையை
உகம் பார்த்திரேல் என் நலம் உயர் ஏகம்பர் கச்சி முன்னீர்
அகம் பாக ஆர்வின் அளவு இல்லை என்னின் பவளச் செவ் வாய்
நகம் பால் பொழில்பெற்ற நாம் உற்றவர் கொள்க நல் மயலே
#95
மயக்கத்த நல் இருள் கொல்லும் சுறவோடு எறி மகரம்
இயக்கத்து இடு சுழி ஓதம் கழி கிளர் அக் கழித் தார்
துயக்கத்தவர்க்கு அருளாக் கம்பர் கச்சிக் கடல பொன் உன்
முயக்கத்து அகல்வு பொறாள் கொண்க நீர் வரும் ஊர்க்கு அஞ்சுமே
#96
மேய் இரை வைகு அக் குருகு உணரா மது உண்டு புன்னை
மீ இரை வண்டு ஓது அமர்புக் கடிய விரி கடல்-வாய்ப்
பாய் இரை நாகம் கொண்டோன் தொழும் கம்பர் கச்சிப் பவ்வ நீர்
தூய் இரை கானல் மற்று ஆர் அறிவார் நம் துறைவர் பொய்யே
#97
பொய் வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா
மெய் வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கு இனம் ஆர்ப்ப நம் சேர்ப்பர் திண் தேர்
அவ் அரு தாமங்கள் இனம் வந்து ஆர்ப்ப அணைகின்றதே
#98
இன்று செய்வோம் இதனில் திரு ஏகம்பர்க்கு எத்தனையும்
நன்று செய்வோம் பணி நாளை என்று உள்ளி நெஞ்சே உடலில்
சென்று செய்யாரை விடும் துணை நாளும் விடாது அடிமை
நின்று செய்வார் அவர் தங்களின் நீள் நெறி காட்டுவரே
#99
காட்டிவைத்தார் தம்மை யாம் கடிப் பூப் பெய்யக் காதல் வெள்ளம்
ஈட்டிவைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இலாத எம்மைப்
பூட்டிவைத்தார் தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டு இவைத் தார் பரவித் தொழுவாம் அவர் பாதங்களே
#100
பாதம் பரவி ஒர் பித்துப் பிதற்றினும் பல் பணியும்
ஏதம் புகுதா வகை அருள் ஏகம்பர் ஏத்து எனவே
போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம் எனக் கொள்வர் மெய்த்தொண்டரே
**திருச்சிற்றம்பலம்
**திருவேகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று
@5 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
#1
இரு நில மடந்தை இயல்பினின் உடுத்த
பொரு கடல் மேகலை முகம் எனப் பொலிந்த
ஒற்றி மா நகர் உடையோய் உருவின்
பெற்றி ஒன்றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும் நின் சடையே 5
மன்னிய அண்டம் நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனி மதி-தன்னொடும்
மூ வகைச் சுடரும் நின் நுதல் நேர் நாட்டம்
தண் ஒளி ஆரம் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக் 10
கொண்டு உறை விசும்பே கோல நின் ஆகம்
எண் திசை திண் தோள் இரும் கடல் உடையே
அணி உடை அல்குல் அவனி மண்டலமே
மணி முடிப் பாந்தள் நின் தாள் இணை வழக்கே
ஒழியாது ஓடிய மாருதம் உயிர்ப்பே 15
வழுவா ஓசை முழுதும் நின் வாய் மொழி
வானவர் முதலா மன் உயிர் பரந்த
ஊனம்_இல் ஞானத் தொகுதி நின் உணர்வே
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றும் நின் தொழிலே 20
அமைத்தலும் அழித்தலும் ஆங்கு அதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும் நின் இயல்பே
என்று இவை முதலா இயல்பு உடை வடிவினோடு
ஒன்றிய துப்பு உரு இரு வகை ஆகி
முத் திறக் குணத்து நால் வகைப் பிறவி 25
அத் திறத்து ஐம்பொறி அறு வகைச் சமயமோடு
ஏழ் உலகு ஆகி எண் வகை மூர்த்தியோடு
ஊழி-தோறு ஊழி எண் இறந்து ஓங்கி
எவ் வகை அளவினில் கூடி நின்று
அவ் வகைப் பொருளும் நீ ஆகிய இடத்தே 30
#2
இடத்து உறை மாதரோடு ஈர் உடம்பு என்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலி அதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலி திரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவமும் ஆனாய் என்றும் 5
திரு அமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியில் பொலிந்த புராணன் என்றும் 10
இன்னவை முதலாத் தாம் அறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க்கு அவ்வவை ஆகி
அடையப் பற்றிய பளிங்கு போலும் 15
ஒற்றி மா நகர் உடையோய் உருவே
#3
உருவாம் உலகுக்கு ஒருவன் ஆகிய
பெரியோய் வடிவில் பிறிது இங்கு இன்மையின்
எப்பொருளாயினும் இங்கு உளதாம் எனின்
அப் பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூ_எயில் முழங்கு எரியூட்டித் 5
தொல் நீர் வையகம் துயர் கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்தி-தன் தலையினை விடுத்ததும்
நீள் விசும்பாளி-தன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற்கு ஒரு முகம் ஒழித்ததும்
பூம் கணை வேளைப் பொடிபட விழித்ததும் 10
திறல் கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்று இவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின் செயல் ஆதலின்
உலவாத் தொல் புகழ் ஒற்றியூர 15
பகர்வோர் நினக்கு வேறு இன்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியில் படுப்பரோ பொருள் உணர்ந்தோரே
#4
பொருள் உணர்ந்து ஓங்கிய பூமகன் முதலா
இருள் துணை யாக்கையில் இயங்கு மன் உயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய் தொழில் வகையினும்
வெவ்வேறு ஆகி வினையொடும் பிரியாது 5
ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான் திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் 10
ஓவாத் தொல் புகழ் ஒற்றியூர
மூவா மேனி முதல்வ நின் அருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே
#5
மயக்கம்_இல் சொல் நீ ஆயினும் மற்று அவை
துயக்க நின் திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்று அது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய் வினை உலகினில் செய்வோய் எனினும் 5
அவ் வினைப் பயன் நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டி நின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க்கு அணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்-தொறும் 10
என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊன் உடல் அழிதல்
உண்டு என உணர்ந்தனம் ஒற்றியூர
மன்னிய பெரும் புகழ் மாதவத்து
உன்னிய செம் சடைத் தூ மதியோயே
#6
தூ மதி சடை மிசைச் சூடுதல் தூ நெறி
ஆம் மதி யான் என அமைத்தவாறே
அறன் உரு ஆகிய ஆன் ஏறு ஏறுதல்
இறைவன் யான் என இயற்றுமாறே
அது அவள் அவன் என நின்றமை யார்க்கும் 5
பொதுநிலை யான் என உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்கது என்னிடை என்பது ஓர் சுருக்கே
வேத மான் மறி ஏந்துதல் மற்று அதன்
நாதன் நான் என நவிற்றுமாறே 10
மூ_இலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான் என மொழிந்தவாறே
எண் வகை மூர்த்தி என்பது இவ் உலகினில்
உண்மை யான் என உணர்த்தியவாறே
நிலம் நீர் தீ வளி உயர் வான் என்றும் 15
உலவாத் தொல் புகழ் உடையோய் என்றும்
பொருளும் நல் பூதப் படையோய் என்றும்
தெருள நின்று உலகினில் தெருட்டுமாறே
ஈங்கு இவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்கும் நின் பெருமை உணர்த்தவும் உணராத் 20
தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொல் பொருள் வன்மையில் சுழலும் மாந்தர்க்கு
ஆதி ஆகிய அறுதொழிலாளர்
ஓதல் ஓவா ஒற்றியூர
சிறுவர் தம் செய்கையில் படுத்து 25
முறுவலித்து இருத்தி நீ முகப்படும் அளவே
#7
அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனது உளம் அகலாது ஒடுங்கி நின்றனையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும் நின் வடிவு எனப்படுமே
கைவலத்து இலை நீ எனினும் காதல் 5
செய்வோர் வேண்டும் சிறப்பு ஒழியாயே
சொல்லிய வகையால் துணை அலை ஆயினும்
நல் உயிர்க்கு ஊட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே அஃதான்று 10
பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை 15
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல் பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய ஆகிய எண்_இல் பல் குணம் 20
நினை-தொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்கு கடல் உடுத்த ஒற்றியூர
ஈங்கு இது மொழிவார் யாஅர் தாஅம்
சொல் நிலை சுருங்கின் அல்லது
நின் இயல் அறிவோர் யார் இரு நிலத்தே 25
#8
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய் வளி ஐயொடு பித்து ஒன்று ஆக
ஐ வகை நெடும் காற்று ஆங்கு உடன் அடிப்ப
நரை எனும் நுரையே நாள்-தொறும் வெளுப்ப 5
திரை உடைத் தோலே செழும் திரை ஆகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடு பசி வெகுளிச் சுறவு இனம் எறியக்
குடர் எனும் அரவக் கூட்டம் வந்து ஒலிப்ப 10
ஊன் தடி எலும்பின் உள் திடல் அடைந்து
தோன்றிய பல் பிணிப் பின்னகம் சுழலக்
கால் கையின் நரம்பே கண்டம் ஆக
மேதகு நிணமே மெய்ச் சால் ஆக
முழக்கு உடைத் துளையே முகங்கள் ஆக 15
வழுக்கு உடை மூக்கு ஆறு ஓதம் வந்து ஒலிப்ப
இப் பரிசு இயற்றிய உடல் இரும் கடலுள்
துப்புரவு என்னும் சுழித்தலைப் பட்டு இங்கு
ஆஆ என்று நின் அருளினைப் பெற்றவர்
நாவாய் ஆகிய நாத நின் பாதம் 20
முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய் விரித்து ஆர்த்துப்
பெருகிய நிறை எனும் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க் கயிறு அறுத்து 25
மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பார் எனும் கடு வெளி எற்ற
தூமச் சோதிச் சுடர்க்கு உற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள் கரை ஏற்ற 30
வாங்க யாத்திரை போக்குதி போலும்
ஓங்கு கடல் உடுத்த ஒற்றியூரோயே
#9
ஒற்றியூர உலவா நின் குணம்
பற்றி ஆரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித்து அழுதலின் அகன்ற அம்மனை 5
கேவலம் சேய்மையில் கேளாள் ஆயினும்
பிரித்தற்கு அரிய பெற்றியது ஆகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவியது இயல்பினை
அறியாது எண்_இல் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண் பெற்று ஆங்கே 10
தாய் தலைப்பட நின் தாள் இணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத்தோடு உடன் கூடிய
எல்லை_இல் அவாவினில் இயற்றியவாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது 15
எள்தனை ஆயினும் யான் அவிழ்க்க அறியேன்
துன்னிடை இருள் எனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும் நம்
சிந்தையும் திருவும் செல் கதித் திறனும் 20
துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவை பல பிறவும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் தோற்றம்
என்று இவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்ற நின் அடிக்கே ஒருங்கு உடன் வைத்து 25
நின்றனன் தமியேன் நின் அடி அல்லது
சார்வு மற்று இன்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விடம் அதனைத் திறப்பட நாடி
எய்துதற்கு அரியோய் யான் இனிச்
செய்வதும் அறிவனோ தெரியும் காலே 30
#10
காலன் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மா நகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணை-தொறும் சிறக்கும் அமிர்தே போற்றி 5
இணை பிறிது இல்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க்கு அணியோய் போற்றி
தீர்வு_இல் இன் சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி 10
விரி கடல் வையக வித்தே போற்றி
புரிவு உடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன் பொருள் கருத்து உறை செம்மைக்
காணி ஆகிய அரனே போற்றி
வெம்மை தண்மை என்று இவை குணம் உடைமையின் 15
பெண்ணோடு ஆன் எனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்-தமை வீட்டினில் படுக்கும்
தீபம் ஆகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி 20
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்று உனை 25
நாத் தழும்பு இருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற்கு உரியோர் யார் இரு நிலத்தே
** திருச்சிற்றம்பலம்
** திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது முற்றிற்று