<<முந்திய பக்கம்

திருமந்திரம்

0.பாயிரம்
1 - 112
1.முதல் தந்திரம்
113 - 336
2.இரண்டாம் தந்திரம்
337 - 548
3.மூன்றாம் தந்திரம்
549 - 883
4.நான்காம் தந்திரம்
884 - 1418
5.ஐந்தாம் தந்திரம்
1419 - 1572
6.ஆறாம் தந்திரம்
1573 - 1703
7.ஏழாம் தந்திரம்
1704 - 2121
8.எட்டாம் தந்திரம்
2122 - 2648
9.ஒன்பதாம் தந்திரம்
2649 - 3047

@5 ஐந்தாம் தந்திரம்

#1419
ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற
பேரறிவாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே

 மேல்

#1420
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே

 மேல்

#1421
கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே

 மேல்

#1422
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே

 மேல்

#1423
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையினார்க்கே

 மேல்

#1424
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே

 மேல்

#1425
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே

 மேல்

#1426
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே

 மேல்

#1427
பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே

 மேல்

#1428
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே

 மேல்

#1429
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே

 மேல்

#1430
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே

 மேல்

#1431
சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே

 மேல்

#1432
தன்னை பரனை சதாசிவன் என்கின்ற
மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே

 மேல்

#1433
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈராறு நீதி நெடும் போகம்
காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே

 மேல்

#1434
மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி
பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே

 மேல்

#1435
வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர்
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே

 மேல்

#1436
விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்
எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலை சென்று அணுகா பசு பாசமே

 மேல்

#1437
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தை பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே

 மேல்

#1438
வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட
சாடும் சிவபோதகர் சுத்த சைவரே

 மேல்

#1439
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடலான மா மாயை மற்று உள்ள நீவ
படலான கேவல பாசம் துடைத்து
திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே

 மேல்

#1440
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே

 மேல்

#1441
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே

 மேல்

#1442
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே

 மேல்

#1443
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே

 மேல்

#1444
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறு ஆவாகனம் புற பூசை
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே

 மேல்

#1445
நாடு நகரமும் நல் திருக்கோயிலும்
தேடி திரிந்து சிவபெருமான் என்று
பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே

 மேல்

#1446
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே

 மேல்

#1447
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே

 மேல்

#1448
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே

 மேல்

#1449
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே

 மேல்

#1450
சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே

 மேல்

#1451
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்து திருவடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே

 மேல்

#1452
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

 மேல்

#1453
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின்
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும்
வான கன்று ஆகிய வானவர் கைதொழு
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே

 மேல்

#1454
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன்
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே

 மேல்

#1455
பத்தன் கிரியை சரியை பயில்வுற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே

 மேல்

#1456
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய் மேனி கமல திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பினுள் சோதி இலங்குகின்றானே

 மேல்

#1457
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே

 மேல்

#1458
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

 மேல்

#1459
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடு தறி ஆமே

 மேல்

#1460
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே

 மேல்

#1461
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலை பாச பிறவியும் நீங்கா
அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே

 மேல்

#1462
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே

 மேல்

#1463
பேணில் பிறவா உலகு அருள்செய்திடும்
காணில் தனது கலவியுளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே

 மேல்

#1464
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே

 மேல்

#1465
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர்
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே

 மேல்

#1466
யோக சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே

 மேல்

#1467
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே

 மேல்

#1468
சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே

 மேல்

#1469
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே

 மேல்

#1470
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே

 மேல்

#1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேரருளாளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே

 மேல்

#1472
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே

 மேல்

#1473
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும்
தான் இ குலத்தோர் சரியை கிரியையே

 மேல்

#1474
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞான கிரியையே நல் முத்தி நாடலே

 மேல்

#1475
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன்
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே

 மேல்

#1476
ஞான சமயமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே

 மேல்

#1477
சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம்
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே

 மேல்

#1478
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

 மேல்

#1479
தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட
குருபத்தி செய்யும் குவலயத்தோர்க்கு
தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே

 மேல்

#1480
தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே

 மேல்

#1481
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும்
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே

 மேல்

#1482
சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம்
எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ

 மேல்

#1483
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார்
சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே

 மேல்

#1484
சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு
பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே

 மேல்

#1485
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூல பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே

 மேல்

#1486
பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து
ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே

 மேல்

#1487
மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே

 மேல்

#1488
சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது
மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே

 மேல்

#1489
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே

 மேல்

#1490
யோக சமாதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே

 மேல்

#1491
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே

 மேல்

#1492
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

 மேல்

#1493
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே

 மேல்

#1494
வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே

 மேல்

#1495
மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில்
தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க
தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே

 மேல்

#1496
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே

 மேல்

#1497
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறு மலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேரகிலாரே

 மேல்

#1498
அரும் கரை ஆவது அ அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே

 மேல்

#1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடிக்கே முறை செய்-மின்
பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே

 மேல்

#1500
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை
என்றும் தொழுவன் எழில் பரஞ்சோதியை
துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே

 மேல்

#1501
திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின்
கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே

 மேல்

#1502
எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி
அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே

 மேல்

#1503
அது இது ஆதி பரம் என்று அகல்வர்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே

 மேல்

#1504
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே

 மேல்

#1505
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே

 மேல்

#1506
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருந்த நினைவு அறியாரே

 மேல்

#1507
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே

 மேல்

#1508
சமயம் கிரியையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே

 மேல்

#1509
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியமே

 மேல்

#1510
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே

 மேல்

#1511
சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே
சயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க-போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே

 மேல்

#1512
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே

 மேல்

#1513
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல்
சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே

 மேல்

#1514
இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே

 மேல்

#1515
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில்
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே

 மேல்

#1516
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே

 மேல்

#1517
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே

 மேல்

#1518
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே

 மேல்

#1519
கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே

 மேல்

#1520
செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே

 மேல்

#1521
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனிநாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் காட்டது ஆமே

 மேல்

#1522
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே

 மேல்

#1523
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை
கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே

 மேல்

#1524
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குற பெண் குவி முலை கோமளவல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே

 மேல்

#1525
தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன்
பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும்
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே

 மேல்

#1526
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே

 மேல்

#1527
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

 மேல்

#1528
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய்யாமல் அவளுடன் சேர
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே

 மேல்

#1529
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே

 மேல்

#1530
ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே

 மேல்

#1531
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே

 மேல்

#1532
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே

 மேல்

#1533
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமய பொருளும் அவன் அலன்
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகலாமே

 மேல்

#1534
சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்
தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே

 மேல்

#1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம்
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே

 மேல்

#1536
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில்
அவகதி மூவரும் அ வகை ஆமே

 மேல்

#1537
நூறு சமயம் உளவா நுவலும்-கால்
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே

 மேல்

#1538
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே

 மேல்

#1539
மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி
இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே

 மேல்

#1540
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானுடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே

 மேல்

#1541
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே

 மேல்

#1542
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே

 மேல்

#1543
அரன்நெறி அப்பனை ஆதி பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியாவிடில் பல் வகை தூரமே

 மேல்

#1544
பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன்
அரிது அவன் வைத்த அறநெறி தானே

 மேல்

#1545
ஆன சமயம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடு-மின்
ஊனம் கடந்த உரு அது ஆமே

 மேல்

#1546
அ நெறி நாடி அமரர் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே

 மேல்

#1547
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே

 மேல்

#1548
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே

 மேல்

#1549
வழி சென்ற மாதவம் வைகின்ற-போது
பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே

 மேல்

#1550
இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே

 மேல்

#1551
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே

 மேல்

#1552
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே

 மேல்

#1553
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே

 மேல்

#1554
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடுவினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே

 மேல்

#1555
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள்
துன்னி மனமே தொழு-மின் துணை_இலி
தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே

 மேல்

#1556
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே

 மேல்

#1557
இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே

 மேல்

#1558
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச்சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே

 மேல்

#1559
சைவ பெருமை தனிநாயகன்-தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே

 மேல்

#1560
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே

 மேல்

#1561
ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும்
போமாறு அ ஆதார பூங்கொடியாளே

 மேல்

#1562
அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடி திரிந்த அந்நாளும்
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே

 மேல்

#1563
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே

 மேல்

#1564
ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின்
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே

 மேல்

#1565
மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை
நினை குறியாளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன்நெறி ஆமே

 மேல்

#1566
ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே

 மேல்

#1567
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

 மேல்

#1568
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே

 மேல்

#1569
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே

 மேல்

#1570
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே

 மேல்

#1571
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே

 மேல்

#1572
அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே

 மேல்