<<முந்திய பக்கம்

திருமந்திரம்

0.பாயிரம்
1 - 112
1.முதல் தந்திரம்
113 - 336
2.இரண்டாம் தந்திரம்
337 - 548
3.மூன்றாம் தந்திரம்
549 - 883
4.நான்காம் தந்திரம்
884 - 1418
5.ஐந்தாம் தந்திரம்
1419 - 1572
6.ஆறாம் தந்திரம்
1573 - 1703
7.ஏழாம் தந்திரம்
1704 - 2121
8.எட்டாம் தந்திரம்
2122 - 2648
9.ஒன்பதாம் தந்திரம்
2649 - 3047

@7 ஏழாம் தந்திரம்

#1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே

 மேல்

#1705
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போதாலயத்து அவிகாரம்-தனில் போத
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே

 மேல்

#1706
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே

 மேல்

#1707
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

 மேல்

#1708
மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே

 மேல்

#1709
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே

 மேல்

#1710
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல்
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே

 மேல்

#1711
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே

 மேல்

#1712
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே

 மேல்

#1713
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே

 மேல்

#1714
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகமது அத்துவா ஆறும் சிவமே

 மேல்

#1715
ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே

 மேல்

#1716
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே

 மேல்

#1717
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே

 மேல்

#1718
தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

 மேல்

#1719
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே

 மேல்

#1720
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம்
வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன்
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே

 மேல்

#1721
மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான்
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும்
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும்
துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே

 மேல்

#1722
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே

 மேல்

#1723
அகல் இடமாய் அறியாமல் அடங்கும்
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன்
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே

 மேல்

#1724
போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே

 மேல்

#1725
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே

 மேல்

#1726
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

 மேல்

#1727
உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம்தரு தேவரை வந்தி செய்யீரே

 மேல்

#1728
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே

 மேல்

#1729
கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே

 மேல்

#1730
கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே

 மேல்

#1731
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்த சிவனொடும்
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே

 மேல்

#1732
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே

 மேல்

#1733
அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே

 மேல்

#1734
சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள
சமயத்து எழுந்த சதாசிவம் தானே

 மேல்

#1735
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே

 மேல்

#1736
அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே

 மேல்

#1737
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவம் முப்பத்தாறே

 மேல்

#1738
தத்துவமாவது அருவம் சராசரம்
தத்துவமாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே

 மேல்

#1739
கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும்
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே

 மேல்

#1740
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே

 மேல்

#1741
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம்
அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே

 மேல்

#1742
நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே

 மேல்

#1743
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே

 மேல்

#1744
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம்
விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே

 மேல்

#1745
சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே

 மேல்

#1746
மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே

 மேல்

#1747
ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது
தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே

 மேல்

#1748
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே

 மேல்

#1749
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே

 மேல்

#1750
தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும்
தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும்
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம்
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே

 மேல்

#1751
ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே

 மேல்

#1752
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே

 மேல்

#1753
அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே

 மேல்

#1754
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே

 மேல்

#1755
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே

 மேல்

#1756
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம்
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம்
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன்
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே

 மேல்

#1757
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்து அதே பீட நாத இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே

 மேல்

#1758
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே

 மேல்

#1759
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே

 மேல்

#1760
பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மன கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே

 மேல்

#1761
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம்
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன்
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே

 மேல்

#1762
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள்
என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே

 மேல்

#1763
உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதாசிவன் தானே

 மேல்

#1764
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே

 மேல்

#1765
தேவர் பிரானை திசைமுகநாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே

 மேல்

#1766
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே

 மேல்

#1767
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே

 மேல்

#1768
சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே

 மேல்

#1769
கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும்
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே

 மேல்

#1770
எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே

 மேல்

#1771
சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே

 மேல்

#1772
சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே

 மேல்

#1773
குரைக்கின்ற வாரி குவலய நீரும்
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே

 மேல்

#1774
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே

 மேல்

#1775
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனை தொழ
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே

 மேல்

#1776
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே

 மேல்

#1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடலுற
மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே

 மேல்

#1778
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து
நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே

 மேல்

#1779
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்ய கொண்டானே

 மேல்

#1780
பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள்
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது
வைச்ச பதம் இது வாய் திறவாதே

 மேல்

#1781
பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே

 மேல்

#1782
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே

 மேல்

#1783
கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே

 மேல்

#1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே

 மேல்

#1785
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே

 மேல்

#1786
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

 மேல்

#1787
காய பரப்பில் அலைந்து துரியத்து
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே

 மேல்

#1788
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்றவாறே

 மேல்

#1789
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே

 மேல்

#1790
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே

 மேல்

#1791
பெருந்தன்மை தான் என யான் என வேறாய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே

 மேல்

#1792
இரு பதம் ஆவது இரவும் பகலும்
உரு அது ஆவது உயிரும் உடலும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே

 மேல்

#1793
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே

 மேல்

#1794
குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே

 மேல்

#1795
தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே

 மேல்

#1796
தானே அறியும் வினைகள் அழிந்த பின்
நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே

 மேல்

#1797
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான் பின்னை யார் அறிவாரே

 மேல்

#1798
அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகர அமுதானதும் தேரார்
அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே

 மேல்

#1799
அறிவில் அணுக அறிவது நல்கி
பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே

 மேல்

#1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

 மேல்

#1801
அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

 மேல்

#1802
பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின்
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே

 மேல்

#1803
பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே

 மேல்

#1804
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே

 மேல்

#1805
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
மாய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே

 மேல்

#1806
அருளே சகலமுமாய பவுதிகம்
அருளே சராசரமாய அகிலம்
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே

 மேல்

#1807
சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே

 மேல்

#1808
அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே

 மேல்

#1809
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபி தலைவனும் ஆமே

 மேல்

#1810
தலை ஆன நான்கும் தனது அருவாகும்
அலையா அருவுரு ஆகும் சதாசிவம்
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும்
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே

 மேல்

#1811
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே

 மேல்

#1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு
போய கலை பல ஆக புணர்ந்திட்டு
வீய தகா விந்து ஆக விளையுமே

 மேல்

#1813
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே

 மேல்

#1814
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார்
அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே

 மேல்

#1815
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே

 மேல்

#1816
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை
கூடியவாறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே

 மேல்

#1817
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே

 மேல்

#1818
விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

 மேல்

#1819
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே

 மேல்

#1820
புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே

 மேல்

#1821
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே

 மேல்

#1822
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே

 மேல்

#1823
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

 மேல்

#1824
வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே

 மேல்

#1825
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும்
மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே

 மேல்

#1826
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்குற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே

 மேல்

#1827
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும்
அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே

 மேல்

#1828
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும்
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே

 மேல்

#1829
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை
சுத்தமதாக விளக்கி தெளிக்கவே
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

 மேல்

#1830
மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே

 மேல்

#1831
ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும்
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே

 மேல்

#1832
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங்குணமும் படைத்து நின்றானே

 மேல்

#1833
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே

 மேல்

#1834
வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார்
அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே

 மேல்

#1835
கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள்
பழிப்படுவார் பலரும் பழி வீழ
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே

 மேல்

#1836
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே

 மேல்

#1837
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே

 மேல்

#1838
தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும்
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே

 மேல்

#1839
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே

 மேல்

#1840
வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர்பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே

 மேல்

#1841
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால்
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே

 மேல்

#1842
ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற
மேவி திரியும் விரிசடை நந்தியை
கூவி கருதி கொடுபோய் சிவத்திடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே

 மேல்

#1843
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே

 மேல்

#1844
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மையாளனை வானவர் தேவர்
தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே

 மேல்

#1845
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி
சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே

 மேல்

#1846
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

 மேல்

#1847
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே

 மேல்

#1848
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

 மேல்

#1849
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே

 மேல்

#1850
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே

 மேல்

#1851
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம்
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே

 மேல்

#1852
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே

 மேல்

#1853
இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே
சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு
நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே

 மேல்

#1854
மன பவனங்களை மூலத்தால் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே

 மேல்

#1855
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே

 மேல்

#1856
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்த தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே

 மேல்

#1857
பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே

 மேல்

#1858
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே

 மேல்

#1859
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே

 மேல்

#1860
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகர் இலை என்பது நிச்சயம் தானே

 மேல்

#1861
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்
கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே

 மேல்

#1862
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

 மேல்

#1863
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே

 மேல்

#1864
அழிதகவு இல்லா அரன் அடியாரை
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும்
பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே

 மேல்

#1865
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே

 மேல்

#1866
வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

 மேல்

#1867
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும்
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே

 மேல்

#1868
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அக குறை கேடு இல்லை அ உலகுக்கே

 மேல்

#1869
அ உலகத்தே பிறந்த அ உடலொடும்
அ உலகத்தே அருந்தவம் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர்
அ உலகத்தே அருள்பெறுவாரே

 மேல்

#1870
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே

 மேல்

#1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே

 மேல்

#1872
பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே

 மேல்

#1873
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண் திசை போது பாதாள
மயங்கா பகிரண்ட மா முடி தானே

 மேல்

#1874
அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே

 மேல்

#1875
கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே

 மேல்

#1876
என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே

 மேல்

#1877
துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே

 மேல்

#1878
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர்சடையோனே

 மேல்

#1879
அறியா பருவத்து அரன் அடியாரை
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே

 மேல்

#1880
அவன்-பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன்-பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்-பால் அணுகியே நாடும் அடியார்
இவன்-பால் பெருமை இலயம் அதாமே

 மேல்

#1881
முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள்
எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க
பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே

 மேல்

#1882
சிவயோகி ஞானி செறிந்த அ தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும்
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே

 மேல்

#1883
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே

 மேல்

#1884
எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுது என்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம்
விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே

 மேல்

#1885
அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே

 மேல்

#1886
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே

 மேல்

#1887
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே

 மேல்

#1888
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே

 மேல்

#1889
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே

 மேல்

#1890
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடியார் சரீரத்திடை
பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும்
தங்கார் சிவனை தலைப்படுவாரே

 மேல்

#1891
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வர இருந்தாரே

 மேல்

#1892
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பால் ஆன மோன மொழியில் பதிவித்து
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய
கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே

 மேல்

#1893
துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே

 மேல்

#1894
சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம்
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே

 மேல்

#1895
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே

 மேல்

#1896
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே

 மேல்

#1897
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால்
ஆக தகு வேத கேசரி சாம்பவி
யோகத்து கேசரி யோக முத்திரையே

 மேல்

#1898
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே

 மேல்

#1899
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம்
அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை
நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே

 மேல்

#1900
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே

 மேல்

#1901
தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே

 மேல்

#1902
வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி
தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே

 மேல்

#1903
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது
போன வியோகி புகலிடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே

 மேல்

#1904
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து
தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே

 மேல்

#1905
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே

 மேல்

#1906
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோன சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே

 மேல்

#1907
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே

 மேல்

#1908
உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்ன பரனே அருட்குலம் பாலிப்பன்
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே

 மேல்

#1909
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே

 மேல்

#1910
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே

 மேல்

#1911
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்_அரு மன்னர் இழப்பார் அரசே

 மேல்

#1912
புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே

 மேல்

#1913
அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே

 மேல்

#1914
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி
பவம் அறு நல்குகை பத்மாசனமே

 மேல்

#1915
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர் சோலை நகரின் நல் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே

 மேல்

#1916
நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே

 மேல்

#1917
பஞ்சலோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே

 மேல்

#1918
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே

 மேல்

#1919
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே

 மேல்

#1920
விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இளநீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே

 மேல்

#1921
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே

 மேல்

#1922
ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து
மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம்
காதலில் சோடசம் காண் உபசாரமே

 மேல்

#1923
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும்
உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதிகள் மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே

 மேல்

#1924
செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும்
செய்திடும் நாத பேத திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம்
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே

 மேல்

#1925
வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல்
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே

 மேல்

#1926
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே

 மேல்

#1927
அந்தமும் ஆதியும் ஆகி பராபரன்
வந்த வியாபி எனலாய அ நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே

 மேல்

#1928
வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே

 மேல்

#1929
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை
உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே

 மேல்

#1930
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற
நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில்
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே

 மேல்

#1931
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி
இது வித்திலே உள ஆற்றை உணரார்
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே

 மேல்

#1932
வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை
வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல
அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே

 மேல்

#1933
அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம்
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே

 மேல்

#1934
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல்
அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளரும் காயத்திலே

 மேல்

#1935
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே

 மேல்

#1936
அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே

 மேல்

#1937
பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே

 மேல்

#1938
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானே அ காமாதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே

 மேல்

#1939
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள்
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே

 மேல்

#1940
ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு
ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே

 மேல்

#1941
செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே

 மேல்

#1942
விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல்
நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படும் காதல் மாதின்-பால் பற்று அற விட்டு
கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே

 மேல்

#1943
கொண்ட குணனே நலனே நல் கோமளம்
பண்டை உருவே பகர் வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே

 மேல்

#1944
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே

 மேல்

#1945
பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே

 மேல்

#1946
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அற உணர்வரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே

 மேல்

#1947
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே

 மேல்

#1948
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியா பிராணன் அதி பலம் சத்தி
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே

 மேல்

#1949
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்று உண்பவரே சிவயோகியாரே

 மேல்

#1950
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே

 மேல்

#1951
அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடை கட்டி கலந்து எரித்து
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே

 மேல்

#1952
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரிய
செறிவாய் இருந்து சேரவே மாயுமே

 மேல்

#1953
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே

 மேல்

#1954
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன்
காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை
காலின்-கண் வந்த கலப்பு அறியாரே

 மேல்

#1955
கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல்
நல தக வேண்டில் அ நாரி உதர
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே

 மேல்

#1956
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்தி குறிவழியே சென்று
பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால்
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே

 மேல்

#1957
விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே

 மேல்

#1958
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே

 மேல்

#1959
அமுத சசி விந்து ஆம் விந்து மாள
அமுத புனல் ஓடி அங்கியின் மாள
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி
அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே

 மேல்

#1960
யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே

 மேல்

#1961
மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து
காதலினால் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே

 மேல்

#1962
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே

 மேல்

#1963
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே

 மேல்

#1964
வித்து குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன்
வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே

 மேல்

#1965
அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு
மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
வன்ன திரு விந்து மாயும் காயத்திலே

 மேல்

#1966
அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு
சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே

 மேல்

#1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பராசத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே

 மேல்

#1968
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர் விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

 மேல்

#1969
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே

 மேல்

#1970
வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி
நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி
பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே

 மேல்

#1971
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி
சந்திரனோடே தலைப்படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே

 மேல்

#1972
மனத்தொடு சத்து மனம் செவி அன்ன
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அ காமத்தை நாடிலே

 மேல்

#1973
சத்தமும் சத்த மனமும் மன கருத்து
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே

 மேல்

#1974
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீமிசை கை கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே

 மேல்

#1975
செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே

 மேல்

#1976
பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே

 மேல்

#1977
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே

 மேல்

#1978
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே

 மேல்

#1979
வலைய முக்கோணம் வட்டம் அறுகோணம்
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே

 மேல்

#1980
ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில்
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம்
கேதமுறும் கேணி சூரியன் எட்டில்
சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே

 மேல்

#1981
ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற
வேதப்பொருளை விளங்குகிலீரே

 மேல்

#1982
பாருக்கு கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே

 மேல்

#1983
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே

 மேல்

#1984
பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அரும் கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே

 மேல்

#1985
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே

 மேல்

#1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடே அடங்குகின்றாரே

 மேல்

#1987
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே

 மேல்

#1988
எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே

 மேல்

#1989
சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே

 மேல்

#1990
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே

 மேல்

#1991
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே

 மேல்

#1992
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே

 மேல்

#1993
விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே

 மேல்

#1994
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே

 மேல்

#1995
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும்
மூவர் பிரான் என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே

 மேல்

#1996
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று
கை இருள் நீங்க கலந்து எழுந்தானே

 மேல்

#1997
தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க
அனித்திடும் மேலை அரும் கனி ஊறல்
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே

 மேல்

#1998
நேர் அறிவாக நிரம்பிய பேரொளி
போர் அறியாது புவனங்கள் போய் வரும்
தேர் அறியாத திசை ஒளியாய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே

 மேல்

#1999
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே

 மேல்

#2000
நாபி கண் நாசி நயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே

 மேல்

#2001
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடராம் அருணோதயம்
துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே

 மேல்

#2002
கடம்கடம்-தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே

 மேல்

#2003
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே

 மேல்

#2004
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே

 மேல்

#2005
உன்னும் அளவில் உணரும் ஒருவனை
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே

 மேல்

#2006
அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால்
பின்ன மட அன்னம் பேறு அணுகாதே

 மேல்

#2007
வைகரி ஆதியும் மாயா மலாதியும்
பொய் கரி ஆன புருடாதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே

 மேல்

#2008
அணுவில் அணுவினை ஆதி பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

 மேல்

#2009
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே

 மேல்

#2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி
தணிவு அற நின்றான் சராசரம் தானே

 மேல்

#2011
மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே

 மேல்

#2012
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே

 மேல்

#2013
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை
கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே

 மேல்

#2014
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே

 மேல்

#2015
கற்ற பசுக்கள் கதறி திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றை பசுக்கள் வறள் பசு தானே

 மேல்

#2016
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

 மேல்

#2017
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே

 மேல்

#2018
குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே

 மேல்

#2019
அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே

 மேல்

#2020
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே

 மேல்

#2021
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார்
தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாடகிலாரே

 மேல்

#2022
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால்
நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே

 மேல்

#2023
ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மத தறியோடு அணைகின்றில
பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே

 மேல்

#2024
கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன்
திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே

 மேல்

#2025
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே

 மேல்

#2026
அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே

 மேல்

#2027
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே

 மேல்

#2028
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும்
சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே

 மேல்

#2029
எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே

 மேல்

#2030
விதியின் பெரு வலி வேலை சூழ் வையம்
துதியின் பெரு வலி தொல்வான் உலகம்
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெரு வலி நீர் வலி தானே

 மேல்

#2031
குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

 மேல்

#2032
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலுமுறும் அவன் தானே அமரன்
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே

 மேல்

#2033
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

 மேல்

#2034
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே

 மேல்

#2035
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே

 மேல்

#2036
பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

 மேல்

#2037
இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன்
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க
துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே

 மேல்

#2038
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே

 மேல்

#2039
நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே

 மேல்

#2040
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள்
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே

 மேல்

#2041
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே

 மேல்

#2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்றவாறு சிலபல பேசில்
வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே

 மேல்

#2043
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்து-மின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வருடைய புலன்களும் ஐந்தே

 மேல்

#2044
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேதாகம நெறி காணான்
பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே

 மேல்

#2045
மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர்
சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே

 மேல்

#2046
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன்
கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே

 மேல்

#2047
கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே

 மேல்

#2048
குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின்
குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

 மேல்

#2049
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன்
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே

 மேல்

#2050
தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவி துயர் தானே

 மேல்

#2051
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போல
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்து பிறவியில் வந்து அணுகானே

 மேல்

#2052
பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று
பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே

 மேல்

#2053
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

 மேல்

#2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே

 மேல்

#2055
தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனை பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே

 மேல்

#2056
வரும் வழி போம் வழி மாயா வழியை
கருவழி கண்டவர் காணா வழியை
பெரும் வழியா நந்தி பேசும் வழியை
குரு வழியே சென்று கூடலும் ஆமே

 மேல்

#2057
குரு என்பவனே வேதாகமம் கூறும்
பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே

 மேல்

#2058
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே

 மேல்

#2059
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே

 மேல்

#2060
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே

 மேல்

#2061
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி
தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே

 மேல்

#2062
அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே

 மேல்

#2063
ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே

 மேல்

#2064
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே

 மேல்

#2065
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே

 மேல்

#2066
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே

 மேல்

#2067
கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால்
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே

 மேல்

#2068
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே

 மேல்

#2069
பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே

 மேல்

#2070
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே

 மேல்

#2071
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே

 மேல்

#2072
கண்காணியாகவே கை அகத்தே எழும்
கண்காணியாக கருத்துள் இருந்திடும்
கண்காணியாக கலந்து வழி செய்யும்
கண்காணி ஆகிய காதலன் தானே

 மேல்

#2073
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே

 மேல்

#2074
காணாத கண்ணில் படலமே கண் ஒளி
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை
காணாது கண்டார் களவு ஒழிந்தாரே

 மேல்

#2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே

 மேல்

#2076
பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும்
பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார்
சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர்
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே

 மேல்

#2077
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம்
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே

 மேல்

#2078
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும்
அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும்
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே

 மேல்

#2079
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும்
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே

 மேல்

#2080
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானை
தலைவாணி செய்வது தன்னை அறிவதே

 மேல்

#2081
தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர்
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே

 மேல்

#2082
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும்
கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே

 மேல்

#2083
இந்தியம் அந்த கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது
தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும்
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே

 மேல்

#2084
வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே

 மேல்

#2085
போது சடக்கென போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே

 மேல்

#2086
கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர்
தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே

 மேல்

#2087
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓரா பழிமொழியாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே

 மேல்

#2088
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப்பட்டவாறே

 மேல்

#2089
இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே

 மேல்

#2090
பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே

 மேல்

#2091
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து
தீர வருவது ஓர் காம தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே

 மேல்

#2092
இ பரிசே இளஞாயிறு போல் உரு
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இ பரிசே கமலத்து உறை ஈசனை
மெய் பரிசே வினவாது இருந்தோமே

 மேல்

#2093
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள்
பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே

 மேல்

#2094
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும்
துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே

 மேல்

#2095
மிருகம் மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே

 மேல்

#2096
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே

 மேல்

#2097
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை
அரும் தேனை யாரும் அறியகிலாரே

 மேல்

#2098
கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமராபதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே

 மேல்

#2099
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே

 மேல்

#2100
கரை அருகு ஆறா கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின்
நரை உருவா செல்லும் நாள் இலவாமே

 மேல்

#2101
வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்தவாறே

 மேல்

#2102
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே

 மேல்

#2103
செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை
வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே

 மேல்

#2104
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே

 மேல்

#2105
போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே

 மேல்

#2106
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின்
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என்
அ காலம் உன்ன அருள் பெறலாமே

 மேல்

#2107
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள்
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின்
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே

 மேல்

#2108
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே

 மேல்

#2109
கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள்
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்று பசு அது ஆமே

 மேல்

#2110
விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது
நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம்
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவரோடே

 மேல்

#2111
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

 மேல்

#2112
இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று
துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே

 மேல்

#2113
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே

 மேல்

#2114
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே

 மேல்

#2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத்தகு சோதி அது விரும்பாரே

 மேல்

#2116
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த
உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார்
பவமத்திலே வந்து பாய்கின்றதல்லால்
சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே

 மேல்

#2117
இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே

 மேல்

#2118
பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே

 மேல்

#2119
சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர்
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே

 மேல்

#2120
நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி
கருமங்களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே

 மேல்

#2121
ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற
மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே

 மேல்