<<முந்திய பக்கம்

திருநாவுக்கரசர் (அப்பர்) இயற்றிய தேவாரம் (திருமுறை 4,5,6)
4.நான்காம்_திருமுறை
(1 - 1070)
5.ஐந்தாம் திருமுறை
(1071 - 2085)
6.ஆறாம் திருமுறை
(2086 - 3066)
பதிக எண்கள் தேவையான திருமுறையின் மீதும் பின்னர் பதிக எண் மீதும் சொடுக்குக
1 || 51 || 101
2 || 52 || 102
3 || 53 || 103
4 || 54 || 104
5 || 55 || 105
6 || 56 || 106
7 || 57 || 107
8 || 58 || 108
9 || 59 || 109
10 || 60 || 110
11 || 61 || 111
12 || 62 || 112
13 || 63 || 113
14 || 64 || -----
15 || 65 || -----
16 || 66 || -----
17 || 67 || -----
18 || 68 || -----
19 || 69 || -----
20 || 70 || -----
21 || 71 || -----
22 || 72 || -----
23 || 73 || -----
24 || 74 || -----
25 || 75 || -----
26 || 76 || -----
27 || 77 || -----
28 || 78 || -----
29 || 79 || -----
30 || 80 || -----
31 || 81 || -----
32 || 82 || -----
33 || 83 || -----
34 || 84 || -----
35 || 85 || -----
36 || 86 || -----
37 || 87 || -----
38 || 88 || -----
39 || 89 || -----
40 || 90 || -----
41 || 91 || -----
42 || 92 || -----
43 || 93 || -----
44 || 94 || -----
45 || 95 || -----
46 || 96 || -----
47 || 97 || -----
48 || 98 || -----
49 || 99 || -----
50 || 100 || -----

 திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் 4. நான்காம் திருமுறை 

 1. திரு அதிகை வீரட்டானம் : பண் - கொல்லி

#1
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#2
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#3
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே

 மேல்

#4
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான்
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#5
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#6
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#7
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#8
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#9
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

#10
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய்
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே

 மேல்

 2. திரு அதிகை வீரட்டானம் : பண் - காந்தாரம்

#11
சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#12
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும்
காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும்
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#13
ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும்
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும்
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#14
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும்
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும்
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#15
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும்
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#16
கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும்
அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#17
கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#18
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#19
சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

#20
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

 மேல்

 3. திருவையாறு : பண் - காந்தாரம்

#21
மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன்

 மேல்

#22
போழ்இளங்கண்ணியினானை பூந்துகிலாளொடும் பாடி
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன்
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#23
எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன்
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#24
பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன்
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#25
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#26
தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#27
கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#28
விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன்
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#29
முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#30
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன்
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

#31
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன்
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 மேல்

 4. திருவாரூர் : பண் - காந்தாரம்

#32
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும்
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும்
ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும்
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#33
நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும்
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#34
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும்
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும்
நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும்
ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#35
கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும்
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும்
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#36
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும்
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும்
தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க
ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#37
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும்
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும்
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும்
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#38
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும்
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும்
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#39
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#40
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்
காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள்
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

#41
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே

 மேல்

 5. திருவாரூர் : பழமொழி. பண் - காந்தாரம்

#42
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே

 மேல்

#43
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம்
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே

 மேல்

#44
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம்
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே

 மேல்

#45
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே

 மேல்

#46
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான்
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

 மேல்

#47
பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே

 மேல்

#48
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும்
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே

 மேல்

#49
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன்
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே

 மேல்

#50
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ
கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம்
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே

 மேல்

#51
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே

 மேல்

 6. திருக்கழிப்பாலை : பண் - காந்தாரம்

#52
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால்
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#53
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால்
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால்
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#54
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால்
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால்
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#55
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#56
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால்
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால்
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#57
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#58
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால்
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால்
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#59
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால்
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#60
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால்
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால்
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

#61
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால்
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால்
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ

 மேல்

 7. திருக்கச்சி ஏகம்பம் : பண் - காந்தாரம்

#62
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால்
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#63
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#64
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#65
அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத
பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#66
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#67
தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண்
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம்
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#68
நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும்
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே

 மேல்

#69
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும்
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#70
ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே

 மேல்

#71
அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம்
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே

 மேல்

 8. பொது - சிவன் எனும் ஓசை : பண் - பியந்தைக்காந்தாரம்

#72
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம்
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே

 மேல்

#73
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில்
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே

 மேல்

#74
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர்
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே

 மேல்

#75
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே

 மேல்

#76
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால்
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே

 மேல்

#77
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே

 மேல்

#78
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர்
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே

 மேல்

#79
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர்
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே

 மேல்

#80
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர்
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே

 மேல்

#81
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால்
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே

 மேல்

 9. திருஅங்கமாலை : பண் - சாதாரி

#82
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்

 மேல்

#83
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ

 மேல்

#84
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ

 மேல்

#85
மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய்

 மேல்

#86
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய்

 மேல்

#87
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்

 மேல்

#88
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர்

 மேல்

#89
ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என்

 மேல்

#90
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என்

 மேல்

#91
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ

 மேல்

#92
இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ

 மேல்

#93
தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன்

 மேல்

 10. திரு அதிகை வீரட்டானம் திருக்கெடிலவாணர் : பண் - காந்தார பஞ்சமம்

#94
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர்
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர்
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன்
கிளைத்துழி தோன்றிடும் கெடிலவாணரே

 மேல்

#95
ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும்
கீறின் உடையினர் கெடிலவாணரே

 மேல்

#96
விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல்
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே

 மேல்

#97
விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர்
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார்
செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர்
கெழு மணி அரவினர் கெடிலவாணரே

 மேல்

#98
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை
தழுவின கழுவுவர் பவளமேனியர்
மழுவினர் மான் மறி கையர் மங்கையை
கெழுவின யோகினர் கெடிலவாணரே

 மேல்

#99
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும்
மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை
நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை
கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே

 மேல்

#100
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர்
வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள்
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே

 மேல்

#101
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே

 மேல்

#102
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர்
பொறியுறு புலி உரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும்
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே

 மேல்

#103
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார்
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே

 மேல்

 11. பொது : நமச்சிவாயப்பதிகம் : பண் - காந்தார பஞ்சமம்

#104
சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நல் துணை ஆவது நமச்சிவாயவே

 மேல்

#105
பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே

 மேல்

#106
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

 மேல்

#107
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம்
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே

 மேல்

#108
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம்
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே

 மேல்

#109
சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால்
நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன்
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

 மேல்

#110
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அ நெறி கூடி சென்றலும்
ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

 மேல்

#111
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே

 மேல்

#112
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே

 மேல்

#113
மா பிணை தழுவிய மாது ஓர்பாகத்தன்
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே

 மேல்

 12. திருப்பழனம் : பண் - பழந்தக்கராகம்

#114
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ

 மேல்

#115
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம்
கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ

 மேல்

#116
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ

 மேல்

#117
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ

 மேல்

#118
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ

 மேல்

#119
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும்
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான்
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்
தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ

 மேல்

#120
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய்
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான்
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ

 மேல்

#121
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம்
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான்
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே

 மேல்

#122
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம்
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ

 மேல்

#123
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே

 மேல்

 13. திருவையாறு : பண் - பழந்தக்கராகம்

#124
விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#125
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர்
கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#126
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#127
ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம்
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#128
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#129
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#130
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#131
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய்
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#132
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும்
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

#133
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

 மேல்

 14. பொது : தசபுராணம் : பண் - பழம்பஞ்சுரம்

#134
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய்
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்
பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே

 மேல்

#135
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#136
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில்
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#137
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#138
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால்
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம்
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#139
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள்
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே

 மேல்

#140
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர்
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே

 மேல்

#141
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#142
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும்
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே

 மேல்

#143
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே

 மேல்

#144
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள்
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே

 மேல்

 15. பொது : பாவநாசத்திருப்பதிகம் : பண் - பழம்பஞ்சுரம்

#145
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே

 மேல்

#146
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை
கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே

 மேல்

#147
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை
விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே

 மேல்

#148
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை
கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே

 மேல்

#149
கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை
சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே

 மேல்

#150
மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை
கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை
பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே

 மேல்

#151
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே

 மேல்

#152
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே

 மேல்

#153
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே

 மேல்

#154
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே

 மேல்

#155
முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே

 மேல்

 16. திருப்புகலூர் : பண் - இந்தளம்

#156
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும்
கையர் கனை கழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர் புகலூர் புரி சடையாரே

 மேல்

#157
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை
பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர்
நாக வளையினர் நாக உடையினர்
போகர் புகலூர் புரி சடையாரே

 மேல்

#158
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#159
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர்
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும்
புக்கார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#160
ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல்
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி
போர்த்தார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#161
உதைத்தார் மறலி உருள ஓர் காலால்
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண்
புதைத்தார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#162
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்
சேம நெறியினர் சீரை உடையவர்
பூ மன் புகலூர் புரி சடையாரே

 மேல்

#163
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#164
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச
மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர் புரி சடையாரே

 மேல்

#165
கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும்
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம்
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே

 மேல்

 17. திருவாரூர் அரநெறி : பண் - இந்தளம்

#166
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அ தீநிறத்தார் அரநெறியாரே

 மேல்

#167
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு
ஆரமும் பூண்பர் அரநெறியாரே

 மேல்

#168
தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே

 மேல்

#169
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறியாரே

 மேல்

#170
துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம்
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே

 மேல்

#171
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள்
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து
ஆடு அரவத்தர் அரநெறியாரே

 மேல்

#172
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும்
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார் வினை வீட வல்லாரே

 மேல்

#173
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி
காலையும் மாலையும் கைதொழுவார் மனம்
ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே

 மேல்

#174
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு
அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே

 மேல்

#175
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறியாரே

 மேல்

#176
பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே

 மேல்

 18. பொது : விடந்தீர்த்த திருப்பதிகம் : பண் - இந்தளம்

#177
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர்
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே

 மேல்

#178
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம்
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே

 மேல்

#179
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண்
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே

 மேல்

#180
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும்
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே

 மேல்

#181
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே

 மேல்

#182
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம்
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே

 மேல்

#183
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல்
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே

 மேல்

#184
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம்
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர்
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே

 மேல்

#185
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை
ஒன்பது போல் அவர் பாரிடம்தானே

 மேல்

#186
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே

 மேல்

 19. திருவாரூர் : பண் - சீகாமரம்

#187
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய
ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#188
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில்
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#189
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை
மாய போர் வல்லானை மாலை தாழ் மார்பானை
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின்
ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#190
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே

 மேல்

#191
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே

 மேல்

#192
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய்
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#193
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர்
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே

 மேல்

#194
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#195
கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே

 மேல்

#196
தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன்
கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான்
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே

 மேல்

#197
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால்
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே

 மேல்

 20. திருவாரூர் : பண் - சீகாமரம்

#198
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி
பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே

 மேல்

#199
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே

 மேல்

#200
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார்
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே

 மேல்

#201
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே

 மேல்

#202
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே

 மேல்

#203
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய்
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே

 மேல்

#204
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள்
பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே

 மேல்

#205
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான்
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன்
திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே

 மேல்

#206
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள
வளைத்துக்கொண்டிருந்தேன் வலிசெய்து போகல் ஒட்டேன்
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே

 மேல்

#207
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே

 மேல்

 21. திருவாரூர் : திருவாதிரைத் திருப்பதிகம். பண் - குறிஞ்சி

#208
முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள்
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#209
நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#210
வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற
சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#211
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள்
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#212
நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#213
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#214
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#215
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#216
துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

#217
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம்

 மேல்

 22. கோயில் - திருநேரிசை : பண் - கொல்லி

#218
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே

 மேல்

#219
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம்
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே

 மேல்

#220
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#221
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#222
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம்
நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#223
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே

 மேல்

#224
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#225
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#226
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே

 மேல்

#227
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி
காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே

 மேல்

#228
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே

 மேல்

 23. கோயில் - திருநேரிசை : பண் - கொல்லி

#229
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே

 மேல்

#230
கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே

 மேல்

#231
கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில்
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே

 மேல்

#232
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ

 மேல்

#233
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே

 மேல்

#234
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே

 மேல்

#235
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே

 மேல்

#236
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே

 மேல்

#237
நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே

 மேல்

#238
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும்
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே

 மேல்

 24. திருவதிகை வீரட்டானம் - கொப்பளித்த நேரிசை

#239
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற
அரும்பு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே

 மேல்

#240
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#241
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#242
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே

 மேல்

#243
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம்
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே

 மேல்

#244
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல்
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே

 மேல்

#245
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே

 மேல்

#246
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#247
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே

 மேல்

#248
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல்
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த
கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே

 மேல்

 25. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை

#249
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#250
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே

 மேல்

#251
ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#252
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே

 மேல்

#253
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#254
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல்
அரிவை ஒர்பாகர் போலும் அதிகைவீரட்டனாரே

 மேல்

#255
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#256
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே

 மேல்

#257
ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம்
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகைவீரட்டனாரே

 மேல்

#258
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே

 மேல்

 26. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை

#259
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும்
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான்
அன்பனே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#260
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்
ஐய நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#261
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன்
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன்
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான்
ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#262
தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன்
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே

 மேல்

#263
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே

 மேல்

#264
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#265
கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப்போனேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#266
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன்
கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே
அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#267
பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#268
திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான்
அருவனே அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே

 மேல்

 27. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை

#269
மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல்
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல்
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே

 மேல்

#270
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே

 மேல்

#271
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே

 மேல்

#272
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம்
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே

 மேல்

#273
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே

 மேல்

#274
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின்
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று
துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே

 மேல்

#275
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும்
கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே

 மேல்

#276
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார்
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே

 மேல்

#277
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே

 மேல்

 28. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை

#278
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#279
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன்
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே

 மேல்

#280
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள்
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார்
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே

 மேல்

#281
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே

 மேல்

#282
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே

 மேல்

#283
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே

 மேல்

 29. திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

#284
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர்
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#285
நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும்
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#286
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#287
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#288
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும்
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும்
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#289
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#290
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#291
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#292
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா
மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

#293
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே

 மேல்

 30. திருக்கழிப்பாலை - திருநேரிசை

#294
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#295
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#296
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#297
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார்
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#298
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#299
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார்
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#300
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#301
கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#302
சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

#303
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே

 மேல்

 31. திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை

#304
பொள்ளத்த காயம் ஆய பொருளினை போக மாதர்
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே

 மேல்

#305
மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில்
விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே

 மேல்

#306
பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர்
ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே

 மேல்

#307
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே

 மேல்

#308
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே

 மேல்

#309
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன்
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு
கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே

 மேல்

#310
மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ
நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான்
காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே

 மேல்

#311
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே

 மேல்

#312
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய்
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும்
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே

 மேல்

#313
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே

 மேல்

 32. திருப்பயற்றூர் - திருநேரிசை

#314
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி
தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே

 மேல்

#315
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே

 மேல்

#316
நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள்
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும்
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே

 மேல்

#317
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே

 மேல்

#318
மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும்
தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே

 மேல்

#319
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே

 மேல்

#320
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே

 மேல்

#321
தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே

 மேல்

#322
புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து
இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே

 மேல்

#323
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே

 மேல்

 33. திருமறைக்காடு - திருநேரிசை

#324
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும்
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே

 மேல்

#325
தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும்
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின்
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர்
மாயன நாடர் போலும் மா மறைக்காடனாரே

 மேல்

#326
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே

 மேல்

#327
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே

 மேல்

#328
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே

 மேல்

#329
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார்
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே

 மேல்

#330
கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார்
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே

 மேல்

#331
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும்
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே

 மேல்

#332
தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள்
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே

 மேல்

#333
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே

 மேல்

 34. திருமறைக்காடு - திருநேரிசை

#334
தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே

 மேல்

#335
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே

 மேல்

#336
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி
அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன்
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே

 மேல்

#337
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே

 மேல்

#338
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும்
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே

 மேல்

#339
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான்
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே

 மேல்

#340
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே

 மேல்

#341
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான்
மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே

 மேல்

#342
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே

 மேல்

#343
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே

 மேல்

 35. திருவிடைமருதூர் - திருநேரிசை

#344
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல்
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில்
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#345
முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#346
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால்
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#347
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#348
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#349
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும்
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#350
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#351
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#352
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம்
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

#353
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார்
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே

 மேல்

 36. திருப்பழனம் - திருநேரிசை

#354
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#355
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#356
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#357
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#358
ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#359
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#360
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும்
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள்
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#361
கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#362
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே

 மேல்

#363
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின்
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே

 மேல்

 37. திருநெய்த்தானம் - திருநேரிசை

#364
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே

 மேல்

#365
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே

 மேல்

#366
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே

 மேல்

#367
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே

 மேல்

#368
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே

 மேல்

#369
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன்
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே

 மேல்

#370
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே

 மேல்

#371
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார்
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே

 மேல்

#372
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார்
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே

 மேல்

#373
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே

 மேல்

 38. திருவையாறு - திருநேரிசை

#374
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார்
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#375
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார்
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#376
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#377
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார்
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#378
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார்
ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#379
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார்
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#380
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#381
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார்
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#382
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

#383
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

 மேல்

 39. திருவையாறு - திருநேரிசை

#384
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே

 மேல்

#385
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே

 மேல்

#386
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே

 மேல்

#387
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே

 மேல்

#388
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே

 மேல்

#389
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே

 மேல்

#390
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே

 மேல்

#391
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை
கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே

 மேல்

#392
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும்
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார்
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே

 மேல்

#393
அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே

 மேல்

 40. திருவையாறு - திருநேரிசை

#394
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#395
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#396
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#397
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#398
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும்
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#399
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#400
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண்
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#401
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#402
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

#403
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே

 மேல்

 41. திருச்சோற்றுத்துறை - திருநேரிசை

#404
பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன்
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#405
கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#406
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#407
கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம்
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள்
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே

 மேல்

#408
பொந்தையை பொருளா எண்ணி பொருக்கென காலம் போனேன்
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன்
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#409
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#410
கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#411
அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின்
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#412
ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

#413
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள்
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே

 மேல்

 42. திருத்துருத்தி - திருநேரிசை

#414
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள்
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#415
சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த
சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#416
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#417
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும்
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#418
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#419
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள்
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#420
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த
சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#421
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும்
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

#422
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள்
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே

 மேல்

#423
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள்
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

 மேல்

 43. திருக்கச்சிமேற்றளி - திருநேரிசை

#424
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#425
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும்
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#426
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#427
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும்
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#428
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#429
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய்
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#430
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார்
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#431
செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார்
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#432
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே

 மேல்

#433
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே

 மேல்

 44. திருக்கச்சியேகம்பம் - திருநேரிசை

#434
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏ
கம்பனை கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே

 மேல்

#435
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய்
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே

 மேல்

#436
மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர்
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே

 மேல்

#437
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே

 மேல்

#438
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே

 மேல்

#439
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும்
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே

 மேல்

#440
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன்
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே

 மேல்

#441
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே

 மேல்

#442
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே

 மேல்

#443
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே

 மேல்

 45. திருவொற்றியூர் - திருநேரிசை

#444
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால்
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#445
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#446
தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#447
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#448
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#449
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#450
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#451
பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள்
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#452
முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#453
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

 46. திருவொற்றியூர் - திருநேரிசை

#454
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன்
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#455
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது
மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

 47. திருக்கயிலாயம் - திருநேரிசை

#456
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#457
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#458
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான்
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#459
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான்
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#460
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#461
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான்
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#462
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#463
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

#464
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன்
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான்
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே

 மேல்

#465
கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான்
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே

 மேல்

 48. திருஆப்பாடி - திருநேரிசை

#466
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும்
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே

 மேல்

#467
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே

 மேல்

#468
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே

 மேல்

#469
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே

 மேல்

#470
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே

 மேல்

#471
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே

 மேல்

#472
உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே

 மேல்

#473
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே

 மேல்

#474
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே

 மேல்

#475
திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே

 மேல்

 49. திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை

#476
ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ்
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#477
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான்
சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த
கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#478
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#479
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள்
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#480
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ்
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#481
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#482
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம்
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண்
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#483
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#484
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#485
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட
கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

 50. திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை

#486
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள
அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

#487
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே

 மேல்

 51. திருக்கோடிகா - திருநேரிசை

#488
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே

 மேல்

#489
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே

 மேல்

#490
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே

 மேல்

#491
காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே

 மேல்

#492
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே
கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே

 மேல்

#493
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான்
மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே

 மேல்

#494
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே

 மேல்

#495
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே
ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே

 மேல்

#496
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும்
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே

 மேல்

#497
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே

 மேல்

 52. திருவாரூர் - திருநேரிசை

#498
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால்
கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#499
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#500
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#501
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#502
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#503
மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய
ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#504
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#505
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#506
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும்
அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே

 மேல்

#507
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே

 மேல்

 53. திருவாரூர் - திருநேரிசை

#508
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே

 மேல்

#509
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

 மேல்

#510
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர்
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே

 மேல்

#511
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல்
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே

 மேல்

#512
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே

 மேல்

#513
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம்
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

 மேல்

#514
அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம்
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே

 மேல்

#515
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல்
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே

 மேல்

#516
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள்
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே

 மேல்

#517
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே

 மேல்

 54. திருப்புகலூர் - திருநேரிசை

#518
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே

 மேல்

#519
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன்
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம்
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே

 மேல்

#520
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன்
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே

 மேல்

#521
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும்
அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும்
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே

 மேல்

#522
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே

 மேல்

#523
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே

 மேல்

#524
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன்
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே

 மேல்

#525
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே

 மேல்

#526
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே

 மேல்

#527
அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும்
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன்
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே

 மேல்

 55. திருவலம்புரம் - திருநேரிசை

#528
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே

 மேல்

#529
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே

 மேல்

#530
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி
ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே

 மேல்

#531
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே

 மேல்

#532
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள்
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே

 மேல்

#533
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி
புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன்
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே

 மேல்

#534
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே

 மேல்

#535
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல்
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே

 மேல்

#536
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான்
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான்
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே

 மேல்

#537
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே

 மேல்

 56. திருவாவடுதுறை - திருநேரிசை

#538
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும்
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#539
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும்
குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும்
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும்
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#540
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#541
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#542
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும்
கடியது ஓர் விடையர் போலும் காமனை காய்வர் போலும்
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#543
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற
சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும்
துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#544
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும்
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும்
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே

 மேல்

#545
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே

 மேல்

#546
பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும்
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும்
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும்
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே

 மேல்

#547
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே

 மேல்

 57. திருவாவடுதுறை - திருநேரிசை

#548
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே

 மேல்

#549
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான்
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே

 மேல்

#550
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன்
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும்
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே

 மேல்

#551
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான்
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே

 மேல்

#552
துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய்
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே

 மேல்

#553
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே

 மேல்

#554
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன்
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன்
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன்
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே

 மேல்

#555
கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே

 மேல்

#556
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே

 மேல்

#557
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே

 மேல்

 58. திருப்பருப்பதம் - திருநேரிசை

#558
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#559
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#560
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#561
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#562
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#563
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும்
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#564
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#565
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#566
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர்
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே

 மேல்

#567
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம்
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே

 மேல்

 59. திருஅவளிவணல்லூர் - திருநேரிசை

#568
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே

 மேல்

#569
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே

 மேல்

#570
கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில்
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே

 மேல்

#571
நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான்
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று
அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே

 மேல்

#572
தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே

 மேல்

#573
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான்
வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால்
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே

 மேல்

#574
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே

 மேல்

#575
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே

 மேல்

#576
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும்
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார்
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே

 மேல்

#577
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே

 மேல்

 60. திருப்பெருவேளூர் - திருநேரிசை

#578
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே

 மேல்

#579
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும்
பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே

 மேல்

#580
குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை
பிறவியை மாற்றுவானை பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே

 மேல்

#581
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை
பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே

 மேல்

#582
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே

 மேல்

#583
கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே

 மேல்

#584
சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள்
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே

 மேல்

#585
முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை
பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே

 மேல்

#586
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே

 மேல்

#587
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே

 மேல்

 61. திருவிராமேச்சுரம் - திருநேரிசை

#588
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க
வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும்
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே

 மேல்

#589
முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை
செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே

 மேல்

#590
கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி
உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே

 மேல்

#591
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில்
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே

 மேல்

#592
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன்
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே

 மேல்

#593
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே

 மேல்

#594
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே

 மேல்

#595
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே

 மேல்

#596
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே

 மேல்

#597
வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார்
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே

 மேல்

#598
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில்
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே

 மேல்

 62. திருவாலவாய் - திருநேரிசை

#599
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#600
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#601
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய்
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#602
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#603
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#604
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#605
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#606
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம்
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#607
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

#608
பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன்
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே

 மேல்

 63. திருவண்ணாமலை - திருநேரிசை

#609
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே

 மேல்

#610
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல
கண்டனே கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே

 மேல்

#611
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே

 மேல்

#612
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய்
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே

 மேல்

#613
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா
மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே

 மேல்

#614
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே

 மேல்

#615
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும்
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய்
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே

 மேல்

#616
பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய்
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே

 மேல்

#617
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே

 மேல்

#618
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே

 மேல்

 64. திருவீழிமிழலை - திருநேரிசை

#619
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர்
கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர்
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#620
காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#621
வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#622
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள்
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#623
மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர்
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர்
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#624
எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர்
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#625
சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#626
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#627
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர்
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர்
வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

#628
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள்
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

 மேல்

 65. திருச்சாய்க்காடு - திருநேரிசை

#629
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன
சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே

 மேல்

#630
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#631
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#632
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#633
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#634
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#635
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#636
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம்
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#637
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே

 மேல்

#638
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

 மேல்

 66. திருநாகேச்சரம் - திருநேரிசை

#639
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும்
பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#640
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#641
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும்
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும்
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#642
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும்
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#643
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும்
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும்
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#644
பிறையுறு சடையர் போலும் பெண் ஒருபாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#645
வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும்
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#646
போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#647
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

#648
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே
நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே

 மேல்

 67. திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

#649
வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய்
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#650
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#651
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#652
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே
காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#653
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன்
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#654
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும்
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#655
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன்
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#656
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன்
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#657
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம்
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

#658
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள்
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே

 மேல்

 68. திருவாலங்காடு - திருநேரிசை

#659
வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும்
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#660
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும்
வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#661
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும்
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#662
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும்
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#663
பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும்
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும்
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே

 மேல்

#664
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார்
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#665
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும்
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும்
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#666
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு
சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#667
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும்
ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

#668
மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க
ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே

 மேல்

 69. திருக்கோவலூர் வீரட்டம் - திருநேரிசை

#669
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன்
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா
கொத்தையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே

 மேல்

#670
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே

 மேல்

#671
வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன்
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன்
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே

 மேல்

#672
சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே

 மேல்

#673
தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடியவா நான் கோவல்வீரட்டனீரே

 மேல்

#674
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும்
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே

 மேல்

#675
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும்
கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே

 மேல்

#676
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள்
அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா
கொச்சையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே

 மேல்

#677
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன்
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும்
குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே

 மேல்

#678
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே

 மேல்

 70. திருநனிபள்ளி - திருநேரிசை

#679
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#680
புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#681
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#682
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#683
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#684
செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான்
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#685
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார்
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

 மேல்

#686
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை

 மேல்

#687
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே

 மேல்

 71. திருநாகைக்காரோணம் - திருநேரிசை

#688
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே

 மேல்

#689
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட
செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே

 மேல்

#690
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே

 மேல்

#691
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே

 மேல்

#692
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே

 மேல்

#693
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும்
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே

 மேல்

#694
வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே

 மேல்

#695
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த
பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே

 மேல்

#696
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே

 மேல்

 72. திருஇன்னம்பர் - திருநேரிசை

#697
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும்
பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும்
வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும்
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#698
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும்
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#699
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும்
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும்
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும்
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#700
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும்
கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும்
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும்
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#701
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும்
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும்
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#702
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும்
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும்
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#703
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும்
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#704
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும்
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும்
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#705
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும்
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும்
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும்
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

#706
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும்
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும்
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே

 மேல்

 73. திருச்சேறை - திருநேரிசை

#707
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும்
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#708
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#709
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து
சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#710
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#711
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#712
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#713
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#714
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம்
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

#715
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே

 மேல்

 74. பொது - நினைந்த திருநேரிசை

#716
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#717
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும்
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#718
கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும்
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#719
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல்
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு
ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே

 மேல்

#720
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல்
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே

 மேல்

#721
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே

 மேல்

#722
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர்
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#723
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும்
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#724
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

#725
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள்
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே

 மேல்

 75. பொது - தனித் திருநேரிசை

#726
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே

 மேல்

#727
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள்
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே

 மேல்

#728
கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன்
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே

 மேல்

#729
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே

 மேல்

#730
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும்
வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே

 மேல்

#731
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை
உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே

 மேல்

#732
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன்
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன்
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ

 மேல்

#733
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே

 மேல்

#734
வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே

 மேல்

#735
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே

 மேல்

 76. பொது - தனித் திருநேரிசை

#736
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன்
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே

 மேல்

#737
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே

 மேல்

#738
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால்
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே

 மேல்

#739
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே

 மேல்

#740
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன்
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே

 மேல்

#741
நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே

 மேல்

#742
விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும்
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே

 மேல்

#743
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே

 மேல்

#744
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான்
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே

 மேல்

#745
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன்
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே

 மேல்

 77. பொது - தனித் திருநேரிசை

#746
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல்
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ

 மேல்

#747
கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும்
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும்
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை
ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே

 மேல்

#748
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே

 மேல்

#749
சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன்
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே

 மேல்

#750
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார்
முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே

 மேல்

#751
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன்
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய்
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே

 மேல்

#752
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே

 மேல்

#753
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே

 மேல்

 78. பொது - குறைந்த திருநேரிசை

#754
வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள்
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#755
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும்
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன்
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#756
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன்
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன்
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை
ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#757
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#758
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன்
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#759
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#760
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை
நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#761
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம்
திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#762
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன்
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#763
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

 79. பொது - குறைந்த திருநேரிசை

#764
தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#765
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும்
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன்
கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும்
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#766
கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன்
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#767
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன்
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான்
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#768
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன்
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

#769
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

 மேல்

 80. கோயில் - திருவிருத்தம் : பண் - கொல்லி

#770
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும்
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள்
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே

 மேல்

#771
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன்
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே

 மேல்

#772
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன்
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே

 மேல்

#773
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே

 மேல்

#774
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன்
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான்
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே

 மேல்

#775
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன்
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன்
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே

 மேல்

#776
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே

 மேல்

#777
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான்
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன்
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே

 மேல்

#778
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே

 மேல்

#779
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே

 மேல்

 81. கோயில் - திருவிருத்தம் : பண் - கொல்லி

#780
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே

 மேல்

#781
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே

 மேல்

#782
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே

 மேல்

#783
குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும்
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே

 மேல்

#784
வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின்
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர்
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே

 மேல்

#785
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே

 மேல்

#786
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள்
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில்
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே

 மேல்

#787
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே

 மேல்

#788
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள்
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே

 மேல்

#789
சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே

 மேல்

 82. திருக்கழுமலம் - திருவிருத்தம்

#790
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம்
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே

 மேல்

#791
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள்
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே

 மேல்

#792
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும்
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே

 மேல்

#793
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே

 மேல்

#794
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே

 மேல்

#795
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய்
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம்
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர்
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே

 மேல்

#796
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர்
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம்
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே

 மேல்

#797
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ்
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள்
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே

 மேல்

#798
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும்
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே

 மேல்

#799
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே

 மேல்

 83. திருக்கழுமலம் - திருவிருத்தம்

#800
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே

 மேல்

 84. பொது - ஆருயிர்த் திருவிருத்தம்

#801
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#802
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும்
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#803
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#804
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார்
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#805
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம்
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல்
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால்
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#806
காய்ந்தான் செறற்கு அரியான் என்று காலனை கால் ஒன்றினால்
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால்
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#807
உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால்
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி
வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#808
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள்
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே

 மேல்

#809
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன்
முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#810
பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

#811
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே

 மேல்

 85. திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்

#812
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#813
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும்
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#814
அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான்
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன்
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#815
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#816
கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம்
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே

 மேல்

#817
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#818
ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே

 மேல்

#819
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#820
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான்
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான்
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

#821
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

 மேல்

 86. திருவொற்றியூர் - திருவிருத்தம்

#822
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும்
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே

 மேல்

#823
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார்
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர்
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே

 மேல்

#824
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர்
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே

 மேல்

#825
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான்
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே

 மேல்

#826
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே

 மேல்

#827
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும்
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம்
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே

 மேல்

#828
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள்
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே

 மேல்

#829
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே

 மேல்

#830
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம்
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே

 மேல்

#831
அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும்
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர்
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே

 மேல்

#832
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே

 மேல்

 87. திருப்பழனம் - திருவிருத்தம்

#833
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே
கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே

 மேல்

#834
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில்
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ்
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான்
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#835
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும்
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே

 மேல்

#836
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல்
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#837
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#838
ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும்
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#839
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#840
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#841
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

#842
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல்
உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

 மேல்

 88. திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்

#843
மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல்
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும்
ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே

 மேல்

#844
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால்
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே

 மேல்

#845
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால்
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும்
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே

 மேல்

#846
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும்
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே

 மேல்

#847
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள்
மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால்
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும்
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே

 மேல்

#848
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான்
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே

 மேல்

#849
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால்
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும்
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே

 மேல்

#850
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான்
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும்
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே

 மேல்

#851
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும்
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே

 மேல்

#852
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும்
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே

 மேல்

 89. திருநெய்த்தானம் - திருவிருத்தம்

#853
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம்
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#854
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல்
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே

 மேல்

#855
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும்
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல்
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#856
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#857
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும்
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான்
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான்
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#858
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#859
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான்
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#860
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன்
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#861
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல்
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான்
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

#862
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால்
மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே

 மேல்

 90. திருவேதிகுடி - திருவிருத்தம்

#863
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன்
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#864
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன்
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான்
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#865
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான்
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#866
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான்
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#867
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன்
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#868
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#869
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான்
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே

 மேல்

#870
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான்
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே

 மேல்

#871
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன்
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

#872
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

 மேல்

 91. திருவையாறு - திருவிருத்தம்

#873
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய்
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#874
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய்
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#875
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய்
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#876
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால்
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#877
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#878
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#879
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய்
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#880
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய்
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#881
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய்
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

#882
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள்
அறுத்துமிட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே

 மேல்

 92. திருவையாறு - திருவிருத்தம்

#883
சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன்
முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#884
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய்
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே

 மேல்

#885
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே

 மேல்

#886
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#887
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய்
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#888
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#889
களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய்
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன்
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#890
திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்
அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#891
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய்
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள்
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#892
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#893
மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே

 மேல்

#894
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள்
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#895
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல்
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார்-தமக்கு கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#896
வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார்
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#897
மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின்
மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார்
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#898
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால்
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#899
ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே

 மேல்

#900
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே

 மேல்

#901
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து
கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே

 மேல்

#902
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே

 மேல்

 93. திருக்கணியூர் வீரட்டன் - திருவிருத்தம்

#903
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே

 மேல்

#904
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன்
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே

 மேல்

#905
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே

 மேல்

#906
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான்
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான்
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே

 மேல்

#907
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே

 மேல்

#908
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம்
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே

 மேல்

#909
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே

 மேல்

#910
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம்
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே

 மேல்

#911
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே

 மேல்

#912
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே

 மேல்

 94. திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்

#913
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர்
தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே

 மேல்

#914
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும்
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே

 மேல்

#915
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம்
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே

 மேல்

#916
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே

 மேல்

#917
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே

 மேல்

#918
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

 மேல்

#919
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய்
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே

 மேல்

#920
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர்
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே

 மேல்

#921
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும்
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர்
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே

 மேல்

#922
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே

 மேல்

 95. திருவீழிமிழலை - திருவிருத்தம்

#923
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர்
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#924
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர்
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#925
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர்
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#926
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும்
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#927
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#928
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர்
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#929
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#930
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#931
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர்
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

#932
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே

 மேல்

 96. திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

#933
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில்
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#934
காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன்
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#935
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம்
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#936
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன்
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#937
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன்
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#938
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#939
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால்
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#940
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய்
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#941
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன்
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும்
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

#942
பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள்
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய்
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

 மேல்

 97. திருநல்லூர் - திருவிருத்தம்

#943
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே

 மேல்

#944
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே

 மேல்

#945
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே

 மேல்

#946
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால்
துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே

 மேல்

#947
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே

 மேல்

#948
தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால்
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே

 மேல்

#949
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே

 மேல்

#950
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான்
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே

 மேல்

#951
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர்
கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே

 மேல்

#952
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல்
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே

 மேல்

#953
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான்
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே

 மேல்

 98. திருவையாறு - திருவிருத்தம்

#954
அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே

 மேல்

#955
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால்
ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே

 மேல்

 99. திருக்கச்சியேகம்பம் - திருவிருத்தம்

#956
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே

 மேல்

#957
எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே

 மேல்

#958
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே

 மேல்

#959
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே

 மேல்

#960
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம்
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே

 மேல்

#961
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

 மேல்

#962
அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார்
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே

 மேல்

#963
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள்
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே

 மேல்

#964
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில்
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே

 மேல்

#965
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான்
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய்
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே

 மேல்

 100. திருஇன்னம்பர் - திருவிருத்தம்

#966
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள்
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#967
பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன்
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#968
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#969
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள்
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#970
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய்
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம்
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#971
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#972
போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை
தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#973
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன்
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#974
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

#975
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன்
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே

 மேல்

 101. திருவாரூர் - திருவிருத்தம்

#976
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான்
சிலம்பு அலம்பாவரு சேவடியான் தி ருமூலட்டானம்
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#977
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#978
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண்
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#979
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#980
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#981
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#982
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#983
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#984
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

#985
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே

 மேல்

 102. திருவாரூர் - திருவிருத்தம்

#986
வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ்
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே

 மேல்

#987
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே

 மேல்

#988
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே

 மேல்

#989
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே

 மேல்

#990
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே

 மேல்

#991
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே

 மேல்

#992
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில்
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள்
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே

 மேல்

 103. திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

#993
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய்
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே

 மேல்

#994
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே

 மேல்

#995
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும்
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே

 மேல்

#996
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய்
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே

 மேல்

#997
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார்
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே

 மேல்

#998
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே

 மேல்

#999
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே

 மேல்

#1000
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர்
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே

 மேல்

#1001
கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே

 மேல்

 104. திருஅதிகை வீரட்டானம் - திருவிருத்தம்

#1002
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே

 மேல்

#1003
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும்
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே

 மேல்

#1004
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார்
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள்
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார்
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே

 மேல்

#1005
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின்
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும்
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே

 மேல்

#1006
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை
வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே

 மேல்

#1007
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும்
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர்
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார்
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே

 மேல்

#1008
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில
நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே

 மேல்

 105. திருப்புகலூர் - திருவிருத்தம்

#1009
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து
என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே

 மேல்

#1010
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள்
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய்
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே

 மேல்

#1011
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய்
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே

 மேல்

#1012
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும்
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர்
கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே

 மேல்

 106. திருக்கழிப்பாலை - திருவிருத்தம்

#1013
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம்
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே

 மேல்

#1014
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே

 மேல்

#1015
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே

 மேல்

 107. திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம்

#1016
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1017
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும்
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1018
கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும்
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1019
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1020
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1021
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1022
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன்
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1023
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல்
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம்
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1024
கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய்
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

#1025
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே

 மேல்

 108. திருமாற்பேறு - திருவிருத்தம்

#1026
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர்
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே

 மேல்

#1027
கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும்
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால்
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே

 மேல்

 109. திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்

#1028
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே

 மேல்

#1029
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய்
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே

 மேல்

#1030
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான்
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல்
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே

 மேல்

 110. பொது - பசுபதி திருவிருத்தம்

#1031
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல்
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1032
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1033
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால்
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1034
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும்
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1035
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும்
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1036
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள்
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1037
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

#1038
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே

 மேல்

 111. பொது - சரக்கறைத் திருவிருத்தம்

#1039
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள்
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல்
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும்
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1040
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும்
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1041
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும்
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல்
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1042
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும்
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1043
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம்
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1044
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும்
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1045
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1046
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும்
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1047
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம்
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1048
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல்
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

#1049
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல்
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

 மேல்

 112. பொது - தனித் திருவிருத்தம்

#1050
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல்
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே

 மேல்

#1051
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண்
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே

 மேல்

#1052
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே

 மேல்

#1053
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில்
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே

 மேல்

#1054
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே

 மேல்

#1055
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன்
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே

 மேல்

#1056
பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே

 மேல்

#1057
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும்
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும்
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

 மேல்

#1058
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால்
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே

 மேல்

#1059
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை
பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே

 மேல்

 113. பொது - தனித் திருவிருத்தம்

#1060
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல்
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும்
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே

 மேல்

#1061
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால்
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே

 மேல்

#1062
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால்
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே

 மேல்

#1063
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள்
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே

 மேல்

#1064
அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான்
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே

 மேல்

#1065
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான்
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே

 மேல்

#1066
அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல்
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும்
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே

 மேல்

#1067
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர்
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே

 மேல்

#1068
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன்
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல்
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய்
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே

 மேல்

#1069
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண்
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே

 மேல்

#1070
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே

 மேல்