<<முந்திய பக்கம்

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருமுறை 1,2,3)
1.முதல்_திருமுறை
(1 - 1469)
2.இரண்டாம் திருமுறை
(1470 - 2800)
3.மூன்றாம் திருமுறை
(2801 - 4169)
பதிக எண்கள் தேவையான திருமுறையின் மீதும் பின்னர் பதிக எண் மீதும் சொடுக்குக
1 || 51 || 101
2 || 52 || 102
3 || 53 || 103
4 || 54 || 104
5 || 55 || 105
6 || 56 || 106
7 || 57 || 107
8 || 58 || 108
9 || 59 || 109
10 || 60 || 110
11 || 61 || 111
12 || 62 || 112
13 || 63 || 113
14 || 64 || 114
15 || 65 || 115
16 || 66 || 116
17 || 67 || 117
18 || 68 || 118
19 || 69 || 119
20 || 70 || 120
21 || 71 || 121
22 || 72 || 122
23 || 73 || 123
24 || 74 || 124
25 || 75 || 125
26 || 76 || 126
27 || 77 || 127
28 || 78 || 128
29 || 79 || 129
30 || 80 || 130
31 || 81 || 131
32 || 82 || 132
33 || 83 || 133
34 || 84 || 134
35 || 85 || 135
36 || 86 || 136
37 || 87 || -----
38 || 88 || -----
39 || 89 || -----
40 || 90 || -----
41 || 91 || -----
42 || 92 || -----
43 || 93 || -----
44 || 94 || -----
45 || 95 || -----
46 || 96 || -----
47 || 97 || -----
48 || 98 || -----
49 || 99 || -----
50 || 100 || -----

 திருஞானசம்பந்தர் - தேவாரம் 1. முதலாம் திருமுறை 

 1. திருப்பிரமபுரம் : பண் - நட்டபாடை

#1
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#2
முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#3
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#5
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#6
மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#7
சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#8
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#9
தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும்
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#10
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 மேல்

#11
அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே

 மேல்

 2. திருப்புகலூர் : பண் - நட்டபாடை

#12
குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே

 மேல்

#13
காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே

 மேல்

#14
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த
உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே

 மேல்

#15
நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே

 மேல்

#16
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல்
பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே

 மேல்

#17
கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில்
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே

 மேல்

#18
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம்
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே

 மேல்

#19
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள்
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே

 மேல்

#20
நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும்
போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே

 மேல்

#21
செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே

 மேல்

#22
புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து
குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே

 மேல்

 3. திருவலிதாயம் : பண் - நட்டபாடை

#23
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே

 மேல்

#24
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில்
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே

 மேல்

#25
ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த
செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே

 மேல்

#26
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே

 மேல்

#27
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே

 மேல்

#28
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே

 மேல்

#29
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே

 மேல்

#30
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே

 மேல்

#31
பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே

 மேல்

#32
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல்
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே

 மேல்

#33
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே

 மேல்

 4. திருப்புகலியும், திருவீழிமழலையும் : பண் - நட்டபாடை

#34
மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#35
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள்
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#36
கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#37
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#38
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#39
சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#40
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#41
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#42
செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#43
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே

 மேல்

#44
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே

 மேல்

 5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி : பண் - நட்டபாடை

#45
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன்
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே

 மேல்

#46
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே

 மேல்

#47
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே

 மேல்

#48
சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே

 மேல்

#49
தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம்
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே

 மேல்

#50
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன்
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே

 மேல்

#51
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி
குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே

 மேல்

#52
செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே

 மேல்

#53
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர்
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே

 மேல்

#54
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன்
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே

 மேல்

 6. திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் : பண் - நட்டபாடை

#55
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#56
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#57
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#58
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#59
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#60
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#61
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#62
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#63
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல்
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே

 மேல்

#64
நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே

 மேல்

 7. திருநள்ளாறும் திருஆலவாயும் : பண் - நட்டபாடை

#65
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே

 மேல்

#66
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும்
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#67
தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும்
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#68
பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#69
செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும்
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#70
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய்
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#71
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும்
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#72
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#73
பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும்
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#74
தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர்
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே

 மேல்

#75
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று
நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே

 மேல்

 8. திருஆவூர்ப் பசுபதீச்சரம் : பண் - நட்டபாடை

#76
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள்
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#77
முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும்
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில்
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#78
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம்
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#79
தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#80
இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார்
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#81
குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம்
சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#82
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#83
வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன்
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும்
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#84
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#85
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே

 மேல்

#86
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல்
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே

 மேல்

 9. திருவேணுபுரம் : பண் - நட்டபாடை

#87
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே

 மேல்

#88
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர்
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

 மேல்

#89
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே

 மேல்

#90
தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே

 மேல்

#91
நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார்
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான்
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே

 மேல்

#92
விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச
கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே

 மேல்

#93
மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே

 மேல்

#94
வயம் உண்ட அ மாலும் அடி காணாது அலமாக்கும்
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல்
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே

 மேல்

#95
மாசு ஏறிய உடலார் அமண் குழுக்களொடு தேரர்
தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார்
வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே

 மேல்

#96
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்-தன்னை
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே

 மேல்

 10. திருவண்ணாமலை : பண் - நட்டபாடை

#97
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ
மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே

 மேல்

#98
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே

 மேல்

#99
பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல்
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே

 மேல்

#100
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால்
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே

 மேல்

#101
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்
குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே

 மேல்

#102
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி
கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே

 மேல்

#103
கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே

 மேல்

#104
ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால்
பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே

 மேல்

#105
விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும்
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே

 மேல்

#106
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும்
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல்
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே

 மேல்

#107
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே

 மேல்

 11. திருவீழிமிழலை : பண் - நட்டபாடை

#108
சடை ஆர் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான்
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான்
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான்
விடை ஆர் கொடி உடையான் இடம் வீழிமிழலையே

 மேல்

#109
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே

 மேல்

#110
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே

 மேல்

#111
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும்
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும்
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே

 மேல்

#112
ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின்
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்
தீ ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர்
மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே

 மேல்

#113
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே

 மேல்

#114
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான்
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே

 மேல்

#115
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே

 மேல்

#116
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே

 மேல்

#117
மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள்
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பை பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே

 மேல்

#118
வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே

 மேல்

 12. திருமுதுகுன்றம் : பண் - நட்டபாடை

#119
மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே

 மேல்

#120
தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன்
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண்
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே

 மேல்

#121
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண்
தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே

 மேல்

#122
சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆர்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே

 மேல்

#123
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர்
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே

 மேல்

#124
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார்
மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே

 மேல்

#125
தழல் சேர்தரு திருமேனியர் சசி சேர் சடைமுடியர்
மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே

 மேல்

#126
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில்
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே

 மேல்

#127
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே
முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே

 மேல்

#128
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே

 மேல்

#129
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல் சீர்
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே

 மேல்

 13. திருவியலூர் : பண் - நட்டபாடை

#130
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ
பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும்
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#131
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான்
ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான்
மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள்
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#132
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும்
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே

 மேல்

#133
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே

 மேல்

#134
எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்
பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய்
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே

 மேல்

#135
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்
திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#136
மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே

 மேல்

#137
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#138
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#139
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே

 மேல்

#140
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும்
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே

 மேல்

 14. திருக்கொடுங்குன்றம் : பண் - நட்டபாடை

#141
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே

 மேல்

#142
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே

 மேல்

#143
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே

 மேல்

#144
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல்
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே

 மேல்

#145
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும்
கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே

 மேல்

#146
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர
கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே

 மேல்

#147
மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே

 மேல்

#148
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே

 மேல்

#149
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே

 மேல்

#150
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே

 மேல்

#151
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே

 மேல்

 15. திருநெய்த்தானம் : பண் - நட்டபாடை

#152
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான்
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

 மேல்

#153
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர்
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே

 மேல்

#154
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான்
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

 மேல்

#155
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே

 மேல்

#156
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும்
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே

 மேல்

#157
விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும்
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமர்_உலகம் அடையாரே

 மேல்

#158
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே

 மேல்

#159
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே

 மேல்

#160
கோலம் முடி நெடு மாலொடு கொய் தாமரையானும்
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே

 மேல்

#161
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே

 மேல்

#162
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே

 மேல்

 16. திருப்புள்ளமங்கை, திருஆலந்துறை : பண் - நட்டபாடை

#163
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே

 மேல்

#164
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை
புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே

 மேல்

#165
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல்
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம்
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே

 மேல்

#166
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே

 மேல்

#167
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல்
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே

 மேல்

#168
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல்
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே

 மேல்

#169
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே

 மேல்

#170
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே

 மேல்

#171
செறி ஆர்தரு வெள்ளை திருநீற்றின் திருமுண்ட
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே

 மேல்

#172
நீதி அறியாத அமண் கையரொடு மண்டை
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின்
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே

 மேல்

#173
பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே

 மேல்

 17. திருஇடும்பாவனம் : பண் - நட்டபாடை

#174
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்
தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#175
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே

 மேல்

#176
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே

 மேல்

#177
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#178
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல்
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில்
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#179
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே

 மேல்

#180
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#181
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#182
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#183
தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார்
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல்
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே

 மேல்

#184
கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே

 மேல்

 18. திருநின்றியூர் : பண் - நட்டபாடை

#185
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும்
நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே

 மேல்

#186
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே

 மேல்

#187
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில்
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே

 மேல்

#188
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே

 மேல்

#189
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே

 மேல்

#190
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம்
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றி
யூரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே

 மேல்

#191
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும்
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார்
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே

 மேல்

#192
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

 மேல்

#193
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே

 மேல்

#194
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே

 மேல்

 19. திருக்கழுமலம் : திருவிராகம் : பண் - நட்டபாடை

#195
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே

 மேல்

#196
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே

 மேல்

#197
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே

 மேல்

#198
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே

 மேல்

#199
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன்
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன்
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே

 மேல்

#200
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே

 மேல்

#201
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில்
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

 மேல்

#202
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே

 மேல்

#203
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன்
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே

 மேல்

#204
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள்
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும்
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே

 மேல்

#205
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன்
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே

 மேல்

 20. திருவீழிமிழலை : திருவிராகம் : பண் - நட்டபாடை

#206
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே

 மேல்

#207
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே

 மேல்

#208
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே

 மேல்

#209
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே

 மேல்

#210
அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே

 மேல்

#211
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே

 மேல்

#212
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல்
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே

 மேல்

#213
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே

 மேல்

#214
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே

 மேல்

#215
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர்
திகழ் துவர் உடை உடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே

 மேல்

#216
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும்
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே

 மேல்

 21. திருச்சிவபுரம் : திருவிராகம் : பண் - நட்டபாடை

#217
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே

 மேல்

#218
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே

 மேல்

#219
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே

 மேல்

#220
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே

 மேல்

#221
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே

 மேல்

#222
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே

 மேல்

#223
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே

 மேல்

#224
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே

 மேல்

#225
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே

 மேல்

#226
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே

 மேல்

#227
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர்
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள்
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே

 மேல்

 22. திருமறைக்காடு : திருவிராகம் : பண் - நட்டபாடை

#228
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#229
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன்
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர்
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#230
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#231
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#232
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#233
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம்
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#234
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#235
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#236
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#237
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம்
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே

 மேல்

#238
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே

 மேல்

 23. திருக்கோலக்கா : பண் - தக்கராகம்

#239
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கை கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என்-கொலோ

 மேல்

#240
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலா
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே

 மேல்

#241
பூண் நல் பொறி கொள் அரவம் புன் சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாண பாடி மறை வல்லானையே
பேண பறையும் பிணிகள் ஆனவே

 மேல்

#242
தழு கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான்
குழு கொள் பூத படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே

 மேல்

#243
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை-தன்
குயில் ஆர் சோலை கோலக்காவையே
பயிலா நிற்க பறையும் பாவமே

 மேல்

#244
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே

 மேல்

#245
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம்
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே

 மேல்

#246
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே

 மேல்

#247
நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே

 மேல்

#248
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர் தோய் உரு இலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா
பற்றி பரவ பறையும் பாவமே

 மேல்

#249
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே

 மேல்

 24. சீகாழி : பண் - தக்கராகம்

#250
பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா
காவாய் என நின்று ஏத்தும் காழியார்
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே

 மேல்

#251
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி
கந்த மாலை கொடு சேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே

 மேல்

#252
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கான மான் கை கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே

 மேல்

#253
மாணா வென்றி காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே

 மேல்

#254
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல்
காடு ஏறி சங்கு ஈனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே

 மேல்

#255
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட
கங்கை புனைந்த சடையார் காழியார்
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே

 மேல்

#256
கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே

 மேல்

#257
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடி கொள் நீறு பூசும் புனிதரே

 மேல்

#258
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றி காழியார்
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுக குமைத்த குழகரே

 மேல்

#259
பெருக்க பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே

 மேல்

#260
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழ பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே

 மேல்

 25. திருச்செம்பொன்பள்ளி : பண் - தக்கராகம்

#261
மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய்
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும் பாவமே

 மேல்

#262
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகமாய்
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை
சேராதவர் மேல் சேரும் வினைகளே

 மேல்

#263
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே

 மேல்

#264
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகமாய்
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே

 மேல்

#265
மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே

 மேல்

#266
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே

 மேல்

#267
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே

 மேல்

#268
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே

 மேல்

#269
கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே

 மேல்

#270
மாசு ஆர் உடம்பர் மண்டை தேரரும்
பேசா வண்ணம் பேசி திரியவே
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே

 மேல்

#271
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும்
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே

 மேல்

 26. திருப்புத்தூர் : பண் - தக்கராகம்

#272
வெம் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்
கங்கை தங்கும் முடியார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே

 மேல்

#273
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே

 மேல்

#274
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்
தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே

 மேல்

#275
நாற விண்ட நறு மா மலர் கவ்வி
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே

 மேல்

#276
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்
பசை விளங்க படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே

 மேல்

#277
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே

 மேல்

#278
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே

 மேல்

#279
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே

 மேல்

#280
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர்
பெருகி வாழும் பெருமான் அவன் போலும்
பிரமன் மாலும் அறியா பெரியோனே

 மேல்

#281
கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல்
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே

 மேல்

#282
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே

 மேல்

 27. திருப்புன்கூர் : பண் - தக்கராகம்

#283
முந்தி நின்ற வினைகள் அவை போக
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே

 மேல்

#284
மூவர் ஆய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே

 மேல்

#285
பங்கயங்கள் மலரும் பழனத்து
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே

 மேல்

#286
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலர் சேவடியாரே

 மேல்

#287
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரி புன் சடையாரே

 மேல்

#288
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே

 மேல்

#289
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே

 மேல்

#290
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே

 மேல்

#291
நாட வல்ல மலரான் மாலுமாய்
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே

 மேல்

#292
குண்டு முற்றி கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர்
கண்டு தொழு-மின் கபாலி வேடமே

 மேல்

#293
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே

 மேல்

 28. திருச்சோற்றுத்துறை : பண் - தக்கராகம்

#294
செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணை ஆக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#295
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர்
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#296
செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர்
கை கொள் வேலர் கழலர் கரி காடர்
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#297
பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர்
துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர்
மணி கொள் கண்டர் மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#298
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து
மறையும் ஓதி மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#299
துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#300
சாடி காலன் மாள தலைமாலை
சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம்
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#301
பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#302
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#303
கோது சாற்றி திரிவார் அமண் குண்டர்
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே

 மேல்

#304
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை
சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர்
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே

 மேல்

 29. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் - தக்கராகம்

#305
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்
சீர் உலாவும் மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே

 மேல்

#306
காடும் நாடும் கலக்க பலி நண்ணி
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ
வீடும் ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே

 மேல்

#307
கல்வியாளர் கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே

 மேல்

#308
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே

 மேல்

#309
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்
நண்பு உலாவும் மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே

 மேல்

#310
கூர் உலாவு படையான் விடை ஏறி
போர் உலாவு மழுவான் அனல் ஆடி
பேர் உலாவு பெருமான் நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே

 மேல்

#311
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர்
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே

 மேல்

#312
அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே

 மேல்

#313
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து மேல்
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே

 மேல்

#314
மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார்
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே

 மேல்

#315
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட பறையும் பாவமே

 மேல்

 30. திருப்புகலி : பண் - தக்கராகம்

#316
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே

 மேல்

#317
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே

 மேல்

#318
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன்
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே

 மேல்

#319
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே

 மேல்

#320
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே

 மேல்

#321
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே

 மேல்

#322
கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே

 மேல்

#323
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே

 மேல்

#324
மாண்டார் சுடலை பொடி பூசி மயானத்து
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம்
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே

 மேல்

#325
உடையார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே

 மேல்

#326
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன்
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே

 மேல்

 31. திருக்குரங்கணில்முட்டம் : பண் - தக்கராகம்

#327
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலர கயல் பாயும்
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே

 மேல்

#328
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம்
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே

 மேல்

#329
சூல படையான் விடையான் சுடு நீற்றான்
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன்
கோல பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே

 மேல்

#330
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே

 மேல்

#331
இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி
கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான்
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே

 மேல்

#332
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே

 மேல்

#333
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே

 மேல்

#334
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே

 மேல்

#335
வெறி ஆர் மலர் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே

 மேல்

#336
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்
குழு மின் சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே

 மேல்

#337
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே

 மேல்

 32. திருஇடைமருதூர் : பண் - தக்கராகம்

#338
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து
ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ

 மேல்

#339
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ

 மேல்

#340
வெண் கோவணம் கொண்டு ஒரு வெண் தலை ஏந்தி
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து
பொங்கா வரு காவிரி கோல கரை மேல்
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ

 மேல்

#341
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல்
வெந்த பொடி பூசிய வேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ

 மேல்

#342
வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய்
பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ

 மேல்

#343
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி
அன்பில் பிரியாதவளோடும் உடனாய்
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ

 மேல்

#344
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி
போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ

 மேல்

#345
பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த
ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ

 மேல்

#346
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன்
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ

 மேல்

#347
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த
வெறியா வரு காவிரி கோல கரை மேல்
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ

 மேல்

#348
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே

 மேல்

 33. திருஅன்பிலாலந்துறை : பண் - தக்கராகம்

#349
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம்
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#350
சடை ஆர் சதுரன் முதிரா மதி சூடி
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன்
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#351
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#352
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#353
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#354
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்
வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#355
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#356
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#357
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும்
பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#358
தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே

 மேல்

#359
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே

 மேல்

 34. சீகாழி : பண் - தக்கராகம்

#360
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்
கடல் ஆர் புடை சூழ் தரு காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே

 மேல்

#361
திரை ஆர் புனல் சூடிய செல்வன்
வரையார் மகளோடு மகிழ்ந்தான்
கரை ஆர் புனல் சூழ்தரு காழி
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே

 மேல்

#362
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்
கடி ஆர் பொழில் சூழ்தரு காழி
அடியார் அறியார் அவலமே

 மேல்

#363
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய்
களி ஆர் பொழில் சூழ்தரு காழி
எளிது ஆம் அது கண்டவர் இன்பே

 மேல்

#364
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்
முனி தான் உமையோடு முயங்கி
கனி ஆர் பொழில் சூழ்தரு காழி
இனிது ஆம் அது கண்டவர் ஈடே

 மேல்

#365
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான்மகளோடு மகிழ்ந்தான்
கலையார் தொழுது ஏத்திய காழி
தலையால் தொழுவார் தலையாரே

 மேல்

#366
திரு ஆர் சிலையால் எயில் எய்து
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி
மருவாதவர் வான் மருவாரே

 மேல்

#367
அரக்கன் வலி ஒல்க அடர்த்து
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்
சுரக்கும் புனல் சூழ்தரு காழி
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே

 மேல்

#368
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்
கரு நல் பரவை கமழ் காழி
மருவ பிரியும் வினை மாய்ந்தே

 மேல்

#369
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய்
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே

 மேல்

#370
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே

 மேல்

 35. திருவீழிமிழலை : பண் - தக்கராகம்

#371
அரை ஆர் விரி கோவண ஆடை
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான்
விரை ஆர் பொழில் வீழிமிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே

 மேல்

#372
புனைதல் புரி புன் சடை-தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்
வினை இல்லவர் வீழிமிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே

 மேல்

#373
அழ வல்லவர் ஆடியும் பாடி
எழ வல்லவர் எந்தை அடி மேல்
விழ வல்லவர் வீழிமிழலை
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே

 மேல்

#374
உரவம் புரி புன் சடை-தன் மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்
விரவும் பொழில் வீழிமிழலை
பரவும் அடியார் அடியாரே

 மேல்

#375
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில் வீழிமிழலை
உரிதா நினைவார் உயர்வாரே

 மேல்

#376
சடை ஆர் பிறையான் சரி பூத
படையான் கொடி மேலது ஒரு பைம் கண்
விடையான் உறை வீழிமிழலை
அடைவார் அடியார் அவர் தாமே

 மேல்

#377
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்
வெறி ஆர் பொழில் வீழிமிழலை
அறிவார் அவலம் அறியாரே

 மேல்

#378
உளையா வலி ஒல்க அரக்கன்
வளையா விரல் ஊன்றிய மைந்தன்
விளை ஆர் வயல் வீழிமிழலை
அளையா வருவார் அடியாரே

 மேல்

#379
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன் வீழிமிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே

 மேல்

#380
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை
விளங்கும் பொழில் வீழிமிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே

 மேல்

#381
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற
மிளிர் ஆர் பொழில் வீழிமிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே

 மேல்

 36. திருவையாறு : பண் - தக்கராகம்

#382
கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே

 மேல்

#383
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே

 மேல்

#384
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே

 மேல்

#385
சிறை கொண்ட புரம் அவை சிந்த
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே

 மேல்

#386
உமையாள் ஒரு பாகம் அது ஆக
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே

 மேல்

#387
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே

 மேல்

#388
வரம் ஒன்றிய மா மலரோன்-தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே

 மேல்

#389
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னி
திரை-தன்னொடு சேரும் ஐயாறே

 மேல்

#390
சங்க கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே

 மேல்

#391
துவர் ஆடையர் தோல் உடையார்கள்
கவர் வாய்மொழி காதல் செய்யாதே
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே

 மேல்

#392
கலை ஆர் கலி காழியர் மன்னன்
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை
சொலும் மாலை வல்லார் துயர் வீடே

 மேல்

 37. திருப்பனையூர் : பண் - தக்கராகம்

#393
அரவ சடை மேல் மதி மத்தம்
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவி பல தொண்டர்கள் நாளும்
பரவி பொலியும் பனையூரே

 மேல்

#394
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே

 மேல்

#395
அலரும் எறி செம் சடை-தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண
பலரும் பரவும் பனையூரே

 மேல்

#396
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ மன்னவர் ஏத்த
படியார் பணியும் பனையூரே

 மேல்

#397
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க
பறையார் ஒலி செய் பனையூரே

 மேல்

#398
அணியார் தொழ வல்லவர் ஏத்த
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே

 மேல்

#399
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான் விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன் ஒண் பல பூத
படையான் அவன் ஊர் பனையூரே

 மேல்

#400
இலகும் முடி பத்து உடையானை
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன் ஊர் பனையூரே

 மேல்

#401
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே

 மேல்

#402
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே

 மேல்

#403
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊரூர் நினைவார் உயர்வாரே

 மேல்

 38. திருமயிலாடுதுறை : பண் - தக்கராகம்

#404
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே

 மேல்

#405
உர வெம் கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே

 மேல்

#406
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே

 மேல்

#407
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல்
துஞ்சும் பிணி ஆயின தானே

 மேல்

#408
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே

 மேல்

#409
தொண்டர் இசை பாடியும் கூடி
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத
வண்டு ஆர் மயிலாடுதுறையே

 மேல்

#410
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே

 மேல்

#411
சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற
வரம் கொள் மயிலாடுதுறையே

 மேல்

#412
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்
கோலத்து அயனும் அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலை தீர் மயிலாடுதுறையே

 மேல்

#413
நின்று உண் சமணும் நெடும் தேரர்
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே

 மேல்

#414
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறை மேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே

 மேல்

 39. திருவேட்களம் : பண் - தக்கராகம்

#415
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே

 மேல்

#416
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார்
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே

 மேல்

#417
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே

 மேல்

#418
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே

 மேல்

#419
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே

 மேல்

#420
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர்
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே

 மேல்

#421
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார்
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார்
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே

 மேல்

#422
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே

 மேல்

#423
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே

 மேல்

#424
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே

 மேல்

#425
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே

 மேல்

 40. திருவாழ்கொளிபுத்தூர் : பண் - தக்கராகம்

#426
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம்

 மேல்

#427
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்

 மேல்

#428
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம்

 மேல்

#429
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம்

 மேல்

#430
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம்

 மேல்

#431
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம்

 மேல்

#432
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம்

 மேல்

#433
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம்

 மேல்

#434
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம்

 மேல்

#435
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம்

 மேல்

#436
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர்
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே

 மேல்

 41. திருப்பாம்புரம் : பண் - தக்கராகம்

#437
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர்
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர்
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே

 மேல்

#438
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே

 மேல்

#439
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான்
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும்
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே

 மேல்

#440
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான்
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே

 மேல்

#441
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர்
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே

 மேல்

#442
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர்
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே

 மேல்

#443
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள்
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே

 மேல்

#444
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல்
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே

 மேல்

#445
கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர்
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே

 மேல்

#446
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே

 மேல்

#447
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே

 மேல்

 42. திருப்பேணுபெருந்துறை : பண் - தக்கராகம்

#448
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர்
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே

 மேல்

#449
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே

 மேல்

#450
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே

 மேல்

#451
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே

 மேல்

#452
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார்
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல்
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே

 மேல்

#453
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர்
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம்
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே

 மேல்

#454
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான்
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே

 மேல்

#455
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே

 மேல்

#456
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின்
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன்
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே

 மேல்

#457
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே

 மேல்

#458
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே

 மேல்

 43. திருக்கற்குடி : பண் - தக்கராகம்

#459
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர்
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே

 மேல்

#460
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே

 மேல்

#461
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே

 மேல்

#462
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே

 மேல்

#463
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே

 மேல்

#464
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே

 மேல்

#465
மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார்
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே

 மேல்

#466
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ்
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய்
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே

 மேல்

#467
தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல்
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே

 மேல்

#468
மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும்
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார்
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே

 மேல்

#469
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே

 மேல்

 44. திருப்பாச்சிலாச்சிரமம் : பண் - தக்கராகம்

#470
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே

 மேல்

#471
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே

 மேல்

#472
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல்
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே

 மேல்

#473
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே

 மேல்

#474
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே

 மேல்

#475
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே

 மேல்

#476
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே

 மேல்

#477
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே

 மேல்

#478
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே

 மேல்

#479
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே

 மேல்

#480
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே

 மேல்

 45. திருஆலங்காடு : பண் - தக்கராகம்

#481
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#482
கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#483
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார்
கொந்து அண் பொழில் சோலை அரவின் தோன்றி கோடல் பூத்த
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#484
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#485
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும்
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#486
பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார்
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#487
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#488
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#489
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள்
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும்
தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#490
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#491
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும்
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும்
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

 மேல்

#492
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே

 மேல்

 46. திருஅதிகைவீராட்டானம் : பண் - தக்கராகம்

#493
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி
கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம்
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#494
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கை
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி
சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#495
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#496
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#497
கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள்
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#498
துளங்கும் சுடர் அங்கை துதைய விளையாடி
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#499
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக
கீதம் உமை பாட கெடில வடபக்கம்
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#500
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட
ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள்செய்து அதிகையுள்
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#501
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார்
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#502
அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே

 மேல்

#503
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே

 மேல்

 47. திருச்சிரபுரம் : பண் - பழந்தக்கராகம்

#504
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய்
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே

 மேல்

#505
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய்
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார்
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே

 மேல்

#506
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய்
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே

 மேல்

#507
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய்
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே

 மேல்

#508
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே

 மேல்

#509
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய்
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே

 மேல்

#510
குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே

 மேல்

#511
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால்
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும்
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே

 மேல்

#512
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே

 மேல்

#513
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம்
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே

 மேல்

#514
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே

 மேல்

 48. திருச்சேய்ஞலூர் : பண் - பழந்தக்கராகம்

#515
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#516
நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#517
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#518
வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின்
நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#519
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய்
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#520
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால் களிற்று கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#521
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு
தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#522
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#523
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#524
மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய்
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே

 மேல்

#525
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன்
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே

 மேல்

 49. திருநள்ளாறு : பண் - பழந்தக்கராகம்

#526
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#527
தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன்
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#528
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#529
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#530
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம்
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#531
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#532
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#533
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால்
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய்
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#534
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#535
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின்
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே

 மேல்

#536
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே

 மேல்

 50. திருவலிவலம் : பண் - பழந்தக்கராகம்

#537
ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

 மேல்

#538
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம்
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர்
தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே

 மேல்

#539
பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை
விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம்
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே

 மேல்

#540
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

 மேல்

#541
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன்
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

 மேல்

#542
புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும்
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே

 மேல்

#543
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

 மேல்

#544
நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே

 மேல்

#545
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

 மேல்

#546
பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலை
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே

 மேல்

#547
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே

 மேல்

 51. திருச்சோபுரம் : பண் - பழந்தக்கராகம்

#548
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம்
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை
தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே

 மேல்

#549
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம்
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே

 மேல்

#550
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம்
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே

 மேல்

#551
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம்
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே

 மேல்

#552
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே

 மேல்

#553
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன்
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம்
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே

 மேல்

#554
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம்
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே

 மேல்

#555
விலங்கல் ஒன்று வெம் சிலையா கொண்டு விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம்
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே

 மேல்

#556
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும்
தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே

 மேல்

#557
புத்தரோடு புன் சமணர் பொய் உரையே உரைத்து
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம்
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல்
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே

 மேல்

#558
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான்
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே

 மேல்

 52. திருநெடுங்களம் : பண் - பழந்தக்கராகம்

#559
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#560
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#561
நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#562
மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#563
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#564
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய்
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#565
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#566
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#567
வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#568
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும்
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

 மேல்

#569
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே

 மேல்

 53. திருமுதுகுன்றம் : பண் - பழந்தக்கராகம்

#570
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

 மேல்

#571
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார்
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே

 மேல்

#572
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில்
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே

 மேல்

#573
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்
நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும்
ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே

 மேல்

#574
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே

 மேல்

#575
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே

 மேல்

#576
மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள்
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே

 மேல்

#577
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே

 மேல்

#578
உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின்
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே

 மேல்

#579
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன்

 மேல்

 54. திருவோத்தூர் : பண் - பழந்தக்கராகம்

#580
பூ தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை
கூத்தீர் உம குணங்களே

 மேல்

#581
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே புள்ளிமான் உரி
உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
சடையீரே உம தாளே

 மேல்

#582
உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்
ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர்
கள்வீரே உம காதலே

 மேல்

#583
தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே

 மேல்

#584
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை
உழை ஆள்வீர் திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே

 மேல்

#585
மிக்கார் வந்து விரும்பி பலி இட
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ திரு ஓத்தூர்
நக்கீரே அருள் நல்குமே

 மேல்

#586
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே

 மேல்

#587
என்தான் இ மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே

 மேல்

#588
நன்றா நான்மறையானொடு மாலுமாய்
சென்றார் போலும் திசை எலாம்
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர்
நின்றீரே உமை நேடியே

 மேல்

#589
கார் அமண் கலிங்க துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்-மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்
சீரவன் கழல் சேர்-மினே

 மேல்

#590
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே

 மேல்

 55. திருமாற்பேறு : பண் - பழந்தக்கராகம்

#591
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில்
மாறு இலா மணி_கண்டரே

 மேல்

#592
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை
அடைவார் ஆம் அடிகள் என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே உமை உள்கியே

 மேல்

#593
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின் அடியார்களே

 மேல்

#594
சால மா மலர் கொண்டு சரண் என்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட நின்னையே

 மேல்

#595
மாறு இலா மணியே என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே என்றும் நின்னையே

 மேல்

#596
உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை
பரவாதார் இல்லை நாள்களும்
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே அருள் நல்கிடே

 மேல்

#597
அரசு அளிக்கும் அரக்கன் அவன்-தனை
உரை கெடுத்து அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை
பரவிட கெடும் பாவமே

 மேல்

#598
இருவர் தேவரும் தேடி திரிந்து இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன்
மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை
பரவுவார் வினை பாறுமே

 மேல்

#599
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும்
நீசர்-தம் உரை கொள்ளேலும்
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின்
ஈசன் என்று எடுத்து ஏத்துமே

 மேல்

#600
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே வினை பாறுமே

 மேல்

 56. திருப்பாற்றுறை : பண் - பழந்தக்கராகம்

#601
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்
சீர் ஆர் சிந்தை செல செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார் ஆர் ஆதி முதல்வரே

 மேல்

#602
நல்லாரும் அவர் தீயர் எனப்படும்
சொல்லார் நல் மலர் சூடினார்
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே

 மேல்

#603
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்
எண்ணார் வந்து என் எழில் கொண்டார்
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை
யுள் நாள்நாளும் உறைவரே

 மேல்

#604
பூவும் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை
ஓ என் சிந்தை ஒருவரே

 மேல்

#605
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது
ஆகம் பொன் நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே

 மேல்

#606
போது பொன் திகழ் கொன்றை புனை முடி
நாதர் வந்து என் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே

 மேல்

#607
வாடல் வெண் தலை சூடினர் மால் விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே

 மேல்

#608
வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்து என் எழில் கொண்டார்
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே

 மேல்

#609
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார்
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண் பிறை மைந்தரே

 மேல்

#610
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்து என் நன் நலம் வௌவினார்
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே

 மேல்

#611
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனை
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடி பரவுமே

 மேல்

 57. திருவேற்காடு : பண் - பழந்தக்கராகம்

#612
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில்
தெள்ளியார் அவர் தேவரே

 மேல்

#613
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இ உலகினில்
சேடர் ஆகிய செல்வரே

 மேல்

#614
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே

 மேல்

#615
ஆழ் கடல் என கங்கை கரந்தவன்
வீழ் சடையினன் வேற்காடு
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட
பாழ்படும் அவர் பாவமே

 மேல்

#616
காட்டினானும் அயர்த்திட காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே

 மேல்

#617
தோலினால் உடை மேவ வல்லான் சுடர்
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே

 மேல்

#618
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே

 மேல்

#619
மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே

 மேல்

#620
பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினை-மினே

 மேல்

#621
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே

 மேல்

#622
விண்ட மாம் பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல் பேணி
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட குணம் ஆமே

 மேல்

 58. திருக்கரவீரம் : பண் - பழந்தக்கராகம்

#623
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மா மணி போல் கண்டம்
கரியவன் திகழும் கரவீரத்து எம்
பெரியவன் கழல் பேணவே

 மேல்

#624
தங்குமோ வினை தாழ் சடை மேலவன்
திங்களோடு உடன் சூடிய
கங்கையான் திகழும் கரவீரத்து எம்
சங்கரன் கழல் சாரவே

 மேல்

#625
ஏதம் வந்து அடையா இனி நல்லன
பூதம் பல் படை ஆக்கிய
காதலான் திகழும் கரவீரத்து எம்
நாதன் பாதம் நணுகவே

 மேல்

#626
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மா மணி போல் கண்டம்
கறையவன் திகழும் கரவீரத்து எம்
இறையவன் கழல் ஏத்தவே

 மேல்

#627
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன்
விண்ணின் ஆர் மதில் எய்த முக்
கண்ணினான் உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே

 மேல்

#628
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை
அழலினார் அனல் ஏந்திய
கழலினார் உறையும் கரவீரத்தை
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே

 மேல்

#629
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர்
கண்டனார் உறையும் கரவீரத்து
தொண்டர் மேல் துயர் தூரமே

 மேல்

#630
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற
சின வல் ஆண்மை செகுத்தவன்
கனலவன் உறைகின்ற கரவீரம்
என வல்லார்க்கு இடர் இல்லையே

 மேல்

#631
வெள்ள தாமரையானொடு மாலுமாய்
தெள்ள தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ள தான் வினை ஓயுமே

 மேல்

#632
செடி அமணொடு சீவரத்தார் அவர்
கொடிய வெவ் உரை கொள்ளேன்-மின்
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை அல்லலே

 மேல்

#633
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால் தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை பாவமே

 மேல்

 59. திருத்தூங்கானைமாடம் : பண் - பழந்தக்கராகம்

#634
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#635
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#636
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#637
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர்
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#638
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால்
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே

 மேல்

#639
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#640
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#641
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும்
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#642
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#643
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும்
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே

 மேல்

#644
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய்
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே

 மேல்

 60. திருத்தோணிபுரம் : பண் - பழந்தக்கராகம்

#645
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே

 மேல்

#646
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே

 மேல்

#647
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே

 மேல்

#648
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர்
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும்
ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே

 மேல்

#649
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள்
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே

 மேல்

#650
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத
கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே

 மேல்

#651
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை
அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர்
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும்
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே

 மேல்

#652
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே

 மேல்

#653
நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன்
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன்
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே

 மேல்

#654
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால்
முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே

 மேல்

#655
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம்
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே

 மேல்

 61. திருச்செங்காட்டங்குடி : பண் - பழந்தக்கராகம்

#656
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும்
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்
கறை கொண்ட கண்டத்தான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#657
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்
கார் ஏற்ற கொன்றையான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#658
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர்
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும்
கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#659
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்
கங்கை சேர் வார் சடையான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#660
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#661
நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான்
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான்
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய
கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#662
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#663
தோடு உடையான் குழை உடையான் அரக்கன்-தன் தோள் அடர்த்த
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#664
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான்
தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#665
செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே

 மேல்

#666
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின்
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன்
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே

 மேல்

 62. திருக்கோளிலி : பண் - பழந்தக்கராகம்

#667
நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி
கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே

 மேல்

#668
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே

 மேல்

#669
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே

 மேல்

#670
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ
தந்தை-தனை சாடுதலும் சண்டீசன் என்று அருளி
கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே

 மேல்

#671
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால்
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான்
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே

 மேல்

#672
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே

 மேல்

#673
கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான்
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான்
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில்
கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே

 மேல்

#674
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே

 மேல்

#675
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே

 மேல்

#676
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள்
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே

 மேல்

#677
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே

 மேல்

 63. திருப்பிரமபுரம் : பண் - தக்கேசி

#678
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே

 மேல்

#679
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே

 மேல்

#680
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே

 மேல்

#681
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன்
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே

 மேல்

#682
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன்
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே

 மேல்

#683
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே

 மேல்

#684
முலை யாழ் கெழும மொந்தை கொட்ட முன் கடை மாட்டு அயலே
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே

 மேல்

#685
எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே

 மேல்

#686
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும்
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே

 மேல்

#687
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே

 மேல்

#688
கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே

 மேல்

#689
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே

 மேல்

 64. திருப்பூவண: பண் - தக்கேசி

#690
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல்
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே

 மேல்

#691
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே

 மேல்

#692
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய்
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர்
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே

 மேல்

#693
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன்
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம்
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே

 மேல்

#694
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே

 மேல்

#695
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே

 மேல்

#696
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே

 மேல்

#697
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே

 மேல்

#698
பொய்யா வேத நாவினானும் பூமகள் காதலனும்
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே

 மேல்

#699
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே

 மேல்

#700
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால்
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே

 மேல்

 65. காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லவனீச்சரம் : பண் - தக்கேசி

#701
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே

 மேல்

#702
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம்
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே

 மேல்

#703
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே

 மேல்

#704
தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம்
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே

 மேல்

#705
மை சேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே

 மேல்

#706
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே

 மேல்

#707
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே

 மேல்

#708
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே

 மேல்

#709
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால்
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே

 மேல்

#710
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே

 மேல்

#711
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே

 மேல்

 66. திருச்சண்பைநகர் : பண் - தக்கேசி

#712
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே

 மேல்

#713
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே

 மேல்

#714
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே

 மேல்

#715
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால்
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே

 மேல்

#716
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே

 மேல்

#717
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே

 மேல்

#718
இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின்
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால்
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே

 மேல்

#719
மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும்
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே

 மேல்

#720
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின்
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர்
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே

 மேல்

#721
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே

 மேல்

 67. திருப்பழனம் : பண் - தக்கேசி

#722
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

 மேல்

#723
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும்
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே

 மேல்

#724
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன்
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே

 மேல்

#725
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

 மேல்

#726
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே

 மேல்

#727
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார்
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின்
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே

 மேல்

#728
பொய்யா மொழியார் முறையால் ஏத்தி புகழ்வார் திருமேனி
செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார்
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே

 மேல்

#729
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும்
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே

 மேல்

#730
கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண்
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே

 மேல்

#731
கண் தான் கழுவா முன்னே ஓடி கலவை கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே

 மேல்

#732
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே

 மேல்

 68. திருக்கயிலாயம் : பண் - தக்கேசி

#733
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர்
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே

 மேல்

#734
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே

 மேல்

#735
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும்
தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே

 மேல்

#736
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன்
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே

 மேல்

#737
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார்
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே

 மேல்

#738
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே

 மேல்

#739
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால்
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே

 மேல்

#740
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம்
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே

 மேல்

#741
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர்
பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே

 மேல்

#742
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன்
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே

 மேல்

 69. திருவண்ணாமலை : பண் - தக்கேசி

#743
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#744
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும்
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே

 மேல்

#745
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்
ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும்
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண்
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#746
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம்
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#747
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#748
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#749
வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல்
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#750
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே

 மேல்

#751
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே

 மேல்

#752
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள்
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே

 மேல்

#753
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே

 மேல்

 70. திருஈங்கோய்மலை : பண் - தக்கேசி

#754
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே

 மேல்

#755
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே

 மேல்

#756
கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார்
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே

 மேல்

#757
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும்
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே

 மேல்

#758
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார்
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும்
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே

 மேல்

#759
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

 மேல்

#760
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

 மேல்

#761
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால்
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

 மேல்

#762
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே

 மேல்

#763
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும்
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே

 மேல்

#764
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள்
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே

 மேல்

 71. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் - தக்கேசி

#765
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#766
பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#767
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல்
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#768
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#769
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#770
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம்
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#771
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர்
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#772
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#773
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#774
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்
கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே

 மேல்

#775
குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே

 மேல்

 72. திருக்குடந்தைக்காரோணம் : பண் - தக்கேசி

#776
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண்
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில்
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே

 மேல்

#777
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த
கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும்
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே

 மேல்

#778
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும்
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார்
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே

 மேல்

#779
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும்
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில்
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே

 மேல்

#780
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே

 மேல்

#781
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே

 மேல்

#782
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில்
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே

 மேல்

#783
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும்
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும்
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே

 மேல்

#784
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய்
அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே

 மேல்

#785
நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும்
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தை காரோணத்தாரே

 மேல்

#786
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன்
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே

 மேல்

 73. திருக்கானூர் : பண் - தக்கேசி

#787
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே

 மேல்

#788
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே

 மேல்

#789
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார்
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார்
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே

 மேல்

#790
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான்
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே

 மேல்

#791
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார்
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே

 மேல்

#792
முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய்
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே

 மேல்

#793
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர்
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே

 மேல்

#794
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே

 மேல்

#795
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்
சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே

 மேல்

#796
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும்
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே

 மேல்

#797
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே

 மேல்

 74. திருப்புறவம் : பண் - தக்கேசி

#798
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#799
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம்
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால்
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#800
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#801
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும்
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#802
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும்
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#803
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய்
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#804
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#805
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#806
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில்
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#807
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர்
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

 மேல்

#808
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே

 மேல்

 75. திருவெங்குரு : பண் - குறிஞ்சி

#809
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன்
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான்
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#810
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#811
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான்
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#812
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல்
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#813
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#814
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும்
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#815
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#816
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர்
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#817
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண்
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#818
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே

 மேல்

#819
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே

 மேல்

 76. திருஇலம்பையங்கோட்டூர் : பண் - குறிஞ்சி

#820
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம்
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும்
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#821
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும்
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#822
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும்
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும்
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#823
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல்
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன்
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#824
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#825
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர்
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன்
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#826
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும்
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#827
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில்
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல்
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#828
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#829
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள்
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான்
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும்
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே

 மேல்

#830
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும்
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே

 மேல்

 77. திருஅச்சிறுபாக்கம் : பண் - குறிஞ்சி

#831
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர்
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#832
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார்
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#833
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#834
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும்
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார்
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#835
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும்
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும்
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#836
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#837
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#838
கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#839
நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#840
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல்
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

 மேல்

#841
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே

 மேல்

 78. திருஇடைச்சுரம் : பண் - குறிஞ்சி

#842
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும்
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#843
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார்
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#844
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#845
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர்
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும்
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#846
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர்
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#847
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#848
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர்
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#849
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#850
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும்
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர்
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#851
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர்
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

 மேல்

#852
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன்
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே

 மேல்

 79. திருக்கழுமலம் : பண் - குறிஞ்சி

#853
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர்
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#854
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர்
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#855
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர்
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர்
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#856
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#857
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர்
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#858
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில்
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#859
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#860
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள்
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும்
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#861
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில்
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#862
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர்
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே

 மேல்

#863
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல்
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின்
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல்
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே

 மேல்

 80. கோயில்: பண் - குறிஞ்சி

#864
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரை பற்றா பாவமே

 மேல்

#865
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே

 மேல்

#866
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த
செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே

 மேல்

#867
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே

 மேல்

#868
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே

 மேல்

#869
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

 மேல்

#870
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே

 மேல்

#871
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே

 மேல்

#872
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும்
காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே

 மேல்

#873
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும்
முட்டை கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே

 மேல்

#874
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய
சூல படையானை சொன்ன தமிழ் மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே

 மேல்

 81. சீகாழி: பண் - குறிஞ்சி

#875
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம்
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே

 மேல்

#876
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம்
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே

 மேல்

#877
ஆல கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தை
சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே

 மேல்

#878
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும்
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே

 மேல்

#879
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன்
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழி நகர்தானே

 மேல்

#880
தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள்
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள்
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே

 மேல்

#881
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன்
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே

 மேல்

 82. திருவீழிமிழலை : பண் - குறிஞ்சி

#882
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில்
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே

 மேல்

#883
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்
கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே

 மேல்

#884
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்
மயிலும் மட மானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழிமிழலையே

 மேல்

#885
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே

 மேல்

#886
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே

 மேல்

#887
மால் ஆயிரம் கொண்டு மலர் கண் இட ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே

 மேல்

#888
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே

 மேல்

#889
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில்
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே

 மேல்

#890
கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில்
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே

 மேல்

#891
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழிமிழலையே

 மேல்

#892
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள்
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே

 மேல்

 83. திருஅம்பர்மாகாளம்: பண் - குறிஞ்சி

#893
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும்
சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே

 மேல்

#894
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே

 மேல்

#895
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே

 மேல்

#896
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே

 மேல்

#897
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும்
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே

 மேல்

#898
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே

 மேல்

#899
மிளிரும் அரவோடு வெள்ளை பிறை சூடி
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த
தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே

 மேல்

#900
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும்
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே

 மேல்

#901
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே

 மேல்

#902
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார்
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே

 மேல்

#903
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர்
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே

 மேல்

 84. திருநாகைக்காரோணம்: பண் - குறிஞ்சி

#904
புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#905
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான்
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#906
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான்
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#907
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#908
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#909
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த
கானல் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#910
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#911
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள்
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான்
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#912
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த
கரு மால் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#913
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற
அல்லார் அலர் தூற்ற அடியார்க்கு அருள்செய்வான்
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே

 மேல்

#914
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே

 மேல்

 85. திருநல்லம் : பண் - குறிஞ்சி

#915
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#916
தக்கன் பெரு வேள்வி-தன்னில் அமரரை
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#917
அந்தி மதியோடும் அரவ சடை தாழ
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#918
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

 மேல்

#919
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#920
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும்
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#921
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும்
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

 மேல்

#922
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு
கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே

 மேல்

#923
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே

 மேல்

#924
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர்
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறி கொள் அரவு ஆர்த்தான் பொல்லா வினை தீர்க்கும்
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

 மேல்

#925
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

 மேல்

 86. திருநல்லூர் : பண் - குறிஞ்சி

#926
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே

 மேல்

#927
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும்
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே

 மேல்

#928
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை
நாடும் நெறியானை நல்லூர் பெருமானை
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

 மேல்

#929
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை
காத்த நெறியானை கைகூப்பி தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே

 மேல்

#930
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ
நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானை
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய் புகழ திரிவாரே

 மேல்

#931
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே

 மேல்

#932
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே

 மேல்

#933
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன்
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே

 மேல்

#934
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே

 மேல்

#935
பிச்சக்குடை நீழல் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே

 மேல்

#936
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன்
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே

 மேல்

 87. திருவடுகூர் : பண் - குறிஞ்சி

#937
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர்
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர்
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே

 மேல்

#938
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#939
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல்
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#940
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#941
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#942
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர்
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#943
நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார்
கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#944
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார்
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#945
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே

 மேல்

#946
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே

 மேல்

#947
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே

 மேல்

 88. திருஆப்பனூர் : பண் - குறிஞ்சி

#948
முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#949
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர்
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#950
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
பெரிதும் முனிந்து உகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#951
பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான்
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#952
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்
அகர_முதலானை அணி ஆப்பனூரானை
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#953
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#954
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#955
கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளி வெண் பிறை சூடி
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#956
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல்
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#957
செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள்
பொய்யர் புறம்கூற புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானை
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே

 மேல்

#958
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே

 மேல்

 89. திருஎருக்கத்தம்புலியூர் : பண் - குறிஞ்சி

#959
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை
உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை
சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில்
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே

 மேல்

#960
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய்
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில்
கலையான் அடி ஏத்த கருதா வினைதானே

 மேல்

#961
விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே

 மேல்

#962
அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான் விடை ஏறி
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே

 மேல்

#963
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே

 மேல்

#964
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு
தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே

 மேல்

#965
ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டு
தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே

 மேல்

#966
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே

 மேல்

#967
புத்தர் அருகர்-தம் பொய்கள் புறம் போக்கி
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும்
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய
அத்தன் அறவன்-தன் அடியே அடைவோமே

 மேல்

#968
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன்
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே

 மேல்

 90. திருப்பிரம்மபுரம் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#969
அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி உய்ம்-மினே

 மேல்

#970
காண உள்குவீர் வேணுநல்புர
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே

 மேல்

#971
நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே

 மேல்

#972
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே

 மேல்

#973
வாள் நிலா சடை தோணிவண்புரத்து
ஆணி நன் பொனை காணு-மின்களே

 மேல்

#974
பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே

 மேல்

#975
கரிய கண்டனை சிரபுரத்துள் எம்
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே

 மேல்

#976
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே

 மேல்

#977
தென்றில் அரக்கனை குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா நின்று நினை-மினே

 மேல்

#978
அயனும் மாலுமாய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே

 மேல்

#979
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே

 மேல்

#980
தொழு மனத்தவர் கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே

 மேல்

 91. திருஆரூர் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#981
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே

 மேல்

#982
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே

 மேல்

#983
துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர்
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே

 மேல்

#984
உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரை
கையினால் தொழ நையும் வினைதானே

 மேல்

#985
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே

 மேல்

#986
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர்
வாச மலர் தூவ நேசம் ஆகுமே

 மேல்

#987
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர்
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே

 மேல்

#988
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே

 மேல்

#989
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே

 மேல்

#990
கடு கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே

 மேல்

#991
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே

 மேல்

 92. திருவீழிமிழலை : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#992
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே

 மேல்

#993
இறைவர் ஆயினீர் மறை கொள் மிழலையீர்
கறை கொள் காசினை முறைமை நல்குமே

 மேல்

#994
செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர்
பை கொள் அரவினீர் உய்ய நல்குமே

 மேல்

#995
நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே

 மேல்

#996
காமன் வேவ ஓர் தூம கண்ணினீர்
நாம மிழலையீர் சேமம் நல்குமே

 மேல்

#997
பிணி கொள் சடையினீர் மணி கொள் மிடறினீர்
அணி கொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே

 மேல்

#998
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்-மினே

 மேல்

#999
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே

 மேல்

#1000
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே

 மேல்

#1001
பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறி கொள் மிழலையீர் பிரிவு அது அரியதே

 மேல்

#1002
காழி மா நகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே

 மேல்

 93. திருமுதுகுன்றம் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#1003
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே

 மேல்

#1004
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே

 மேல்

#1005
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெட நின்று
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே

 மேல்

#1006
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாச மலர் தூவ பாச வினை போமே

 மேல்

#1007
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர்
பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே

 மேல்

#1008
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே

 மேல்

#1009
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படை ஆயின சூழ உடையார் உலகமே

 மேல்

#1010
பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே

 மேல்

#1011
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே

 மேல்

#1012
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே

 மேல்

#1013
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே

 மேல்

 94. திருஆலவாய் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#1014
நீல மா மிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே

 மேல்

#1015
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே

 மேல்

#1016
ஆலநீழலார் ஆலவாயிலார்
காலகாலனார் பால் அது ஆமினே

 மேல்

#1017
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே

 மேல்

#1018
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே மனம் நாடி வாழ்-மினே

 மேல்

#1019
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே

 மேல்

#1020
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே

 மேல்

#1021
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே

 மேல்

#1022
அருவன் ஆலவாய் மருவினான்-தனை
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே

 மேல்

#1023
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே

 மேல்

#1024
அடிகள் ஆலவாய் படி கொள் சம்பந்தன்
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே

 மேல்

 95. திருஇடைமருதூர் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#1025
தோடு ஓர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடும் மருதனே

 மேல்

#1026
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர்
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே

 மேல்

#1027
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே

 மேல்

#1028
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே

 மேல்

#1029
பந்த விடை ஏறும் எந்தை மருதரை
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே

 மேல்

#1030
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே

 மேல்

#1031
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே

 மேல்

#1032
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே

 மேல்

#1033
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே

 மேல்

#1034
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே

 மேல்

#1035
கருது சம்பந்தன் மருதர் அடி பாடி
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே

 மேல்

 96. திருஅன்னியூர் : திருவிருக்குக்குறள் : பண் - குறிஞ்சி

#1036
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை
அன்னியூர் அமர் மன்னு சோதியே

 மேல்

#1037
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர்
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே

 மேல்

#1038
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே

 மேல்

#1039
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே

 மேல்

#1040
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே

 மேல்

#1041
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே

 மேல்

#1042
அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர்
எந்தையே என பந்தம் நீங்குமே

 மேல்

#1043
தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே

 மேல்

#1044
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே

 மேல்

#1045
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே

 மேல்

#1046
பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே

 மேல்

 97. திருப்புறவம் : பண் - தக்கேசி

#1047
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே

 மேல்

#1048
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும்
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே

 மேல்

#1049
வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர்
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும்
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவமே

 மேல்

#1050
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும்
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே

 மேல்

#1051
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும்
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும்
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே

 மேல்

#1052
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே

 மேல்

#1053
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே

 மேல்

#1054
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில்
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே

 மேல்

#1055
மீ திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே

 மேல்

#1056
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான்
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர்
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே

 மேல்

#1057
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன்
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே

 மேல்

 98. திருச்சிராப்பள்ளி : பண் - குறிஞ்சி

#1058
நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளி
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே

 மேல்

#1059
கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான்
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே

 மேல்

#1060
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும்
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

 மேல்

#1061
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே

 மேல்

#1062
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே

 மேல்

#1063
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில்
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே

 மேல்

#1064
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே

 மேல்

#1065
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன்
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால்
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

 மேல்

#1066
அரப்பள்ளியானும் அலர் உறைவானும் அறியாமை
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

 மேல்

#1067
நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே

 மேல்

#1068
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே

 மேல்

 99. திருக்குற்றாலம் : பண் - குறிஞ்சி

#1069
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள்

 மேல்

#1070
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம்
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய்
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள்

 மேல்

#1071
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள்

 மேல்

#1072
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள்

 மேல்

#1073
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம்
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர்

 மேல்

#1074
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம்
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள்

 மேல்

#1075
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள்

 மேல்

#1076
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள்

 மேல்

#1077
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று
குரவம்பாவை முருகு அமர் சோலை குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள்

 மேல்

#1078
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள்

 மேல்

#1079
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன்
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே

 மேல்

 100. திருப்பரங்குன்றம் : பண் - குறிஞ்சி

#1080
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில்
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம்
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே

 மேல்

#1081
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே

 மேல்

#1082
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே

 மேல்

#1083
வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம்
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம்
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே

 மேல்

#1084
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே

 மேல்

#1085
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில்
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே

 மேல்

#1086
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே

 மேல்

#1087
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே

 மேல்

#1088
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே

 மேல்

#1089
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே

 மேல்

#1090
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன்
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே

 மேல்

 101. திருக்கண்ணார்கோவில் : பண் - குறிஞ்சி

#1091
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே

 மேல்

#1092
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே

 மேல்

#1093
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே

 மேல்

#1094
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம்
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே

 மேல்

#1095
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே

 மேல்

#1096
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும்
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே

 மேல்

#1097
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே

 மேல்

#1098
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால்
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே

 மேல்

#1099
செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே

 மேல்

#1100
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும்
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன்
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே

 மேல்

#1101
காமரு கண்ணார்கோயில் உளானை கடல் சூழ்ந்த
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன்
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன்
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே

 மேல்

 102. சீகாழி : பண் - குறிஞ்சி

#1102
உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே

 மேல்

#1103
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே
ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே

 மேல்

#1104
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே

 மேல்

#1105
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே

 மேல்

#1106
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே

 மேல்

#1107
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி
வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே

 மேல்

#1108
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே

 மேல்

#1109
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும்
மேவி பரவும் அரசே என்ன வினை போமே

 மேல்

#1110
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும்
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே

 மேல்

#1111
வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே

 மேல்

 103. திருக்கழுக்குன்றம் : பண் - குறிஞ்சி

#1112
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1113
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம்
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1114
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1115
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1116
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1117
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1118
ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின்
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1119
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும்
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம்
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1120
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

 மேல்

#1121
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே

 மேல்

 104. திருப்புகலி : பண் - குறிஞ்சி

#1122
ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான்
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே

 மேல்

#1123
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே

 மேல்

#1124
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன்
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே

 மேல்

#1125
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே

 மேல்

#1126
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர்
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே

 மேல்

#1127
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும்
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே

 மேல்

#1128
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள்
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம்
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே

 மேல்

#1129
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே

 மேல்

#1130
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம்
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே

 மேல்

#1131
வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே

 மேல்

#1132
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள்
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே

 மேல்

 105. திருஆரூர் : பண் - வியாழக்குறிஞ்சி

#1133
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே

 மேல்

#1134
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த
ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே

 மேல்

#1135
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும்
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே

 மேல்

#1136
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர்
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம்
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே

 மேல்

#1137
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே

 மேல்

#1138
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும்
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர்
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே

 மேல்

#1139
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான்
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே

 மேல்

#1140
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர்
புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே

 மேல்

#1141
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர்
தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே

 மேல்

#1142
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே

 மேல்

 106. திருஊறல் : பண் - வியாழக்குறிஞ்சி

#1143
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே

 மேல்

#1144
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம்
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1145
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும்
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம்
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1146
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1147
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1148
கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1149
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம்
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1150
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர்
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே

 மேல்

#1151
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல்
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே

 மேல்

 107. திருக்கொடிமாடச்செங்குன்றூர் : பண் - வியாழக்குறிஞ்சி

#1152
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே

 மேல்

#1153
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம்
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே

 மேல்

#1154
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும்
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே

 மேல்

#1155
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே

 மேல்

#1156
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில்
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே

 மேல்

#1157
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே

 மேல்

#1158
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே

 மேல்

#1159
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே

 மேல்

#1160
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே

 மேல்

#1161
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள்
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே

 மேல்

#1162
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே

 மேல்

 108. திருப்பாதாளீச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1163
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1164
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான்
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம்
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1165
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம்
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1166
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே

 மேல்

#1167
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1168
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும்
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1169
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ்
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான்
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1170
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1171
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1172
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே

 மேல்

#1173
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே

 மேல்

 109. திருச்சிரபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1174
வார் உறு வன முலை மங்கை பங்கன்
நீர் உறு சடைமுடி நிமலன் இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வள வயல் சிரபுரமே

 மேல்

#1175
அங்கமொடு அரு மறை அருள்புரிந்தான்
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே

 மேல்

#1176
பரிந்தவன் பல் முடி அமரர்க்கு ஆகி
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே

 மேல்

#1177
நீறு அணி மேனியன் நீள் மதியோடு
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர்
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வள வயல் சிரபுரமே

 மேல்

#1178
அரும் திறல் அவுணர்கள் அரண் அழிய
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடி விடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே

 மேல்

#1179
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன்
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன் வள நகர் சிரபுரமே

 மேல்

#1180
வான் அமர் மதியொடு மத்தம் சூடி
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மட மயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே

 மேல்

#1181
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய
கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள்
இறுத்தவன் இரும் சின காலனை முன்
செறுத்தவன் வள நகர் சிரபுரமே

 மேல்

#1182
வண்ண நல் மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய்
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல் மதில் அணி சிரபுரமே

 மேல்

#1183
வெற்று அரை உழல்பவர் விரி துகிலார்
கற்றிலர் அற உரை புறன் உரைக்க
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ
செற்றவன் வள நகர் சிரபுரமே

 மேல்

#1184
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண்
சிரபுர நகர் உறை சிவன் அடியை
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே

 மேல்

 110. திருஇடைமருதூர் : பண் - வியாழக்குறிஞ்சி

#1185
மருந்து அவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான்
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1186
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள்
கூற்றவன் கொல் புலி தோல் அசைத்த
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1187
படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன்
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்
இடைமருது இனிது உறை எம் இறையே

 மேல்

#1188
பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற
இணையிலி வள நகர் இடைமருதே

 மேல்

#1189
பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும்
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும்
கழலவன் கரி உரி போர்த்து உகந்த
எழிலவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1190
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட
இறையவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1191
நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர் கொன்றை அம் படர் சடையன்
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க
இனிது உறை வள நகர் இடைமருதே

 மேல்

#1192
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1193
பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்
வரி அரவு அணை மறி கடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பு அரிய
எரியவன் வள நகர் இடைமருதே

 மேல்

#1194
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தை-தன் வள நகர் இடைமருதே

 மேல்

#1195
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே

 மேல்

 111. திருக்கடைமுடி : பண் - வியாழக்குறிஞ்சி

#1196
அருத்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வள நகர் கடைமுடியே

 மேல்

#1197
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே

 மேல்

#1198
ஆல் இள மதியினொடு அரவு கங்கை
கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி
ஏல நன் மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே

 மேல்

#1199
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார்
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே

 மேல்

#1200
மறை அவன் உலகு அவன் மாயம் அவன்
பிறையவன் புனல் அவன் அனலும் அவன்
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம்
கறையவன் வள நகர் கடைமுடியே

 மேல்

#1201
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை
மடவரலாளை ஒர்பாகம் வைத்து
குட திசை மதி அது சூடு சென்னி
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே

 மேல்

#1202
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம்
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே

 மேல்

#1203
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே

 மேல்

#1204
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி அதன் அயல் காவிரியே

 மேல்

#1205
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை
எண்ணியகால் அவை இன்பம் அல்ல
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த
கண்_நுதல் வள நகர் கடைமுடியே

 மேல்

#1206
பொன் திகழ் காவிரி பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடி சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே

 மேல்

 112. திருச்சிவபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1207
இன் குரல் இசை கெழும் யாழ் முரல
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழம் காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே

 மேல்

#1208
அன்று அடல் காலனை பாலனுக்காய்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே

 மேல்

#1209
மலைமகள் மறுகிட மத கரியை
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே

 மேல்

#1210
மண் புனல் அனலொடு மாருதமும்
விண் புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே

 மேல்

#1211
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்
நாறு நன் குர விரி வண்டு கெண்டி
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே

 மேல்

#1212
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே

 மேல்

#1213
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே

 மேல்

#1214
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன்
முழு வலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே

 மேல்

#1215
சங்கு அளவிய கையன் சதுர்முகனும்
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகு-தொறும்
செம் கனி நுகர்தரு சிவபுரமே

 மேல்

#1216
மண்டையின் குண்டிகை மாசு தரும்
மிண்டரை விலக்கிய விமலன் நகர்
பண்டு அமர்தரு பழம் காவிரியின்
தெண் திரை பொருது எழு சிவபுரமே

 மேல்

#1217
சிவன் உறைதரு சிவபுர நகரை
கவுணியர் குலபதி காழியர்_கோன்
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே

 மேல்

 113. திருவல்லம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1218
எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1219
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா
தூயவன் தூ மதி சூடி எல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1220
பார்த்தவன் காமனை பண்பு அழிய
போர்த்தவன் போதகத்தின் உரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1221
கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம்
மை தவழ் திருமகள் வணங்க வைத்து
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1222
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1223
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால்
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1224
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1225
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அரு மறை அங்கம் ஆனான்
கரியவன் நான்முகன் காண ஒண்ணா
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1226
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும்
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே

 மேல்

#1227
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே

 மேல்

 114. திருமாற்பேறு : பண் - வியாழக்குறிஞ்சி

#1228
குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன்
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன்
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன் வள நகர் மாற்பேறே

 மேல்

#1229
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த
மாறிலி வள நகர் மாற்பேறே

 மேல்

#1230
கரு உடையார் உலகங்கள் வேவ
செரு விடை ஏறி முன் சென்று நின்று
உரு உடையாள் உமையாளும் தானும்
மருவிய வள நகர் மாற்பேறே

 மேல்

#1231
தலையவன் தலை அணி மாலை பூண்டு
கொலை நவில் கூற்றினை கொன்று உகந்தான்
கலை நவின்றான் கயிலாயம் என்னும்
மலையவன் வள நகர் மாற்பேறே

 மேல்

#1232
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும்
பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன்
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற
மறையவன் வள நகர் மாற்பேறே

 மேல்

#1233
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து
கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே

 மேல்

#1234
தீது இலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே

 மேல்

#1235
செய்ய தண் தாமரை கண்ணனொடும்
கொய் அணி நறு மலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க
மையல் செய் வள நகர் மாற்பேறே

 மேல்

#1236
குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும்
களித்து நன் கழல் அடி காணல் உறார்
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே

 மேல்

#1237
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே

 மேல்

 115. திருஇராமனதீச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1238
சங்கு ஒளிர் முன்கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன் கோப
பொங்கு அரவு ஆடலோன் புவனி ஓங்க
எங்கும் மன் இராமனதீச்சுரமே

 மேல்

#1239
சந்த நன் மலர் அணி தாழ் சடையன்
தந்த மதத்தவன் தாதையோ தான்
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல
எம் தவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1240
தழை மயில் ஏறவன் தாதையோ தான்
மழை பொதி சடையவன் மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின்
இழையவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1241
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1242
தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல்
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி
பாய்ந்த கங்கையொடு பட அரவம்
ஏய்ந்தவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1243
சரி குழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1244
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல்
ஆறு அது சூடுவான் அழகன் விடை
ஏறவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1245
தட வரை அரக்கனை தலை நெரித்தோன்
பட அரவு ஆட்டிய படர் சடையன்
நடம் அது ஆடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1246
தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை
அனம் அணி அயன் அணி முடியும் காணான்
பன மணி அரவு அரி பாதம் காணான்
இன மணி இராமனதீச்சுரமே

 மேல்

#1247
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின்
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை
எறியவன் இராமனதீச்சுரமே

 மேல்

#1248
தேன் மலர் கொன்றையோன்

 மேல்

 116. திருநீலகண்டம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1249
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1250
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்
பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1251
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1252
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1253
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர்
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1254
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1255
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்
செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1256
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம்

 மேல்

#1257
சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார்
பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 மேல்

#1258
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண்
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே

 மேல்

 117. திருப்பிரம்மபுரம் : மொழிமாற்று : பண் - வியாழக்குறிஞ்சி

#1259
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில்
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர்
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்
பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே

 மேல்

#1260
கற்றை சடையது கங்கணம் முன்கையில் திங்கள் கங்கை
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும்
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே

 மேல்

#1261
கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம்
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன்
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே

 மேல்

#1262
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே

 மேல்

#1263
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின்
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே

 மேல்

#1264
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம்
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும்
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

 மேல்

#1265
காலது கங்கை கற்றை சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே

 மேல்

#1266
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண்
மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன்
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ்
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே

 மேல்

#1267
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள்
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே

 மேல்

#1268
அடி இணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர்
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர்
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே

 மேல்

#1269
கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு
மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே

 மேல்

#1270
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே

 மேல்

 118. திருப்பருபதம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1271
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1272
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே
வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1273
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும்
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1274
கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான்
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1275
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1276
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில்
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல்
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால்
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1277
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான்
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1278
நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன்
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1279
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல்
திரு உரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1280
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண் குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின்
குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே

 மேல்

#1281
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே

 மேல்

 119. திருக்கள்ளில் : பண் - வியாழக்குறிஞ்சி

#1282
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே

 மேல்

#1283
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே

 மேல்

#1284
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான்
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே

 மேல்

#1285
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும்
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே

 மேல்

#1286
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே

 மேல்

#1287
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான்
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே

 மேல்

#1288
பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும்
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே

 மேல்

#1289
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம்
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும்
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே

 மேல்

#1290
வரி ஆய மலரானும் வையம்-தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே

 மேல்

#1291
ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள்
மா செய்த வள வயல் மல்கு கள்ளில்
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே

 மேல்

#1292
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே

 மேல்

 120. திருவையாறு : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1293
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1294
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1295
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர்
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல்
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1296
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல்
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1297
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1298
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ்
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1299
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1300
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1301
விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே

 மேல்

#1302
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும்
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே

 மேல்

#1303
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே

 மேல்

 121. திருஇடைமருதூர் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1304
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே

 மேல்

#1305
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன்
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே

 மேல்

#1306
அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன்
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்
பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே

 மேல்

#1307
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர்
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே

 மேல்

#1308
வரு நல மயில் அன மட நடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே

 மேல்

#1309
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன்
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன் இடம் இடைமருதே

 மேல்

#1310
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே

 மேல்

#1311
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு
துறையவன் என வல அடியவர் துயர் இலர்
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே

 மேல்

#1312
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும்
இருது உடை அகலமொடு இகலினர் இனது என
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே

 மேல்

#1313
துவர் உறு விரி துகில் உடையரும் அமணரும்
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு
மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே

 மேல்

#1314
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே

 மேல்

 122. திருஇடைமருதூர் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1315
விரிதரு புலி உரி விரவிய அரையினர்
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே

 மேல்

#1316
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர்
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில்
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே

 மேல்

#1317
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர்
இலர் என இடு பலியவர் இடைமருதினை
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே

 மேல்

#1318
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர்
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர்
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே

 மேல்

#1319
உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர்
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை
இரை மரும் அரவினர் இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே

 மேல்

#1320
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது அறை கழல்
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே

 மேல்

#1321
கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்
இலை மலி படையவர் இடம் இடைமருதே

 மேல்

#1322
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும்
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே

 மேல்

#1323
அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ
எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே

 மேல்

#1324
குடை மயிலின தழை மருவிய உருவினர்
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடைமருது என மனம் நினைவதும் எழிலே

 மேல்

#1325
பொரு கடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினை
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர்
விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே

 மேல்

 123. திருவலிவலம் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1326
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல்
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள்
மேவிய திரு உரு உடையவன் விரை மலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1327
இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1328
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1329
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே

 மேல்

#1330
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1331
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1332
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1333
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே

 மேல்

#1334
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும்
ஏனம் அதுவாய் நிலம் அகழ் அரி அடி முடி
தான் அணையா உரு உடையவன் மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1335
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்
நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன்
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே

 மேல்

#1336
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே

 மேல்

 124. திருவீழிமிழலை : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1337
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர்
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1338
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1339
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர்
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை
இலை மலி இதழியும் இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1340
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1341
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1342
அன்றினர் அரி என வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1343
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1344
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1345
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல்
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1346
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர்
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே

 மேல்

#1347
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே

 மேல்

 125. திருச்சிவபுரம் : திருவிராகம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1348
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன்
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே

 மேல்

#1349
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம்
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே

 மேல்

#1350
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர் கதியினரே

 மேல்

#1351
துணிவு உடையவர் சுடு பொடியினர் உடல் அடு
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணி மிடறனது அடி இணை தொழுமவரே

 மேல்

#1352
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம்
உறைவு என உடையவன் எமை உடையவனே

 மேல்

#1353
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன்
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே

 மேல்

#1354
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அரு வினை இலரே

 மேல்

#1355
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன்
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை
பரன் என அடியவர் பணிதரு சிவபுர
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே

 மேல்

#1356
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே

 மேல்

#1357
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை
வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம்
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே

 மேல்

#1358
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்
பந்தன தமிழ் கொடு சிவபுர நகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை
சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே

 மேல்

 126. திருக்கழுமலம் : திருத்தாளச்சதி : பண் - வியாழக்குறிஞ்சி

#1359
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே

 மேல்

#1360
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம்
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே

 மேல்

#1361
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும்
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே

 மேல்

#1362
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே

 மேல்

#1363
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம்
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே

 மேல்

#1364
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய்
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே

 மேல்

#1365
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே

 மேல்

#1366
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன்
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே

 மேல்

#1367
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும்
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே

 மேல்

#1368
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம்
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே

 மேல்

#1369
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே

 மேல்

 127. திருப்பிரமபுரம் : ஏகபாதம் : பண் - வியாழக்குறிஞ்சி

#1370
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன்
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான்
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான்

 மேல்

#1371
விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன்
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்
விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

 மேல்

#1372
புண்டரிகத்தவன் மேவிய புகலியே
புண்டரிக தவன் மேவிய புகலியே
புண்டரிக தவன் மே விய பு கலியே
புண்டரிகத்தவன் மேவிய புகலியே

 மேல்

#1373
விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன்
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன்
விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன்

 மேல்

#1374
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன்
சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன்
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன்
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன்

 மேல்

#1375
பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி
பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி
பூசுரர் சேர் பூந்தராயவன் பொன் அடி

 மேல்

#1376
செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்
செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில்
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில்
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில்

 மேல்

#1377
பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்
பொன் அடி மா தவர் சேர் புறவ தவன்
பொன் அடி மாதுஅவர் சேர்புறு அவத்தவன்
பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்

 மேல்

#1378
தசமுகன் எரிதர ஊன்று சண் பையான்
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான்
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான்
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

 மேல்

#1379
காழியான யன் உள்ளவா காண்பரே
காழியான் நயன் உள்ளவா காண்பரே
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே
காழியான் அயன் உள் அவா காண்பரே

 மேல்

#1380
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே

 மேல்

#1381
கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை
கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை

 மேல்

 128. திருப்பிரமபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி - திருவெழுகூற்றிருக்கை

#1382
ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம்
நால்கால் மான் மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை காய்ந்த நால் வாய் மும்மதத்து
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம்
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
பொங்கு நால் கடல் சூழ் வெங்குரு விளங்கினை
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை
ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும்
ஊழியும் உணரா காழி அமர்ந்தனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும்
மறை முதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறு இலா மறையோர்
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதி க உணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே

 மேல்

 129. திருக்கழுமலம் : பண் - மேகராகக்குறிஞ்சி

#1383
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே

 மேல்

#1384
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில்
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே

 மேல்

#1385
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம்
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே

 மேல்

#1386
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில்
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே

 மேல்

#1387
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே

 மேல்

#1388
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே

 மேல்

#1389
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய்
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே

 மேல்

#1390
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே

 மேல்

#1391
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே

 மேல்

#1392
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே

 மேல்

#1393
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர்
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே

 மேல்

 130. திருவையாறு : பண் - மேகராகக்குறிஞ்சி

#1394
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே

 மேல்

#1395
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே

 மேல்

#1396
கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில்
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே

 மேல்

#1397
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர்
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில்
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும்
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே

 மேல்

#1398
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை
தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே

 மேல்

#1399
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே

 மேல்

#1400
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில்
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே

 மேல்

#1401
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும்
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே

 மேல்

#1402
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே

 மேல்

#1403
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே

 மேல்

#1404
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே

 மேல்

 131. திருமுதுகுன்றம் : பண் - மேகராகக்குறிஞ்சி

#1405
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வே
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே

 மேல்

#1406
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே

 மேல்

#1407
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி
மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர் கோயில்
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே

 மேல்

#1408
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள்
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே

 மேல்

#1409
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின்
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே

 மேல்

#1410
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே

 மேல்

#1411
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே

 மேல்

#1412
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே

 மேல்

#1413
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும்
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே

 மேல்

#1414
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே

 மேல்

#1415
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே

 மேல்

 132. திருவீழிமிழலை : பண் - மேகராகக்குறிஞ்சி

#1416
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே

 மேல்

#1417
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல்
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே

 மேல்

#1418
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல்
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே

 மேல்

#1419
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில்
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே

 மேல்

#1420
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய்
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே

 மேல்

#1421
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள்
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே

 மேல்

#1422
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே

 மேல்

#1423
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில்
தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே

 மேல்

#1424
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே

 மேல்

#1425
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே

 மேல்

#1426
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம்
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன்
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே

 மேல்

 133. திருக்கச்சியேகம்பம் : பண் - மேகராகக்குறிஞ்சி

#1427
வெந்த வெண்பொடி பூசும் மார்பின் விரி நூல் ஒருபால் பொருந்த
கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள்
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே

 மேல்

#1428
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம்
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே

 மேல்

#1429
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள்
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே

 மேல்

#1430
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே

 மேல்

#1431
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே

 மேல்

#1432
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே

 மேல்

#1433
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே

 மேல்

#1434
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான்
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம்
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள்
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே

 மேல்

#1435
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின்
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே

 மேல்

#1436
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள்
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே

 மேல்

 134. திருப்பறியலூர்வீரட்டம் : பண் - மேகராகக்குறிஞ்சி

#1437
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திரு பறியலூரில்
விருத்தன் என தகும் வீரட்டத்தானே

 மேல்

#1438
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திரு பறியலூரில்
விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே

 மேல்

#1439
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான்
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில்
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே

 மேல்

#1440
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திரு பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே

 மேல்

#1441
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில்
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே

 மேல்

#1442
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான்
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில்
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே

 மேல்

#1443
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான்
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில்
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே

 மேல்

#1444
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ்
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர் திரு பறியலூரில்
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே

 மேல்

#1445
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே

 மேல்

#1446
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரி தோல் அரை மேல்
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே

 மேல்

#1447
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே

 மேல்

 135. திருப்பராய்த்துறை : பண் - மேகராகக்குறிஞ்சி

#1448
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை
கூறு சேர்வது ஒர் கோலமாய்
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே

 மேல்

#1449
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை
வந்த பூம் புனல் வைத்தவர்
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே

 மேல்

#1450
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே

 மேல்

#1451
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை
ஆல நீழல் அடிகளே

 மேல்

#1452
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல்
இரவில் நின்று எரி ஆடுவர்
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே

 மேல்

#1453
மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே

 மேல்

#1454
விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர்
சடையில் கங்கை தரித்தவர்
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே

 மேல்

#1455
தருக்கின் மிக்க தசக்கிரிவன்-தனை
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன்-தன்னை அடிகளே

 மேல்

#1456
நாற்ற மா மலரானொடு மாலுமாய்
தோற்றமும் அறியாதவர்
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே

 மேல்

#1457
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள்
உரு இலா உரை கொள்ளேலும்
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே

 மேல்

#1458
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை
செல்வர் மேல் சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்
செல்வம் ஆம் இவை செப்பவே

 மேல்

 136. திருத்தருமபுரம் : பண் - யாழ்மூரி

#1459
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர்
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே

 மேல்

#1460
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர்
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே

 மேல்

#1461
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே

 மேல்

#1462
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர்
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார்
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே

 மேல்

#1463
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே

 மேல்

#1464
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய்
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல்
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே

 மேல்

#1465
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர்
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே

 மேல்

#1466
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர்
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே

 மேல்

#1467
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர்
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர்
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார்
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே

 மேல்

#1468
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர்
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர்
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே

 மேல்

#1469
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே

மேல்