<<முந்திய பக்கம்

திருமந்திரம்

0.பாயிரம்
1 - 112
1.முதல் தந்திரம்
113 - 336
2.இரண்டாம் தந்திரம்
337 - 548
3.மூன்றாம் தந்திரம்
549 - 883
4.நான்காம் தந்திரம்
884 - 1418
5.ஐந்தாம் தந்திரம்
1419 - 1572
6.ஆறாம் தந்திரம்
1573 - 1703
7.ஏழாம் தந்திரம்
1704 - 2121
8.எட்டாம் தந்திரம்
2122 - 2648
9.ஒன்பதாம் தந்திரம்
2649 - 3047

@9 ஒன்பதாம் தந்திரம்

#2649
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே

 மேல்

#2650
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே

 மேல்

#2651
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின்
கூடும் சிவனது கொய் மலர் சேவடி
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே

 மேல்

#2652
இயம்புவன் ஆசனத்தோடு மலையும்
இயம்புவன் சித்த குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத்தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே

 மேல்

#2653
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே

 மேல்

#2654
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும்
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே

 மேல்

#2655
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே

 மேல்

#2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூற குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

 மேல்

#2657
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவு அற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே

 மேல்

#2658
ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியை காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே

 மேல்

#2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

 மேல்

#2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே

 மேல்

#2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
ஆன்ற அறிவும் அறி நனவாதிகள்
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற
ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே

 மேல்

#2662
சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே

 மேல்

#2663
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே

 மேல்

#2664
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும்
தான் ஆம் பறவை வனம் என தக்கன
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே

 மேல்

#2665
மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே

 மேல்

#2666
தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை
பல படு பாசம் அறுத்து அறுத்திட்டு
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப்படல் ஆகும் தருமமும் தானே

 மேல்

#2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை
சுனைக்குள் விளை மலர் சோதியினானை
தினை பிளந்து அன்ன சிறுமையரேனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே

 மேல்

#2668
தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை
விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை
நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே

 மேல்

#2669
நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே

 மேல்

#2670
வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே

 மேல்

#2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது
மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே

 மேல்

#2672
பரசு பதி என்று பார் முழுது எல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே

 மேல்

#2673
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில்
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே

 மேல்

#2674
கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின்
நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான்
தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே

 மேல்

#2675
தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை
பாலித்த சூக்கும மேலை சொரூப பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலை பிரணவம் வேதாந்த வீதியே

 மேல்

#2676
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே

 மேல்

#2677
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

 மேல்

#2678
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே

 மேல்

#2679
மலையும் மனோபவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே

 மேல்

#2680
சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே

 மேல்

#2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே

 மேல்

#2682
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும்
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும்
பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே

 மேல்

#2683
விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன்
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள
வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே

 மேல்

#2684
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே

 மேல்

#2685
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம்
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம்
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும்
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே

 மேல்

#2686
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும்
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே

 மேல்

#2687
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து
துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே

 மேல்

#2688
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும்
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே

 மேல்

#2689
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன்
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே

 மேல்

#2690
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன்
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே

 மேல்

#2691
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே

 மேல்

#2692
போது கரும் குழல் போனவர் தூது இடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி
நீதியின் நல் இருள் நீக்கியவாறே

 மேல்

#2693
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல்
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே

 மேல்

#2694
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே
படருறு காட்சி பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞான துறவியன் ஆமே

 மேல்

#2695
ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன்
அளி பவள செம்பொன் ஆதி பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே

 மேல்

#2696
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே

 மேல்

#2697
தானே இருக்கும் அவற்றில் தலைவனும்
தானே இருக்கும் அவன் என நண்ணிடும்
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து
பானாய் இருக்க பரவலும் ஆமே

 மேல்

#2698
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே

 மேல்

#2699
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்தி-தன் நாமமே

 மேல்

#2700
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகராதி தான் சிவவேதமே கோண
நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே

 மேல்

#2701
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்
தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல்
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே

 மேல்

#2702
கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது
மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும்
அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே

 மேல்

#2703
ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே

 மேல்

#2704
தெள்ளமுது ஊற சிவாயநம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே

 மேல்

#2705
குருவழி ஆய குணங்களின் நின்று
கருவழி ஆய கணக்கை அறுக்க
வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே

 மேல்

#2706
வெறிக்க வினை துயர் வந்திடும்-போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும்
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே

 மேல்

#2707
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று
துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று
மஞ்சு தவழும் வடவரை மீது உறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே

 மேல்

#2708
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகையாலும்
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே

 மேல்

#2709
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தராய்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே

 மேல்

#2710
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே

 மேல்

#2711
சிவனருள் ஆய சிவன் திருநாமம்
சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன் முதலாக சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே

 மேல்

#2712
ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ
வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால்
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே

 மேல்

#2713
நமாதி நனாதி திரோதாயி ஆகி
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று
சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே

 மேல்

#2714
அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே

 மேல்

#2715
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருளாமே

 மேல்

#2716
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

 மேல்

#2717
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

 மேல்

#2718
சிவாயநம என சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

 மேல்

#2719
செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம்
அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே

 மேல்

#2720
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே

 மேல்

#2721
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே

 மேல்

#2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள்-தன் விளையாட்டு அதே

 மேல்

#2723
சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை
சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை
பொன் பதி கூத்தனை பொன் தில்லை கூத்தனை
அற்புத கூத்தனை யார் அறிவாரே

 மேல்

#2724
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே

 மேல்

#2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே

 மேல்

#2726
ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமய
களியார் பரமும் கருத்துறை அந்த
தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே

 மேல்

#2727
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே

 மேல்

#2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே

 மேல்

#2729
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே

 மேல்

#2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே

 மேல்

#2731
தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே

 மேல்

#2732
அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திருவுரு
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே

 மேல்

#2733
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும்
திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே

 மேல்

#2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே

 மேல்

#2735
அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே

 மேல்

#2736
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே

 மேல்

#2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே

 மேல்

#2738
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே

 மேல்

#2739
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே

 மேல்

#2740
அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே

 மேல்

#2741
அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன்
படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே

 மேல்

#2742
உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை
செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை
சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே

 மேல்

#2743
மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை
பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை
சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே

 மேல்

#2744
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள்
அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே

 மேல்

#2745
தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே

 மேல்

#2746
காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

 மேல்

#2747
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இ வானின் இலங்கை குறியுறும்
சாரும் திலை வன தண் மா மலையத்தூடு
ஏறும் சுழுனை இவை சிவபூமியே

 மேல்

#2748
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே

 மேல்

#2749
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

 மேல்

#2750
குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே

 மேல்

#2751
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே

 மேல்

#2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே

 மேல்

#2753
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பத
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே

 மேல்

#2754
இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலை வனம் கைகண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே

 மேல்

#2755
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே

 மேல்

#2756
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே

 மேல்

#2757
தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே

 மேல்

#2758
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமய குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே

 மேல்

#2759
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே

 மேல்

#2760
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே

 மேல்

#2761
இருதயம்-தன்னில் எழுந்த பிராணன்
கரசரணாதி கலக்கும் படியே
அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே

 மேல்

#2762
குரு உரு அன்றி குனிக்கும் உருவம்
அருவுரு ஆவதும் அந்த அருவே
திரிபுரை ஆகி திகழ் தருவாளும்
உரு அருவு ஆகும் உமை அவள் தானே

 மேல்

#2763
திரு வழி ஆவது சிற்றம்பலத்தே
குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே
உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அ வழி தானே

 மேல்

#2764
நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே

 மேல்

#2765
வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே

 மேல்

#2766
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யுமாறே

 மேல்

#2767
கூத்தன் கலந்திடும் கோல்வளையாளொடும்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே

 மேல்

#2768
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம்
அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே

 மேல்

#2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே

 மேல்

#2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே

 மேல்

#2771
அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

 மேல்

#2772
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே

 மேல்

#2773
அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி
அண்ட நடம் செயும் ஆலயம் தானே

 மேல்

#2774
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே

 மேல்

#2775
அம்பலம் ஆவது அகில சராசரம்
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே

 மேல்

#2776
கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன
நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள்
பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே

 மேல்

#2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலை தேவர்கள்
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள்
புண்டரிக பத பொன்னம்பல கூத்து
கண்டு சேவித்து கதி பெறுவார்களே

 மேல்

#2778
புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே

 மேல்

#2779
திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே

 மேல்

#2780
அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே

 மேல்

#2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக
கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே

 மேல்

#2782
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே

 மேல்

#2783
ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே

 மேல்

#2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே

 மேல்

#2785
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும்
காமணி ஞாலம் கடந்து நின்றானே

 மேல்

#2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே

 மேல்

#2787
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே

 மேல்

#2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே

 மேல்

#2789
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட
வைத்த சராசரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே

 மேல்

#2790
இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு உருபர ரூபமாய்
திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே

 மேல்

#2791
சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே

 மேல்

#2792
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும்
தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து
நாத பிரமம் சிவநடம் ஆமே

 மேல்

#2793
சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து
தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே

 மேல்

#2794
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே

 மேல்

#2795
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே

 மேல்

#2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே

 மேல்

#2797
திருந்து நல் சீ என்று உதறிய கையும்
அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும்
பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும்
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே

 மேல்

#2798
மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமல பதமும்
உருவில் சிவாயநம என ஓதே

 மேல்

#2799
அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி-தன்னில் அறையில் சங்காரம்
அரனுற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே

 மேல்

#2800
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே

 மேல்

#2801
நந்தியை எந்தையை ஞான தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அ பர
சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே

 மேல்

#2802
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை
ஆயுறு மேனி அணை புகலாமே

 மேல்

#2803
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்ததாமே

 மேல்

#2804
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை
உள்ளத்துளே நீதியாய ஒருவனை
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே

 மேல்

#2805
பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால்
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன்
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன்
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே

 மேல்

#2806
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியை குலைத்தது தானே

 மேல்

#2807
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே

 மேல்

#2808
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே

 மேல்

#2809
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம்
ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே

 மேல்

#2810
உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே

 மேல்

#2811
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியை
பணியின் அமுதம் பருகலும் ஆமே

 மேல்

#2812
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம்
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே

 மேல்

#2813
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே

 மேல்

#2814
கரி அட்ட கையன் கபாலம் கையேந்தி
எரியும் இளம்பிறை சூடும் எம்மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே

 மேல்

#2815
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே

 மேல்

#2816
விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே

 மேல்

#2817
தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே

 மேல்

#2818
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும்
பசும்பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே

 மேல்

#2819
முத்தின் வயிரத்தின் முந்நீர் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே

 மேல்

#2820
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே

 மேல்

#2821
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல்
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே

 மேல்

#2822
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே
உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே

 மேல்

#2823
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே

 மேல்

#2824
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே

 மேல்

#2825
எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே

 மேல்

#2826
தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே

 மேல்

#2827
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே

 மேல்

#2828
சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே

 மேல்

#2829
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில்
மருவ சிவம் என்ற மா முப்பதத்தின்
சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே

 மேல்

#2830
நினையும் அளவின் நெகிழ வணங்கி
புனையில் அவனை பொதியலும் ஆகும்
எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித்தனனே

 மேல்

#2831
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புக
சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே

 மேல்

#2832
அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனி மொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே

 மேல்

#2833
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று
பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே

 மேல்

#2834
சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர
பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற
தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே

 மேல்

#2835
பரம குரவன் பரம் எங்கும் ஆகி
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே

 மேல்

#2836
குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே

 மேல்

#2837
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள்
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனாபதி தானே

 மேல்

#2838
சமைய சுவடும் தனையறியாமல்
கமை அற்ற காமாதி காரணம் எட்டும்
திமிர செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே

 மேல்

#2839
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன்
சேய சிவம் மு துரியத்து சீர் பெற
ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே

 மேல்

#2840
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாய பிரானை
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே

 மேல்

#2841
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே

 மேல்

#2842
பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை
பரஞ்சோதி உண்ணான் படியப்படிய
பரஞ்சோதி-தன்னை பறைய கண்டேனே

 மேல்

#2843
சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கு மதித்த
சொரூப குரவன் சுகோதயம் தானே

 மேல்

#2844
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரை அற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரமது ஆக
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே

 மேல்

#2845
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே

 மேல்

#2846
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே

 மேல்

#2847
செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என்
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என்
வித்தகன் நந்தி விதிவழி அல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே

 மேல்

#2848
தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே

 மேல்

#2849
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே

 மேல்

#2850
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என்
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என்
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே

 மேல்

#2851
ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே

 மேல்

#2852
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே

 மேல்

#2853
சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே

 மேல்

#2854
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

 மேல்

#2855
பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே

 மேல்

#2856
ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே

 மேல்

#2857
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

 மேல்

#2858
துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே

 மேல்

#2859
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவான் என் விழித்தானே

 மேல்

#2860
சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி
சுத்த பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறு பேரொளியே

 மேல்

#2861
பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே

 மேல்

#2862
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

 மேல்

#2863
துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே

 மேல்

#2864
ஓதிய முத்தி அடைவே உயிர் பரம்
பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே

 மேல்

#2865
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள்
கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல்
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே

 மேல்

#2866
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய்
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாய கவற்றின் மறைப்பு அறியேனே

 மேல்

#2867
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே

 மேல்

#2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

 மேல்

#2869
வழுதலை வித்திட பாகல் முளைத்தது
புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள்
முழுதும் பழுத்தது வாழை கனியே

 மேல்

#2870
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம்
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே

 மேல்

#2871
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள
கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு
வெள்ள செய் ஆகி விளைந்தது தானே

 மேல்

#2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

 மேல்

#2873
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே

 மேல்

#2874
பட்டி பசுக்கள் இருபத்துநால் உள
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டி பசுக்கள் குட பால் சொரியினும்
பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே

 மேல்

#2875
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்று பசுக்கள் வரவு அறியோமே

 மேல்

#2876
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு
தட்டான் அதனை தகைந்துகொண்டானே

 மேல்

#2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையை பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே

 மேல்

#2878
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி
கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே

 மேல்

#2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே

 மேல்

#2880
களர் உழுவார்கள் கருத்தை அறியோம்
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே

 மேல்

#2881
கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே

 மேல்

#2882
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே

 மேல்

#2883
பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே

 மேல்

#2884
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவா கடா விடின் மூட்டுகின்றாரே

 மேல்

#2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவை
பிறவாத வண்டு மணம் உண்டவாறே

 மேல்

#2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்
கூகின்ற நாவலின் கூழை தரும் கனி
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே

 மேல்

#2887
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே

 மேல்

#2888
பத்து பரும் புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே

 மேல்

#2889
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே

 மேல்

#2890
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே

 மேல்

#2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையை கூகை நணுகல் உறுதலும்
கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே

 மேல்

#2892
குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்கு பிறந்தவை போகின்றவாறே

 மேல்

#2893
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே

 மேல்

#2894
கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறை குழியில் அழுந்துகின்றாரே

 மேல்

#2895
துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல்
விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும்
வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான்
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே

 மேல்

#2896
பருந்தும் கிளியும் படு பறை கொட்ட
திருந்திய மாதர் திருமணப்பட்டார்
பெருந்தவ பூதம் பெறலுருவாகும்
இருந்திய பேற்றினில் இன்புறுவாரே

 மேல்

#2897
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன்
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற
பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே

 மேல்

#2898
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின்
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும்
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே

 மேல்

#2899
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே

 மேல்

#2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே

 மேல்

#2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே

 மேல்

#2902
பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண
குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே

 மேல்

#2903
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

 மேல்

#2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே

 மேல்

#2905
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனி கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே

 மேல்

#2906
கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டன பூமி மருவி வந்து ஊறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே

 மேல்

#2907
ஏழு வளைகடல் எட்டு குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே

 மேல்

#2908
ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து
சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர்
கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள்
மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே

 மேல்

#2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே

 மேல்

#2910
கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே

 மேல்

#2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்க படிகின்றவாறே

 மேல்

#2912
கொல்லை முக்காதமும் காடு அரை காதமும்
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே

 மேல்

#2913
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இருநில செவ்வி
தழுவி வினை சென்று தான் பயவாது
வழுவாது போவன் வளர்சடையோனே

 மேல்

#2914
பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற
பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே

 மேல்

#2915
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து
ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே

 மேல்

#2916
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே

 மேல்

#2917
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே

 மேல்

#2918
பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து
குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையை குறைகின்றவாறே

 மேல்

#2919
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே

 மேல்

#2920
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே

 மேல்

#2921
கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே

 மேல்

#2922
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்கு சூரை வலிது வலிது என்பர்
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே

 மேல்

#2923
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி
புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே

 மேல்

#2924
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி
களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே

 மேல்

#2925
குடைவிட்டு போந்தது கோயில் எருமை
படை கண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே

 மேல்

#2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

 மேல்

#2927
பாசி படர்ந்து கிடந்த குளத்திடை
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திட
பாசம் கிடந்து பதைக்கின்றவாறே

 மேல்

#2928
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள்
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே

 மேல்

#2929
வீணையும் தண்டும் விரவி இசை முரல்
தாணுவும் மேவி தகுதலை பெய்தது
வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம்
காணியும் அங்கே கலக்கின்றவாறே

 மேல்

#2930
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர்
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே

 மேல்

#2931
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே

 மேல்

#2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும்
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே

 மேல்

#2933
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால்
நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும்
மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு
காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே

 மேல்

#2934
புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே

 மேல்

#2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அது இது ஆமே

 மேல்

#2936
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம்
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே

 மேல்

#2937
காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன்
கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே

 மேல்

#2938
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

 மேல்

#2939
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேரருளாளன்
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே

 மேல்

#2940
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே

 மேல்

#2941
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன்
பொரு_இலி பூத படை உடையாளி
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே

 மேல்

#2942
கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த
தொண்டர் முகந்த துறை அறியோமே

 மேல்

#2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல்
கற்பனை இன்றி கலந்து நின்றானே

 மேல்

#2944
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே

 மேல்

#2945
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு
செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு
கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே

 மேல்

#2946
கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்
தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே

 மேல்

#2947
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே

 மேல்

#2948
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்து
கதறிய பாழை கடந்து அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே

 மேல்

#2949
வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற
சேடார் கமல செழும் சுடருள் சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே

 மேல்

#2950
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கென காமம் புலப்படுமா போல்
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே

 மேல்

#2951
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே

 மேல்

#2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல் மனம் உற்று நின்றேனே

 மேல்

#2953
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே

 மேல்

#2954
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே

 மேல்

#2955
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரை அற்று இருந்தான் புரிசடையோனே

 மேல்

#2956
மன மாயை மாயை இ மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே

 மேல்

#2957
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே

 மேல்

#2958
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே

 மேல்

#2959
ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே

 மேல்

#2960
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே

 மேல்

#2961
பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே

 மேல்

#2962
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே

 மேல்

#2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே

 மேல்

#2964
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே

 மேல்

#2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே

 மேல்

#2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே

 மேல்

#2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

 மேல்

#2968
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே

 மேல்

#2969
சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே

 மேல்

#2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினை பற்று அறுக்கும் விமலனை தேடி
நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே

 மேல்

#2971
சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானை பணிந்து நின்றேனே

 மேல்

#2972
பணிந்து நின்றேன் பரமாதி பதியை
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே

 மேல்

#2973
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும்
தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி
பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே

 மேல்

#2974
பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும்
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம்
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே

 மேல்

#2975
சிவன் வந்து தேவர் குழாமுடன் கூட
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே

 மேல்

#2976
கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே

 மேல்

#2977
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி
செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால்
கைவளம் இன்றி கரு கடந்தேனே

 மேல்

#2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன் கைவந்தது தானே

 மேல்

#2979
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

 மேல்

#2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

 மேல்

#2981
மனம் விரிந்து குவிந்தது மா தவம்
மனம் விரிந்து குவிந்தது வாயுவும்
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

 மேல்

#2982
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே

 மேல்

#2983
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை
பன்னினர் என்றே பாடு அறிவீரே

 மேல்

#2984
முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே

 மேல்

#2985
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன்
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே

 மேல்

#2986
பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே

 மேல்

#2987
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர்
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே

 மேல்

#2988
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே

 மேல்

#2989
நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்ட பின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே

 மேல்

#2990
வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே

 மேல்

#2991
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே

 மேல்

#2992
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே

 மேல்

#2993
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே

 மேல்

#2994
வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ள புனல் சடை வேத முதல்வனை
கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே

 மேல்

#2995
ஆளும் மலர் பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே

 மேல்

#2996
விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம்
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே

 மேல்

#2997
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில்
தானகம் இல்லா தனி ஆகும் போதகன்
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும்
பானக சோதியை பற்றி நின்றேனே

 மேல்

#2998
விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும்
பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே

 மேல்

#2999
மேலது வானவர் கீழது மாதவர்
தான் இடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ் சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே

 மேல்

#3000
சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே

 மேல்

#3001
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே

 மேல்

#3002
பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான
பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே

 மேல்

#3003
அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள்
தந்த உலகு எங்கும் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே

 மேல்

#3004
முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும்
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே

 மேல்

#3005
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன்
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே

 மேல்

#3006
அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன்
தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே

 மேல்

#3007
உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே

 மேல்

#3008
பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும்
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி
தரா பரனாய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே

 மேல்

#3009
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே

 மேல்

#3010
திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு
முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே

 மேல்

#3011
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி
இவன்தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனுமாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

 மேல்

#3012
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே

 மேல்

#3013
படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே

 மேல்

#3014
ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே

 மேல்

#3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே

 மேல்

#3016
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும்
கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம்
அள்ளல் கடலை அறுத்து நின்றானே

 மேல்

#3017
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே

 மேல்

#3018
விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன்
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே

 மேல்

#3019
உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்
நித்தில சோதியன் நீல கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே

 மேல்

#3020
நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன்
அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம்
மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம்
புறம் பல காணினும் போற்றகிலாரே

 மேல்

#3021
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே

 மேல்

#3022
உணர்வதுவாயுமே உத்தமமாயும்
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை
புணர்வதுவாயும் புல்லியதாயும்
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே

 மேல்

#3023
தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே

 மேல்

#3024
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே

 மேல்

#3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை
குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே

 மேல்

#3026
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும்
சாயும் தனது வியாபகம் தானே

 மேல்

#3027
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே

 மேல்

#3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை
கடலின் மலி திரை காணலும் ஆமே

 மேல்

#3029
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம்
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே

 மேல்

#3030
உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே

 மேல்

#3031
பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவனாய் நின்ற மாதவன் தானே

 மேல்

#3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின்றானே

 மேல்

#3033
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன்
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி
போக்கும் வரவும் புணர வல்லானே

 மேல்

#3034
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே

 மேல்

#3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

 மேல்

#3036
புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்து நின்றானே

 மேல்

#3037
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே

 மேல்

#3038
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல்
நின்றனன் தானே வளம் கனி ஆயே

 மேல்

#3039
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர் பெரும் பாகன்
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மாலுற்றவாறே

 மேல்

#3040
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும்
விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும்
மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும்
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே

 மேல்

#3041
எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி
பண்ணும் திறனும் படைத்த பரமனை
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே

 மேல்

#3042
இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திரு கொன்றை வைத்த செழும் சடையானே

 மேல்

#3043
பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன்
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே

 மேல்

#3044
அது அறிவு ஆனவன் ஆதி புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும்
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே

 மேல்

#3045
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே

 மேல்

#3046
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே

 மேல்

#3047
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே

 மேல்